Sunday 30 December 2012

மயிலாளைக் காணலயே!

மயிலாடு குளமும் கண்டேன்
 Photo: source colourbox.com

கண்டி கொழும்பும் கண்டேன் -சாமி
          கருங்குளத்து மீனும் கண்டேன்
ஒட்டி குளமும் கண்டேன் - சாமி
          ஒயிலாளைக் காணலயே!

மன்னாரு மாந்தை கண்டேன் - சாமி
          மடுக்குளத்து மீனும் கண்டேன்
மயிலாடு குளமும் கண்டேன் - சாமி
           மயிலாளைக் காணலயே!
                                         -  நாட்டுப்பாடல் (கண்டி)
                              - பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இனிதே,
தமிழரசி.

குறள் அமுது - (49)


குறள்:
அற்றால் அளவுஅறிந்து உண்க அஃதுஉடம்பு 
பெற்றான் நெடிது உய்க்கும்ஆறு”                           - 943

பொருள்:
உண்ட உணவு சீரணமானால் உண்ணும் உணவை எவ்வளவு உண்ணவேண்டும் என்பதை அறிந்து உண்பதே மனிதன் நீண்ட நாள் வாழும் வழியாகும்.

விளக்கம்:
மருந்து என்னும் அதிகாரத்தில் இருக்கும் மூன்றாவது திருக்குறள் இது. உண்ட உணவு செரித்து சீரணமாகி அற்றுப்போன பின்னரே மறுபடியும் உண்ண வேண்டும். அது நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றி நீண்ட நாள் வாழ வழிவகுக்கும். அற்றால் - உண்ட உணவு அற்றுப்போனால், அதாவது உணவு சீரணமான பின் உண்ணும் போதுங்கூட 'அளவு அறிந்து உண்க!' என்று ஓர் எச்சரிக்கை  செய்கிறார்.  

நாம் உண்ண வேண்டிய உணவின் அளவை எப்படி அறிவது? அதற்கு ஏதாவது அளவை முறை இருக்கிறதா? ஆண்கள் ஓரளவு, பெண்கள் ஓரளவு உண்கிறோம். குழந்தை உண்ணும் அளவும் வயதானோர் உண்ணும் அளவும் ஒன்றா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவல்லவா உண்கிறோம்!

இந்நாளில் உடல் மெலிவதற்காக உணவைக் கலோரிக் கணக்கில் பார்த்து உண்பது போல் சங்ககாலத் தமிழரும் உணவை அளந்து உண்டிருக்கின்றனர். அவர்கள் உணவு உண்ணும் அளவை ‘நாழி’ என அழைத்தனர். அரசனானாலும் கல்லாதவனானாலும்

உண்பவை நாழி உடுப்பவை இரண்டே”
                                                        - (புறநானூறு: 189: 5)
என்கின்றது புறநானூறு. 

அதனை நல்வழியும்
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்”
என வழி மொழிகின்றது.

நாழி உணவு என்பது 'கால் படி' உணவாகும். நாளொன்றுக்கு சத்துள்ள உணவாக கால் படி உணவு உண்டால் போதுமானது என்பது பண்டைய தமிழர் கண்ட முடிவு. உணவை அளவோடு உண்ண வேண்டும் எனும் மிக உன்னத விழிப்புணர்வு அந்நாளைய தமிழரிடம் இருந்ததாலேயே திருவள்ளுவரும் அற்றால் அளவு அறிந்து உண்க! என்றார். உணவை அளவாக உண்டால் அது உடம்பைப் பெற்றவன் நெடிது உய்க்கும் ஆறு  - நீண்டநாள் உலகை நுகர்ந்து வாழ வழிவகுக்கும்.

ஒரு மனிதன் தான் இப்பிறப்பில் பெற்ற உடம்போடு நீண்ட நாள் நோய் நொடி இல்லாது சுகமாக வாழ்வதற்கு, உண்ட உணவு சீரணமான பின்னர், உண்ணவேண்டிய அளவு உணவை அறிந்து உண்பதே சிறந்தவழியாகும்.    

Saturday 29 December 2012

அடிசில் 39


பலாப்பழப் பாயாசம்
                                                               - நீரா -


















தேவையான பொருட்கள்:
குறுணலாக வெட்டிய பலாப்பழச்சுளை  -  1½ கப்
சேமியா  -  ½ கப்
சீனி  -  ¾ கப்
பால்  -  3 கப்
நீர்  -  ½ கப்
நெய்  -  ½ மே.கரண்டி
குறுணலாக வெட்டிய முந்திரிப்பருப்பு  -  ½ மே.கரண்டி
ஏலத்தூள்  -  1சிட்டிகை
உப்பு  -  ½ சிட்டிகை 

செய்முறை:
  1. பாத்திரத்தில் நெய்யைவிட்டு சூடாக்கி, முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  2. அந்த நெய்யில் சேமியாவை பொன்னிறமாகப் பொரித்து அதனுள் பாலையும் நீரையும் சேர்த்து அடிக்கடி கிளறி வேகவிடவும்.
  3. சேமியா சிறிது வெந்ததும் பலாப்பழச்சுளைகளைப் போட்டு காய்ச்சவும்.
  4. சீனியைச் சேர்த்துக் காய்ச்சி பால் தடித்து வரும்பொழுது முந்திரிப்பருப்பு, உப்பு, ஏலத்தூள் சேர்த்து காய்ச்சி இறக்கவும்.

பின்குறிப்பு:
பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாம். சுவை நன்றாக இருக்கும்.

Friday 21 December 2012

அழியாப் பெருஞ்சீர் தருமே!


தனது தாயின் மடியில் பிறந்து வளர்ந்த மனிதன் தான் கண்ட அனுபவத்தால் தன்னிலும் பெரிய சக்தி ஒன்று இவ்வுலகை இயக்குகின்றது என்பதை உணர்ந்தான். தம்மை இயக்கும் சக்தியை இயக்கி என அழைத்தான். அந்த இயக்கியே மழையை, வெய்யிலை, சூட்டை, குளிரை தருகிறாள் என நம்பினான். தன்னைப் பெற்ற தாயைப்போல  இயக்கியும் தம்மைக் காப்பாள் என எண்ணி வணங்கினான். அந்த வணக்கமே தமிழரின் கொற்றவை வழிபாடாக உருவெடுத்தது. 

மனிதவாழ்க்கையின் தொடக்கத்தில் இயற்கையின் சீற்றத்துடனும், கொடிய விலங்குகளுடனும் மனிதன் செய்த போர்களில் வெற்றியைக் கொடுதவளை, கொற்கையாய் - வீரத்திருவுருவாய் படைத்தான். எனவே அவள் கையில் ஆயுதங்களை அள்ளி வழங்கி சயமங்கை ஆக்கினான். மனிதன் தன் வாழ்க்கையில் சிறிது பண்பட்ட போது தமக்கென செல்வத்தை சேர்க்கத் தொடங்கினான். அப்படி சேர்த்து வைக்கப்பட்ட செல்வம் நெருப்பாலும், வெள்ளத்தாலும் கள்வராலும் அழிந்தது. தமது செல்வத்தை பாதுகாத்து மேலும் மேலும் செல்வங்களை கொட்டித்தருவாள் என திருமகளைப் படைத்தான். அவள் கரங்களில் இருந்து பொன்னும் மணியும் சொரிய பெருந்திருவாய் ஆக்கினான்.

ஆதிமனிதன் வாழ்வு வீரமும் செல்வமும் சேர்ந்தது நன்கு பண்படப் பண்பட அறிவும் ஆற்றலும் வளர கல்வியின் தேவையை உணர்ந்தான். இயற்கையிடம் (இயக்கியிடம்) இருந்து தான் கற்ற கலைகளை தந்தவளை கலைமகளாகப் படைத்தான். அவள் கையில் வீணையும் ஏடும் கொடுத்து இசை, இயல் உணர்த்தும் செஞ்சொல் வஞ்சியாய்ப் போற்றினான். இயக்கியிடம் இருந்து தன் நல்வாழ்வுக்காக வீரம், செல்வம், கல்வி எனும் மூன்று சக்திகளையும் மனிதன் பெற்றான். அந்த மூன்று சக்திகளும் ஒன்றே என்பதை கம்பர் சரசுவதி அந்தாதியில் சொல்வதைப் பாருங்கள்.
பெருந்திருவும் சயமங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றின் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளும் தரும்
திருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே

ஆதலால் நாமும் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவரையும் போற்றி வணங்கி இன்பவாழ்வு வாழ்வோம்.
இனிதே,
தமிழரசி.

Thursday 20 December 2012

ஊனம் என்பது என்ன?























ஊனம் என்பது உடல்
உறுப்பு இழந்து போவதா?
ஈனமனம் கொண்டோர் மன
ஊனம் ஊனம் ஆகாதோ?
மானவுணர்வு இன்றி வாழும்
மோனம் ஊனம் ஆகாதோ?
பானம் பருக வழியின்றி
பகல் இரவாய் படுத்துறங்கி
தானெனது எனும் செருக்கோடு
தருக்கித் திரிவோர் உள
ஊனம் ஊனம் ஆகாதோ?
உடலூனம் உறினும் மன
ஊனம் இன்றி சதா
உழைத்து வாழும் உயர்
மான உளத்தோர் வாழ்வு
மிக்க ஊனமோ சொல்வீர்?

                                          - சிட்டு எழுதும் சீட்டு  44

Monday 17 December 2012

தென்கடல் தான் அடங்கிடுமா!

தென்றல் வந்து வீசிடுமா!

தெற்கே இருந்து வீசும் காற்றை பண்டைத்தமிழர் தென்றல் என்று அழைத்தனர். தென்றல் காற்று உடலை வருடிச்செல்லும் போது ஏற்படும் இன்பத்துக்கு ஈடுஇணையே இல்லை எனலாம். எம்மூர் தெற்குக் கடற்கரையில் கண்மூடி நின்று தென்றலை நுகர்ந்தவர்க்கு அதன் இதம் தெரிந்திருக்கும். தென்றல் காற்றை கண்மூடி நுகரக் கற்றுத் தந்தவர் என் தாய். இயற்கையின் சீற்றம் தென்றலைக்கூட நாம் நுகரமுடியாது தடுக்கும்.

உலகவரலாறும் இலக்கியங்களும் தென்கடலால் ஏற்பட்ட அழிவுகளைச் சொல்கின்றன.  கதிர்காமத்தின் நாட்டுப்பாடலான இதுவும் தென்கடலின் சீற்றத்தை “தென்கடல்தான் அடங்கிடுமா?” என்று அங்கு வாழ்ந்த தமிழ்மக்களின் நெஞ்சத்து ஏக்கத்துடன் எடுத்துச் சொல்கிறது. இன்று கதிர்காமத்தில் எத்தனை தமிழர் வாழ்கின்றனர்?

தீக்கோழி தினவெடுக்க 
          தீக்காற்று வீசயில
தூக்கணாம் குருவிக்கூடு
          துடிதுடித்து ஆடயில

கார்மேகம் கருகருக்க
          காகங்கள் கரையயில
ஊர்குருவி சத்தமிட்டு
          ஊரெல்லாம் பதபதைக்க

தேன்குருவி பாடிடுமா?
          தெம்மாங்கு கேட்டிடுமா?
தென்றல்வந்து வீசிடுமா?
          தென்கடல்தான் அடங்கிடுமா?
                             -  நாட்டுப்பாடல் (கதிர்காமம்)
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

