Monday 25 January 2021

கருணை செய்வாய் கந்தா




கருணை பொழியுமிரு விழிகள் திறந்தே

கருணை செய்வாய் கந்தா

அருணை யம்பதிதனில் அவுணர்க் கருளிய

அதிசயங் கண்டேன் முந்தா

பொருணைத் தமிழதை பொற்பினில் எழுதிய

பொறையிற் சிறந்ததே தெந்தா

தெருணை யற்றயென் தெய்வமே அருட்

தேனினை யென்னுட் சிந்தாய்

இனிதே,

தமிழரசி.

Sunday 24 January 2021

என் கணவர்

 பனிப்பாவை செய்த மகிழ்வில் என் கணவர்


கொட்டியது பனியே
            கொட்டமிட்ட துள்ளம்
வெட்டவெளி எங்கும்
            வெண்பனியே காட்சி
மொட்டவிழும் மகிழ்வில்
            மென்பனியை மேவி
சிட்டெனப் பனிப்பாவை
            செய்தாரென் கணவர்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு: 
கொரனாவால் எத்தனை மாதங்கள் முடங்கிக் கிடப்பது? பனிப்பொழிவைக் கண்டதும் பனிபோல் இறுகிக்கிடந்த இளமைக்கால துள்ளல் மெல்ல உருகி வெளிப்பட்டது. அந்த வெளிப்பாடே என் கணவர் செய்த இந்தப் பனிப்பாவை. கொரனாவே நீ வந்ததால் என் கணவரின் சிறுபிள்ளைத் தன்மையை அறியமுடிந்தது. எங்கள் எல்லோருள்ளும் மறைந்து, ஒளிந்து குழந்தைத் தன்மை இருக்கிறது. அது அவ்வப்போது மெல்லத் தலைகாட்டும்.

Tuesday 19 January 2021

குறள் அமுது (143)


குறள்: மனம்தூய்மை செய்வினைத் தூய்மை இரண்டும்

    இனம்தூய்மை தூவா வரும் - 455


பொருள்: மனத்தின் தூய்மை, செய்யும் தொழிலின் தூய்மை ஆகிய இந்த இரண்டும் நாம் சேர்ந்திருக்கும் இனத்தின் தூய்மையால் வரும்.


விளக்கம்: சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் வரும் ஐந்தாவது திருக்குறள் இது. நாம் சேர்ந்திருக்கும் இனம் ஏன் தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதை யாவரும் மிக எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய அருமையான எடுத்துக்காட்டு ஒன்றைச் இவ்வதிகாரத்தின் இரண்டாவது குறளில் சொல்கிறார். 

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பது ஆகும் அறிவு - 452


அதாவது வானத்திலிருந்து மழை மேகங்கள் மழையைப் பொழிகின்றன. அந்த நீருக்கு நிறமும் இல்லை. சுவையும் இல்லை. நாம் பருக்கக் கூடிய நன்னீர் அது. மழை கடலில் பொழிந்தால் அது கடல் நீராகிவிடும். குடித்தால் உப்புக் கரிக்கும். உவர் நிலத்தில் பொழியும் மழை நீர் உவர்க்கும். நன்னீர் நிலைகளில் பெய்தால் நன்னீராய் இருக்கும். அதுவே செம்மண் நிலத்தில் பெய்தால் குறுந்தொகை சொல்லும் 

செம்புலப் பெயல் நீர் போல

செந்நீராய்க் காட்சி தரும். நிலத்தின் தன்மையைப் பொறுத்து மழை நீர் மாற்றம் அடைவது போல மனிதர் தாம் சேரும் இனத்தின் இயல்பைப் போன்ற   அறிவைப் பெறுவர். படிப்போருடன் சேர்வோர் படிப்பது போலவும் மதுவைக் குடிபோருடன் சேர்வோர் குடிப்பது போலவும் சேரும் இனத்துக்குத் தக அறிவும் மனமும் மாறுகிறது.


ஆதலால் நாம் சேரும் அல்லது வாழும் இனம் மிக்கதூய்மையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் சொல்லும்இனம்தூய்மை தூவா வரும்என்பதில்தூஎன்றால் துணை. எமக்கு இனத்தூய்மை துணையாக வரும் என்பதையேதூவா வரும்என்கிறார். வினை என்றால் தொழில். ஒருவர் செய்யும் தொழிலை செய்வினை என்பர். இனத்தூய்மை மனம் தூய்மையாக இருக்கவும் செய்யும் தொழில் தூய்மையாக நடக்கவும் துணையாக வருமாம்.


