Thursday 1 October 2015

நயந்திட வாராய்!


வயலூர் முருகன்

நறுமணங் கமழ்கடம்ப மலர்த்தார் அணிந்தான்
நற்றமிழ் வல்லோர் நல்மார்ப மர்ந்தான்
குறுநகை காட்டி கழல்தொழும் அடியவரை
காத்திடுவான் கந்தன் என்றார் கணவந்தேன்
அறுமுகனே ஊனுடலுருகி ஆருயிர் பிரியினும்
அந்தமில் செந்தமிழ் அருவியாய் சொரிந்து
நறுந்தமிழ் பாமாலை நயந்திட வாராய்
நானிலம் வாழ நல்லருள் தாராய்

Wednesday 30 September 2015

வாருங்கள் காத்திட!

அகிலஉலக சிறுவர்தினம் ஆனந்தம் கொண்டு
ஆடுகின்றோமா! மாறாய் நன்மக்களைப் பெற்றும்
மகிழமாட்டா அவலம் உற்றோமே! பிள்ளைகள்
மனமகிழ் நாளிதுவோ! சிறுவர் தமை 
அகிலமெலாம் சீரழிக்கும் சிறுமை சொல்லில்
அடங்காவே! முள்ளுமரக் காட்டில் எங்கள்
கோகிலங்கள் வாழுதே! கொன்றுதின்ன காத்திருக்கு
குள்ளநரிக் கூட்டமே! வாருங்கள் காத்திட!

காலையில் எழுந்து கடமையை முடித்து
கல்வி கற்றிடச் சென்றிடும் பிள்ளைகள்
மாலையில் வந்து மகிழ்ச்சி தருவார்
மாலையும் போச்சு! மரணமே ஆச்சு!
சாலையின் ஓரம் கிடந்த தென்றும்
சாக்கடை நீரில் மிதந்த தென்றும்
சீலையில் சுற்றி சீரெனத் தரும்
சேதியைக் கேட்டு வேகுது நெஞ்சம்!

மானுடப் பண்பு தொலைந் ததுவோ!
மாட்சிமை பெற்றிட வழி எதுவோ!
ஊனுடல் நொந்து உழைத் துழைத்து
உவகை மறந்த மானுடர் நாம்
மானுட இன்ப நுகர்ச்சிலே நல்  
             மக்களைப் பெற்று மனங் களித்தோம்
தேனுடற் செல்வ மக்களைத் தினம்
தினம் காத்து வளர்த்தல் கடமையன்றோ!

கடமையை மறந்து காசுக்கு அலைந்து
காசினி எங்கும் காற்றெனச் சுழன்று
உடமைகள் தேடி உறவுகள் மாள
ஊரையும் தொலைத்து உணர்வை இழந்தும்
மடமையை உணரா மமதை தன்னால்
 மக்களை இழக்கும் நிலை அடைந்தோம்
உடமையுள் உடமையாம் மக்கட் செல்வ
உடமையைக் காக்க வழி சமைப்போமா!

பெருமையும் சிறுமையும் பிறர்தர வாராதாயினும்

பெற்றார் உற்றார் குருதரவரு மாதலால் 
சிறுமையை நீக்கி செழுமை ஊட்ட
சிறுமைகள் உற்ற சிறுவரே எனினும்
வெறுமையை போக்க வேண்டிய அன்பை
வேண்டிய அளவு ஆதரித் தணைத்து
பொறுமையைக் காட்டி காத்திடல் உற்றார்
பெற்றார் ஊரார் உலகோர் பொறுப்பன்றோ!

இல்லிடம் தன்னில் வலைத்தளம் ஊடாய்

இரவு பகலாய் இரகசியம் பேணி
செல்லிடப் பேசி துணையுடன் கூடி
சிரித்து மகிழும் சிறுவர் தம்மை
மெல்லிய சொல்லில் நயமுடன் கடிந்து
மனநலம் காத்து மகிழ்வினை ஊட்டி
கல்வி கற்றிடக் கற்றிடக் கனியும்
கவின் அழகை  காட்டிட வாரீர்!
                                                -  இனிதே,
                                                      தமிழரசி. 

Tuesday 15 September 2015

நல்லை கந்தன்!


நல்லை கந்தன் நயனம் கண்டேன்
நாளும் எம்மை நயத்தல் கண்டேன்

முல்லை முறுவல் முகமும் கண்டேன்
மாளும் எம்மை முகத்தல் கண்டேன்

தொல்லை தவிர்த்து ஆள்தல் கண்டேன்
தாழும் எம்மை தாங்கல் கண்டேன்

எல்லை இல்லா இன்பம் கண்டேன்
ஏழை எமக்கு அருளல் கண்டேன்

வல்லை வந்த வடிவேல் கண்டேன்
வாழ்வாய் எம்முள் வாழ்தல் கண்டேன்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
நயத்தல் - விரும்புதல்
மாளும் - அழியும்
முகத்தல் - மணத்தல்
தொல்லை - துன்பம்
வல்லை - விரைந்து

Thursday 27 August 2015

தமிழினைச் சுவைத்தேனே சிந்தையிலே!

ஆனந்தக் கூத்தாடும் அழகையனே - உனை
ஆசையில் வைத்தேனே இதயத்திலே

தானந்த வேலாடும் தணிகையனே - உன்
தாளினைத் தொழுதேனே தணிகையிலே

மானந்த மயிலாடும் முருகையனே - உன்
முறுவலைக் கண்டேனே மருதையிலே

தேனுந்தத் திறலாடும் மதுகையனே - உன்
தமிழினைச் சுவைத்தேனே சிந்தையிலே

Wednesday 15 July 2015

நேர்மையைக் காட்டுவது எப்போதோ?


குஞ்சுகள் நாம் இங்கு கூடிநின்றோம்
கூடுகள் இன்றி வாடுகின்றோம்
வஞ்சம் உள்ள மானுடரே உங்கள்
வன்மம் தீர்வது எப்போதோ?

பச்சை மரம்  இங்கு காணவில்லை
பதுங்கி இருக்க நிழலுமில்லை
அச்சம் உள்ள மானுடரே உங்கள்
ஆசை மாய்வது எப்போதோ?

தஞ்சம் எமக்கு இங்கு யாருமில்லை
தந்தை தாயரை கண்டதில்லை
விஞ்சும் எண்ண மானுடரே உங்கள்
வேட்கை தணிவது எப்போதோ?

மிச்சம் எமக்கு இங்கு ஏதுமில்லை
மேதினி எங்கும் யாதுமில்லை
இச்சை மிக்க மானுடரே உங்கள்
இச்சை குறைவது எப்போதோ?

பஞ்சம் உமக்கு இங்கு வந்ததில்லை
பாரின் பசுமைக்கு ஈடுமில்லை
நெஞ்சம் கொண்ட மானுடரே உங்கள்
நேர்மையைக் காட்டுவ தெப்போதோ?
                                                                    
இனிதே,
தமிழரசி

Tuesday 14 July 2015

முந்நின்று அருள்தருவான்!


பன்னிரு கையுடையான் பழந்தமிழ் பாவுடையான்
என்னிரு கண்ணிரண்டில் என்றுமே ஒளியானான்
தன்னிரு கண்ணிரண்டில் தயைதனைக் காட்டிடுவான்
முன்னைய வினையறுக்க முந்நின்று அருள்தருவான்

Monday 6 July 2015

மணிவாசகர் வாக்கில் வண்டோதரி

இராவணன் வண்டோதரி புடைப்புச் சிற்பம் - களனி

இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே பண்டைய மனிதர்களால் அறியப்பட்ட பெருமை மிக்க நாடுகளில் ஒன்று இலங்கை. உலகின் பண்டைய சரித்திரங்களைக் கூறும் பண்டைய மொழி நூல்களும் கூட இலங்கையின் வளத்தை - செல்வச்செழிப்பைக் கூறத்தவறவில்லை. சமஸ்கிருத வேத, இதிகாச நூல்களும், தமிழ் இலக்கிய சங்க நூல்களும் இலங்கையில் வாழ்ந்தோரின் புகழையும் சேர்த்துச் சொல்கின்றன.

அவை இலங்கையின் மாந்தையை அரசாண்ட மயனைப்பற்றியும் கூறுகின்றன. அவனை நாகர்களின் அரசன் என்றும் அவை சொல்கின்றன. மதுரையை நாகநாடு எனவும் தமிழரை  நாகர்கள் என்றும் பரிபாடல் கூறுகின்றது. சிலப்பதிகார மங்கல வாழ்த்தும் 
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு”
என மதுரையைச் சொல்கிறது. ஆதலால் நாகர்கள் எனத் தமிழரையே அழைத்தனர் என்பதும் தெளிவாகின்றது..

பண்டை நாளில் திருக்கேதீஸ்வரத்தில் இருந்த திருக்கோயில் ‘மா எந்தை’  கோயில் என அழைக்கப்பட்டது. அதனை
மா எந்தை கோயில் நண்ணி மலரடி தொழுவார்க் கெல்லாம்
மறுமையும் இன்பம் நல்கும் மணிமிடற் றந்தணாளன்”
என்று அக்கோயில் இறைவனை மாந்தை மாண்மியம் கூறுகின்றது. ‘மா எந்தை’ கோயிலை மயன் கட்டினான் எனவும் அவனின் மகள் வண்டோதரி ‘மா எந்தை’ இறைவனை காதலால் கசிந்துருகி வணங்கினாள் எனவும் மாந்தை மாண்மியம் சொல்கிறது. 'மாஎந்தை' கோயில் இருந்த இடமே இன்று 'மாந்தை' என அழைக்கப்படுகிறது.

மாந்தையில் வாழ்ந்த மயனின் மகளுக்கு சிவன் நித்தமும் திருமணக்கோலத்துடன் காட்சி கொடுத்தாராம். சிவனின் கீர்த்திகளை திருவாசகத்தின் ‘கீர்த்தித்திருவகவல்’ சொல்கிறது. அதில் மாணிக்கவாசகர்
“தேவூர் தென்பால் திகழ்தரு தீவில்
கோஆர் கோலங் கொண்ட கொள்கையும்            
                                            - (ப.திருமுறை: 8: 2: 71 - 72)
என்று இறைவனின் கீர்த்திகளில் ஒன்றைச் சொல்கிறார்.

இத்திருவாசகத்தில் இலங்கையை மணிவாசகர் ‘திகழ்தரு தீவு’ எனக் கூறுகிறார். குமரி ஆற்றுக்கிடையே ஆற்றிடைக்குறையாக திகழ்ந்ததால் - இலங்கியதால் அதற்கு இலங்கை என்று பெயர். [ஆற்றுக்கு இடையேயுள்ள நிலப்பரப்பு, தமிழில் இலங்கை என அழைக்கப்படும்]. இலங்குதலும் - திகழ்தலும் ஒத்த கருத்துள்ள சொற்களேயாகும். கொள்கை என்றது இங்கு இறைவனின் தன்மையைக் குறிக்கின்றது. அதாவது தேவூருக்குத் தெற்கே இலங்குகின்ற தீவில் [திகழ்தரு தீவு] சிவன் பேரழகு பொருந்திய மணவாளக்கோலம் [கோஆர் கோலம்] கொண்ட தன்மையை [கொள்கையை] புகழ்கிறார்.