Sunday 16 December 2012

இசையானார்


இசைக்கு மொழி இல்லை. அது மனிதர் பேசும் மொழிகளின் எல்லைக்குள் அடங்குவதில்லை. அதனாலேயே வாரணாசியில் பிறந்த பண்டிட் ரவி சங்கரால் வான்புகழ் கொள்ள முடிந்தது. அவர் இந்திய இசையின் பெருமையை உலகறியச் செய்தவர். இசை எனும் தேனமுதை எம் காதினிக்க சுவைக்கத் தந்த பெருமகன் அவர். 1980களின் தொடக்கத்தில் ஒரு நாள் வூலிச் தியேட்டரில் (woolwich theatre) பண்டிட் ரவி சங்கரின் சித்தார் இசைக்கச்சேரி நடந்தது. அதனைக் கேட்க நானும் எனது கணவருமாகச் சென்றோம். நம்மவர்கள் ஒருசிலரைத் தவிர வெள்ளையர்களால் தியேட்டர் நிறைந்திருந்தது. இன்றைய இலண்டன் போல் அந்த நாட்களில் நம்மவர்களும் இருக்கவில்லை, இசை கச்சேரிகளும் எந்நாளும் நடக்கவில்லை.  

சிறுவயதில் எனது தாயினதும், தாயின் தங்கை புவனம் சித்தியினதும் வயலின் இசையில் வளர்ந்த எனக்கு, இலண்டன் வந்தபின் நேரடியாக இசையைக் கேட்டு அநுபவிக்கும் வாய்ப்புக்கள் அந்நாளில் அரிதாகவே கிடைத்தது. வாடிய பயிருக்கு வான்மழை போல பண்டிட் ரவி சங்கரின் சித்தார் இசையின் தேன்மழையில் நான் நனைந்தேன். அதன் பின்னர் பலமுறை அவரின் இசைக் கச்சேரிகளை கேட்டிருப்பினும் அந்த இசைமழையை மறக்க முடியவில்லை. அந்த விரல்கள் மீட்டிய தந்திகள் யாவும் இசையை பொழிந்தனவே! அன்று இசையால் எம்மனங்களை இசைத்தவர் இன்று இசையானார்.

எனினும் சித்தார் இசையின் மாமேதை ரவி சங்கர் 2008ம் ஆண்டு யூன் 4ம் திகதி இலண்டன் பாரதியவித்திய பவனுக்கு வந்திருந்தார். அங்கே வீணை பயின்ற என் மகள் ஆரணி வீணை வாசிப்பதை கேட்டு அவளுக்கு ஆசிகூறினார். இசைமேதையின் ஆசி இசைகூட்டட்டும்.          
                                                                                                            Photo: source Hammersmith & Fulham News


Saturday 15 December 2012

குறள் அமுது - (48)

குறள்:
“கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்”                          - 796

பொருள்:
கேடு வந்தால் அதிலும் ஒரு நிலையான நன்மை இருக்கிறது. உண்மையான நண்பரின் உள்ளத்தை நீட்டி அளக்கும்  அளவுகோலாக அந்தக்கேடே உதவும்.  

விளக்கம்:
இத்திருக்குறள் நட்பாராய்தல் என்னும் அதிகாரத்தில் வருகின்றது. நண்பர்களை கிளைஞர் என்று கூறுவர். எமக்குக் கேடு வந்த நேரத்திற்றான் நம் நண்பர்களில் எவர் உண்மையான நண்பர் என்பதை அளந்து அறியமுடியும். எமக்கு வரும் கேடு நண்பர்களை அளந்து அறிய உதவும் அளவுகோலாகும் என்பது திருவள்ளுவரின் முடிவாகும். 

