Wednesday, 28 January 2026

விரைந்துணர்வில் கலந்தான்


கந்தனவன் புந்தியுளே காட்சிதர வந்தான்
            கணப்பொழுதே ஆனாலும் கவின் முகத்தின்
                        காந்தமது பாய காய்ந்த மரமானேன்

காந்தனவன் கண்ணிரண்டும் கருணையினைக் காட்ட
            காலைவிரி கதிரொளியில் இருள்கலைதல் போல
                        காந்தங் கலைந்தெனது சிந்தை நிறைவாக

சேந்தனவன் சாந்தமுகம் சந்ததமும் சிந்தும்
            சிறுநகையில் சிக்குண்டே சித்தந் தடுமாறி
                        செய்தவினை போக்கென்று செப்பிடவே மறந்தேன்

விந்தனவன் விந்தமலர் குருவிந்தமென மின்ன
            விந்தையிது என்னயென வியந்துநான் பார்க்க
                        விரைகழலின் ஒலியெனவே விரைந்துணர்வில் கலந்தான்.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கந்தன் - முருகன்
புந்தி - மனம்
கவின் - பேரழகு
காந்தன் - இறைவன் [காந்தம் போன்ற சக்தியுள்ளவன்]
சிந்தை - சிந்தனை 
சேந்தன் - முருகன்/செந்நிற அழகன்
சாந்தம் - அமைதி
சந்ததம் - எப்பொழுதும்
சிந்தும் - மலரும்
சிறுநகை - குறுநகை/புன்னகை/புன்சிரிப்பு
சித்தம் - உள்ளம்
செய்தவினை - முற்பிறப்பில் செய்தவினை/கன்மவினை
போக்கு - நீக்கு
செப்பிட - சொல்ல
விந்தன் - மென்மையானவன் [தாமரை போல]
விந்தமலர் - தாமரைமலர் போன்ற பாதம்
குருவிந்தம் - செந்நிறமான இரத்தினக் கற்களில் ஒன்று
மின்ன - ஒளிர
விந்தை - அற்புதம்
வியந்து - திகைத்து
விரைகழல் - விரைவாக ஒலிக்கும் காலணி [ஆண்கள்/வீரர்கள் அணிவது]

குறிப்பு:
விரைகழல் - நறுமணம்[விரை] உள்ள திருவடி/திருப்பாதம் என்ற கருதிலும் வரும்.
உண்மையில் படை வீரர்கள் காலில் அணியும் ஒருவைகை கால் அணியை விரைகழல் என்பர். விரைகழல்களை கணைக்காலில்/கணுக்காலில் அணிவர். அது காற்பெருவிரலுடன்/ விரல்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். யுத்தத்தில் மேலே பாய்ந்து எதிரியை தாக்கும் பொழுது அந்தக் காலணியில் தொங்கும் சதங்கைகட்கு உள்ளே பதுங்கி இருக்கும் சிறு சக்கரங்கள் அல்லது ஊசி, குறுவாள் போன்றவை  அதை அணிந்திருக்கும் வீரர்கள் காற்பெருவிரலை அழுத்த வெளியே வந்து பகைவரை, யானையை, குதிரையை காயப்படுத்தி வதம் செய்ய உதவும். விரைகழல் உள்ளே இருக்கும் பரட்கருவியை பரல் ஆயுதம் என்றும் கூறுவர்.

Monday, 19 January 2026

யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!


ஆனந்தத் தேனருந்த ஆசைகொண்ட நாளாய்
            ஆடிவிளையாடி பாடிமகிழ்ந்தே யுயர்
வானந்த மலைதோயும் வான்மதியம் சூடும்
            விண்ணவனாய் வேதமுதல்வனாய் விளங்கு ஒளியாய்
தானந்தம் இல்லாத் தன்மையைக் காட்டிட
            தனித்தே ஈமவனமே அரங்காய் ஆட்டுகப்பாய்!
யானந்தம் கண்டிலேன் யாதுசெய்வோம் 
            யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஆனந்தத்தேன் - திருவருட்தேன்
அருந்த - குடிக்க
உயர் - உயர்ந்த
வானந்தம் [வான் + அந்தம்] - வானத்து முடிவு 
மலைதோயும் - மலை முட்டும்
வான்மதியம் - சந்திரன்/பிறைச்சந்திரன்
விளங்கு ஒளியாய் - மிளிர்கின்ற ஒளியாய்
தானந்தம் - தனக்கு முடிவு
ஈமவனம் - சுடுகாடு
அரங்காய் - மேடையாய்
ஆட்டுகப்பாய் - ஆடிமகிழ்வாய்
யானந்தம் கண்டிலேன் - நான் முடிவைக் காணவில்லை
யாது செய்வோம் - என்ன செய்வோம்
யாமறிய - நாம் காண/அறிந்துகொள்ள
ஆனந்தத் தேன்நடம் - திருவருட்தேன் நடனம்

Friday, 2 January 2026

என்றென்றும் உவந்திட அருள்வாய்!