மனநலத்தையே மனந்தூய்மை என்பர். மனிதர்க்கு முதலில் வேண்டியது மனநலமே. மனநலம் இன்மையே போட்டி, பொறாமை, கொலை, களவு, கொள்ளை போன்ற பல கேடுகளுக்கு எல்லாம் காரணமாகும். மனநலம் மன்னுயிக்கு ஆக்கம் எனவும் கூறியுள்ளார் அல்லவா!


மனநலம் மிக்கவர் செய்யும் செயலும் நன்றாகும். ஆனால் இனந்தூய்மை இல்லாவிடின் மனநலமின்றி செய்யும் செயலையும் இழந்து வாழும் நிலை வரும். ஒருவர் சேரும் இனம், ‘எப்படி மனநலத்தையும் செய்யும் தொழிலின் நலத்தையும் பாதிக்கும்?’ என்பதைப் பார்ப்போம். கஞ்சா விற்போர் ஒரு குழுவாகவாகவும் மூடநம்பிக்கை கொண்டோர் வேறு குழுவாக, கொலை செய்வோர் வேறோர் குழுவாக  வன்முறையாளர் இன்னொரு குழுவாக இவ்வாறு பல் குழுக்கள் உண்டாகின்றன. இத்தகைய குழுக்களுக்கு இடையே வாழ்வோரின் மனநிலை தூய்மையாக இருக்குமா? அங்கு செய்யும் தொழில் சிறந்து விளங்குமா?


தீச்செயல்கள் செய்யும் குழுக்களிடையே வாழமுடியாத மனநலம் உள்ள மனிதர்கள் எப்படி தீமைசெய்யும் இனத்தாரோடு சேர்ந்து வாழமுடியும்?


ஆதலால் மனம் நல்லதாக இருக்கவும் செய்யும் செயல் நன்றாக அமையவும்  சேரும் இனம் தூய்மையாக இருக்கவேண்டும்.

இனிதே,

தமிழரசி.

Wednesday 13 January 2021

பொங்குக! தமிழ் ஓங்கவே!


உலகின் நாற்றிசையிலும் புகழ்பரப்பும் எம் தமிழ் உறவுகளுக்கு பொங்குக! தமிழ் ஓங்கவே நன்றாய்! என வாழ்த்துகிறேன். 

நாற்றிசையிலும் இருக்கும் எட்டு நாகங்கள் ஒன்றோடொன்று பிணைந்து எம் தமிழைக் காக்கும் பொங்கல் வாழ்த்தை சித்திரக் கவிதையாய் புனைந்துள்ளேன். அப்பொங்கல் வாழ்த்தை மங்கலம் பொங்கப் படித்து மகிழுங்கள்.

பண்டைய தமிழரை நாகர்கள் எனவும் அழைப்பர். இன்றும் தமிழரைத் தெழுங்கில்அரவாளு’ [அரவு - பாம்பு] எனக்கூறும் வழக்கம் உண்டு. அந்நாளைய தமிழர் கிடைத்தற்கு அரிய தமது செல்வங்களை நிலவறைகளில் வைத்து அவற்றுக்குக் காவலாக நாகங்களையும் வளர்த்தனர். அதனாலேயேநாகம் காத்த நிதியம் போலஎன்னும் உவமைத் தொடர் தமிழில் உண்டு. நாகங்கள் காக்கும் பொருளை எவரும் களவாட முடியாதென நம்பினர்.

உலகின் நாற்றிசையிலுள்ள எண்நாகம் ஒன்றாய்ப் பிணைந்துதமிழ்எனும் பெருநிதியை எட்டுப்பக்கமும் காக்க இச்சித்திரக் கவிதையைப் புனைந்தேன்.

கவிதையை வாசிப்பது எப்படி? பார்ப்போமா?

பொங்குக தமிழ் ஓங்கவே நன்றாய் எனும் ஓரடிக் கவிதை எட்டு நாகத்துள்ளும் இருக்கிறது. ஒவ்வொரு நாகத்தின் தலையிலிருந்து வால்வரைபொங்குக தமிழ் ஓங்கவே நன்றாய்எனக் கவிதையை படியுங்கள். விரும்பினால்பொங்குக தமிழ்வரைப் படித்ததும்ஓங்கவே நன்றாய்என்பதை மடித்தும் படிக்கலாம்.

நான் கீறி எழுதிக்கொடுத்த எண்நாகப் பிணையல் சித்திரக் கவிதையை மீண்டும் மெருகேற்றிக் கீறி அதற்குள் எழுத்துக்களை அச்சிட்டுத் தந்த எனது குட்டி மச்சான் கீரனுக்கு என் பொங்கல் வாழ்த்தும் மகிழ்ச்சியும் உரியனவாகுக.

இனிதே,

தமிழரசி.