Sunday 28 May 2017

புங்கை ஊரின் மக்கள் கேளும்!

சேவற் பண்ணை

மண்ணை மதித்து வாழ்ந்த காலம்
மகிழ்ந்து நன்றாய் உண்ட மாந்தர்
பண்ணை என்று என்னைச் சொன்னார்
பாரில் எங்கும் பரவி நின்றேன்!

உண்ண நீரும் உணவும் நல்கி
பண்ணை போலக் கூடி நன்கு
பண்ணை ஆக வாழ்தல் கண்டு
பண்ணை என்றார் பரிந்து நின்றேன்!

பண்ணைப் பாலம் தன்னில் போகும்
புங்கை யூரின் மக்கள் கேளும்!
பண்ணை என்னை மறந்து நீரும்
பாங்காய் செல்லல் கண்டு நின்றேன்!

இண்டை நாளில் எனை மறந்தே
இரவு பகலாய் ஆய்ந்து நன்றாய்
பெண்ணை பண்ணை ஆச்சு தென்று
பேரறிஞர் சொல்ல நாணி நின்றேன்!

பண்ணை

பெண்ணை பண்ணை ஆன தென்றால்
பனையின் பேரை என்ன சொல்வீர்!
பெண்ணை என்பது பனையே ஆகும்
பண்ணை யானோ செடியாய் நின்றேன்!

விண்ணைத் தொட்ட புகழை நண்ணி
வைத்திய ஏடு தோறும் செங்கண்
பண்ணை சேவற் பண்ணை என்றே
பண்ணை பலதாய் பேச நின்றேன்!

பண்ணை என்றன் பூவைக் கொண்டு
பேரை இட்டார் பண்டை சேவற்
பண்ணை யானேன் கோழிக் கொண்டை
பூவே யென்ன கேட்டு நின்றேன்!

வெண்ணெய் கையிலி ருக்க நோய்க்கு
வையம் முழுதும் தேடி ஓடி
எண்ணெய்க் கலையும் மக்கள் நீரோ!
எந்தன் பண்பு சொல்ல நின்றேன்!


கண்புரை [Cataracts]

மண்ணில் பிறந்த உயிர்கள் வாழ
மருந்தாய் தருவேன் எந்தன் உயிரை
கண்ணில் படரும் புரையை நீக்கி
காணும் காட்சி காட்டி நின்றேன்!

பெண்ணின் கருவறை நோயும் குருதிப்
பெருக்கும் போக்கி பெண்மை பேணி
மண்ணில் மைந்தர் பிறக்க வைத்து
மனிதர் போற்ற மகிழ்ந்து நின்றேன்!

பண்ணை என்றன் மேன்மை கண்டே
பண்ணை பண்ணை யாய் உலகோர்
பண்ணை வளர்த்து கோடி கோடி
பணம் பண்ணல் பார்த்து நின்றேன்!

பண்ணை பெற்ற மக்கள் நீங்கள்
பழமை மறந்து நடத்தல் நன்றோ!
பண்ணை விதைகள் தேடி வித்தி
பண்ணை வைத்து வாழ்த்த நிற்பேன்!                                       
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
எப்படி யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணை என்ற இடத்திற்கு ‘பண்ணை’ என்ற பெயர் வந்தது? ஒருகாலத்தில் எம் யாழ்ப்பாணப் பண்ணைப்பகுதி பண்ணைச்செடிகளால் சூழ்ந்து இருந்ததால் அவ்விடத்தை பண்ணை என அழைத்தனர். பண்ணைக்கீரைச்செடி மூலிகைச் செடியில் ஒன்றாகும். அது சிறுபண்ணை, செம்பண்ணை, புற்பண்ணை, சேவற்பண்ணை எனப்பல வகையில் காணக் கிடைக்கிறது. மானாவாரி [மழையை நம்பி பயிர் செய்யும் நிலங்கள்] நிலங்களில் மழைக்காலத்திற்குப் பின்னர் முளைக்கும் செடிவகைகளில் பண்ணைக் கீரைச்செடியும் [Celosia Argentea] ஒன்று. அதனால் நம்முன்னோர் அதனைப் பயிரிட்டனர். பண்ணைச்செடி நம் எல்லோருக்கும் தெரிந்த செடியே. வைத்திய வாகடங்கள் ‘பண்ணை’ என்று கூறும் செடிவகையில் ஒன்று சேவற்பண்ணைச் செடியாகும். அதனை இக்காலத்தில் ‘கோழிக் கொண்டைச் செடி’[CockComb] என்று அழைக்கிறோம். 

