Friday 28 June 2013

அடிசில் 59

காளான் கறி
                                                 - நீரா -




















தேவையான பொருட்கள்:
காளான்  - 300 கிராம்
முந்திரிப்பருப்பு - 6 - 7
தேங்காய்ப்பூ - ½ மே.கரண்டி 
மிளகு - ½ தே. கரண்டி 
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ½ கப்   
கடுகு - ½ தே.கரண்டி
எண்ணெய் -½ மே.கரண்டி 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1 . காளானைக் கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்க.
2. முந்திரிப்பருப்பு, தேங்காய்ப்பூ, மிளகு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்க.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு போட்டுத் தாளிக்கவும்.
4. கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகப் பொரிய விடவும்.
5. அதற்குள் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, காளானைச் சேர்த்து பிரட்டவும்.
6. தேவையான அளவு உப்புப் போட்டு, அரைத்த முந்திரிப்பருப்புக் கூட்டைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
7. குழம்பு தடித்து வரும் போது இறக்கவும்.

Tuesday 25 June 2013

என் தமிழர் மூதாதை

எல்லோரா குகை

தமிழ் இலக்கியம், ஆழம் காணமுடியாத ஓர் அமுதக்கடல். அதனுள் சங்கத்தமிழ், இதிகாசம், புராணம், சமயம், பக்தி, கவிதை, இசை, நாட்டியம், வரலாறு, கிராமியம், பாமரம் என எத்தனையோ வகையான இலக்கிய ஆறுகள் சங்கமம் ஆகின்றன. அத்தகைய பெருங்கடலினுள் மூழ்கி முத்து எடுப்பதென்றால் முடிகின்ற காரியமா? எனினும் முயன்றால் முடியாதது ஒன்று இருக்குமா? மூழ்கினேன். முத்தை எடுத்தேன். கிடைத்ததோ அற்புதமான ஓர் ஆரணி முத்து. தமிழ் இலக்கியம் யாவற்றிலும் பவனிவரும் பேராளன், இலக்கியச் சுவையின் இனிமையில் மூழ்கையில் என்னைப் பலமுறை திகைக்க வைத்த அருளாளன். ஏழிசையாழ் இராவணன் என திருஞானசம்பந்தரால் போற்றப்பட்ட இசையாளன். அவனே எம் தமிழர் மூதாதை.

கதை கேட்கும் வயதில் என் பாடசாலை ஆசிரியரால் மிகவும் கொடியவனாக, காமுகனாக, அரக்கனாக வர்ணிக்கப்பட்டவன். ஆனால் என் தந்தையோ வல்லவன், நல்லவன் என்றார். இதில் யார் சொல்வது சரி? எதை நான் நம்புவது? எனக்குள் சிறு போராட்டம். 

தந்தையிடம் சென்றேன். ‘நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?’ என்றேன்.

‘உனக்குச் சந்தேகம் இருக்குமானால் நான் சொல்வதை நீ நம்பாதே! இப்புத்தகங்களைப் படி. இவை என்ன சொல்கின்றனவோ அவற்றையும், அவற்றைச் சொன்னவர்கள் யார்? அவர்களுக்கு எம் மூதாதையர் என்ன மதிப்புக் கொடுத்திருந்தார்கள்? என்பதையும் கருத்தில் கொண்டு நீயே சிந்தித்து முடிவெடு’ எனக் கூறி, எனக்கு முன் இருபதிற்கும் அதிகமான புத்தகங்களையும், ஏட்டுச் சுவடிகளையும் கொணர்ந்து வைத்தார். 