முன்னையே முயன்று தவம் செய்யா
          மூர்க்கத்தால் பிறந்துழன்று
அன்னையே என்றரற்றி அனுதினம்
          அன்பிலூறி நைந்துருகி
நின்னையே நாளும் நினைந்தறியா
          நோயினேனை நோய்நீக்கி
உன்னையே எண்ணி என்றென்றும்
          உவந்திட அருள்வாயம்மா
இனிதே,
தமிழரசி.
 
சொல்விளக்கம்:
முன்னையே - முற்பிறப்பிலே
முயன்று - முயற்சிசெய்து
மூர்க்கத்தால் - முரட்டுத் தன்மையால்
உழன்று - துன்பத்தில் வருந்தி
என்றரற்றி - என்று துன்பத்தை சொல்லி அழுதல்
அனுதினம் - எப்போதும்
அன்பிலூறி - அன்பால் கனிந்து
நைந்துருகி - மனம் கரைந்து
நோயினேன் - பிறவி நோயை உடையேனை
நோய் நீக்கி - பிறவி நோயை நீக்கி
என்றென்றும் - எப்போதும்
உவந்திட - மகிழ்ச்சி இன்பத்தில் மூழ்க

Saturday, 29 November 2025

வெள்ளத்துள் நின்றாடும் ஈசனே!


வெள்ளத்துள் நின்றாடும் ஈசனே வினை
                வெள்ளத்துள் நாம் ஆடலாகுமோ
கள்ளத்துள் கரந்தாடக் கற்றனையோ
                கள்ளத்துள் நாமாடிக் களிப்பதென்னே
பள்ளத்துள் பாய்ந்தாடும் பரமனே படு
                பள்ளத்துள் நாமாடக் கூடுமோ
உள்ளத்துள் உவந்தாடும் பாதனே உன்
                உள்ளத்துள் நாமாடல் ஒன்னுமோ
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கள்ளத்துள் - வஞ்சனையாக
கரந்தாடக் - மறைந்தாடக்
கள்ளத்துள் நாமாடி - பொய்யாக நாமாடி
களிப்பதென்னே - மகிழ்வது என்னவோ?
பள்ளத்துள் -தாழ்ந்த நிலத்தில்
படு பள்ளம் - மிகமிக ஆழமான குழியில்
நாமாடக் கூடுமோ - நாம் ஆட முடியுமா?
உள்ளத்துள் - மனத்துள்
உவந்து - மனம் மிக மகிழ்ந்து
பாதனே - பாதத்தையுடையவனே
உன் உள்ளத்துள் - உனது நெஞ்சத்துள்
ஒன்னுமோ - உறுதியாய் நிகழுமோ?

குறிப்பு
காட்டாற்று வெள்ளமாய் கல்லும் மலையும் குதித்து படு பாதாளத்தில் பாய்ந்து வீழ்ந்தோடி கட்டிடங்களைத் தகர்த்து உயிர்களைக் கொன்று குவித்த இயற்கையின் சீற்றத்தை பார்த்த தாக்கத்தால் எழுந்த பாடல்.

Saturday, 8 November 2025

எம் நிதியே! நானில்லா நேரத்தில் எங்குற்றாய்!


என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் தம்பி - அமரத்துவம் அடைந்த முத்துக்குமாரு பாலசுந்தரம், புனிதவதி பாலசுந்தரம் ஆகியோரின் அருமை மகளும் திரு சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் எனது ஆருயிர்த் தங்கையுமான சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03/11/2025 திங்கட்கிழமை நயினை நாகபூசணி அம்மன் திருவடித் தாமரைத் தேனுடன் கலந்தார். அப்போது நான் நம் நாட்டிற்குச் சென்றிருந்ததால் அந்நிகழ்வு எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. என்னைதமிழ்’, ‘தமிழ் அக்காஎன்றெல்லாம் அழைத்துக் கொஞ்சி மகிழ்ந்த தங்கையின் உடலைப்பார்க்கப் போகிறேன். தாய்த் தாய் தேடிச் செல்லும் இவ்வுலகின் மாறாத சட்டம் இது. எனினும் மாபெரும் வெற்றிடமே என்னுள் எஞ்சி நிற்கிறது. நயினை நாகபூணிசக்கு எம் குடும்பத்துநிதிஉடனே தேவைப்பட்டதோ! வைப்பில் இட்டாளோ!! எங்கே தேடுவேனோ!!!

