Tuesday 31 December 2019

வாராய்! புத்தாண்டே! வாராய்!!



கீற்றென மின்னல் மின்னிட
கொட்டியே மேகம் முழங்கிட
ஆற்றினில் அருவி பாய்ந்திட
ஆனந்த வெள்ளம் தவழ்ந்திட
காற்றினில் கீதம் பரவிட
கானகம் மெல்ல விழித்திட
போற்றியே உயிர்கள் களித்திட
பொன்னும் மணியும் பொலிந்திட
நாற்றிசை எங்கும் புகழ்ந்திட
நன்றாய் நம்மவர் வாழ்ந்திட
வெற்றியே என்றும் சூழ்ந்திட
வாராய்! புத்தாண்டே! வாராய்!
இனிதே!
தமிழரசி.

Thursday 12 December 2019

வயலூர் மைந்தாய்!



நைந்துனையே நினைந்தறியா
       நம்பன் அருணகிரிக்கு
பைந்தமிழின் சுவையறிய
       சந்தத்தமி ழருளி
முந்தைவினை போயகல
       முத்தைதரு கொடுத்த
விந்தையென் சொலாய்
        வயலூர் மைந்தாய்!
இனிதே,
தமிழரசி.

Sunday 1 December 2019

வேலொடு வந்தான்




மாவிலைப் பந்தரின் தோரணம் ஆட
மரகத வீணையின் பண்ணொலி கேட்க
ஆலிலைத் துயின்றவன் காவிலை நண்ணி
ஆனந்த வெள்ளத்து அருவியில் மூழ்கி
மூவிலைச் சூல முக்கணன் மகனாம்  
முருகனை எண்ணி முறையினிற் றொழுதும்
கோவிலைக் காணா கருத்தழிந் தழவே
கோவண ஆண்டி வேலொடு வந்தான் 
இனிதே,
தமிழரசி