அதனால் மாணிக்கவாசகர் ‘நித்தமணாளர்’ என்று சிவனைப் பெயரிட்டு அழைத்தார். அதை
“நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்”               
                                              - (ப.திருமுறை: 8: 17: 3)
என அன்னைப்பத்து காட்டுகின்றது.

இந்த திருவாசகத்தில் மணிவாசகர் பெருந்துறை என்று சொல்வது தமிழகத்தில் உள்ள திருப்பெருந்துறையையா? ஈழத்தில் உள்ள பெருந்துறையையா? என்ற கேள்வி எழுகின்றது. ஈழத்தில் பெருந்துறை இருக்கிறதா? என்னும் கேள்வி இதைவாசிக்கும் உங்களில் பலருக்கு இப்போது எழலாம். ஈழத்திலும் பெருந்துறை இருந்தது. இப்போதும் இருக்கிறது. 

ஈழத்து பெருந்துறையை சங்க இலக்கியங்களும் சொல்கின்றன. குமரி ஆற்றுக்கு இடையே  இலங்கை இருந்தகாலத்திலும் இந்தப் பெருந்துறை ஈழத்தில் இருந்தது. அதனை
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின்”           
                                                     - (புறம்: 67: 6)
என அன்னச்சேவலுக்கு, பிசிராந்தையார் புறநானுற்றில் சொல்வதால் அறியலாம். பிசிராந்தையார் கூறிய அயிரை மீன் நன்னீரில் வாழும் மீன். ஆதலால் அவ்விடம் கடல்கோளுக்கு முன்னிருந்த குமரியாற்றுப் பெருந்துறை என்பதும், அது இன்றைய கன்னியாகுமரி அல்ல என்பதும் தெளிவாகிறது. அன்று குமரிஅம் பெருந்துறை என்ற பெயருடன் இருந்த பெருந்துறையே, கடல் கோளின் பின் மணிவாசகர் காலத்திலும் அரேபியக் குதிரைகள் வந்து இறங்கும் பெருந்துறையாக இருந்தது. அந்தப் பெருந்துறையே இன்றைய மாதோட்டம் ஆகும்.

பெருந்துறை என்ற பெயர் மாதோட்டம் ஆக மாறியது.  அதுபோல் இலங்கையில் இருந்த சம்பான் + துறை = சம்பாந்துறை என்ற பெயரும் சம்பான் + தோட்டம் = சம்பாந்தோட்டமாகி இப்போது அம்பாந்தோட்ட ஆகி நிற்கிறது. சம்பான் என்பது தோணி, படகு என்பவற்றைக் குறிக்கும் சொல்லாகும். சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர்களில் ஒன்று. நாவல் மரத்தால் செய்த படகு, தோணி என்பவை சம்பான் அழைக்கப்பட்டன. தமிழரின் கப்பல் கட்டும் கலைச்சொல் தொகுதி; இன்றும் கூட  நாவல் மரம், கப்பல் கட்ட பயன்படுவதைச் சொல்கிறது. படகுகள் நிறைந்த துறைமுகம் என்ற கருத்தில் சம்பாந்துறை என ஈழத் தமிழ் முன்னோர் அழைத்தனர்.
“குரை கடலுக்கொரு சம்பானாய் வருவடிவேலா
என்று திருப்புகழில் முருகனை சம்பான் என அருணகிரிநாதர் அழைக்கின்றார்.

மணிவாசகரும் பெருந்துறையைக் கூறும் இடங்களில் தென் பெருந்துறை’ ’தென்னன் பெருந்துறை’ ‘பெருந்துறை’ என்றெல்லாம் கூறுவதைக் காணலாம். அவர்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் பல பெருந்துறைகள் தமிழகம் எங்கும் இருக்கின்றன. அப்படியிருக்க எப்படி மாதோட்டத்தை மணிவாசகர் சொன்ன பெருந்துறை என்று சொல்வது?

மேற்கே தமிழகத்தில் இருந்து கிழக்கே இருக்கும் பெருந்துறையைப் பார்க்க வரும் மணிவாசகரின் பார்வையில் கதிரொளியானது பெருந்துறையில் இருந்த மலைக்கு [பெருந்துறை வரை] மேலே திசைதோறும் விரிந்து செல்வது தென்படுகின்றது. அதனை திருவண்டப் பகுதியில்
“கருமா முகிலின் தோன்றி
திருஆர் பெருந்துறை வரையில் ஏறி
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய”                         
                                                  - (ப.திருமுறை: 8: 3: 67 - 69)

என்று கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல அவருக்குப் பின்னே வாழ்ந்த திருஞானசம்பந்தர் தாம் பாடிய திருக்கேதீஸ்வரப் பதிகத்தில்
“மாடெலாமண முரசெனக் கடலின் ஒலிகவர் மாதோட்டம்”      
                                                 - (ப.திருமுறை: 2: : 11)
என்று பாடியுள்ளார். கடலலையின் ஒலி மணமுரசு போல கேட்பதற்கு அது மோதும் இடம் மலையாக - கல்லாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கடல் நீர்மட்டம் மிகவும் தாழ்ந்து இருந்ததையும் நாம் கருத்தில் கொள்வது நன்று. எனவே மணிவாசகர் பெருந்துறை என்று கூறியது மாதோட்டத்தை எனக் கொள்ளலே ஏற்புடையது.

இறைவனின் பெருமைகளைக் கூறி, இறைவனை இனிய குரலில் அழைக்க ஆசைப்பட்ட மணிவாசகர் “கீதமினிய குயிலே!” எனக் குயிலைக் கூப்பிட்டு
“ஏர்தரும் ஏழ் உலகு ஏத்த எவ்வுருவும் தன் உருவாய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்குப்
பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிராணைச்
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடானைக் கூவாய்!”       
                                                        - (ப.திருமுறை: 8: 18: 2)

எனப் பாடச் சொல்கின்றார். முதன்முதல் கீதமினிய குரலில் கேட்க அவர் ஆசைப்பட்டது ‘மயனின் மகளாய் பிறந்து, இராவணனின் மனைவியான வண்டோதரிக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்த பெருந்துறைச் சேர்ந்த மா எந்தை இறைவனையே!’  அத்துடன்
தென்பாண்டி நாடானைக் கூவாய்!’
என இலங்கையை தென்பாண்டி நாடாகக் காட்டுவதையும் இத்திருவாசகம் சொல்கிறது. 

பூ இதழ்களால் கட்டிய மாலையை [இதழி], இறைவன் வண்டோதரிக்குக் கொடுத்ததை திருநாவுக்கரசு நாயனார்
“மங்கை காணக்கொடார் மண மாலையை
கங்கை காணக்கொடார் தலைக் கண்ணியை
நங்கைமீர் இடை மயனரின் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே”           
                                              - (ப.திருமுறை: 5: 15: 6)

எனக் கேட்கிறார். இத்தேவாரத்தின் மூன்றாம் அடியில் “மயனரின் நங்கைக்கே” என்றும் “மருதரின் நங்கைக்கே” என்றும் பாட பேதம் உண்டு. மயனை - மருத நிலத் தலைவனாக மாந்தை மாண்மியம் சொல்லும். இன்றும் மாந்தைப் பகுதி மருதநிலமாகவே இருக்கிறது.

சிவனின் மேல் தீராக் காதல் கொண்டவள் வண்டோதரி என்பதும் அவளுக்கு இறைவன் அருள் புரிந்தார் என்பதையும் திருநாவுக்கரசரின் இந்தத் தேவாரம் மட்டும் அல்ல உத்தரகோச மங்கை புராணமும், மாந்தை மாண்மியமும் சொல்வதோடு, திருக்குற்றாலக் குறவஞ்சியில்
“தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்
       டோதரியாள் மானே - அவர்
பொன்னடியில் சேர்ந்தணைய என்னதவம்
       செய்தாளோ மானே”                        
                                                     - (தி. குறவஞ்சி: 23: 2)
என திரிகூடராசப்ப கவிராயர் குற்றாலத்து இறைவனைக் கூற, 

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து, திருக்கோணேஸ்வர நாதரைப் பாடிய பாடலில் பண்டிதர் ஆறுமுகன் அவர்களும்
“மயனாரின் மகளாய் மாந்தைபதி வாழ்ந்தவருள்
         மங்கை மனமகிழ் நாதராய்”
என்று திருக்கோணேஸ்வர இறைவனை வணங்குகிறார்.

வண்டோதரியின் கதையை திருவாசகத்தில் பல இடங்களில் கூறியதால் இவர்களுக்கு முன்னோடியாக மணிவாசகர் இருந்ததை திருவாசகம் மிக நன்றாக எடுத்துச் சொல்கிறது.
“வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த
        மாக் கருணைக் கடலாய் அடியார்
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் 
       பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து அன்று
       ஓங்கு மதில் இலங்கை அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும்
       பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே”            
                                                     - (ப.திருமுறை: 8: 43: 5)
என்கின்றது மணிவாசகரின் திருவார்த்தை.

ஆதிகாலம் தொடக்கம் பெருந்துறையில் இருக்கும் எங்கள் இறைவன் [பரமன்] தேவர்கள் வந்து வணங்கிப் போற்ற, பெரிய கருணைக் கடலாய் இருந்து அடியவரின் பந்த பாசங்களை நீக்குபவர். அவர் அந்த நாளில் உந்தும் அலைகடலைக் கடந்து சென்று, ஓங்கி எழுகின்ற மதில் [தூங்கு எயில்] உள்ள இலங்கையில், பந்து விளையாடிய மென்மையான விரல்களை உடைய வண்டோதரிக்கு கொடுத்த அருட்பரிசு என்ன என்பதை அறிந்தவர் பெருந்துறை இறைவன் என்கிறது இத்திருவாசகம்.

வண்டோதரிக்கு இறைவன் அருளிய அருட்பரிசை நினைந்து நினைந்து, தனக்கும் அதுபோல் கிடைக்குமா என ஏங்கிய ஏக்கமே ‘மணிவாசகர் வாக்கில் வண்டோதரி’ வரக் காரணமாய் இருந்ததை இந்தத் திருவாசகம் காட்டுகிறது அல்லவா!
இனிதே,
தமிழரசி.

Sunday 5 July 2015

இன்றைய காதலர்க்கு!

