Thursday 2 May 2013

கன்னியவள் அறியல்லயே!


வேப்பையடிக்குளம்
இன்றைய அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் பகுதி, பண்டைய ஈழத்தமிழரின் வாழ்விடங்களில் ஒன்றாகும். அங்கு வாழ்ந்த பண்டைய ஈழத்தமிழர் தம் எண்ணங்களை, ஆசைகளை கொட்டிக் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்த இடமே வேம்பை அடி மன்றம். அம்மன்றத்தின் அருகே இருந்தது வேம்பையடிக்குளம். இன்றும் அது அங்கே ஓர் அழகிய சிறுகுளமாக காட்சி தருகிறது. அக்குளத்தை வேப்பை அடிக்குளம் என்கின்றனர். அக்குளத்தில் யானைகள் குளித்து மகிழ்கின்றன. 

ஆனால் அந்நாளில் அந்த வேம்பையடிக் குளத்தில் பெண்கள் குளித்தனர். அங்கு குளிக்க வந்த  கன்னிப் பெண் ஒருத்தியை இளைஞன் ஒருவன் காதலித்தான். அவளைப் பார்ப்பதற்காகவே அவன் 


ஆண்: வேம்பையடி மன்றத்தே
                      காத்திருந்த காரணத்தை
            கன்னியவள் அறியல்லயே!
                      காதலயும் புரியல்லயே!



ஆண்: காத்திருந்தாலும் கண்ணால
                        பாக்குதில்லயே!
            ஓடித்திரிந்தாலும் உறக்கம்
                        வருகுதில்லயே!
                                                      - நாட்டுப்பாடல் (வேம்பையடிக்குளம்)
                                                     - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுபாடல் தேட்டத்திலிருந்து)
அந்த இளைஞனைப் போல சங்ககாலத்திலும் இளைஞன் ஒருவன் தான் கொண்ட ஒருதலைக் காதலால் தன் காதலி தனது காதலை அறிந்தாளோ! இல்லையோ! என எண்ணித் துன்பப்பட்டான். 

“சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான்அறிந் தனளோ இலளோ பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன்னுழை யதுவே. 
                                         - (குறுந்தொகை: 142)

'சுனையில் மலரும் பூக்களைப் பறித்து மாலை கட்டி, தினைப் புனத்தில் கிளிகளை ஓட்டுகின்ற பூவைப் போன்ற கண்ணுடைய இளம்பெண்ணான அவள், என் காதலை அறிந்தாளோ! இல்லையோ! தூங்கும் யானையைப் போல் பெருமூச்சு விட்டபடி என் உள்ளம் அவளிடமே இருக்கிறது' என்று சங்ககால காதலன்பட்ட, காதல் துன்பத்தை சங்ககாலப் புலவரான கபிலர் கேட்டு எமக்காக குறுந்தொகைப் பாடலாகத் தந்திருக்கிறார்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment