Saturday 27 June 2015

ஒன்றே இறைவன்!

3500 வயதான மாரத்தின் கீழ் இருக்கும் கச்சி ஏகம்பன்
காளமேகப் புலவர் போட்ட இந்தக் கணக்கைச் சரிபார்க்கத் தெரிந்தவர்கள் தான் கச்சி ஏகம்பரேஸ்வரரை வணங்குவர். காஞ்சிபுரத்தையே கச்சி என்பர். காஞ்சி ஏகம்பரேஸ்வரர் கோயில்மரத்தின் கீழே இருக்கும் கடவுளை வணங்கத் தனது நெஞ்சிற்கு காளமேகப் புலவர் ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார். அந்தக் கணக்கை அவரது மனம் சரியாகப் புரிந்து கொண்டு அன்றே காஞ்சி ஏகம்பரேஸ்வரரை [கச்சி ஏகம்பனை] வணங்கியது. 

காஞ்சி ஏகம்பரேஸ்வரர் கோயில்மரம், உலகில் உள்ள மிகவும் பழமையான மரங்களில் ஒன்றாகும். ஏகம்பரேஸ்வரக் கோயில் மரமான அந்த மாமரத்திற்கு வயது 3500 என்கின்றனர். எப்படிக் கணித்தார்களோ தெரியாது. அவ்வளவு பழமையான கடவுளின் பெயரைச் சொல்லி வணங்கத் தனது மனதிற்குக் கணக்குத் தெரிந்திருப்பது நல்லது என காளமேகப் புலவர் நினைத்திருப்பார் போல் தெரிகிறது. அதனாலேயே காஞ்சி மாமரத்துக்குக் கீழே இருப்பவரை பாடித் துதிக்கப் பின்னக் [Fractions] கணக்காகப் பார்த்து தன் மனதுக்குச்  சொல்லியிருக்கிறார்.

காளமேகப்புலவரின் மனம் போல எமது மனமும் கச்சி ஏகம்பரேஸ்வரரை வணங்க வேண்டாமா? காளமேகப் புலவர் போட்ட அந்த மனக்கணக்கைப் பார்ப்போமா?

“முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக்கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்றோது”

மனித வாழ்க்கையே பல பின்னங்களால் ஆனது தானே!  முதலில் இப்பாடலில் இருக்கும் பின்னங்களைப் பார்ப்போம்.

முக்கால் உக்கேகாமுன் முன் அரையில் வீழாமுன்
அக் கால் அரைக்கால் கண்டஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணி க்கேகாமுன் கச்சி
ஒருமா வின் கீழரை இன்றோது”

எனப் பண்டைத் தமிழர் பாவித்த பின்னக் கணக்கில் இருந்து 
முக்கால் = 3/4, 
அரை = 1/2
கால் = 1/4
அரைக்கால் = 1/8
இருமா = 1/10
மாகாணி = 1/16
ஒருமா = 1/20
கீழரை = 1/640
ஆகிய எட்டு பின்னங்களை வைத்து இப்பாடலை எழுதியிருக்கிறார். அவற்றின் அளவுகள் வரவர முக்கால், அரை, கால் எனக்  குறைந்து வரும்படி பாடலை அமைத்திருக்கிறார். கச்சி ஏகம்பனை - ஒன்றாகிய இறைவனை  எத்தனை ஆயிர ஆயிர உயிர்ப்பேதங்களால் பிரித்தாலும் மீண்டும் தானே தனித்துவமாய் ஒன்றே இறைவன் என ஏகம்பனாய் நிற்பான் என்பதை இக்கணக்குக் காட்டுகிறது.

காளமேகப் புலவரின் மனம் எப்படி அப்பாடலைப் புரிந்து கொண்டு கச்சி ஏகம்பனை வணங்கியது எனப் பார்ப்போம். அவரது மனம் பாடலில் இருந்த பின்னங்களைக் கண்டு பயப்படாமல் அப்பாடலை
“முக்காலுக்கு ஏகாமுன் முன் நரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒரு மாவின் கீழரை இன்று ஓது”
எனப் பிரித்துப் படித்தது.