காதலர்கள் காலங்காலமாக வாழ்கிறார்கள். ஆனால் காதலர்கள் தம் காதலை வெளிப்படுத்தும் பாங்கோ வேறு வேறாக இருக்கிறது. அவர்கள் வளரும் சூழல், அறிவு, ஆற்றல், மனநிலை என்பவற்றை பொறுத்து காதலைச் சொல்லும் பாங்கு வேறு படலாம். காதலன் பணக்காரணாக இருந்தால் விலையுயர்ந்த பொருட்களைப் பரிசளித்து தமது காதலை வெளிப்படுத்துவான். வாய்ச்சாலம் உள்ளவன் தன் வார்த்தைகளாலே காதலியை மடக்குவான். எழுத்தாற்றல் உள்ளவன் எழுதுவான். கவிஞனாக இருந்தால் காதலியின் அழகை கவிதையில் வடிப்பான். இதுவே காலங்காலமாக நாம் காணும் காதலர் நிலை. இதற்கு முரணான காதலர்களும் இருந்திருக்கிறார்கள். இன்றைய காதலர்க்கு அத்தகைய ஒரு காதலனை காட்டலாம் என நினைத்தே இதனை எழுதுகிறேன்.

காதல் வயப்பட்ட ஒருவன் தன் காதலியிடம் பலமுறை தன் காதலை சொன்னான். அவளோ ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள். காதல் வேதனையால் உண்டான தவிப்பை இனியும் தாங்க முடியாது என்பதை கவிதையாக எழுதி அவளிடம் கொடுத்தான். அந்தக் காதற் கவிதையை இன்றைய காதலர்களாகிய உங்களுக்காகத் தருகிறேன். கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
    உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
    இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
    பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
    சகிக்க முடியாதினி என்சகியே மானே!
                                                      (- விவேகசிந்தாமணி: 18)

இந்தக் காதற்கவிதை புரிந்ததா? புரியவில்லையா? இக்கவிதையில் அக்காதலன் தன் காதலிக்கு “கன்னியே கேள்! உண்மையாய் உன் சிவந்தவாயைக் கேட்கிறேன், உன் பதிலைச் சொல்லவாயா? நான் சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாயானால் வெற்றி பெறுவாய் பெண்ணே! இதற்குப்பின் இன்று ஏதும் சாக்குப் போக்குச் சொல்லவேண்டாம். என் தோழியே! மான்போன்றவளே! மன்மதன் படுத்தும் பாட்டால் இனியும் காம வேதனையை என்னால் சகிக்க முடியாது” என்றே எழுதியுள்ளான்.

என்ன? ஒரே எண்கணிதமாக இருக்கின்றது என நினைக்கிறீர்களா? எண்கணிதம் மட்டுமல்ல இக்கவிதையில் சோதிடத்தையும் காதலையும் சேர்த்தே எழுதியிருக்கிறான். காதல், கணிதம், காலக் கணிப்பு மூன்றும் சேர்ந்த ஓர் அற்புதமான காதற்கவிதை இது. 

இக் கவிதையை எழுதிய காதலனுக்கு கணிதமும் சோதிடமும் தெரிந்தது போல கவிதையைப் படிக்கும் காதலியும் கணிதமும் சோதிடமும் எழுதியதை வாசிக்கவும் தெரிந்தவளே. எனவே இக் கவிதை, தமிழ்ப் பெண்கள் கணிதம் சோதிடம் என்பவற்றை கற்றவர்களாக இருந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. தொல்காப்பியர் சொன்னது போல காதலனும் காதலியும் ஒத்த அறிவுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். உங்களைப் போல் ஒத்த அறிவுள்ள காதலர்களைக் காதலியுங்கள் என்று இன்றைய காதலர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கவிதையைக் கொஞ்சம் பார்ப்போம்.
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே = 4 + [½ + ½] + 1 = 6
சோதிடத்தில் வரும் பன்னிரெண்டு இராசியில் ஆறாவது இராசி கன்னிராசி. ஆதலால் கன்னியே கேளாய்! என்கின்றான்.

ஐயரையும் அரையும் = [5  x ½] +½ = 3
கிழமைகளிலே மூன்றாவதாக இருப்பது செவ்வாய். உண்மையாய் செவ்வாயை [சிவந்த வாயை] கேட்டேன் எனச் சொல்கிறான்.

இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் = [2 x 4] + 3 + 1 = 12
நட்சத்திரங்களிலே பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்தரம். உத்தரம் என்றால் பதில். உன் பதிலைச் சொல்வாய்.

இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின் = சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாய் ஆனால்

பெருநான்கும் அறுநான்கும் = 4 + [6 x 4] = 28
வருடங்களில் இருபத்தெட்டாவது வருடம் ஜெய வருடம். ஜெயம் என்றால் வெற்றி. வெற்றி பெறுவாய் பெண்ணே.

பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே = இதற்கு பின்னும் இன்று ஒன்றும் சொல்லவேண்டாம்.

சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே = 4 + 10 + 15 = 29
வருடங்களில் இருபத்தொன்பதாவது வருடம் மன்மதவருடம். மன்மதனாலே, மன்மதன் படுத்தும் பாட்டால்,
சகிக்க முடியாதினி என்சகியே மானே!

இப்போது காதலனின் கவிதையை அந்தக் காதலியாய் இருந்து படித்துப் பாருங்கள்
      
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே [கன்னியே] கேளாய்
    உண்மையாய் ஐயரையும் அரையும் [செவ்வாய்] கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் [உத்தரம்] சொல்லாய்
    இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் [பதில் தந்தாய்]ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் [ஜெயம்] பெறுவாய் பெண்ணே
    பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே [மன்மதனாலே]
             சகிக்க முடியாதினி என்சகியே மானே!
இனிதே,
தமிழரசி.

Friday 3 July 2015

தேனாய் மயக்கு தெடா!



