இனிதே,

தமிழரசி.




Monday, 22 September 2025

கலைமகளே கருணைக்கண் பாரம்மா!


பிள்ளை உள்ளத்தாமரையில் பொற்புடனே நின்றவளே
            பல்கலையும் பைந்தமிழும் பயிற்றுவித்த தாயவளே
வெள்ளை மனத்தாமரையில் வீற்றிருக்க வருவாயா
            வேண்டும்வரம் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்வாயா
கள்ளை விண்டுந்தாமரையின் கருவண்டெனக் கற்றிட
            கல்வியெனும் கோதிலா அமுதைக் கற்கண்டாய் தருவாயா
கொள்ளை இன்பகோமளக் கொழுந்தே கோதாட்டியெம்மை
            கருதிவளர்க்குங் கலைமகளே கருணைக்கண் பாரம்மா!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பிள்ளை - சிறுபிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தாமரையில் - உள்ளமாகிய தாமரையில்/உள்ளுதல்[நினைத்தல்-நிலைத்திருக்கும்]
பொற்புடன் - மிளிர
பயிற்றுவித்த - கற்பித்த
தாயவளே - தாயே
வெள்ளை - அழுக்கற்ற/வஞ்சனை இல்லாத
மனத்தாமரையில் - மனமாகிய தாமரையில்/சிந்தனை[கற்பனை-மாறுபடும்]
வேண்டும் வரம் - கேட்கும் வரம்
வேண்டுவோர்க்கு - கேட்போர்க்கு
வேண்டுவன - தேவையானவற்றை
கள்ளை - தேனை
விண்டும் - சிந்தும்
கருவண்டென - கருநிற தேன்வண்டு போல[பெருந்தேனி மீண்டும் மீண்டும் சுழன்று தேன்                                   அருந்துவது போல]
கற்றிட - படிக்க
கோதிலா - குற்றமில்லாத/ குறையில்லாத
அமுதை - அமிழ்தத்தை
கற்கண்டு - பலவகையாக சுவைத்து [கடித்து விரைவாக/உமிந்து மெதுவாக] உண்ணலாம்
கொள்ளை இன்பக்கோமளம் - அளவிடமுடியாத பேரின்ப அழகான
கொழுந்தே - தளிர் நெருப்பே [மேல் நோக்கி எரியும் தீச்சுடர்]
கோதாட்டி - பெருமைப்படுத்தி
எம்மை - எங்களை
கருதிவளர்க்கும் - கருத்தில் கொண்டு வளர்க்கின்ற

Sunday, 21 September 2025

வாழ்வாங்கு வாழ்வோர்!


பாவியர் தம்மையும் படைத்தவன் நீயோ
            பரமன் எனும் பெயரைத் தந்ததுயாரோ
ஆவியை வைத்தாய் அனைத்துமே தந்தாய்
            ஆணவம் அற்று வாழவும் வைத்தாய்
கூவி அழைத்தே கும்பிட்டு நின்றேன்
            குணங்கெட்ட செயலை செய்பவர் தம்மை
வௌவி அழித்திடு! வையகம் எங்கும்
            வாழ்வாங்கு வாழ்வோர் வாழ்ந்திட நன்றே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பாவியர் - குற்றம் செய்வோர்/தீயவர்
பரமன் - மேன்மையான பண்புகளைக் கொண்டவன்
ஆவியை - உயிரை
அனைத்துமே - தேவையான அனைத்தையும்
அற்று - இல்லாது
குணங்கெட்ட - கெட்டதை
வௌவி - பற்றியெடுத்து
வையகம் - உலகம்
வாழ்வாங்கு - உலக ஒழுக்கத்தின் படி/மனிதப்பண்புடன்
வாழ்வோர் - வாழ்கின்றவர்கள்
வாழ்ந்திட - வாழ