‘முதுமையின் காரணமாக ஊன்று கோலை மூன்றாவது காலாக ஊன்றி நடக்கமுன்னர் [முக்காலுக்கு ஏகாமுன்], முன் தலையில் நரை தோன்ற முன்னர் [முன் நரையில் வீழாமுன்], அந்தக் காலன் வருங்கால் [அக்காலரைக் கால்], கண்டு பயப்படமுன்னர் [கண்டு அஞ்சாமுன்], சேடம் இழுக்கும் போது விக்கல் வந்து இருமமுன் [விக்கி இருமாமுன்], உடல் சுடலைக்கு போக முன்னர் [மாகாணிக்கு ஏகாமுன்], காஞ்சிபுரத்து ஒரு மாமரத்தின் [கச்சி ஒரு மாவின்], கீழே இருப்பவரை [கீழரை], இன்றே துதிசெய் [இன்று ஓது].’ எனப் புரிந்து கொண்டு கச்சி ஏகம்பனை அன்றே வணங்கியது. நாமும் வணங்குவோம்.
இனிதே,
தமிழரசி.

Tuesday 23 June 2015

கொலை வாளினை எடடா!















உலை உருக்கினில் செய்த
கொலை வாளினை எடடா!
விலை மாதரை உருவாக்கும்
தலை யாளரை அறுக்க!!
                      - சிட்டு எழுதும் சீட்டு 104

Sunday 21 June 2015

பற்றுகிலேன் யானே!

மருதமலைத் தேனே
         மயங்குகின்றேன் பாரே
கருதரிய உன்னை
         கருதுகிலேன் பாரே
பெரியமலைத் தேனே
         புலம்புகின்றேன் பாரே
பெறுதரிய நின்னை
         பற்றுகிலேன் யானே!

Friday 19 June 2015

குறள் அமுது - (108)


குறள்:
“பெருமை உடையார் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்”                            - 975

பொருள்:
மற்றோரால் செய்ய முடியாத அரிய செயலைச் செய்ய வேண்டிய முறையில் செய்து முடிப்பவரே பெருமை உடையவராவர். 

விளக்கம்:
திருக்குறளில் உள்ள ‘பெருமை’ எனும் அதிகாரத்தில் இத்திருக்குறள் உள்ளது. தனிமனிதப் பண்பை, பலவகையான நற்பண்புகளால் மெருகேற்றி பெரியாராகும் தன்மையில் மேன்மேலும் உயர்த்தல் பெருமையின் சிறப்பாகும். 

மனிதர் பெருமையுடன் வாழ்வதற்கும் சிறுமையுடன் வாழ்வதற்கும் அவரவர் செய்யும் செயலே காரணமாகும். பிறருக்காக தன்நலம் அற்று அரிய பெரிய செயல்களைச் செய்தோர் பெருமை உடையோயாராய் திகழ்வதையும், தான் வாழ்வதற்காகா பிறரால் இகழப்படும் செயல்களைச் செய்வோர் சிறுமை உடையோராய் புறக்கணிக்கப் படுவதையும் உலகவாழ்வியல் காட்டுகிறது. நாம் பெருமையுடன் வாழ்வதற்கென எதாவது தகுதி உண்டா?

பெருமை உடையவராய் வாழ்வதற்கு வயது முதிர்ந்தவராய், பொருளும் பணமும் மிக்கவராய், அறிவில் சிறந்த கல்வியாளராய், உடல் வலிமையுடைய வீரராய் பெருந்தொழில் அதிபராய், சினிமா நடிகனாய், சுவாமிமாராய், அரசியல்வாதியாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைய மக்களை மயக்கும் இத்தகைய தகுதிகள் எதுவும் அற்ற சிறுவரும் இளைஞரும் வறுமையால் வாடுவோரும் உடல் ஊனமுற்றோரும் கூட பெருமை உடையோர் ஆகலாம். அப்படியானால் பெருமை உடையார் என்று யாரை நாம் சொல்லலாம்? எவர் ஒருவர் பிறரால் செய்வதற்கு அரிய செயலை முறைப்படி செய்து முடிக்கிறாறோ அவரே பெருமை உடையவராவர்.