கொள்ளை கொள்ளும் குதலைமொழி
             காதினில் இனிக்கு தெடா
வெள்ளை உள்ளச் சிரிப்பலையோ
             வேதனையை போக்கு தெடா
கள்ளம் இல்லா கனிந்தநோக்கு
             காதலை பெருக்கு தெடா
தெள்ளு தமிழ் சொல்லழகு
              தேனாய் மயக்கு தெடா
                                                      - சிட்டு எழுதும் சீட்டு 105 
குறிப்பு:
எனது பேரன் மயன் வாய்விட்டு இரசித்துச் சிரிப்பதைப் பார்த்து அவனுக்கு 1/07/2015 அன்று எழுதிய பாடல் இது. என்னை பாட்டெழுதத் தூண்டிய சிரிப்பை படத்தில் காண்க.

Thursday 2 July 2015

தமிழர் தொழுகுல தெய்வமே!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

பஞ்சவடி இராமன் பதைத்திடச் சீதையைப்
       படர் சிறையிட்ட திறலோன்
பசுநிரை கவர்ந்துபோர்ப் பகைவரை அழைத்திடும்
       பண்டைமுறை யரசு செய்தோன்
அஞ்சுமற் றஞ்சுமெனுமத் திசைகள் முடிசூடி
       அகிலம் புரந்த சைவன்
ஆகாய மானந் தடுத்தஅக் கைலைமலை
       அதிரப் பெயர்த்த வண்ணல்
பஞ்சின்மெல் லடிமங்கை பங்கன் மகிழ்ந்திடப்
       பாவீணை செய்த புலவன்
பாரோர் புகழ்ந்திடும் இராவணே சற்கருள்
       பாலித்த கருணா கரன்
தஞ்சமென வுன்பதம் நம்பிப் பிடித்தனம்
       தந்தருள் சுதந்திர மையா
தரையுதிரு சருகிற்கு முயிரீயு சித்தனே
       தமிழர் தொழுகுல தெய்வமே 
இனிதே,
தமிழரசி.

Saturday 27 June 2015

ஒன்றே இறைவன்!

3500 வயதான மாரத்தின் கீழ் இருக்கும் கச்சி ஏகம்பன்
காளமேகப் புலவர் போட்ட இந்தக் கணக்கைச் சரிபார்க்கத் தெரிந்தவர்கள் தான் கச்சி ஏகம்பரேஸ்வரரை வணங்குவர். காஞ்சிபுரத்தையே கச்சி என்பர். காஞ்சி ஏகம்பரேஸ்வரர் கோயில்மரத்தின் கீழே இருக்கும் கடவுளை வணங்கத் தனது நெஞ்சிற்கு காளமேகப் புலவர் ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார். அந்தக் கணக்கை அவரது மனம் சரியாகப் புரிந்து கொண்டு அன்றே காஞ்சி ஏகம்பரேஸ்வரரை [கச்சி ஏகம்பனை] வணங்கியது. 

காஞ்சி ஏகம்பரேஸ்வரர் கோயில்மரம், உலகில் உள்ள மிகவும் பழமையான மரங்களில் ஒன்றாகும். ஏகம்பரேஸ்வரக் கோயில் மரமான அந்த மாமரத்திற்கு வயது 3500 என்கின்றனர். எப்படிக் கணித்தார்களோ தெரியாது. அவ்வளவு பழமையான கடவுளின் பெயரைச் சொல்லி வணங்கத் தனது மனதிற்குக் கணக்குத் தெரிந்திருப்பது நல்லது என காளமேகப் புலவர் நினைத்திருப்பார் போல் தெரிகிறது. அதனாலேயே காஞ்சி மாமரத்துக்குக் கீழே இருப்பவரை பாடித் துதிக்கப் பின்னக் [Fractions] கணக்காகப் பார்த்து தன் மனதுக்குச்  சொல்லியிருக்கிறார்.

காளமேகப்புலவரின் மனம் போல எமது மனமும் கச்சி ஏகம்பரேஸ்வரரை வணங்க வேண்டாமா? காளமேகப் புலவர் போட்ட அந்த மனக்கணக்கைப் பார்ப்போமா?

“முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்றோது”

மனித வாழ்க்கையே பல பின்னங்களால் ஆனது தானே!  முதலில் இப்பாடலில் இருக்கும் பின்னங்களைப் பார்ப்போம்.

முக்கால் உக்கேகாமுன் முன் அரையில் வீழாமுன்
அக் கால் அரைக்கால் கண்டஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணி க்கேகாமுன் கச்சி
ஒருமா வின் கீழரை இன்றோது”

எனப் பண்டைத் தமிழர் பாவித்த பின்னக் கணக்கில் இருந்து 
முக்கால் = 3/4, 
அரை = 1/2
கால் = 1/4
அரைக்கால் = 1/8
இருமா = 1/10
மாகாணி = 1/16
ஒருமா = 1/20
கீழரை = 1/640
ஆகிய எட்டு பின்னங்களை வைத்து இப்பாடலை எழுதியிருக்கிறார். அவற்றின் அளவுகள் வரவர முக்கால், அரை, கால் எனக்  குறைந்து வரும்படி பாடலை அமைத்திருக்கிறார். கச்சி ஏகம்பனை - ஒன்றாகிய இறைவனை  எத்தனை ஆயிர ஆயிர உயிர்ப்பேதங்களால் பிரித்தாலும் மீண்டும் தானே தனித்துவமாய் ஒன்றே இறைவன் என ஏகம்பனாய் நிற்பான் என்பதை இக்கணக்குக் காட்டுகிறது.

காளமேகப் புலவரின் மனம் எப்படி அப்பாடலைப் புரிந்து கொண்டு கச்சி ஏகம்பனை வணங்கியது எனப் பார்ப்போம். அவரது மனம் பாடலில் இருந்த பின்னங்களைக் கண்டு பயப்படாமல் அப்பாடலை
“முக்காலுக்கு ஏகாமுன் முன் நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒரு மாவின் கீழரை இன்று ஓது”
எனப் பிரித்துப் படித்தது.