கேடு என்றால் அழிவு. பணத்தை, பொருளை இழப்பது மட்டும் கேடாகாது. எமக்கு வரும்  கேடுகளுக்கு பணமே காரணம் என நினைப்பதும் தவறு. நோயாக, வசையாக, இழிவாக, வறுமையாக, போர்களால், இயற்கை அழிவுகளால், கை இழப்பது, கால் இழப்பது, உற்றார் பெற்றாரை இழப்பது எனப் பலவிதமாக வரும். அப்படி வரும் அழிவாலும் நன்மை இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

கேடுவந்ததும் ஒட்டி உறவாடி ஒன்றாய்ப் பழகிய நண்பர் சிலர் இருந்த இடமே தெரியாது பிரிந்த செல்வர். எனெனில் அவர்கள் பார்வையில் இன்பத்தைத் தரும் பொழுது போக்கே நட்பு. நண்பர்களுடன் களியாட்டங்களிலும் விருந்து வைபவங்களிலும் உண்டு, குடித்து, ஆடிப் பாடி மகிழ்தலே நட்பு என எண்ணுவோர் கேடுவந்து துன்பப்படுபவரோடு எப்படி தம் நட்பைப் பேணுவர்?

எனவே மனித வாழ்க்கையில் கேடு ஏதாவது ஓர் உருவத்தில் வரவேண்டும். கேடு வந்ததும் எவர் எவர் எம்மைக் கைவிட்டு செல்கின்றனர் என்பதை நன்றாக நீட்டி அளந்து பார்க்க முடியும். அழிவு வராவிட்டால் எவர் நல்லவர்? எவர் கெட்டவர்? என்பதை நாம் அளந்து பார்க்க முடியாது. எவர் உண்மையான நட்புடன் பழகுகிறார் என்பதை அளந்தறிய கேடே துணைபுரிகிறது. கேடு வராவிட்டால் யார் யார் எம்மைப்பற்றி ஏளனமாகச் சிரிக்கிறார்கள், யார் யார் கண்டும் காணாது இருக்கிறார்கள் என்பவற்றை நாம் அளந்து அறியமுடியுமா?

எனவே எமக்கு வரும் அழிவுகளாலும் நன்மை உண்டு. கேடே நண்பர்களை அளந்து பார்க்கும் அளவுகோலாகும்.  

Friday 14 December 2012

பண்டைய கலையின் புகழ் மணக்கும் புங்குடுதீவு

Ptolemy's Map of Taprobane [Ceylon]
1900 ஆண்டுகளுக்கு முன்நிருந்த இலங்கையின் வரைபடம்

உலக இயற்கை மனிதனுக்கு காலம் காலமாக பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எந்தப் பொருளையும் பண்படுத்தப் பண்படுத்த அதன் தரம் உயரும் என்பது அதில் ஒன்றாகும். அதில் என்ன வியப்பு என்றால் மனிதனை இன்றும் இயற்கையே பண்படுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையின் பண்படுத்தலின் போது மனிதன் கற்றுக் கொண்டதே மொழியாகும். மொழியைக் கற்றுக்கொண்ட போதே, மனிதன் படிப்படியாக கலைகளை வேறுபடுத்திக் கற்கவும் தொடங்கினான். பேச்சு மொழி பிறக்க முன் மனிதன் பேசிய மொழி, சைகைமொழியாகும்.  அந்த சைகைமொழியே நடிப்புக் கலைக்கு வழிவகுத்தது. உணவுக்காக, உறவுக்காக அவன் இட்ட கூக்குரல் மொழியாகவும், இசையாகவும் மாறியது. ஆதிமனிதன் ஏழுப்பிய ஓசை, இசை, அசைவு மூன்றும் சேர்ந்தே மொழியானது. அதனால் அவன் பேசிய மொழியில் சொற்கள், இசை, நடிப்பு என்ற முக்கூறுகள் பிறந்தன. 

ஆதிமனிதன் எழுப்பிய சொல், இசை, நடிப்பு ஆகிய முக்கூறுகளையும் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வடிவமாக, தமிழ்மொழி தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் ஆதிமொழி தமிழ் என்பதை உலகிற்கு மெல்லச் சொல்லாமல் சொல்கிறது. அதனை தமிழர்களகிய நாமே புரிந்து கொள்வதில்லை. எம்மொழிக்கும் இல்லா அச்சிறப்பு தமிழுக்கு உண்டு என்பதை உலகிற்கு உணரவைக்கும் கடமை தமிழராகிய எமக்கு இருக்கிறது. 