எதுவித தகுதிகளும் இன்றி தமது விடாமுயற்சியால் உண்மையாக முயன்று தருக்கித் திரியாது பணிவோடு நன்நிலைக்கு தம்மை இட்டுச் செல்வோர் பெருமை உடையராய்த் திகழ்வர். இராமேஸ்வரத்தில் பிறந்து வறுமையுடன் வாழ்ந்தும் உலகம் போற்றும் விஞ்ஞானியாய், இந்தியாவின் ஜனாதிபதியாய் வலம் வந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களை இந்தக் குறளுக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

பிறரால் செய்யமுடியாத செயல்களைச் செய்து பெருமை உடையோராய் இருப்போர் எப்போதும் பெருமிதம் இன்றி வாழ்வர். 

Tuesday 16 June 2015

வயலினின் முன்னோடி எது?

திருமக்கூடலூர் கோயில்

மேற்கத்தைய வாத்தியமாகக் கருதப்படும் வயலின் இன்று தென் இந்திய இசையான கர்நாடக இசையிலும் வட இந்திய இசையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கர்நாடக இசையில் தனிக்கச்சேரி மட்டுமல்லாமல் மிகச் சிறந்த பக்கவாத்தியமாக விளங்குகிறது. வயலினை கர்நாடக இசைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரின் தம்பியான பாலசுவாமி தீட்சதரே. 

முத்துசுவாமி தீட்சதரின் தந்தை ராமசுவாமி தீட்சதர் தனது இளைய மகனான பாலசுவாமி தீட்சதரை மேல்நாட்டு இசை கற்றக ஒழுங்கு செய்தார். அவர் மேல் நாட்டு சங்கீதத்தை வயலினில் வாசிக்கக் கற்றுக்கொண்டார். மேல் நாட்டு முறையில் சுருதி சேர்க்கப்பட்ட அதாவது 'ஸ ப ரி த' என்ற ஷட்ஜ - பஞ்சம முறையில் சுருதி கூட்டப்பட்ட வயலினின் நான்கு தந்திகளை, கர்நாடக சங்கீத முறையில் ஸ ப ஸ ப என்று சுருதி கூட்டி கர்நாடக சங்கீதத்தை வாசிக்கத் தொடங்கினார். அதனை அறிந்த எட்டயபுர மன்னர் அவரைத் தனது சமஸ்தான வித்துவானாக அமர்த்தினார் என்பது கர்நாடக சங்கீதம் சொல்லும் வரலாறு ஆகும்.

இன்று உலகெங்கும் நாம் காணும் வயலினை 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ராடிவேரியஸ் [Stradivarius] என்னும் இத்தாலியரே உருவாக்கினார். எனினும் பாலசுவாமி தீட்சதர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கர்நாடக சங்கீதத்தை வயலினின் வாசிக்கத் தொடங்கினார். 

ஆனால் நம் பண்டைத் தமிழ் முன்னோர் பல ஆயிர வருடங்களாக வேறு வேறு பெயர்களில் வயலின் போன்ற கருவியை வாசித்து வந்திருக்கிறனர். அக்கருவிகளை வாசித்தோரின் பேரிலும், அதில் இருக்கும் தந்திகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், அவற்றின் உருவத்திற்கு ஏற்பவும், வாசிப்போர் அணியும் ஆடைக்கு ஏற்பவும் பல பெயர்களில் அழைத்தனர். எப்படி அழைத்தபோதும் அவற்றை வில் கொண்டு வாசித்தனர் என்பதைக் கோயில் சிற்பங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இது போன்றது ஆமைவீணை [Photo: source t3licensing.com]

பண்டைத் தமிழர் தந்திக்கருவிகள் யாவற்றையும் வீணை என்ற பொதுப்பெயரால் அழைத்தனர் என்பதை பண்டைத்தமிழ் நூல்களால் அறியலாம். நம் முன்னோர் வாசித்த தந்திக் கருவிகளில் ஆமை வீணையின் வடிவம் [கூர்ம வீணையின் வடிவம்] இன்றைய வயலின் எனக் கூறலாம். ஆமைவீணையை வில்லால் வாசித்தார்கள். அதனை வாசிக்க தமிழர்கள் பாவித்த வில், இன்றைய வயலினின் வாசிப்பிலும் பயன்படுகிறது என்பதை Bow என்னும் சொல்லே எடுத்துக் காட்டுகின்றது. அது வில் வடிவில் இல்லை என்றாலும் வில் [Bow] என்னும் பெயரையாவது வைத்திருக்கிறதே.

