Saturday 16 March 2024

மயன் மகள் - 1.9(சரித்திரத் தொடர்கதை)


சென்றது ............

நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலகநாடுகளை சுற்றிவரும் வழியில் அரசமாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனைக் காப்பாற்ற நாககடம் சென்றான். நாககடத்தில் முகிலனின் காதலியின் தங்கையைக் காண்கிறான்.

இனி.....

நாககடத்து நாயகி


துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு 

நளிமலை நாடன் நள்ளியு நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து"

                              - இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் [சிறுபாணாற்றுப்படை]


நானா!’ எனத் திகைத்த இளநகை, “ஐயே.....’ எனக்கூறியபடிஇவர் அக்கா பதுமாவின் காதலன் எனச் சிரித்து, நாகநாட்டு இளவரசனான மயனுடன் இவர் சென்றார். நாகநாட்டு இளவரசனின் உயிர் காப்பாளனும் இவரே. இவரோ இங்கு மயங்கிக் கிடக்கிறார். மயன் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இவர் எழுந்தால் அல்லவா நாகநாட்டு இளவரசர் மயன் எங்கே என்பதை நாம் அறியலாம்? உங்கள் செல்லப்பெண்நாககடத்து நாயகிஎன்ன செய்வாள்? அவளை அழைத்து வரத்தானே சுக்கிராச்சாரியார் சென்றிருக்கிறார். அவள் வரும் நேரம் இங்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படாது தடுக்கவே பார்க்கிறேன். நாகரின் கலைகள் யாவும் கொழிக்கும் நாககடத்தை பார்க்கும் பொறுப்பை சுக்கிராச்சாரியார் என்னிடமல்லவா கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் நான் பரபரக்காமல் என்ன செய்யலாம்?” எனக் கேட்டாள்.


நாககடத்து நாயகி! என்ற பெயரைக் கேட்டதும் உரகவதி கண்கலங்கினாள். மூன்று வருடமாக நாககடத்து நாயகியைப் பார்க்காத ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது.


இந்த சின்ன வயதில் இவ்வளவு தெளிவாக சிந்திக்கிறாயே நீ மகாமந்திரி பதுமகோன் மகள் என்பதை நிரூபிக்கின்றாய்!” என்ற உரகவதி, வீரனுடன் இளநகை சிற்றாற்றங்கரைக்குப் போக அனுமதித்தாள்.


இதற்கிடையே சித்தன் மருத்துவரிடம் கதைத்து தனக்கு நுதிமயிர்துகில் குப்பாயம் தைப்பவர்களைத் தெரியும் எனக்கூறி வைத்தான்.


அங்கு உரகவதியும் இளநகையும் வந்ததும் மருத்துவர், “இளநகை! சித்தனுக்கு நுதிமயிர்துகில் குப்பாயம் தைப்பவர்களைத் தெரியுமாம். உன்னுடன் அழைத்துச் செல். மலைவாசியாதலால் காடுகள் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்கும்என்றார்.


சித்தன் பொய் சொல்வதாக இளநகை நினைப்பதால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்போடு சித்தனையும் அழைத்துக்கொண்டு உரகவதியிடம் விடைபெற்றாள்.


அவளின் சித்திரத்தேர் சிற்றாற்றங்கரையை நோக்கிச் சீறிப்பாய்ந்து சென்றது. சித்தன் தேரின் பின்தட்டில் இருந்தபடி நாககடத்து இயற்கையின் எழிலை ரசித்தான்.  இளநகையின் மெய்க்காவலர் முன்தட்டில் நிற்க, அவளே நடுத்தட்டின் மஞ்சத்தில் சாய்ந்திருந்தாள். வீரன் தேரைச் செலுத்தியவாறு பாடிக்கொண்டிருந்தான். யானைப்பாகனின் கட்டுக்கு அடங்காத வாலகனும் தேரின் பின்னே பெரிய இடைவெளிவிட்டு தொடர்ந்து சென்றது.


சிறிது நேரத்தில் களைப்பின் மிகுதியால் கண்ணயர்ந்த சித்தன் திடீரென வீரனின் பாடல் தடைப்பட்டு, மிக இனிய குரலைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இளநகை பாடிக்கொண்டிருந்தாள். அவனின் இடையில் செருகி வைத்திருந்த கொன்றையந் தீங்குழலை எடுத்து அவள் பாடியபாடலின் பண்ணை  குழலில் குழைந்தான். இளநகையின் பாடல் நின்றபோதும் சித்தனின் குழலிசை நிற்கவில்லை.