பண்டைய தமிழரின் ஆடற்கலையின் இன்றைய வடிவம் (கம்போடியா - 08-11- 2012)

முத்தமிழிலும் இருந்து பல கலைகள் முகிழ்ந்தன. உதாரணமாக ஒருவர் ஆடற்கலையை முறையாகக் கற்கவேண்டுமானால் அவருக்கு மொழி, கணிதம், இசை, தாள நுணுக்கம், இசைக்கருவிகளின் தன்மை, வண்ணங்களின் பாகுபாடு, ஒலி, ஒளி வேறுபாடு, ஓவியம், சிற்ப நுணுக்கம், ஒப்பனை, ஆடை அணியும் திறமை எனப் பல கலைகள் தெரிந்திருக்க வேண்டும். இதுபோல் ஒவ்வொரு கலையையும் கற்பதற்கு வெவ்வேறு கலைகளைக் கற்கவேண்டிய தேவையிருப்பதை பண்டைய தமிழர் உணர்ந்தனர். 

அவர்கள் பெண்கள் கற்க அறுபத்து நான்கு கலைகளும், ஆண்கள் கற்க எழுபத்தி இரண்டு கலைகளும் என்று முதன்மைக் கலைகளைப் பிரித்தனர். ஆதலால் அறுபத்து நான்கு கலைகளின் தெய்வமாக, பெண்தெய்வமான கலைமகளை
“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அம்மை” 
என கம்பரும் போற்றினார். 

அவ்வாறு பிரித்து கற்பிக்கப்பட்டு வந்த கலைகள், மாற்றார் படைஎடுப்பால் சிதைத்து சீரழிக்கப்பட்டன. மாற்றார் அக்கலைகளின் ஏட்டுச்சுவடிகளை எரித்ததோடு கொள்ளை அடித்தும் சென்றனர். மீதி ஏடுகள் அந்தந்த குடும்பத்தாரின் பெட்டகங்களில் உறங்கின. கடல் கோள்களாலும், மற்றைய இயற்கை அழிவுகளாலும் அழிந்தவை போக கல்விக்காகவும், தொழிலிற்காகவும் நாடுவிட்டு நாடு சென்றோரும் தம்மோடு ஏடுகளை எடுத்துச் சென்றனர். இந்நிலை கிறிஸ்த்து பிறப்பதற்கு 1250 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
பாஃகியன் குகை - களுத்துறை
அன்றைய உலகை, பேரழிவுக்கு உள்ளாக்கிய மாபெரும் கடல்கோள் சொலமன் (solomon) அரசனின் காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அக்கடல்கோள் நடந்த காலத்தை The Anchor Bible Dictionary கி மு 1250 என்று சொல்கிறது. அந்தப் பேரழிவு நடந்த போதே இளங்கோவடிகள் சொன்ன
“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும்”
பண்டையமனித எச்சம் - பாஃகியன் குகை
கொடுங்கடல் கொண்டிருக்க வேண்டும், அல்லது சங்க இலக்கியம் சொல்வது போல் அதற்கு முன்பும் நடந்திருக்கலாம். ஏனெனில் 12,000 ஆண்டுகளுக்கு முந்தியதாக நம்பப்படும் மனிதனின் எழும்புத்தொகுதியை களுத்துறையில் உள்ள பாஃகியன் குகையுள் கண்டுபிடித்திருக்கின்றனர். களுத்துறையும் பண்டைய தமிழரின் வாழ்விடமாகும்.

பண்டைய கடல் கோளில் இருந்து தப்பிய தமிழர் உலகெங்கும் சென்று வாழத்தொடங்கினர். அந்நாளில்  இன்றைய இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கு இடையே குமரியாறு ஓடியது. அந்தக் குமரி ஆற்றின் ஆற்றிடைக் குறையே இலங்கை. தமிழில் ஆற்றுக்கு இடையே அகப்பட்டு குறையாக இருக்கும் நிலத்தை [ஆற்றிடைக்குறையை]  ‘இலங்கை’ என அழைப்பர். 