நம் முன்னோர் கண், இரத்தம், சிறுநீர் தொடர்புடைய நோய்களுக்கு மருந்தாகப் பண்ணைச்செடியைப் பயன்படுத்தினர். இதன் கீரையை உண்டுவந்தால் மலட்டுத் தன்மை நீங்கும் என்பர். அக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழர் வீடுகளில் எல்லாம் இச்செடி நின்றது. இப்போது மருந்துக்கும் கிடைப்பது அரிது. எத்தகைய வரட்சியையும் தாங்கி நிற்கும் தன்மையுடையது.  பல உலகநாடுகள் மருந்துக்காக இச்செடியை வளர்த்து பணம் பண்ணுகின்றன. நாமும் பண்ணையின் பெயரைச் சொல்லி வளர்த்தால் என்ன? பலவகையான பண்ணை விதைகளை  ebayல் வங்கலாம்.

Thursday 25 May 2017

எல்லை இல்லை ஐயையோ!


இல்லை இல்லை என்போர்க்கு - ஓர்
எல்லை இல்லை ஐயையோ
எல்லை இல்லா வளம் - உல
கெங்கனும் நிறைந் திருக்க
தொல்லை வாழ்வி தென்று - துடி
துடித்து ஏங்கித் தினம்
பல்லைக் காட்டித் தெரு - ஓர
பிச்சைக் கலை மாதர்
பிள்ளை செய் பிழை - ஏது
பெம்மானே நீ கூறு!
இனிதே,
தமிழரசி.

Wednesday 24 May 2017

குறள் அமுது - (135)


குறள்:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்                                     - 420

பொருள்:
செவியில் சுவையை உணராது வாயில் சுவையை உணரும் மனிதர் இறந்தாலும் வாழ்ந்தாலும் என்ன?

விளக்கம்:
இத்திருக்குறள் கேள்வி எனும் அதிகாரத்தின் பத்தாவது குறளாகும். நாம் பிறரிடம் கேட்கும் கேள்விகளைப் பற்றி வள்ளுவர் கூறவில்லை. காதால் கேட்டு அறியும் கேள்வி ஞானத்தையே வள்ளுவர் கேள்வி என்கிறார். 

அவர் இத்திருக்குறளில் மனிதர் சுவைத்து உணரும் இருவேறுவகை சுவைகளைப்பற்றிச் சொல்கிறார். ஒன்று செவிச்சுவை. மற்றது வாய்ச்சுவை. வாய் இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவையையும் சுவைக்கும்.  செவியால் அப்படிச் சுவைக்க முடியுமா என்றொரு கேள்வி இங்கு எழுகின்றது. மகிழ்வான சொல்லைக் கேட்டு  மகிழ்வதும் கெட்ட சொற்களைக் கேட்கும் போது அருவெறுப்பதும் அதட்டினால் கோபப்படுவதும் திட்டினால் அழுவதும் மானம் இழக்க நேரிடும்போது எரிமலையாய் வெடிப்பதும் எப்படி நிகழ்கின்றன? நாம் கேட்பவனவற்றை செவி சுவைக்க நம் மனநிலை வேறுபடுகின்றது.

வாயின் சுவையை நாக்கு எப்படி சுவைக்கிறதோ அப்படி காதின் சுவையை மனம் சுவைக்கிறது. செவிச்சுவை எமக்கு அறிவை வளர்க்கிறது. வாயின் சுவை உடலை வளர்க்கிறது. மனித வாழ்வுக்கு இவ்விருசுவையும் தேவையே. 

ஆனால் திருவள்ளுவரோ இக்குறளில் சுவையை செவியால் உணராது வாயால் உணர்வோரை ‘மாக்கள்’ என அழைத்து செவிச்சுவைக்கு முதன்மை கொடுத்துள்ளார். அது ஏன்? தாய் தந்தையரோ, நண்பர்களோ, ஆசிரியர்களோ, பிறரோ, எமக்குத் தெரியாதவற்றைச் சொல்வதைக் கேட்கக் கேட்க - செவியால் சுவைக்கச் சுவைக்க எமது அறிவு வளரும். அறிவு வளர வளர சரி பிழை தெரிந்து வாழ்க்கையை நன்கு சுவைத்து வளமாக்கலாம். அதுபோல் அன்பாக அவர்கள் தருவதை உண்ண உண்ண - வாயால் சுவைக்க சுவைக்க  உடல் பெருக்கும். உடல் பெருக்கப் பெருக்க பலவகை நோய்கள் வந்து  ஆட்கொள்ளும். இருந்த இடத்திலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம்.

அதனால் வாய்சுவைக்கு முதன்மை கொடுப்போரை மாக்கள் என்றார். பகுத்தறிவில்லா மனிதர்களையும் விலங்குகளையும் மாக்கள் என்பர். விலங்குகள் போல உணவை மட்டும் சுவைத்து உண்டு வாழ்வதால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இருக்காது என்ற கருத்திலேயே மாக்கள் என்று அழைத்துள்ளார். மனிதனாய்ப் பிறந்து விலங்கைப்போல் உண்டு வாழ்வோர் இறப்பினும் வாழினும் என்னாகும்? எதுவித வேறுபாடும் இருக்காது.

