Tuesday, 14 May 2013

சீவனுக்குள்ளே சிவமணம்



உலகில் உள்ள பல இந்துக் கோயில்களில் நடைபெறும் சிறப்பான அபிசேகங்களின் போது வாசனைத் திரவியங்களாக சந்தனம், கற்பூரம், புனுகு சேர்த்துக் கொள்வார்கள். தமிழகத்திலே மிகவும் பணக்கார தெய்வமான திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிசேகத்திற்கு புனுகு சேர்க்கப்படுகிறது. புனுகுபூனையின் மதம் (புனுகு) பாவிக்கப்படுவதால் திருப்பதியான் சிலை வழவழப்பாக இருக்குமாம். புனுகு அதிகவிலைக்கு விற்கப்படுவதால் புனுகு எடுப்பதற்காக திருப்பதி தேவஸ்தான வளாகத்துள் புனுகுபூனைகளை வளர்க்க 2008ல் இந்திய மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்ததை பத்திரிகையில் வாசித்தேன். 2011ல் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் திருப்பதியானின் அபிசேகம் காணும் பக்தர்களும் புனுகு மணத்தில் திளைப்பர்.

திருமந்திரத்தை எழுதிய திருமூலர் ‘எமக்குள்ளே இருக்கும் இறைவனின் தன்மையை நாம் உணரும் போது சிவமணம் கமழும் [பூக்கும்] என்பதை 
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் 
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர வல்லார்கட்கு 
நாவி அணைந்த நடுதறி ஆமே”                 - (திருமந்திரம்: 1459)

இத்திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூ மலர முன்னர் பூவின் மணம் அதனுள் அடங்கி இருப்பது போல, நமது ஆன்மா இறைவன் என்னும் உண்மையை உணர முன்னர், ஆன்மாவுக்குள்[சீவனுக்குள்] அடங்கியிருந்த சிவமணமும், வரைந்திருக்கும் ஓவியம் என்ன கருத்தைச் சொல்கிறது என்பதை உணர்ந்து அறிவது போல உணர்ந்து அறிய வல்லவர்கட்கு, புனுகு பூனை[நாவி] புணர்ந்த[அணைந்த] மூங்கிலில்[நடுதறியாக பயன்பட்ட மூங்கில்] புனுகு மணம் வீசுவது போல, விசும் என்கிறார்.

திருமூலரின் இந்தத் திருமந்திரத்திற்கு பொருள் எழுத முற்பட்ட போது நான் அடைந்த அதிர்ச்சியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புனுகுபூனையை நாவி என்று அழைப்பர். நாபி என்பது தொப்பூழ். நாவியும், நாபியும் வேறு வேறானவை. தமிழகராதிகள் சில இரண்டையும் ஒன்றாகக் கருதுகின்றன.  நடுதறி, இங்கு மூங்கிலைக் குறிக்கிறது. எதற்காக புனுகுபூனை மூங்கிலோடு சேரவேண்டும்? என்ற கேள்விக்கு கிடைத்த விடை என்னை சிந்திக்க வைத்தது. அதற்கு முன்னர் புனுகு ஒரு வாசனைத் திரவியம் என்று நானும் நினைத்திருந்தேன். 

வாசனைப் பொருளாகக் கருதப்படும் புனுகு, புனுகுபூனையின் மதத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. புனுகு எப்படி பெறப்படுகின்றது என்பதை அறிந்தால் என்னைப்போல் நீங்களும் அதிர்ந்து போவீர்கள்.

சில விலங்குகள் தமது இன்ப வேட்கையை வெளிப்படுத்தி எதிர்ப்பால் (ஆணையோ/பெண்ணையோ) விலங்கைக் கவர மணமுள்ள ஓமோனை வெளிப்படுத்தும். புனுகு பூனை தன் இன்பவேட்கைக்காக வெளிப்படுத்தும் ஓமோனே புனுகு. அந்த புனுகு எடுக்கப்படும் விதத்தையே “நாவி அணைந்த நடுதறி” காட்டுகிறது.

புனுகுபூனையைப் பிடித்து கூட்டில் அடைத்து நன்றாக உணவு கொடுத்து வளர்ப்பார்கள். அது தகுந்த வயதை அடைந்ததும், அதன் கூட்டில் மூங்கில் குழாய்களைப் பொருத்தி, அதற்கு இன்ப வேட்கை வரும்படி செய்வர். அப்போது புனுகுபூனை முங்கில் குழாய்களைச் சேர்ந்து (அணைந்து) மதத்தை வெளிப்படுத்தும். அது வெளிவிடும் மதம் மூங்கில் குழாய்க்குள் சேரும். மூங்கில் குழாயினுள் சேரும் மதம் புனுகு என அழைக்கப்படுகிறது. 'ஆன்மிகப் பூசைக்கு புனுகு' என்ற பெயரில் தரம் குறைந்த புனுகு விற்கப்படுகிறது. அதனையும் கோயில்கள் தம் தேவைக்கு வாங்குகின்றன.

புனுகுபூனையை வதைத்து எடுக்கும் புனுகு, 21ம் நூற்றாண்டிலும் கோயிலினுள் அபிசேகத்துக்கு மிகவும் வேண்டிய பொருளாக இருப்பது மூடநம்பிக்கையாகப் படவில்லையா? முட்டை என்பதை வாயால் சொல்லாது, உயிர்களைக் கொன்று தின்னாது வாழும் பிராமணர்கள் எப்படி புனுகு கலந்து கோயிலில் அபிசேகம் செய்கிறார்கள்? கோயில்களின் குடமுழுக்கு வேளையில் இவற்றின் தேவை மிகவும் கூடுவது ஏன்? அதுவும் திருப்பதியானின் மேனி மினுமினுக்க புனுகு பூசுவது வேடிக்கையாக இல்லையா? கோயிலின் கருவறையினுள் புனுகு எப்படி நுழைந்தது? விடை தெரியுமா? 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment