Tuesday 21 May 2013

குறள் அமுது - (65)


குறள்:
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”                                                   - 356

பொருள்:
கற்கவேண்டியவற்றைக் கற்று மெய்ப்பொருளின் உண்மையை அறிந்தவர், மீண்டும் இவ்வுலக வாழ்க்கையுள் வராத வழியுள் புகுவர். 

விளக்கம்:
இந்த உலக தோற்றத்தின் உண்மையை, உயிர் சுமந்து வாழும் வாழ்க்கையின் உண்மையை, ஆராய்ந்து கற்று அறிவதே மெய்ப்பொருளை அறியும் வழியாகும். உலகில் இயங்கும் பொருள் இயங்காப் பொருள் என இருவகைப் பொருட்கள் இருக்கின்றன. இயங்கும் பொருட்களே, இயங்காப் பொருள்களை இயக்குகின்றன. இந்த உண்மையைக் கண்ட மனிதன், இவ்வுலகையும் உலக உயிர்களையும் இயக்கும் பொருள் ஒன்று இருக்க வேண்டுமே என ஆராய்ந்தான். உலகத்தை இயக்கும் அப்பெரும்பொருளாகிய சக்தியை இயக்கி என்றான். இயக்கியோடு இசைந்தவன் இயக்கன் ஆனான். அண்ட கோளங்களை இயக்கும் அம்மெய்ப் பொருளை இன்றைய மனிதர்களாகிய நாம் கடவுள் என்கிறோம்.

அந்த மெய்ப்பொருளை அறிந்தோர், இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து சுழழும் வழியில் வராது வேறு வழியுள் செல்வர். அந்த மாற்றுவழியை, அதாவது கடவுளை அடையும் வழியை திருவள்ளுவர் வாராநெறி என அழைத்துள்ளார். வாரா நெறி என்பது திரும்பவும் பிறவி வராத வழி.  நாம் மீண்டும் பிறவி எனும் வழியே வரத்தேவை இல்லை. அதனாலேயே அதனை நம் முன்னோர் வாராநெறி என அழைத்தனர். 

 மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்
வாரா வழியருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுதாய்...............”                                   -(ப.திருமுறை: 8: 8: 2) 
என திருவள்ளுவர் கூறிய வாராநெறியை, வாராவழி எனச் சொல்கிறார்.

மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து வராதிருக்கும் வழியில் செல்ல வேண்டுமானால், உலகின் மெய்ப்பொருள் எது என்னும் உண்மையைக் கற்று அறியுங்கள் என இக்குறள் கூறுகிறது.

No comments:

Post a Comment