ஆற்றிடைக்குறை (Delta of the Ganges River - Photo: source Wikipedia) 
பண்டைய நாளில் இலங்கை பல கலைகளின் பிறப்பிடமாக இருந்தது. இன்றும் இலங்கையின் தொல்பொருள் ஆய்வுகள் அதனை எடுத்துக் காட்டுகின்றன. அதனால் இலங்கையில் வாழ்ந்த பண்டைய தமிழரின் கலைப் பண்பாட்டுச் சுவடுகளை, நாம் உலகின் பண்டைய இனங்களின் உயர் பண்பாடுகளில் காணக்கூடியவர்களாக இருக்கிறோம். இலங்கை எனும் பெயர் நிலைத்து இருக்கும் வரை அது தமிழனின் நிலம் என்பதையும் அதில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து இன்று உலகக்கலைகளின் பண்பாடாக பரந்து வளர்ந்திருக்கும் கலைகளும் அவை தமிழர் கலைகள் என்பதையும் சொல்லும்.

இப்படிப் புகழ்மணக்கும் வரலாற்றுப் பண்பாடுடைய இலங்கையின் மணிமுடியாக இருப்பது யாழ்ப்பாணம். அந்த மணிமுடியில் துலங்க வேண்டிய நவமணிகளில் முத்தும் பவளமும் கடலில் இருப்பதால் மற்றைய ஏழு மணிகளும் ஏழு தீவுகளாகத் இலங்குகின்றன. அந்த ஏழுமணிகளுள் நடுவே இருந்து, பண்டையநாள் தொட்டு புகழ் எனும் ஒளியை வீசுவது புங்குடுதீவே. 

மாதவியிடம் கலை பயின்ற நீரா என்பவளும் அவள் கணவனும் உலகநாடுகளுக்குச் சென்று  ஆடற்கலையை அறிந்து வந்த வழியில் புங்குடுதீவின் சாக்கைக்கூத்தில் மயங்கி அங்கு  வாழ்ந்தனர் என்று, புங்குடுதீவில் [கோட்டைக்காட்டில்] கோட்டைகட்டி வாழ்ந்த வீரமாதேவி (பாண்டியப் பேரரசின் இளவரசி - 1311), தான் எழுதிய சுயசரிதையில் சொல்கிறாள். சாக்கைக்கூத்தை ஆடுபவர் ஆண்போலவும் பெண்போலவும் ஒப்பனை புனைந்து கொள்பவராகவும், பாடக்கூடியவராகவும், ஆடக்கூடியவராகவும் இருக்கவேண்டும். அவைமட்டும் இருந்தால் போதாது. ஆடுபவர்க்கு உடலின் வலப்பக்கத்தில் ஆண்மையையும் இடப்பக்கத்தில் பெண்மையையும் வெளிப்படுத்தி ஆடும் திறமையும் இருக்கவேண்டும்.  
அர்த்த நாரீஸ்வரர்
அதனை
“திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும்
செஞ்சடை சென்று திசை முகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிகுழல் அவிழாது
உமையவள் ஒருதிறனாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்”
என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். 
அர்த்த நாரீஸ்வரர் ஆக இறைவன் ஆடிய ஆட்டத்தில், உமையவளின் பாகம் எப்படி ஆடாது அசையாது இருந்ததோ அதுபோல் இருக்கவேண்டும், உமையவள் ஆடும்போது இறைவர் பாகம் ஆடக்கூடாது. அப்படி ஆடுவது எவ்வளவு கடினம்?

