Wednesday 1 May 2013

குறள் அமுது - (63)


குறள்:
“தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம்தொழும்”                               - 268

பொருள்:
தனக்கு உயிர் இருக்கிறது என்ற எண்ணம் இல்லாது, பிற உயிர்களின் நன்மைக்காக வாழ்பவனை, ஏனைய உயிர்கள் எல்லாம் வணங்கும்.

விளக்கம்:
தவம் செய்பவர்களில் யாரை உலகம் வணங்கும் என்பதை திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துக்கூறுகிறார். மன்உயிர் என்பது உலக உயிர்களைக் குறிக்கும். தான் என்ற எண்ணம் இல்லாது போதலே தான் அறப்பெறுதல். தன்னுடைய உயிர், தனது என்னும் பற்று நீங்கப் பெற்றவனையே உலக உயிர்கள் யாவும் கைதொழுது வணங்கும். எவனொருவனுக்கு தான் என்ற எண்ணம் இருக்கின்றதோ அவனிடம் தவவலிமை இருக்காது. அவனை நாம் வணங்கத் தேவை இல்லை. 

இக்குறள் மூலம் கள்ளச்சுவாமிமார் யார்? உண்மையான சுவாமிமார் யார்? என்பதை நாம் எடைபோடும் வழியை திருவள்ளுவர் எமக்குக் காட்டித் தந்துள்ளார். தான் செய்வதாகவோ, செய்ததாகவோ, தன்னிடம் இருப்பதாகவோ எந்தச்சுவாமியார் கூறுகிறாரோ அவர்  தவவேடதாரியே என்பது ஐயன் திருவள்ளுவன் முடிவாகும். எனவே நீங்கள் எவரையும் வீழ்ந்து வணங்கமுன், ‘தனது என்ற எண்ணம் அற்று, பிறருக்காக வாழ்கிறாரா’ என்பதைப் பார்த்து வணங்குங்கள்.  

தவவலிமையால் மிகப்பெரியவனாக இருந்தாலும் தானே பெரியவன் என்னும் எண்ணம் அற்றவனை இவ்வுலக உயிர்கள் யாவுமே தொழும் என்று கூறும் குறள் இது.

No comments:

Post a Comment