அந்தக் குண்டு குண்டு புத்தகங்களிடையே ஐந்தாறு சிறு புத்தகங்களும் இருந்தன. என் வயதிற்குத் தகுந்தது போல் ஒன்றை எடுத்தேன். நேரு சிறையில் இருந்த பொழுது பிரியதர்சினிக்கு (இந்திரா காந்திக்கு), எழுதிய கடிதங்கள் அடங்கியது. அது சிறுபிள்ளைகளுக்கு உலக வரலாற்றின் அரிச்சுவடியை விளக்கக்கூடிய நல்ல நூல். அதில் ‘இராமாயணப்போர் ஆரிய - திராவிடப் போரேயாகும். தென்னாட்டில் வாழ்ந்த திராவிடர்களைக் குரங்குகள் என்றனர்’ என நேரு குறிப்பிட்டிருந்தார். தமிழர்களையே அரக்கர்களாகவும் குரங்குகளாகவும் இராமாயணத்தில்  வர்ணித்திருப்பதை அதனால் அன்று அறிந்தேன்.

அடுத்து ‘போகர் தந்த பரிசு’ என்ற இன்னொரு மிகச்சிறிய புத்தகத்தை எடுத்தேன். போகர், பதினெண் சித்தர்களில் ஒருவர். அவரே நவபாசானத்தால் பழனி முருகன் சிலையைச் செய்தவர். சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர். சித்த மருத்துவம் பற்றி போகரால் எழுதப்பட்ட பல நூல்கள் இருக்கின்றன. அவரோ இராவணனை மாபெரும் சித்தனென்றும், சித்த மருத்துவனென்றும் புகழ்ந்ததோடு அவனது நாட்டையும், கோட்டையையும் மட்டுமல்ல அவனது சமாதியையும் கூடக் குறிப்பிட்டுள்ளார்.

‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் இராவணனைப் போகர் இராவணனார் என பெருமதிப்புடன் குறிப்பிடுவதைக் கீழுள்ள பாடலில் பாருங்கள்.
“கூறுவேன் இலங்கைபதி மார்க்கந்தன்னை 
           கொற்றவனே புலிப்பாணி மைந்தகேளு
தேறுபுகழ் நவகண்டந் தன்னிலப்பா 
           தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில்
வீறுபுகழ் இராவணனார் கோட்டையப்பா 
           விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ
மாறுபடாக் கோட்டையது வளப்பஞ்சொல்வேன் 
           மகத்தான வசதிகள் மெத்தவுண்டே”                  
                                                                  - (போகர் 7000, 6வது காண்டம் - 84)  
சிலேடையாக மனிதவுடலை இராவணன் கோட்டையாகக் குறிப்பிடுவதாயினும் இலங்கையையும் இராவணனையும் போகர் எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறார் என்பதை இந்நூலைப் படித்து அறியலாம்.

சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களால் போற்றப்படுகின்ற பன்னிரு திருமுறைகளையும் பாடிய அருளாளர்களும் இராவணனின் பெருமையைச் சொல்வதைக் கண்டேன். மூன்று வயதில் தேவாரம் இயற்றத் தொடங்கிய திருஞானசம்பந்தர் முந்நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட தேவாரங்களில் இராவணனைப் பாடியுள்ளார்.
“கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்           
                                           - (ப.திருமுறை: 1: 33: 8)  
தென்னிலங்கையர் குலபதி                             
                                          - (ப.திருமுறை: 2: 107: 8 

திருஞானசம்பந்தர் முதலாம், இரண்டாம் திருமுறைகளில் 'இலங்கைக் குலக்கோன், தென்னிலங்கையர் குலபதி' என இராவணனக் குறிக்கக் கையாண்ட  சொல்லாட்சிகள் இராவணனை என் தமிழர் மூதாதையாக எனக்குக் காட்டியது. இந்தியாவில் இருக்கும் இலங்கையிலிருந்து பிரித்துச் சொல்வதற்காக, ‘தென்னிலங்கையர் குலபதி’ என்று  ஈழத்தின் திருக்கேதீஸ்வரப் பதிகத்தில் பாடியும் நாம் கண்டு கொள்ளவில்லை. 'இராவணன் மேலது நீறு' என்று அடிக்கடி மேடையில் சொல்வதைக் கேட்ட அளவுக்கு, ஒரு நாளாவது எந்த மேடையிலும் இலங்கைக் குலக்கோன்’ என்றோ தென்னிலங்கையர் குலபதி’ என்றோ யாரும் சொல்லக் கேட்டதில்லை. ஏன்? அப்படிச் சொல்வது கேவலம் என நினைத்து புறக்கணித்தோமா? புரியவில்லை. 

இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை இயக்கர் எனவும், நாகர் எனவும் அழைத்ததையும் கண்டேன். திருஞானசம்பந்தர் இராவணனை இயக்கரின் அரசனாகச் சொல்கிறார். 
“வானினொடு நீரும் இயங்குவோருக்கு
            இறைவனாய இராவணன்”                     
                                          - (ப.திருமுறை: 1: 53: 7)
இராவணன் காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் வானிலும் [வானில் விமானத்திலும்] நீரிலும் [நீரில் கப்பலிலும்] இயங்கித் திரிந்ததால் இயக்கர் என அழைக்கப்பட்டனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். 

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. இறைவனை இசையால் போற்றிப்பாடி, இறைவனுக்குப் பெயர் வைத்தவன் யார்? என்பதையும் கூறியுள்ளார். 
“சாமவேதமோர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்
          நாமதேய முடையார்                              
                                        - (ப.திருமுறை: 2: 92: 8)
இராவணன் சாமகீதம்பாடி வணங்கிய பொழுது வைத்த பெயரே, இறைவனின் பெயராக நிலைத்து இருக்கின்றது என்கிறார். அவை மட்டுமல்ல, இறை என்ற சொல்லை நினைத்து நினைத்து பயிற்சி செய்து பழகியவனாம் என்பதை
இறை பயிலும் இராவணன்”                             
                                      -(ப.திருமுறை: 3: 66: 8)
எனக்கூறிப் போற்றியுள்ளார்.

இராவணன் யாழிசையில் வல்லவன் என்பதை 
ஏழிசை யாழ் இராவணன்”                            
                                     - (ப.திருமுறை: 3: 117: 8)
என்றும்
“விரலினால் நீடி யாழ் பாடவே                           
                                    - (ப.திருமுறை: 3: 24: 8)
எனவும் தேவாரத்தில் எடுத்துச் சொல்லி அவனை ஓர் இசையாளனாகக் காட்டியுள்ளார்.

இவ்வாறெல்லாம் திருஞானசம்பந்தர், தான் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடலில் இராவணனைப் பாடியிருக்க, திருநாவுக்கரசர் பத்தாவது பாடலில் பாடியுள்ளார்.
“கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கையூட
தென்கையான் தேர்கடாவிச் சென்றெடுத்தான் மலையை” 
                                 - (ப.திருமுறை: 4: 34: 10)
தெற்கத்தையான் ஆன இராவணன் தேர் ஓட்டிச் சென்று மலையை எடுத்தான் எனக்கூறும் திருநாவுக்கரசரே 
தென்னவன் மலையெடுக்க சேயிழை நடுக்கம் கண்டு”   
                                 - (ப.திருமுறை: 4: 43: 10)
என இன்னொரு தேவாரத்தில், தென்னவன் என இராவணனைச் சொல்கிறார். 

பாண்டியர்களைத் தென்னவர் எனப் பேசும் சங்க இலக்கியமும் இராவணனையும் தென்னவன் என்றே குறிக்கின்றது. 'மதுரைக்காஞ்சி' பாடிய மாங்குடி மருதனார். 
“........ அமர் கடக்கும் வியன்றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின்”            
                                        - (மதுரைக்காஞ்சி: 39 - 40)
என்று ‘போரினை வெல்லும் மாபெரும் படையுடைய தென்னவன் என்னும் பெயருள்ள இராவணன் பகைவர்களால் நெருங்க முடியாத வலிமையுடையவன்’ என்கிறார், 

இப்படி இராவணனைத் தென்னவன் எனப்பாடிய மாங்குடி மருதனாரை
“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி 
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பிற் 
புலவர் பாடாது வரைக என் நிலவரை”               
                                       - (புறம்: 72: 13 - 16) 
என தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புறநானூற்றில் கூறியுள்ளான். 