விலங்குகிலிருந்து மனிதநிலைக்கு உயரவேண்டுமானால் சுவையைச் செவியால் உணருங்கள் என்கிறார்.

Tuesday 23 May 2017

அடிசில் 110

கற்றாழைப்பூத் துவையல்
- நீரா - 

தேவையான பொருட்கள்: 
மகரந்தம் நீக்கிய கற்றாழைப்பூ இதழ்கள் - ½ கப்
தேங்காய்ப்பூ  - 1 கப்
செத்தல் மிளகாய்  -  5
தோல் நீக்கிய சின்ன வெங்காயம்  - 5
எண்ணெய் -  2 தேக்கரண்டி
எலுமிச்சம் சாறு - தேவையான அளவு
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:

 1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கற்றாழை இதழ்களை இட்டு இளம் சூட்டில் பூவின் நிறம் மாறாது வதக்கிக் கொள்க.
2. வதக்கிய இதழ்களுடன் தேங்காய்ப்பூ, செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு  சேர்த்து  அரைத்துக் கொள்க.

3. அரைத்த துவையலுக்கு எலுமிச்சம் சாறு விட்டு பிசைந்து எடுக்கவும்.

Sunday 21 May 2017

ஆவாரஞ் செடிக்குள்ளே திருமாலா?


பார்க்கும் இடம் எங்கும் ஆவாரஞ்செடி மஞ்சள் பூசி முகம் மினுக்கி பூத்துக் குலுங்கி நின்றது. அந்த இடத்திற்கு காளமேகப் புலவர் வந்தார். புலவரைக் கண்ட அந்த ஆவாரம் தோட்டத்து சொந்தக்காரன் ‘பொன்னாவரை இலை காய் பூ’ இவற்றை வைத்து ஒரு வெண்பா பாடும்படி கேட்டான். காளமேகப்புலவரும் உடனே ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து

“உடுத்ததுவு மேய்த்ததுவு மும்பர்கோன் றன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும்
அந்நா ளெறிந்ததுவு மன்பி னிரந்ததுவும்
பொன்னா வரையிலைகாய் பூ” 
                                                - (காளமேகம் தனிப்படல்: 31)
என எழுதிக் கொடுத்தார். வெண்பாவை வாசித்தவனுக்கு எதுவும் விளங்கவில்ல. அவர் மீண்டும் பாடலை பிரித்து எழுதிக் கொடுத்தார். ‘இப்போது படித்துப்பார் புரியும்’ என்றார்.

“உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக்கு இயையப் - படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன் ஆ வரை இலை காய் பூ”
படித்துப் பார்த்தான் புரியவில்லை. ‘என்னங்க புலவரே! நான் சொன்ன சொற்களுக்கும் உடுத்ததுவுக்கும் மேய்த்ததுவுக்கும் என்ன தொடர்பு? யார் உடுத்தா? யார் மேய்த்தா? நீங்க எழுதிய வெண்பாவின் கருத்தை சொல்லுங்க’ என்றபடி தன் தலையைச் சொறிந்தான்.

உடுத்தது - பொன்
மேய்த்தது - [பசு]
உம்பர்கோன் தன்னால் எடுத்தது - வரை [மலை]
பள்ளிக்கு இயையப் படுத்தது - இலை
அந்நாள் எறிந்தது - காய்
அன்பின் இரந்தது - பூ

திருமால், பொன்னாலான பீதாம்பரம் என்னும் பட்டை உடுத்தவன். கிருஷ்ண அவதாரத்தில் - பசுக்களை மேய்த்தவன். தேவர்களின் அரசனான இந்திரன் மழையைப் பொழிவித்த போது உயிர்களைக் காக்க வரையை - கோவர்த்தனமலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தவன். பிரளயத்தின் போது ஆல் இலையில் பள்ளி கொண்டவன். கன்றை சிறு தடிபோல[குணில்] எறிந்து விளாங்காய் பறித்தவன். வாமன அவதாரத்தில் தானே விரும்பிச் சென்று மாபலியிடம் பூவுலகை இரந்து பெற்றவன்.

காளமேகம் சொன்னதைக் கேட்டதும் ‘இவ்வளவும் திருமாலானவர் செய்தாரா! நான் வளர்க்கும் இந்த ஆவாரஞ்செடி பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன். ஆவாரஞ் செடியுக்குள்ள திருமாலையே வைத்துவிட்டீங்க’ என்றான். 

ஆவாரஞ் செடி என்று பொன்னாவரையைச் சொல்வர். 
இனிதே,
தமிழரசி.

Thursday 18 May 2017

முள்ளி வாய்க்கால் எங்குமே!