அவள் அவனைப் பார்த்தவாறு தன் தோளில் தொங்கிய சீலையின் நுனியில்ஒன்று - வாலகன் வாழ்த்து, இரண்டு - நடிப்பின் மன்னன், மூன்று - மாசுணம் கொல்வான், நான்கு - பணிலம் ஓட்டுவான், ஐந்து - நுதிமயிர்துகில் குப்பாயம் தைக்குமிடம் தெரிந்தவன், ஆறு - குழல் இசைக்கத் தெரிந்தவன், ஏழு - பண்கள் அறிந்தவன் எனச் சொல்லிச் சொல்லி ஒவ்வொரு முடிச்சாகப் போட்டாள். 


சித்திரத்தேரும் சிற்றாற்று அரங்கப்பகுதிக்கு வந்துசேர்ந்தது. சிற்றாற்றங்கரைவாசிகள் தேரைக் கண்டு ஓடிவந்தார்கள். அவர்கள் ஓடிவருவதைப் பார்த்த இளநகை சித்தரத்தேரில் இருந்து இறங்கினாள். சித்திரத்தேரையும்  அவளையும் பார்த்த சிற்றாற்றங்கரைவாசிகள் அரசகுலமங்கை என்பதை அறிந்து, வீழ்ந்து வணங்கி வரவேற்றார்கள். அவர்களின் தலைவன் ஏதோ சொன்னான். இளநகைக்கு அவனின் மொழி விளங்கவில்லை. இவள் சொல்வதும் அவர்களுக்கு விளங்கவில்லை. தனக்கு நுதிமயிர்த் துகில் வேண்டும் என்பதை அபிநயம் செய்து காட்டினாள்.


அவள் எலிபோல் அபிநயம் பிடிப்பதைப் பார்த்து சிரித்த சித்தன், தேர்த்தட்டில் இருந்து எழுந்து அவர்களிடம் சென்றான். சிற்றாற்றங்கரைவாசிகள் பேசும் எல் மொழியில் நகைச்சுவையுடன் பேசி, நுதிமயிர்த் துகில் வாங்கிக் கொடுத்தான்.  


சித்தன் அவர்களது மொழியில் நன்றாகப் பேசுவதைப் பார்த்துவேற்றுமொழி தெரிந்தவன்என எட்டாவது முடிச்சும் போட்ட இளநகை, “நுதிமயிர்த்துகில் குப்பாயம் தைப்பதற்கு எங்கே போகவேண்டும்எனச் சித்தனைக் கேட்டாள்.


தேனாற்று அப்பக்கம் கறமன் கற்காட்டுக்கு போகணும், ஆங்கயெல்லா யிந்த சிங்காரத்தேரு செல்லாதுங்கஎன்றான்  சித்தன்.


என்ன சித்தா! கறமன் கற்காடா? அது என்ன? உங்க மொழியில் சொல்கிறாயா? என்றாள் இளநகை.


அதூ நம்ம பேச்சில்லீங்க, கறமன் எண்டா வறண்டு போன நிலமுங்க. ஆங்க பல கோடி யாண்டுக்கு முன்னால உசிரோடு நின்ன மரக்காடு கல்லாப்போயி நிக்குதுங்க. மரம் கல்லாபோயினதால அது கற்காடு ஆயிட்டுதுங்க. எல்லாங் கல்லு மரமுங்க. ஆசைக்கு கூட பச்சைய பாக்க முடியாதுங்க. கற்காட்டுக்க எப்படியீங்க யிந்த சிங்காரத்தேருல போறதுங்க. நம்மட்ட கொஞ்சம் நுதிமயிர்த்துகில் தாங்க, நானு போயி குப்பாயம் தைச்சி வாரேனுங்கஎன்றவன், அவளின் பதிலுக்குக் காத்திராமல் சில நுதிமயிர்த்துகிலை எடுத்தான்.


அந்தக்கணமே அவனின் சீழ்க்கையைக் கேட்டு ஓடிவந்த வாலகன், அவனைத் தன் மஞ்சு மேல் வைத்துக் கொண்டு காட்டினுள் சென்று மறைந்தது.


அவனின் சீழ்க்கையையும் அதைக்கேட்டு ஓடிவந்த வாலகனின் வேகத்தையும் கண்டு அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள அவளுக்கு சில கணங்கள் எடுத்தன. தன் மெய்க்காவலன் ஒருவனைக் கூப்பிட்டு எங்கோ அனுப்பினாள். வீரா! நாம் நாககடம் செல்வோம் என்றவாறு தனக்குள்ளே சிரித்து, சித்தா! நீ பெரிய கைங்காரகன்என ஒன்பதாவது முடிச்சும் போட்டாள்.