சங்ககாலப் புலவர்களுக்கு தலைவனாக மாங்குடி மருதனார் இருந்திருக்கிறார். புலவர்களின்  பெருமதிப்பைப் பெற்ற மாங்குடி மருதனாரால் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பாடப்பட்டதே மதுரைக்காஞ்சி. அதில் இராணனை 'தென்னவன்’ எனச் சொல்வதைப் பார்த்தோம். 

ஒன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். போராற்றல் மிக்க அரசனுக்கு முன் அவனது குலப்பெயரான தென்னவன் என்னும் பெயரை ஓர் அரக்கனுக்கு சொன்ன புலவரை அவன் புகழ்ந்து பாடியிருப்பானா? அத்துடன் ‘தன்னை இகழ்ந்த அரசர்களை வென்று சிறைப்பிடிக்காவிட்டால் மாங்குடிமருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர்கள் என்னைப் பாடாது போகட்டும்’ என்று சபதம் செய்திருப்பானா? இதனால் விளங்கும் உண்மை என்ன? இரண்டாயிர வருடங்களுக்கு முன் இராவணன், தென்னவன் ஆகவே கருதப்பட்டான். பாண்டியருக்கும் இராவணனுக்கும் உள்ள தொடர்பை அறிய பாண்டியன் நெடுஞ்செழியனும், மாங்குடி மருதனாரும் உதவினர்.

கம்பராமாயணத்தின் ஊர்தேடு படலத்தில், சீதையைத் தேடி இராவணனின் மாளிகையினுள் நுழைந்த அநுமன், அங்கே கட்டிலில் நித்திரை கொண்ட இராவணன் மனைவி வண்டோதரியைப் பார்த்து, சீதையோ என எண்ணி
“கானுயர்த்ததார் இராமன் மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீனுயர்த்தவன் மருங்கு தான் மீளுமோ நினைத்தது மிகை”                                                            - (ஊர்தேடுபடலம்: 201)
என்று சொல்வதைக் கம்பன் எமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதிலே இராவணனை 'மீனுயர்த்தவன்' என்கிறார். மீன் கொடியை உயர்த்திய இராவணனின் பக்கத்தில் சீதை இருப்பாளா? அதிகமாக நினைத்துவிட்டேன், என்றானாம் அனுமன். மீன் கொடியை உடையவர்கள் பாண்டியர்களே.  இது அனைவரும் அறிந்த விடயம். கம்பனும் இராவணனை மீன்கொடியுடைய பாண்டியனாகக் காட்டுகிறார். கம்பனுக்கு பல நூற்றாண்டுகளின் முன் வாழ்ந்த உருத்திரனாரும்
“மாவிலங்கைப் பதியினிலே மகரவீணைக் கொடிதுலங்க
நீரிலங்கு நிலமெங்கும் நிறைபுகழை நட்டவனாம்”
                                       - (மாந்தை மாண்மியம்: 327)
என தாம் எழுதிய மாந்தை மாண்மியத்தில் இராவணனை மகரமீன் வடிவான வீணைக் கொடி உடையவனாகவே சித்தரிக்கிறார். 

அத்துடன் வடமொழி  நூல்கள், இராவணனை நாக அரசனாகக் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கிய நூலானா பரிபாடலோ மதுரையை நாக நாடு என்கிறது. எல்லோராக் குகைச் சிற்பத்திலும்  நாகர்களுடனே இராவணன் வைக்கப்பட்டுள்ளான். எல்லோராவில் உள்ள அவனது சிற்பத்தை மேலே பாருங்கள். இராவணன், 'காவடி தூக்குபவன்'  போல் அல்லவா இருக்கிறான்.

இராவணன் கைலைமலையை திட்டமிட்டு எடுக்கவில்லை என்பதை திருஞானசம்பந்தர்
எண்ணமது இன்றி எழிலார் கைலை மாமலை எடுத்த திறலார்
                                         - (ப.திருமுறை: 3: 77: 8)
எனக் கூற, சுந்தரமூர்த்தி நாயனார், இவர்களுக்கு எல்லாம் ஒருபடி மேலே போய் இராவணனுக்கு இறைவன் அருள்செய்த திறத்தைக் கண்டே தான் இறைவனின் திருவடியை அடைந்ததாகாக் கூறுகிறார்.
“எறியு மாக்கடல் இலங்கையர் கோனைத் 
          துலங்க மால்வரைக் கீழடர் திட்டுக் 
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டு
          கோலவாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன்”
                                      - (ப.திருமுறை: 7: 55: 9)
எனச் சுந்தரமூர்த்தி நாயனார் சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது? தம் முன்னோன் வழி நடக்கவே சுந்ரமூர்த்தி நாயனார் விரும்பியது தெரியவில்லையா?

இவர்கள்மட்டுமல்ல ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், திருமூலர், ஆழ்வார்கள், திருமாளிகைத்தேவர், கண்டராதித்தர், சந்தான குரவர், அருணகிரிநாதர், தாயுமானவர் போன்ற சான்றோர் பலராலும் பாடப்பெற்ற பெருந்தகை.

இவ்வளவு பெருமை எல்லாம் பெற்ற இராவணனை 'என் தமிழர் மூதாதையாக' இனங்காணக் காரணமாய் இருந்தவர்களில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ரா பி சேதுப்பிள்ளை,  புலவர் குழந்தையனார், பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார் போன்றோர் மிக முக்கியமானவராவர். அதிலும் பாரதிதாசனே “என் தமிழர் மூதாதை” என்று பொன்னெழுத்துக்களில் செதுக்கிக் காட்டியவர்.

“தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா!
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் 
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும்
.............................. தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும்  நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பெஎன் மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்”
என்று எடுத்துச் சொல்லி இராவணனைப் பற்றிய தேடலை என்னுள் அள்ளிவிதைத்தவர் பாரதிதாசனே. 

என் தமிழர் மூதாதையான இராவணனின் பெருமைகளை தமிழ்ச்சான்றோர்கள் எடுத்துச் சொல்லியும் நாம் அவற்றைப் புறக்கணித்ததால் இன்று மாற்றான் நாட்டு வீதிகளிலே நிற்கின்றோம். இனியாகிலும்  தமிழர் மூதாதையான இராவணன் பற்றிய உண்மைகளை அறிவோமா?
இனிதே,
தமிழரசி.
[1996ல் எழுதியது]

Monday 24 June 2013

மண்ணாகும் மாயப்பை!



எப்போது நமது உடல் மண்ணோடு மண்ணாகும் என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால் என்றோ ஒரு நாள் நாம் எல்லோரும் அந்நிலையை அடைந்தே தீருவோம். அதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று, எப்போது நிற்கிறதோ அப்போது எமது உயிர் எம்முடலில் இருந்து போய்விடும். 

உயிர்க்காற்றாகிய ஒட்சிசன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு நம் உடலிமுள் சென்று சேராது. நம் உடலில் இருக்கும் இரத்தம், தசை, நரம்புகள், நிணநீர், மூளை, தோல், எலும்பு, எலும்புமச்சை, சுக்கிலம் போன்றவற்றின் உயிரணுக்கள் உயிர்வாழ்வதும்  உயிர்க்காற்றாலேயேயாகும். ஆதனால் நம்முன்னோர் மனிதவுடலைக் காற்றடைத்த பண்டம் என்றனர். 

நம் உடலாகிய காற்றடைத்த பண்டத்தை மிக அழகு தமிழில் “காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!” என்றும் கூறினர். பலூனுக்குள் இருக்கும் காற்று பலூனைவிட்டுப் போனதும் தரையில் வீழ்ந்து அலங்கோலமாகக் கிடப்பதைப் போல மனிதர்களும் உயிர்மூச்சு போனதும் விறைத்த உடலாய் வீழ்கின்றனர். அப்படி உடல்கள் வீழ்வதைப் பார்த்த அனுபவமே ‘காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!’ எனச் சொல்லவைத்தது. 

காயப்பை ஒன்று சரக்குப் பலயுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்னின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே                       
                                                     - (திருமந்திரம்: 2122)

என்று திருமூலரும் சொல்கிறார். காயம் என்பது உடம்பு. அதாவது தோலால் போர்த்த எமது வெளியுடம்பு. அதுவே காயப்பை. நம்மிடம் உடலாகிய ஒரு காயப்பை இருக்கிறது. அதற்குள் பலவைகையான சரக்குகள் இருக்கின்றன. அந்த சரக்குகளே எமது உடலை நோய்யில்லாது இயக்குகின்றன. அவற்றுக்குத் தூய காற்றும் உணவும் கிடக்காவிட்டால் நோய் உண்டாகும். 

நமது உடம்பாகிய காயப்பையினுள் [தூல உடலுக்குள்], மாயப்பை ஒன்று உண்டு [சூக்கும உடல்]. மாயம் - பொய்த்தோற்றம். நிலையான உடம்பு போன்ற பொய்த்தோறத்தைக் கொடுப்பது அந்த மாயப்பை. சூக்குமம் என்றால் கண்ணால் பார்க்கமுடியாத நுண்மையானது. அது அணுவினும் சிறியது என்பர். ஆனால் அதுவே எமது உடம்பு முழுவதும் நிறைந்தும் நிற்குமாம். அதைக் கொண்டு அகக்கண்ணால் மிகத்தொலைவில் நடப்பதையும் கேட்கலாம், பார்க்கலாம். அது ஒரு சிலருக்கே முடியும். ஒரு காயப்பையிலிருந்து, மாயப்பை இன்னொரு காயப்பையுள் புகுவதை நம் முன்னோர் கூடுவிட்டு கூடு பாய்தல் என்றனர். 

மாயப்பையினுள் இன்னும் ஒரு பை உண்டு. அந்தப்பை மாயாத பை. அதுவே நம் உயிர்ப்பை. எமது வினைப்பயனுக்கு தகுந்தது போல நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் காய்ப்பை மாறும். ஆனால் உயிராகிய கள்வனை வைத்திருக்கும் மாயப்பை உயிருடன் சேர்ந்தே திரியும். ஆனால் சாதாரண கண்ணுக்கு தெரியாது. திருவள்ளுவரும் உயிரானது இருப்பதற்கு இடமில்லாது உடம்பினுள் ஒண்டிக் குடித்தனம் இருப்பதாகச் சொல்வார்.
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”                                        
                                                     - (குறள்: 340)

தூல உடம்பிற்குள் நிற்கும் போது அதனை உயிர், சூக்கும உடல் வழியாக இயக்கும்.  தூல உடம்பைவிட்டு உயிர் நீங்கும் போது சூக்கும உடம்பளவாய் உயிர் நிற்கும். [விண்வெளியில் ராக்கெட்டை இயக்கிச் சென்ற விஞ்ஞானி, ராக்கெட்டில் இருந்து இறங்கி விண்கல உடையோடு செல்வது போன்றது.]

பலவித பொருட்களை உடம்மெனும் பை வைத்திருக்கிறது. அதற்குள் மாயத்தோற்றத்தைத் தரும் மாயப்பை ஒன்று உண்டு. அந்த மாயப்பையினுள் இன்னொரு பையுண்டு. அது உயிர்ப்பை. உடம்பெனும் காயப்பையினுள் நின்ற உயிரெனும் கள்வன் புறப்பட்டால், மாயும் அப்பை மண்ணாகும். மாய் + அப்பை = மாயப்பை. அதனால் நாம் என்ன நடக்கிறது என்பதை அறியாது மயங்குகிறோம்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இப்பாடலில் இரண்டு மாயப்பைகள் இருக்கின்றன.
முதலாவது மாயப்பை - பொய்யான தோற்றத்தைத் தரும் பை. அது சூக்கும உடல்.
இரண்டாவது மாயப்பை - மாயும் பை. அது தூல உடல்.
புக்கில் - நிலையான வீடு [சொந்தவீடு]
துச்சில் - ஒண்டி 

Saturday 22 June 2013

காதல் கனியே!

கனியே! கனியே! காதல் கனியே!

கனிந்தாய் நெஞ்சின் அருட் கனியாய்
கனிந்த நினது அருட் கனியை
கனியாய் சுவைத்தும் கனியா மனதை
கனிய வைக்க கனியாய் ஆனாய்
கனியாய்க் கனிந்து யாது கண்டாய்!
கனியா நெஞ்சும் கனியு மென்றே
கனியாய் அருட் கனியாய் கனிந்தாயோ!

Friday 21 June 2013

எழுதுக சரித்திரம்!















பண்டைத் தமிழர் சொன்ன 
பாம்பின் வாய்த் தேரை போல 
இன்றைய தமிழர் வாழும்
இழிவை ஒழித்து இதமாய்
அன்றைய தமிழரின் திறத்தின்
ஆற்றல் தந்திடு பெருமையில்
இன்றைய சிறுமையைச் சீறிட
இசைந்தே ஒன்றாய் எழுந்து 
பொன்றிய வாழ்வை தேரைவாய்
பாம்பாக்கி எழுதுக சரித்திரம்!
                                                        - சிட்டு எழுதும் சீட்டு 65

Thursday 20 June 2013

ஆசைக்கவிதைகள் - 67

பூவுலகில் ஏன் பிறந்தேன்
இரவு வருவதாகச் சொன்ன காதலனின் வரவு பார்த்து காதலி ஒருத்தி, ஈழத்தின் மாந்தையில் நித்திரை இன்றி விழித்திருந்தாள். அவளைக் காண இரவென்றும் பாராது காதலன் வந்தானா இல்லையா என்பதை அறிய முடியாது துடித்தாள்.  அவளின் உள்ளத்துடிப்பை அறியாத அவளது வீட்டாரும் தூங்காது விழித்திருந்தனர். குளிர்காற்றும் வெளியே வீசியது. அக்காற்றில் மரத்து இலை குழைகள் வீழும் ஒலியும், புல்லசையும் சத்தமும் கூடக் கேட்டது. காற்றின் இரச்சலில் அவன் வந்ததற்கு அறிகுறியாகக் கொடுக்கும் சத்தம் கேட்கவில்லை. வெளியே எழுந்து சென்று வந்தானா என்று பார்க்கவும் முடியவில்லை.

அவள் காதலிப்பது வீட்டாருக்குத் தெரியாது. காதலனை எப்படிக் காண்பது? அவளுக்கு அவள் மேல் வெறுப்பு வருகிறது. அந்த வெறுப்பால் ‘இந்த உலகத்தில் ஏன் பிறந்தேன்’ என வருந்துகிறாள். அந்த வருத்தம் ஒரு நாட்டுப்பாடலைத் தந்தது.

காதலி: இல்லும் எதிரி இலை
                       குழையுந் தான் எதிரி
              புல்லும் எதிரி இந்தப்
                       பூவுலகில் ஏன் பிறந்தேன்
                                            - நாட்டுப்பாடல் (மாந்தை)
                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

மாந்தைக் காதலி போலவே சங்ககாலத்திலும் காதலி ஒருத்தி, காதலன் வரவு பார்த்து நித்திரை இன்றிக் காத்திருந்தாள். ஆனால் அவர்கள் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி காணமுடியாது போய்விட்டது.  அடுத்த நாள் அவனைக் கண்டபோது, அவன் வரவு பார்த்து முதல் நாள் தாம் விழித்திருந்ததை தோழி அவனுக்குச் சொல்கிறாள்.

“கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சிலமே
எம்இல் அயலது எழில் உம்பர்
மயில்அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”         - (குறுந்: 138)

‘பெருமைமிக்க ஊர் உறங்கினாலும், எமது வீட்டிற்குப் பக்கத்திலுள்ள எழில் மலையில் மயிலின் அடிபோன்ற இலையையுடைய நொச்சி மரக்கிளைகள் உதிர்த்த நீலமணி போன்ற பூக்கள் வீழ்ந்த சத்தத்தைக் கேட்டுக் கொண்டு நாம் உறங்காது விழித்திருந்தோமே’ என்கிறாள்.

மாந்தையின் நாட்டுப்பாடலைத் தந்த காதலிக்கு ஆறுதல் சொல்ல ஒரு தோழிகூட இருக்கவில்லை. அன்பாக ஆறுதல் சொல்லவும் யாருமில்லாத சலிப்பால் ‘ஏன் பிறந்தேன்’ என வருந்துகிறாள். சங்ககாலக் காதலிக்கோ தோழி இருப்பதால் ஆறுதல் கிடைத்தது. அவளது வாழ்க்கையில் சலிப்பு எற்படவில்லை.  அந்த வேறுபாட்டை இந்த ஆசைக்கவிதைகள் எமக்கு எடுத்துச் சொல்கின்றன.

Wednesday 19 June 2013

குறள் அமுது - (68)

குறள்:
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியாஅம்
சொல்லிய வண்ணம் செயல்”                        - 664     

பொருள்:
ஒன்றைச் செய்வேன் என்று கூறுதல் எல்லோருக்கும் எளிதாகும். ஆனால் சொல்லியபடி அதனச் செய்து முடித்தல் அருமையாகும். 

விளக்கம்:
நமது மனதின் உந்துதலால் நான் இப்படிச் செய்வேன், அப்படிச் செய்வேன் என்று சொல்லுவதும், அதை அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லுவதும் எல்லோருக்கும் மிகவும் இலகுவான காரியமாகும். சொன்னது போல் எவரும் செய்து முடிபதில்லை. அதனாலேயெ சொன்னது போல் செய்து முடிப்பது என்பது மிக  அரிய செயலாகும் என திருவள்ளுவர் இக்குறளில் கூறியுள்ளார். ஏனெனில் சொல்லுதலும் செய்தலும், சொல்வார் செய்வாரின் இயல்பைப் பொறுத்தது. 

சிலர் அரும்பாடுபட்டு தமது கருமமே கண்ணாகச் செய்து முடிக்கும் செயலை, பலர் பெரும்பாடுபட்டும் செய்துமுடிக்க இயலாது திண்டாடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதற்குக் காரணம் சிலரிடம் இருக்கும் மனத்திடமும், விடாமுயற்சியும், சோம்பல் இன்மையும், தன்நம்பிக்கையும் பலரிடம் இருப்பதில்லை. ஒருசிலருக்கு கிடைக்கும் நல்ல அரிய வாய்ப்புகள் பெரும்பாலானோருக்குக் கிடைப்பதும் இல்லை. 

வாய்ப்புக்கள் கிடைத்தாலும் மனவலிமையுடனும், விடாமுயற்சியோடும், செயற்பட்டாலும் கூட எத்தனையோ நல்ல விடயங்கள் போட்டி பொறாமைகளாலும், இயற்கைக் காரணிகளாலும், பொருளின்மையாலும், ஏன் சில நாடுகளின் அரசியல் கெடுபிடிகளாலும் கூடச் சொல்லியபடி செய்யமுடியாது தடைப்படுத்தப் படுகின்றன.

திருவள்ளுவர் இப்படிக்கூறி இருக்கிறாரே என்று நீங்கள் செய்து முடிப்பேன் என்று சொல்லிய  செயலைச் செய்யாது இருந்துவிடதீர்கள். அப்படி மனிதன் இருந்திருந்தால் இன்றும் காடுகளில்  மிருகங்களோடு மிருகங்களாகவே வாழ்ந்திருப்பான். சொன்னதைச் சொன்னபடி செய்தல் அரிய செயல் என்று சொல்கிறாரே அல்லாமல் செய்யமுடியாது என்று சொல்லவில்லை. எனவே எந்த நல்ல செயலையும் சொல்லியபடி செய்து முடித்து அரியவர்களில் ஒருவராய்  வாழ்வோம்.