முள்ளி வாய்க்கால் எங்குமே
          மோனநிலை கலையுதே
அள்ளி வீசும் காற்றுமே
          அனலையள்ளி வீசுதே

வெந்த நெஞ்சம் யாவுமே
          வேதனையில் மாளுதே
பந்த பாசம் யாவுமே
          பாறிமெல்லப் போனதே

கிள்ளிப் போட்ட குண்டுமே
          கொத்துக்குண்டாய் ஆனதே
கொள்ளித் தீயாய்ச் சிதறியே
          கொழுந்துவிட்டு எரிந்ததே

வெள்ளி முளைக்கும்  நேரமே
          விண்ணதிரப் பாய்ந்துமே
பள்ளி கொண்ட பாலரை
          பதைபதைக்க கொன்றதே

துள்ளி வந்த எரியுமே
          துடிதுடிக்க மாய்த்ததே
தள்ளி நின்ற பனையுமே
          தன்கதையைச் செப்புதே

செத்த உடல் மீதமே
          செய்திபல சொல்லுதே
கத்து கடல் ஓதமே
          தத்திநின்று கதறுதே

முள்ளி வாய்க்கால் எங்குமே
          முழங்குதே வாய்மையே
அள்ளி வீசும் காற்றுமே
          அன்பைக்கொஞ்சம் காட்டுமா!
                                        
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
முள்ளிவாய்க்காலுக்கு 2015ல் சென்ற பொழுது எழுதியது.

Monday 15 May 2017

தோழமை ஒன்றே தோள் கொடுக்கும்

மூண்டெழு துன்பங்கள் முழுமையும் நீக்கும்
          முழுமுதலாம் எந்தை முக்கண்ணன் மகனை
நீண்டெழு பிறப்பறுக்க நித்தமும் தொழுவோர்க்கு
          நற்கருணை அருள் நயன ஒளிதன்னால்
மீண்டெழு பிறவிதனை பிறவாதே காத்து
          மிண்டு மனத்தோர் முண்டு அகற்றி
தீண்டெழு சுடராய்த் தோன்றும் அவன்
          தோழமை ஒன்றே தோள் கொடுக்கும்
இனிதே,
தமிழரசி.

Thursday 11 May 2017

உயிரோடு உறவாடும் உயிரே!

           
                        பல்லவி
உனை நான் அறிவேன் கந்தா
என் உயிரோடு உறவாடும் உயிரே
                                                 - உனை நான்

                    அனுபல்லவி
நினைத் தேடி வருவோர்க்கு என்றும்
நிதிநல்கி நற்குணம் நல்கு கந்தா
                                                 - உனை நான்

                      சரணம் 
தினைப் போதும் நினையா வினையாலே
தடுமாறி தடம் மாறிப் போகுமெமை
மனைநாடி மனம் நாடி வந்தே
மலர்க்கழல் காட்டி மணம் ஊட்டுவாய்

                                                  - உனை நான்
இனிதே,
தமிழரசி.

Wednesday 10 May 2017

குறள் அமுது - (134)


குறள்:
நாச்செற்று விக்குமேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்                               - 335

பொருள்:
நாக்கு அடங்கி விக்கல் எழுவதற்கு [இறப்பதற்கு] முன் நல்ல செயல்களை விரைவாகச் செய்யவேண்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் நிலையாமை என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக இருக்கிறது. மனித வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மையைப் பற்றி இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துச் சொல்கிறார். கல்விச்செல்வமோ பொருட்செல்வமோ எது இருந்தாலும் பின்னர் கொடுப்போம் என்று காலம் கடத்தாமல் இல்லாதோருக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை நிலையற்றதாதலால் நன்மைகளை விரைந்து செய்தல் நன்று.

சங்க காலத்தில் அரசாண்ட புகழ்மிக்க சோழ மன்னர்களில் நலங்கிள்ளியும் ஒருவன். அவன் போர் புரிவதிலும் அதனால் கிடைக்கும் வெற்றியில் மகிழ்வதிலும் ஈடுபாடு உள்ளவனாக இருந்தான். பாடல் இயற்றும் ஆற்றல் மிக்க புலவனாகவும் விளங்கிய அவனுக்கு, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற சங்கப்புலவர், நிலையாமையைச் சுட்டிக்காட்டி, அறச்செயல்களில் ஈடுபடச்சொன்ன புறநானூற்றுப் பாடலில் ஒன்று:

"தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் 
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் 
அறியா தோரையும் அறியக் காட்டித் 
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து 
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் 
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி 
அருள வல்லை ஆகுமதி''

"நலங்கிள்ளியே! வளர்ந்தது ஒன்று குறையும்; குறைந்தது ஒன்று பின் வளரும்; பிறந்த ஒன்று இறக்கும்; இறந்த ஒன்று பின் பிறக்கும். கல்வியறிவு அற்றவர்களும் அந்த உண்மையை அறியச்செய்ய வானில் நிலவு தோன்றியும் மறைந்தும், வளர்ந்தும் தேய்ந்தும் நிலையாமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, வறுமையால் வருத்தமுற்று வந்தோர்க்கு, பசியால் உட்குழிந்த அடிவயிற்றைப் பார்த்துப் பொருளை வாரி வழங்கி அருள்புரி என்கிறது.

சேர்த்த பொருளை 'வறுமையில் வாடுவோருக்குக் கொடு!' என  அரசனுக்குச் சொல்லும் புலவர் உலகின் நிலையற்ற தன்மையை எடுத்துச் சொல்தோடு நின்றுவிடவில்லை. உயிர்கள் மட்டுமல்ல இவ்வுலகமும் நிலையற்றது. ஆதலால் இவ்வுலகில் பொருளை குவித்து வைக்காமல் பிறருக்கு வழங்கி நன்மை புரிக என்று அறிவு புகட்டுகிறார்.

பிறந்த உயிர்கள் யாவும் இந்தெந்த வயதில் இறக்கும் என்ற உறுதிப்பாடு இல்லை. ஆறிலும் சாவு வரலாம். நூறிலும் வரலாம். ஆதலால் நற்செயல்களை செய்யக்கூடிய நேரங்களில் முதலிலேயே செய்தல் வேண்டும் என்பதனையே இத்திருக்குறள் வலியுறுத்துகிறது.

Sunday 7 May 2017

நாயனையார் நட்பு வேண்டும்


இந்த உலகில் வாழும் மனிதர் யாவரும் இனம், நிறம், மதம், பண்பாடுகளால் மாறுபடுகின்றனர். எனினும் நண்பைப் பேணும் தன்மையில் அந்த மாறுபாட்டினைக் காணமுடியாது. அத்துடன் இளமை, முதுமை என்ற வயதெல்லையோ ஆண், பெண் எனும் வேறுபாடோ நட்புக் கொள்வதற்குத் தடை போடுவதில்லை. இரத்த உறவைக் கைகழுவுவோர் கூட நட்பைக் கைவிடார். அந்த அளவுக்கு நண்பு மனித மனங்களைப் பிணைத்து வைக்கிறது. நட்பெனும் பிணைப்பில் கட்டுண்டோர் நாடுவிட்டு நாடு வெகுதூரத்தில் வாழினும் அவர்களது நட்பு என்றும் அழியாது.

இத்தகைய உயர்வான நட்பில் கூட நல்ல நட்பு, தீ நட்பு, கூடா நட்பு எனப் பலவகை உண்டு. நட்பில் உள்ள இவ்வேறுபாடுகளைத் திருவள்ளுவர் ஐந்து அதிகாரங்களில் [79 - 83] ஆராய்ந்து கூறியுள்ளார். அவை நட்பின் ஆழ அகலங்களை அறிந்து கொள்ள எமக்குத் துணை செய்கின்றன. தீய நட்புக்கும் கூடா நட்புக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? தீ நட்பு என்பது தீய குணமுள்ளோர், அறிவில்லாதோர், செல்வம் உள்ளபோது நட்பாகவும் அது இல்லாதபோது விலகிசெல்வோர் போன்றோருடன் கொள்ளும்  நட்பாகும். கூடாநட்பு அது நெஞ்சில் வஞ்சனையும் தம் தேவைக்காக உதட்டில் தேனுமாக நடிப்போரது நட்பாகும்.

பன்றிக் குட்டிகளுடன் சேர்ந்த கன்றும் சேற்றில் கிடந்து புரளும். அதுபோல் மனிதனும் சார்ந்ததன் வண்ணமே. எனவே எப்படிப்பட்டோரின் நட்பை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தாம் கண்ட அநுபவத்தால் அறிந்து கூறியுள்ளனர்.

யானை வலிமை மிகுந்தது. உருவத்தில் பெரியது. ஆனால் நாய் வலிமை அற்றது. யானையுடன் ஒப்பிடும் பொழுது உருவத்தில் மிகவும் சிறியது. நாம் நட்புக் கொள்வதற்கு யானையா? நாயா? சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடமே உண்டு. யானை வன்மம் கொண்டது. அது தனக்கு உணவளித்துப் பாதுகாத்த பாகனையே அடித்து மிதித்துக் கொல்லும். நாய் நன்றியுள்ளது. வளர்த்தவன் எறிந்த வேல் அதன் உடலில் பாய்ந்திருந்தாலும் தன் வாலைக் குழைத்து அவனது காலடியில் கிடக்கும். எனவே நாய் போன்றோரின் நட்பை அணைத்துக் கொள்ளவேண்டுமாம்.

“யானை அனையார் நண்புஒரீஇ நாயனையார்
கேண்மை தழீஇக் கொளல்வேண்டும் யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்”                             
                                             - (நாலடியார்: 213)

எத்தகையோரின் நட்பைப் பேணிப் பாதுகாக்கவேண்டும் எப்படிப்பட்டோரின் நட்பைக் கழற்றி விடவேண்டும் என்பதை இந்த நாலடியார் பாடல் எடுத்துச் சொல்கிறது. 
இனிதே,
தமிழரசி.

