இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Friday, 1 May 2026
சித்திரநடம் ஆடும்சிவனே
Friday, 27 March 2026
மடத்துவெளி தன்னிலுறை வயலூரா!
மடமஞ்ஞை உடனாக மயிற்றோகை விரித்தாட
மாலைக் கதிரொளியில் மதிமயக்கும்
மடத்துவெளி தன்னிலுறை வயலூரா
தடமஞ்ஞை தடம்நாடி தனையர் செல்ல
திரைவந்து தடமழிக்கும் ஊரதீவுமுனதாக
தென்றல் சங்குபுக்கு தீம்பண்ணிசைக்க
மடமங்கையர் மனங்களித்து மருதயாழ் மீட்ட
முன்னையோர் முகம்மலர்ந்து கேட்டிருந்த
முத்தமிழின் சுவைநிறை புங்குடுதீவில்
வடபால் வடிவேலாய் வீற்றிருந்தருள் செல்வ
வடிவேலனே விடிவெள்ளியாய் மிளிர்ந்தே
வேண்டுவோர்க்கு வேண்டுவன தெரிந்தேநல்கு!
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
மடமஞ்ஞை - பெண்மயில்
மயில் - ஆண்மயில்
கதிரொளி - சூரிய ஒளி
மதிமயக்கும் - அறிவைமயக்கும்/ வியப்பைத்தரும்
தடமஞ்ஞை - கடற்கழியில் வாழும் மயில்
தடம் - சுவடு
தனையர் - பிள்ளைகள்
திரை - கடல் அலை
தடமழிக்கும் - சுவட்டை அழிக்கும்
சங்குபுக்கு - சங்கில் புகுந்து
மடமங்கையர் - இளமங்கையர்
மருதயாழ் - வயலும் வயல்சார்ந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் வாசித்த இசைக்கருவி.
மருதப்பண் - தற்போது கரகரப்பிரியா இராகம்
வடபால் - வடதிசையில்
வடிவேலாய் கூரான/அழகான வேல்வடிவில்
விடிவெள்ளியாய் - விடிகிறது என்னும் நம்பிக்கையைத் தரும் வெள்ளிபோல்
தெரிந்தே நல்கு - தெரிந்து எடுத்துத் தருக.
குறிப்பு:
"சடாச்சர மந்திர சொரூபா சிவசிவ தாண்டவ நந்தினி பாலா
Sunday, 15 February 2026
கண்ணில் அமுதூறுமே
திருநின்று வளர்கின்ற தில்லைப்பதி வாழ்மன்னன்
தருகின்ற அறிவெல்லாம் தண்ணளியே துணையாக
மருவுகின்ற மயக்கமோ மமதைதனை மேலாக்க
மால்கொண்ட திருமாலும் மலரவனும் அடிமுடிகாணா
எரிகின்ற நீளுருவை ஏங்கியேத்தி அடிபரவு
ஏற்றமிகு சிவராத்திரி நன்னாளில் கேதீச்சர
திருவாசக மடந்நண்ணி திருக்கூட்டச் சிவனடியார்
தேனுந்துமாநடங் காண கண்ணில் அமுதூறுமே
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
திருநின்று - அறிவுச்செல்வம் நின்று
தில்லைப்பதி - சிதம்பரம்
வாழ்மன்னன் - சிதம்பர நடராஜர்
தண்ண்ளியே - கருணையே
மருவுகின்ற - சேர்கின்ற
மயக்கமோ - மனக்குழப்பமோ
மமதை - நானே பெரியவன் எனும் எண்ணம்
மேலாக்க - மேலோங்கச் செய்ய
மால்கொண்ட - மயக்கம் கொண்ட
திருமால் - விஷ்ணு
மலரவன் - பிரம்மா
எரிகின்ற - எரியும்
நீளுருவை - நீளமான உருவை
ஏங்கிஏத்தி - ஏக்கத்துடன் வாழ்த்தி
அடிபரவ - அடியை வணங்க
திருவாசக மடம் - திருக்கேதீச்சரத்தில் இருக்கும் மடம்
நண்ணி - சென்று
தேனுந்து மாநடம் - ஆனந்தத் தேன் சிந்தும் சிவனின் திருநடம்
குறிப்பு:
விண்ணை நோக்கிப் பார்க்கும் நடராஜ வடிவம் மிகவும் அரிய ஒன்றாகும். சிறுவயதில் நான் பார்த்து இரசித்து மகிழ்ந்த ஒர் அற்புத நடனராசர் சிலையே இது. இச்சிலை [மேலே படத்தில் உள்ளது] அந்நாளில் திருவாசக மடத்தில் இருந்தது. பெரும்பாலும் நடராசர் சிலைகள் கடைக்கண்ணால் அம்பாளை பார்ப்பது போல் இருக்கும். அவற்றுக்கு மாறாக விண்ணை நோக்கியபடி இருப்பதே இச்சிலையின் சிறப்பாகும்.