சிற்றாற்றங்கரைவாசிகளுக்கு இவர்கள் பேசிய மொழி தெரியாததால் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாது விடுப்புப்பார்த்தனர். 


வீரன் நுதிமயிர்த்துகிலை தேரில் ஏற்றினான். அவளும் சிற்றாற்றங்கரைவாசிகளிடம் இருந்து விடை பெற்று தேரில் ஏறினாள். ஆனால் அவள் மனமோ சித்தனின் பின்னே சென்றிருந்தது. இவனா மலைவாசி? என எண்ணியபடி தான் போட்ட ஒன்பது முடிச்சுகளதும் விடையைத் தேடிக் கொண்டிருந்தாள். தேர் எங்கே போகிறது என்பதையும் அவள் பார்க்கவில்லை.


இவர்கள் இங்கே சிற்றாற்றங்கரைக்கு புறப்பட்டு சிறிது நேரத்தில், அங்கே உரகவதிக்கு சுக்கிராச்சாரியாரும் நாககடத்து நாயகியும் வருவதாக ஓலை வந்தது.  உரகவதி மகிழ்ச்சியில் மூழ்கினாள். அவர்கள்  வந்த உடனேயே முகிலனைப் பார்க்காது இருப்பதற்காக கூடத்திலிருந்து அவனை வேறோர் அறைக்கு மாற்றினாள். அன்று நாககடத்து நாயகி வருகிறாள் என்ற செய்தி நாககடம் எங்கும் காற்றோடு கலந்த நல்மணமாகப் பரவியது. நாககடமே விழாக்கோலம் பூண்டது. 


யார் இந்த நாககடத்து நாயகி? பத்து நாட்களுக்கு முன்புதான் நாககடத்து நாயகி என்ற பெயரை இந்த உலகம் அறிந்தது. தனது கணவன் மன்மதனுக்காக சிவனிடம் நீதி கேட்க சென்ற இரதியின் பெறா மகளும், சுக்கிராச்சாரியாரின் மாணவியுமான இளமதியே நாககடத்து நாயகியாய் நிற்கிறாள். 


நாகநாட்டு அரசன் விசுவகர்மா, இரண்டு வருடங்களாக உலகநாடுகளை சுற்றிப்பார்த்த மயன் மீண்டும் நாடுதிரும்புகிறான் என்ற நல்ல செய்தியை, ஒற்றன் குறும்பன் சாம்பன் மூலம் அறிந்திருந்தான். உலக அநுபவம் பெற்று திரும்பிவரும் தன் மகன் மயனுக்கு, அவனின் காதலியான இளமதியை திருமணம் செய்து வைத்து, நாகநாட்டை ஆளும் பொறுப்பையும் அவனிடம் கொடுக்க நினைத்தான். அதற்காக மகாமந்திரி பதுமகோனுடன் ஆலோசித்து, ஒரு முடிவெடுத்தான். தனது எண்ணத்தை மன்மதன் இரதி முதலானோருக்கும் கூறி, சுக்கிராச்சாரியாருக்கும் அறிவித்தான். 


அதற்கமைய குறித்த நாளில் நாகநாட்டு தலைநகராம் மதங்கபுரியில் மாபெரும் விழா எடுத்தான். அவ்விழாவில் இளமதிக்குநாககடத்து நாயகிஎன்ற பெயர்சூட்டி, அவளை நாககடத்துக்கு இளவரசி ஆக்கினான். நாகநாட்டரசன் விசுவகர்மாவின் அழைப்பின் பேரில் சுக்கிராச்சாரியார், அவளின் பெயர் சூட்டும் விழாவுக்கு நாகர்களின் தலைநகருக்கு சென்றிருந்தார். பத்து நாட்கள் அங்கே தங்கியிருந்த சுக்கிராச்சாரியார் இப்போது நாககடத்து நாயகியை அழைத்துக்கொண்டு நாககடம் வருகிறார். அவர் மதங்கபுரி போகமுன் நாககடத்தில் நாகநாட்டின் வருங்கால பேரரசிக்கு வரவேற்பளிக்க வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்துவிட்டே சென்றார். 


உரகவதிக்கு ஒரு நொடி போவது ஒரு யுகம் போவது போல் தெரிந்தது. எந்தச் சத்தம் கேட்டாலும் நாககடத்து நாயகியின் மயில்பொறி வருகிறதா? என அடிக்கடி வானத்தைப் பார்த்தபடி இருந்தாள். சுக்கிராச்சாரியாரின் வீட்டு நிலாமுற்றத்தில் நின்று பார்த்தால் ஓவியபுரியில் உள்ள வானவூர்தி ஓடும்பாதை நன்றாகத் தெரியும்.