Saturday 6 May 2017

அலைகடல் அரிப்புக்கு அலையாற்றி!

அலையாற்றி [கண்ணா மரங்கள்]

இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த பலவகைக் கொடைகளைக் கொண்ட இடம் புங்குடுதீவு. ஆனால் புங்குடுதீவாராகிய நாம் செய்த செய்யும் புறக்கணிப்புகளால் இயற்கையின் வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன புங்குடுதீவில் இருக்கிறது என்று கேட்போர் ஒருமுறை கண்ணாத்தீவுக்குச் சென்று வாருங்கள். நம் முன்னோர் கண்ணாமரங்கள் வளர்ந்து இருந்த தீவைக் கண்ணாத்தீவு என அழைத்தனர். அது நம் புங்குடுதீவிற்கு மிக அருகே உள்ள ஒரு சிறு தீவு. நம் கண்ணாத் தீவு சிறு மீன், நண்டு, இறால் போன்றவற்றின் உறைவிடமாய் இருந்தது. அதன் கரையோர மணலில்
சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும்”
என்ற உருத்திரமூர்த்தியின் வரிகளை சிறு நண்டும் கடலும் நாளுமே நடாத்திக் கொண்டிருந்தன.

நெய்தல் நிலத்து சங்க இலக்கியப் பாடல்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக என் தந்தை கண்ணாத்தீவுக்கு என்னை முதன் முதல் அழைத்துச் சென்றார். அதற்கு முன் கடல்வாழ் உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறிந்திராத எனக்கு கண்ணாத்தீவில் அவற்றை நேரடியாகக் காட்டிக் கற்றுத் தந்தார். 
நீருக்கு மேல் சுவாசிக்கும் வேர்கள்

கடல்வாழ் உயிர்கள் ஒன்றினுள் ஒன்று தங்கி ஒன்றினை ஒன்று உண்டு வாழ்வதை அறிவதும் ஓர் அநுபவமே. கண்ணா மரங்கள் வேரினால் சுவாசிப்பதற்காக வேரைக் கடல் நீருக்கு மேலே வைத்திருப்பதைப் பார்ப்பது ஓர் அழகு. இவ்வேர்களின் இடையே ஆயிரமாயிரமாகச் சிறு மீன்கள் மின்னியாச் சுழன்று நாட்டியமாடிச் செல்வதும் ஓர் அற்புதம். பெரிய மீன்களிலிருந்து தப்பி தம்முயிரைக் காக்க கண்டல் வேர்களிடையே பதுங்கும் இறால்களின் கண்ணாமூச்சு விளையாட்டு ஓர் ஆனந்தம். கண்ணா மரவேர்களில் சறுக்கிச் செல்லும் நண்டு வளைபுகுவது ஓர் எழில். கடல்வாழ் உயிரினங்கள் பற்றி அறியவிரும்புவோர்க்கு கண்ணாத்தீவு ஓர் அமுதசுரபி. 

இத்தகைய அழகை சங்ககாலப் பெண்கள் பார்த்து மகிழ்ந்து விளையாடியதை சங்க இலக்கியம் காட்டுகிறது.
“சேர்ப்புஏர் ஈர்அளை அலவன் பார்க்கும்
சிறுவிளையாடல்”                   
                                      - (நற்றிணை: 123: 10 - 11)

என அளையில் இரண்டு இரண்டாகச் சேர்ந்திருந்த நண்டுகளைப் பார்த்து விளையாடிய கன்னியரை நற்றிணை சொல்கிறது.

இன்று கண்ணாத்தீவு எந்த நிலையில் இருக்கிறது? புங்குடுதீவின் வட கிழக்கே கண்ணாத்தீவையும், வடமேற்கே சற்றுப் புங்குடுதீவுக்கு உள்ளே கண்ணாப்பிட்டியையும் பார்க்கலாம். கண்ணாப் பிட்டியை ஏனோ முனிவர் பிட்டி என்றும் அழைக்கின்றனர். ஊருக்குள் இருக்கும் மரங்களை விட கண்ணாத்தீவிலும் கண்ணாப்பிட்டியிலும் உள்ள மரங்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவை. இயற்கை புங்குடுதீவின் கடல் அரிப்பைத் தவிர்ப்பதற்கென்று கொட்டிக் கொடுத்த கொடை இந்தக் கண்ணா மரங்கள் என்பேன்.