‘முதுமையின் காரணமாக ஊன்று கோலை மூன்றாவது காலாக ஊன்றி நடக்கமுன்னர் [முக்காலுக்கு ஏகாமுன்], முன் தலையில் நரை தோன்ற முன்னர் [முன் நரையில் வீழாமுன்], அந்தக் காலன் வருங்கால் [அக்காலரைக் கால்], கண்டு பயப்படமுன்னர் [கண்டு அஞ்சாமுன்], சேடம் இழுக்கும் போது விக்கல் வந்து இருமமுன் [விக்கி இருமாமுன்], உடல் சுடலைக்கு போக முன்னர் [மாகாணிக்கு ஏகாமுன்], காஞ்சிபுரத்து ஒரு மாமரத்தின் [கச்சி ஒரு மாவின்], கீழே இருப்பவரை [கீழரை], இன்றே துதிசெய் [இன்று ஓது].’ எனப் புரிந்து கொண்டு கச்சி ஏகம்பனை அன்றே வணங்கியது. நாமும் வணங்குவோம்.
இனிதே,
தமிழரசி.

Tuesday 23 June 2015

கொலை வாளினை எடடா!















உலை உருக்கினில் செய்த
கொலை வாளினை எடடா!
விலை மாதரை உருவாக்கும்
தலை யாளரை அறுக்க!!
                      - சிட்டு எழுதும் சீட்டு 104

Sunday 21 June 2015

பற்றுகிலேன் யானே!

மருதமலைத் தேனே
         மயங்குகின்றேன் பாரே
கருதரிய உன்னை
         கருதுகிலேன் பாரே
பெரியமலைத் தேனே
         புலம்புகின்றேன் பாரே
பெறுதரிய நின்னை
         பற்றுகிலேன் யானே!

Friday 19 June 2015

குறள் அமுது - (108)


குறள்:
“பெருமை உடையார் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்”                            - 975

பொருள்:
மற்றோரால் செய்ய முடியாத அரிய செயலைச் செய்ய வேண்டிய முறையில் செய்து முடிப்பவரே பெருமை உடையவராவர். 

விளக்கம்:
திருக்குறளில் உள்ள ‘பெருமை’ எனும் அதிகாரத்தில் இத்திருக்குறள் உள்ளது. தனிமனிதப் பண்பை, பலவகையான நற்பண்புகளால் மெருகேற்றி பெரியாராகும் தன்மையில் மேன்மேலும் உயர்த்தல் பெருமையின் சிறப்பாகும். 

மனிதர் பெருமையுடன் வாழ்வதற்கும் சிறுமையுடன் வாழ்வதற்கும் அவரவர் செய்யும் செயலே காரணமாகும். பிறருக்காக தன்நலம் அற்று அரிய பெரிய செயல்களைச் செய்தோர் பெருமை உடையோயாராய் திகழ்வதையும், தான் வாழ்வதற்காகா பிறரால் இகழப்படும் செயல்களைச் செய்வோர் சிறுமை உடையோராய் புறக்கணிக்கப் படுவதையும் உலகவாழ்வியல் காட்டுகிறது. நாம் பெருமையுடன் வாழ்வதற்கென எதாவது தகுதி உண்டா?

பெருமை உடையவராய் வாழ்வதற்கு வயது முதிர்ந்தவராய், பொருளும் பணமும் மிக்கவராய், அறிவில் சிறந்த கல்வியாளராய், உடல் வலிமையுடைய வீரராய் பெருந்தொழில் அதிபராய், சினிமா நடிகனாய், சுவாமிமாராய், அரசியல்வாதியாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைய மக்களை மயக்கும் இத்தகைய தகுதிகள் எதுவும் அற்ற சிறுவரும் இளைஞரும் வறுமையால் வாடுவோரும் உடல் ஊனமுற்றோரும் கூட பெருமை உடையோர் ஆகலாம். அப்படியானால் பெருமை உடையார் என்று யாரை நாம் சொல்லலாம்? எவர் ஒருவர் பிறரால் செய்வதற்கு அரிய செயலை முறைப்படி செய்து முடிக்கிறாறோ அவரே பெருமை உடையவராவர்.

எதுவித தகுதிகளும் இன்றி தமது விடாமுயற்சியால் உண்மையாக முயன்று தருக்கித் திரியாது பணிவோடு நன்நிலைக்கு தம்மை இட்டுச் செல்வோர் பெருமை உடையராய்த் திகழ்வர். இராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையுடன் வாழ்ந்தும் உலகம் போற்றும் விஞ்ஞானியாய், இந்தியாவின் ஜனாதிபதியாய் வலம் வந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களை இந்தக் குறளுக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

பிறரால் செய்யமுடியாத செயல்களைச் செய்து பெருமை உடையோராய் இருப்போர் எப்போதும் பெருமிதம் இன்றி வாழ்வர். 

Tuesday 16 June 2015

வயலினின் முன்னோடி எது?

திருமக்கூடலூர் கோயில்

மேற்கத்தைய வாத்தியமாகக் கருதப்படும் வயலின் இன்று தென் இந்திய இசையான கர்நாடக இசையிலும் வட இந்திய இசையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கர்நாடக இசையில் தனிக்கச்சேரி மட்டுமல்லாமல் மிகச் சிறந்த பக்கவாத்தியமாக விளங்குகிறது. வயலினை கர்நாடக இசைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரின் தம்பியான பாலசுவாமி தீட்சதரே. 

முத்துசுவாமி தீட்சதரின் தந்தை ராமசுவாமி தீட்சதர் தனது இளைய மகனான பாலசுவாமி தீட்சதரை மேல்நாட்டு இசை கற்றக ஒழுங்கு செய்தார். அவர் மேல் நாட்டு சங்கீதத்தை வயலினில் வாசிக்கக் கற்றுக்கொண்டார். மேல் நாட்டு முறையில் சுருதி சேர்க்கப்பட்ட அதாவது 'ஸ ப ரி த' என்ற ஷட்ஜ - பஞ்சம முறையில் சுருதி கூட்டப்பட்ட வயலினின் நான்கு தந்திகளை, கர்நாடக சங்கீத முறையில் ஸ ப ஸ ப என்று சுருதி கூட்டி கர்நாடக சங்கீதத்தை வாசிக்கத் தொடங்கினார். அதனை அறிந்த எட்டயபுர மன்னர் அவரைத் தனது சமஸ்தான வித்துவானாக அமர்த்தினார் என்பது கர்நாடக சங்கீதம் சொல்லும் வரலாறு ஆகும்.

இன்று உலகெங்கும் நாம் காணும் வயலினை 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ராடிவேரியஸ் [Stradivarius] என்னும் இத்தாலியரே உருவாக்கினார். எனினும் பாலசுவாமி தீட்சதர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கர்நாடக சங்கீதத்தை வயலினின் வாசிக்கத் தொடங்கினார். 

ஆனால் நம் பண்டைத் தமிழ் முன்னோர் பல ஆயிர வருடங்களாக வேறு வேறு பெயர்களில் வயலின் போன்ற கருவியை வாசித்து வந்திருக்கிறனர். அக்கருவிகளை வாசித்தோரின் பேரிலும், அதில் இருக்கும் தந்திகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், அவற்றின் உருவத்திற்கு ஏற்பவும், வாசிப்போர் அணியும் ஆடைக்கு ஏற்பவும் பல பெயர்களில் அழைத்தனர். எப்படி அழைத்தபோதும் அவற்றை வில் கொண்டு வாசித்தனர் என்பதைக் கோயில் சிற்பங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இது போன்றது ஆமைவீணை [Photo: source t3licensing.com]

பண்டைத் தமிழர் தந்திக்கருவிகள் யாவற்றையும் வீணை என்ற பொதுப்பெயரால் அழைத்தனர் என்பதை பண்டைத்தமிழ் நூல்களால் அறியலாம். நம் முன்னோர் வாசித்த தந்திக் கருவிகளில் ஆமை வீணையின் வடிவம் [கூர்ம வீணையின் வடிவம்] இன்றைய வயலின் எனக் கூறலாம். ஆமைவீணையை வில்லால் வாசித்தார்கள். அதனை வாசிக்க தமிழர்கள் பாவித்த வில், இன்றைய வயலினின் வாசிப்பிலும் பயன்படுகிறது என்பதை Bow என்னும் சொல்லே எடுத்துக் காட்டுகின்றது. அது வில் வடிவில் இல்லை என்றாலும் வில் [Bow] என்னும் பெயரையாவது வைத்திருக்கிறதே.

இலங்கைத்தமிழரின் இசை ஆர்வத்திற்கு மூலகாரணன் இராவணன் எனச் சொல்லலாம். அவன் வாசித்த ஒரு இசைக்கருவியின் பெயர் 'ராவணஹஸ்தம்' ஆகும். அது 'இராவணாஸ்திரம்' என்றும் 'கிஞ்ஞரம்' என்றும் அழைக்கப்பட்டது. அதை வில்லைக் கொண்டே வாசித்தான். திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்தில்
“மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி
மெஞ்ஞரம்பு உதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரங் கேட்டு உகந்தார் கெடில வீரட்ட னாரே”                    
                                                  - (ப.திருமுறை: 4: 28: 6)
இராவணன் கிஞ்ஞரம் வாசித்ததைக் குறிப்பிட்டுள்ளார். எனவே வயலினின் பிறப்பிடம் இலங்கை எனலாமே. அன்று இராவணன் வாசித்த இராவண ஹஸ்தத்தின் [கிஞ்ஞரத்தின்] பரிணாம வளர்ச்சியே இன்றைய வயலின் எனச் சொன்னால் அது மிகையாகாது. பண்டைய தமிழர் அழைத்த 'கிஞ்ஞரம்' இன்று 'கின்னரம்' என அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் அதனை ‘கிங்கரி’ என அழைப்பர்.

இராவணன் வாசித்த இராவணஹஸ்தம் திருமக்கூடலூரில் இருக்கும் அகஸ்தியர் கோயிலிலுள்ள தூணின் சிற்பத்தில் இருக்கிறது. அச்சிற்பத்தில் இசைக்கருவி ஒன்றை தாங்கி இருக்கும் பெண் ஒருத்தி வில் கொண்டு அதனை வாசிக்கிறாள். அக்கருவியை இராவண ஹஸ்தம் என்பர். இச்சிலை 1500 வருடங்களுக்கு முன் செதுக்கப்பட்டதாகும். தற்போது திருமக்கூடலூர் கர்நாடகாவுடன் சேர்ந்திருப்பதால் அதனை திருமக்கூடலு என அழைக்கின்றனர்.

நம்முன்னோர் வில் கொண்டு வாசித்த தந்திக்கருவியே இன்று உலகெங்கும் உலாவரும் வயலினின் முன்னோடி எனக் கூறுவதில் தவறொன்றும் இல்லை.
இனிதே,
தமிழரசி.