உரகவதியும் நாககட மக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தக்கணம் அதோ வந்துவிட்டது. வான வெளியில் மெல்லிய கீற்றாகத் தெரிந்த அழகிய மயில்பொறி தன் இறகை அசைத்து அசைத்து அசைந்து அசைந்து பறந்து வந்தது. அது ஓவியபுரியை ஒரு வட்டமிட்டு ஓடுபாதையில் ஓடி நின்றது. மயிற்பொறியின் கீழிறகுகள் இறங்கும் படிகளாக மாற, மேலிறகு எழுந்து இறங்குவதற்கு கதவு திறந்தது. நாககடம் எங்கும் மங்கல ஆரவாரம் எழுந்தது. சுக்கிராச்சாரியார் முன்னே வர, இளமதி - நாககன்னியரின் பேரழகின் எழிலாய், நாககடத்து நாயகியாய் நாககடத்தில் கால் பதித்தாள்.


 நாககடமக்கள் மகிழ்ச்சியில் மூழ்கித்திளைத்தனர். அவர்களின் 

நாககடத்து நாயகியே! நானிலம் காப்பாய் நீயினியே!” 

என்ற வாழ்த்தொலி சுற்றியிருந்த மலைகளில் பட்டு நாககடமெங்கும் எதிரொலித்தது. 


ஆனால் நாககடத்து நாயகியை வரவேற்க அங்கு இளநகை வரவில்லை. அவள் மட்டுமா வரவில்லை?


மனிதன் நினைப்பவை யாவும் நடப்பதுண்டா? அதனை அந்தக்கணம் சுகிராச்சாரியாருக்கு உணர்த்திக் கொண்டு இருந்தது.


சுக்கிராச்சாரியாரின் கண்கள் எதையோ தேடி அங்கும் இங்கும் சுழன்று இசைபாடின.


இசை கேட்கும்...


இனிதே,

தமிழரசி


சொல் சொற்றொடர் விளக்கம்:

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு 

நளிமலை நாடன் நள்ளியு நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து" - மழை பொழியும் காற்று தங்குகின்ற நெடிய 

மலைஉச்சியை உடைய பெருமை மிக்க மலை நாடன் நள்ளி. நெருக்கமான கிளைகளும் மணம் வீசும் மொட்டுக்களும் இருக்கும்  இளமையான உயர்ந்த நாகமரம் உள்ள நாடது.

துளிமழை - மழைத்துளி

வளிதுஞ்சு - காற்று தங்கும்

நெடுங்கோட்டு - நெடிய மலை உச்சி 

நளிமலை - பெருமையுடைய மலை

நளிசினை - நெருங்கிய கிளைகள் 

நறும்போது - மணம்வீசும் மொட்டுகள்

கஞலிய - இருக்கும்

நாகுமுதிர் - இளமையான உயர்ந்த

நாகத்து - நாகமரம் 

இக்கட்டான - நெருக்கடியான

கொன்றையந்தீங்குழல் - கொன்றைப்பழத்தால் ஆன குழல்

குழைந்தான் - ஒன்றாக சேர்தல்

தேனாறு - நாககடத்தில் ஓடிய ஓர் ஆறு

அப்பக்கம் - அந்தப்பக்கம்

கறமன் - வறண்டநிலம்/கறல் மண்

மஞ்சு - யானையின் முதுகு

கைங்காரகன் - ஆற்றலுள்ளவன்

மதங்கபுரி* - கடல்கோளுக்கு முன் இருந்த ஒரு மலை (மதங்கமலை - மாந்தை மாண்மியம்)

மயில்ப்பொறி - மயில் வடிவமான சிறு விமானம் (மாந்தை மாண்மியம்)

ஓவியபுரி - இலங்கையில் இன்று ஒகியா [Ohiya] என்று அழைக்கப்படும் இடம்.

வானவூர்தி - விமானம்

ஓவியபுரியின் விமான ஓடுபாதை - இலங்கையில் உலகமுடிவு [World’s End] என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கிறது. 


குறிப்பு:

*மாந்தை மாண்மியம்மதங்கபுரிஎன்று விசுவகர்மாவின் தலைநகரைக் கூறுவது போல கந்தபுராணம் (பாடல்: 1012) கஜமுகனின் நகரை மதங்கபுரம்என்று கூறுகிறது. அத்துடன் அந்நகரின் பெயரை சுக்கிராச்சாரியாரே வைத்ததாகவும் கூறுகிறது.