அலையாற்றி பற்றிக் கூறாமல் கண்ணாமரம் பற்றிச் சொல்கிறேனா? அலையாற்றி மரங்களில் ஒருவகையே காண்ணாமரம். ஆற்று நீர் கடலோடு கலக்கும் நெய்தல் நிலக் கழிமுகங்களில் பெரும்பாலும் அலையாற்றி மரங்கள் வளரும். அதாவது நன்னீராறு கடலுடன் கலக்கும் இடத்தை கழிமுகம் என்பர்.  எனவே அந்நாளில் புங்குடுதீவில் நந்நீர் ஆறு ஓடியது என்பதற்கும் சான்றாக நிற்பன அலையாறி மரங்களே! அந்த ஆற்றின் அடிச்சுவடே இப்போதும் மழைக்காலங்களில் கள்ளியாறாய் கேரதீவின் மூன்று பக்கமும் சுற்றி ஓடி கடலோடு கலக்கிறது. சுவடே இன்றி அழிந்து ஒழிந்த சரஸ்வதி நதியை தேடிப் பாயவைக்கும் தற்காலத்தில் நம் புங்குடுதீவின் உயிர்நாடியாம் கள்ளியாற்றுக்கு உயிர் கொடுக்க முடியாதா!

கள்ளியாற்றுக்கு உயிர் கொடுக்கிறோம் எனக்கூறி எவராவது சென்று கள்ளியாற்றை ஆழப்படுத்தவோ அகலப்படுத்தவோ JCP அல்லது Bulldozerஐக் உடனே கொண்டு சென்று இறக்கி வேலை செய்யத் தொடங்காதீர்கள் என என் உறவுகளைக் கேட்கிறேன். ஏனெனில் அங்கிருக்கும் பல நூறு நன்னீர் ஊற்றுக் கண்களை நாம் அடைத்து விட நேரிடும். அந்த ஊற்றுக் கண்களை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு என்ன செய்வது? அடுத்த பதிவில் அதனைச் சொல்கிறேன். 'இன்றும் புங்குடுதீவில் நன்னீர் உண்டு' என்னும் பதிவைப் பாருங்கள்.

நான் புங்குடுதீவில் பிறந்தவளும் அல்ல. வளர்ந்தவளும் அல்ல. ஆனால் என் முன்னோர் பல நூறு ஆண்டுகளாக காதல் மொழிபேசிக் களித்திருந்த இருந்த இடம் புங்குடுதீவு.  அந்தப் பற்றில் புங்குடுதீவின் வரலாறுகளைச் சுட்டிக் காட்டிய என் தந்தையுடன் [பண்டிதர் மு ஆறுமுகன்] புங்குடுதீவைச் சுற்றி சனி, ஞாயிறு நிலவொளியில் நடை பயின்றிருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கே புங்குடுதீவு மேல் தீராக் காதல் இருக்கும் போது அங்கு பிறந்து வளர்ந்து நடைபயின்ற உங்களுக்கு நம் ஊரின்மேல் உயிரே இருக்கும். எனவே ஊரின் புவியியல் தன்மையை அழிக்கும் கொடுஞ்செயலை செய்யமாட்டீர்கள் என  நம்புகிறேன்.

கள்ளியாறு மீண்டும் உயிர்பெற்றால் அலையாற்றி மரங்கள் பல்கிப் பெருகி பெருவனமாக மாறும். அலையாற்றி மரங்களில் மோதும் பேரலைகள் சிதறிச் சிறு நுரையாகக் கரைந்து போகும். இவ்வாறு கடலில் எழுந்து வரும் பேரலைகளை அமைதியாக்கி ஆற்றுப்படுத்திய மரங்களை அலையாற்றி என்றனர். கொதித்துப் பொங்கும் குடிநீரை ஆற்றிக் குடிப்போம் அல்லவா. அப்படி வேகமாகப் பாய்ந்து வரும் பேரலைகளை இம்மரங்கள் ஆற்றின. கொதிநீரை ஆற்றித்தா என்று கூறுவதை ‘ஆத்தித்தா’ என்பது போல அலையாற்றி மரங்களை ‘அலையாத்தி’ என்கிறார்கள். இதற்கும் ‘ஆத்தி’, ‘அத்தி’ மரங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. 
தில்லை மரப்பூ

அலையாற்றி என்பது சதுப்பு நிலத்தாவரங்களின் பொதுப்பெயர் எனலாம். ஆற்றிவகையில் அலை ஆற்றி, வெள்ள ஆற்றி என இருவகையுண்டு. தில்லை நடராசன் திருநடம் செய்யும் தில்லைவனமும் [சிதம்பரம்] அலையாற்றிக் காடே. தில்லை, கண்டல், சுரபுன்னை போன்றவற்றின் பொதுப்பெயரே அலையாற்றி. கண்டல் மரத்திலும் பல இனமுண்டு. சிறுகண்டல், செங்கண்டல், கருங்கண்டல், தேன்கண்டல். தேன்கண்டல் மரத்தை கண்ணா என்பர். இலங்கையில் மட்டும் மரம், செடி, புல் என நாற்பதுக்கும் மேற்பட்ட கண்டல் தாவரங்கள் இருக்கின்றன. கடல் அலை கண்டல் மரத்தை மோதுவதைக் காஞ்சிப்புலவர்
“புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்” 
                                                -(நற்றிணை: 123: 9)
எனக்கூறுகிறார். மீன்வாடை[புலவு] வீசும் கடலலை[திரை] மோதும்   [உதைத்த] வளைந்த அடியுடைய கண்டல்களாம்.

இயற்கையே உலகின் படைப்பையும் அழிப்பையும் செய்கிறது. தீவகங்களையும் ஆக்கியும் அழிப்பதும் இயற்கையே என்று நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எமக்கு ஆக்கங்களை அள்ளித் தரும் கடலலை மணல் அரிப்பால் அழிவையும் தருகிறது. கடற்பெருக்குக் காலங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுவதற்கும் அது வழிவகுக்கிறது. அதற்காக மணல் அரிப்பைத்தடுக்கத் தடுப்புச்சுவர் கட்டுவதால் பயனில்லை. அதுபோல் மழைக் காலத்தில் ஓடிவரும் நன்னீரைத் நாம் சேமித்து வைப்பதற்காகத் தேக்குவதும் புங்குடுதீவைச் சூழவுள்ள கடல்வாழ் உயிரினங்களின் சமநிலையைப் பாதிக்கும். 

அதற்கு நம் முன்னோர்கள் போல கடற்கரைச் சோலைகளை உருவாக்குவதே மிகச்சிறந்த வழியாகும். கடலும் கடற்சோலையும் போல சொல்லுக்கு பொருள் இருக்கவேண்டும் என்பதை 
“கல்லறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்”
                                            - (பரிபாடல்: 15: 11 - 12)
என இளம்பெரு வழுதியார் கூறியுள்ளார். பொருள் விளக்கம் அற்ற சொல்லால் என்ன பயன்? அது போல கடற் சோலையில்லா கடலால் பயன் என்ன? அத்தகைய கடல் அழிவையே கொடுக்கும் என்பதை சங்கப்பாடல்களில் பல புலவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கடலுயிர்கள் நல்ல காற்றைச் சுவாசித்து ஒளித்துப் பிடித்து விளையாடி இனப்பெருக்கம் செய்ய கடற்சோலை உதவுகிறது. அத்துடன் ஊரை அழிக்கவென்று ஓங்கி எழுந்து வரும் பேரலையை தடுத்து நிறுத்துவதும் கடற்சோலையே.

நம்முன்னோர்கள் புவியியல் உயிரியற் சமநிலையைப் பேணித் தம் வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். அவர்களுக்கு என்னென்ன வகையில் அலையாற்றி கைகொடுத்தது என்பதை நான் வெளியிட இருக்கும் ‘புங்குடுதீவு பற்றிய நூலில்’ கண்டுகொள்ளுங்கள்.
இனிதே,
தமிழரசி.

Friday 5 May 2017

பட்டமரம் நானா! பச்சைமரம் நானா!


Bewdley sweet chestnut, Worcestershire (credit: The Tree Council)

வெட்டமரம் தேடி யலைந்து வெட்டும்
          வையத்து மானுடரே வந்தெனைப் பாரும்
பட்டமரம் நானா பச்சைமரம் நானா
          பகுத்துநீர் சொல்லின் பாரெலாம் பகரும்
நெட்டமரம் ஆனேன் நாநூ றாண்டாய்
          நாளுமே வளர்ந்து நாற்றிசை படரும்
கெட்டமரம் என்று கணத்தினில் வெட்டா 
          காத்திடும் மாண்பை கண்டிட வாரும்

                                                                                  - சிட்டு எழுதும் சீட்டு 138 
குறிப்பு:
இந்த மரம் 10 மீற்றரைவிட உயரமானது. இதன் கிளைகள் மரத்தில் இருந்து 23 மீற்றருக்கும் கூடிய நீளமானவை. கால் ஏக்கர் சுற்றளவான இடத்தில் பரந்து வளர்ந்து நிற்கிறது. இங்கிலாந்தில் உள்ள வயதான அதிசயமரங்களில் இதுவும் ஒன்று.
இனிதே,
தமிழரசி.

Wednesday 3 May 2017

கோயிலில் இருப்பது யாரறிவார்!


ஆணோ பெண்ணோ அலியோ தானறியார்
          காணாக் கடவுள் கருணையினை
ஊணோ உயிரோ உடலோ பேரறியார்
          ஏனோ மனத்துனைத் தேடுகிறார்
காணாக் காட்சி காணப் பேதிலியார்
          காலை மாலை போற்றுகிறார்
கோண் ஆர்பிறை அணி அம்மாளே
         கோயிலில் இருப்பது யாரறிவார்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
காணாக்கடவுள் - காண்பதற்கு அரிய கடவுள்
ஊண் - உணவு
காணாக் காட்சி - பார்க்காத காட்சி
காண - பார்க்க
பேதிலியார் - மனக்கலக்கம் உடையோர்
போற்றுகிறார் - வணங்குகிறார்
கோண் ஆர்பிறை - வளைந்த அழகிய பிறை