இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Wednesday, 25 March 2026
Sunday, 15 February 2026
கண்ணில் அமுதூறுமே
திருநின்று வளர்கின்ற தில்லைப்பதி வாழ்மன்னன்
தருகின்ற அறிவெல்லாம் தண்ணளியே துணையாக
மருவுகின்ற மயக்கமோ மமதைதனை மேலாக்க
மால்கொண்ட திருமாலும் மலரவனும் அடிமுடிகாணா
எரிகின்ற நீளுருவை ஏங்கியேத்தி அடிபரவு
ஏற்றமிகு சிவராத்திரி நன்னாளில் கேதீச்சர
திருவாசக மடந்நண்ணி திருக்கூட்டச் சிவனடியார்
தேனுந்துமாநடங் காண கண்ணில் அமுதூறுமே
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
திருநின்று - அறிவுச்செல்வம் நின்று
தில்லைப்பதி - சிதம்பரம்
வாழ்மன்னன் - சிதம்பர நடராஜர்
தண்ண்ளியே - கருணையே
மருவுகின்ற - சேர்கின்ற
மயக்கமோ - மனக்குழப்பமோ
மமதை - நானே பெரியவன் எனும் எண்ணம்
மேலாக்க - மேலோங்கச் செய்ய
மால்கொண்ட - மயக்கம் கொண்ட
திருமால் - விஷ்ணு
மலரவன் - பிரம்மா
எரிகின்ற - எரியும்
நீளுருவை - நீளமான உருவை
ஏங்கிஏத்தி - ஏக்கத்துடன் வாழ்த்தி
அடிபரவ - அடியை வணங்க
திருவாசக மடம் - திருக்கேதீச்சரத்தில் இருக்கும் மடம்
நண்ணி - சென்று
தேனுந்து மாநடம் - ஆனந்தத் தேன் சிந்தும் சிவனின் திருநடம்
குறிப்பு:
விண்ணை நோக்கிப் பார்க்கும் நடராஜ வடிவம் மிகவும் அரிய ஒன்றாகும். சிறுவயதில் நான் பார்த்து இரசித்து மகிழ்ந்த ஒர் அற்புத நடனராசர் சிலையே இது. இச்சிலை [மேலே படத்தில் உள்ளது] அந்நாளில் திருவாசக மடத்தில் இருந்தது. பெரும்பாலும் நடராசர் சிலைகள் கடைக்கண்ணால் அம்பாளை பார்ப்பது போல் இருக்கும். அவற்றுக்கு மாறாக விண்ணை நோக்கியபடி இருப்பதே இச்சிலையின் சிறப்பாகும்.
Wednesday, 28 January 2026
விரைந்துணர்வில் கலந்தான்
Monday, 19 January 2026
யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!
Friday, 2 January 2026
என்றென்றும் உவந்திட அருள்வாய்!
Saturday, 29 November 2025
வெள்ளத்துள் நின்றாடும் ஈசனே!
Saturday, 8 November 2025
எம் நிதியே! நானில்லா நேரத்தில் எங்குற்றாய்!
என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் தம்பி - அமரத்துவம் அடைந்த முத்துக்குமாரு பாலசுந்தரம், புனிதவதி பாலசுந்தரம் ஆகியோரின் அருமை மகளும் திரு சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் எனது ஆருயிர்த் தங்கையுமான சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03/11/2025 திங்கட்கிழமை நயினை நாகபூசணி அம்மன் திருவடித் தாமரைத் தேனுடன் கலந்தார். அப்போது நான் நம் நாட்டிற்குச் சென்றிருந்ததால் அந்நிகழ்வு எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. என்னை ‘தமிழ்’, ‘தமிழ் அக்கா’ என்றெல்லாம் அழைத்துக் கொஞ்சி மகிழ்ந்த தங்கையின் உடலைப்பார்க்கப் போகிறேன். தாய்த் தாய் தேடிச் செல்லும் இவ்வுலகின் மாறாத சட்டம் இது. எனினும் மாபெரும் வெற்றிடமே என்னுள் எஞ்சி நிற்கிறது. நயினை நாகபூணிசக்கு எம் குடும்பத்து ‘நிதி’ உடனே தேவைப்பட்டதோ! வைப்பில் இட்டாளோ!! எங்கே தேடுவேனோ!!!
இனிதே,
தமிழரசி.