நான் கம்போடியா சென்று பள்ளியகத்தைப் பார்வையிட்ட போது 12- 11-2012 
புங்குடுதீவில் வாழ்ந்த பல்லவ நரசிம்மன் கம்போடியாவில் கட்டிய  பள்ளியகத்தின் முகப்புத் தோற்றம்  


அத்தகைய சாக்கைக்கூத்தை ஆடுவதில் திறமை வாய்ந்தவர்கள் புங்குடுதீவில் வாழ்ந்தார்கள். அவர்களில் சிலரை வீரமாதேவியின் கணவன் பல்லவ நரசிம்மன் கம்பூசியாவிற்கு[இன்றைய கம்போடியா] அழைத்துச் சென்று, அங்குள்ள கபிலபுரத்தில் இருக்கவைத்தான் என்பதையும் அவனது தந்தை காங்கேயன் போலவே மலைபோன்ற கலைமண்டபம் அமைத்தான் என்பதையும் அவள் வரலாறு சொல்கிறது. 
நான் பள்ளியகத்தைப் பார்வையிட்ட போது 12- 11- 2012 
நம்மூர்க் கோயிற்கோபுர வடிவக் கோபுரம்
எழுநூறு வருடங்களாகியும் தன் கதை சொல்லும் பல்லவ நரசிம்மன் கட்டிய பள்ளியகம்

அவைமட்டும் அல்லாமல் கம்பூசியாவில் ‘பள்ளியகம்’ என்னும் ஒரு கோயிலையும் கட்டினான் என்பதையும் சொல்கிறது. புங்குடுதீவில் வாழ்ந்த வீரமாதேவி கூறும் வரலாற்றின் உண்மையை அறிய பல்லவ நரசிம்மன் கட்டிய பள்ளியகத்தைப் பார்ப்பதற்காக கம்போடியா சென்றேன். எழுநூறு வருடங்களுக்கு முன் கம்பூசியாவில் பல்லவ நரசிம்மன் கட்டிய   ‘பள்ளியகம்’ இடிபாடுகளுடன் இன்றும் அங்கு இருக்கிறது. கம்போடியாவில் உள்ள கோயில் கோபுரங்கள் பெரும்பாலும் தாமரை மொட்டுவடிவில் இருக்கும். ஆனால் பள்ளியகம் நம்மூர்க் கோயில் கோபுரவடிவில் இருப்பதை மேற்படத்தில் பார்க்கவும். அதனால் பண்டைய கலையின் புகழ்மணக்கும் இடமாக புங்குடுதீவு இருந்ததன் உண்மையை மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகள் வீரமாதேவி வரலாறுற்றுடன் இப்பள்ளியகமும் எமக்கு எடுத்துச் சொல்கிறது.

சிரட்டை நடனம் - கம்போடியா 08-11-2012
பண்டைய தமிழரின் கலையான சாக்கைகூத்தை புங்குடுதீவினராகிய நாம் மறந்தாலும் கம்போடியர்கள் பண்டைத் தமிழரின் ஆடற்கலையை, புராணக் கதைகளை, ஆடற்கலை மூலம் புராணக்கதை சொல்லும் பாங்கை, நம்  கிராமிய நடங்களான உழவர் நடனத்தை (நெல்லுவிதைத்தல், நாற்றுநடல், களைபிடுங்குதல், அரிவுவெட்டல், சூடுமிதித்தல், நெல்லு தூற்றுதல்), சிரட்டை நடனத்தை, கோலாட்டத்தை, கும்மியை மறக்கவில்லை. இன்றும் அவர்கள் பண்டைத்தமிழ்க் கலையான  ஆடற்கலையை அக்கலையின் பண்புகளுடன் பேணுகின்றனர்.

அங்கே  இப்போது அந்த சாக்கையர்களின் சந்ததியினர் கம்போடியர்களாக தமது பண்டைய உறவை மறந்து வாழ்கின்றனர். இப்படி தமிழரின் கலைப்பண்பாடு காலம் காலமாக உலகெங்கும் சுற்றிச் சுழல்கிறது என்பதற்கு புங்குடுதீவும் கம்போடியர்களின் ஆடற்கலையும் அவர்களின் சாயல்களும் சான்று பகர்கின்றன.
இனிதே,
தமிழரசி