இலங்கைத்தமிழரின் இசை ஆர்வத்திற்கு மூலகாரணன் இராவணன் எனச் சொல்லலாம். அவன் வாசித்த ஒரு இசைக்கருவியின் பெயர் 'ராவணஹஸ்தம்' ஆகும். அது 'இராவணாஸ்திரம்' என்றும் 'கிஞ்ஞரம்' என்றும் அழைக்கப்பட்டது. அதை வில்லைக் கொண்டே வாசித்தான். திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்தில்
“மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன் மாமலையை ஓடி
மெஞ்ஞரம்பு உதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரங் கேட்டு உகந்தார் கெடில வீரட்ட னாரே”                    
                                                  - (ப.திருமுறை: 4: 28: 6)
இராவணன் கிஞ்ஞரம் வாசித்ததைக் குறிப்பிட்டுள்ளார். எனவே வயலினின் பிறப்பிடம் இலங்கை எனலாமே. அன்று இராவணன் வாசித்த இராவண ஹஸ்தத்தின் [கிஞ்ஞரத்தின்] பரிணாம வளர்ச்சியே இன்றைய வயலின் எனச் சொன்னால் அது மிகையாகாது. பண்டைய தமிழர் அழைத்த 'கிஞ்ஞரம்' இன்று 'கின்னரம்' என அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் அதனை ‘கிங்கரி’ என அழைப்பர்.

இராவணன் வாசித்த இராவணஹஸ்தம் திருமக்கூடலூரில் இருக்கும் அகஸ்தியர் கோயிலிலுள்ள தூணின் சிற்பத்தில் இருக்கிறது. அச்சிற்பத்தில் இசைக்கருவி ஒன்றை தாங்கி இருக்கும் பெண் ஒருத்தி வில் கொண்டு அதனை வாசிக்கிறாள். அக்கருவியை இராவண ஹஸ்தம் என்பர். இச்சிலை 1500 வருடங்களுக்கு முன் செதுக்கப்பட்டதாகும். தற்போது திருமக்கூடலூர் கர்நாடகாவுடன் சேர்ந்திருப்பதால் அதனை திருமக்கூடலு என அழைக்கின்றனர்.

நம்முன்னோர் வில் கொண்டு வாசித்த தந்திக்கருவியே இன்று உலகெங்கும் உலாவரும் வயலினின் முன்னோடி எனக் கூறுவதில் தவறொன்றும் இல்லை.
இனிதே,
தமிழரசி.

Wednesday 10 June 2015

எனைக் கொஞ்சம் பாரீரே!


பட்டமரம் பட்டையற்றுப் போன மரம் என்று
பாரில் உள்ளோர் எனைப் பார்த்து சிரிக்கின்றார்
நெட்டமரம் ஆகவன்று நின்ற மரம் என்று
நகைத்தோரே எனைப் பார்த்து சிரிக்கின்றார் 

எட்டநின்று நகைப்போரே எனைக் கொஞ்சம் பாரீரே
எந்தன்கிளை எங்கனும் எத்தனை பொந்துண்டு
வெட்டவெளி ஆயினும் அத்தனை பொந்திலும்
வண்ணப் பறவை இனம் வாழுவ தறியீரோ!
                                                                  - சிட்டு எழுதும் சீட்டு 103

Friday 5 June 2015

சேவடிக் கீழ் அருள்வாயே!


கந்தா கடம்பா கதிர்வேலா
      கண்ணுதலான் பெற்ற அருநிதியே
எந்தா எனக்கு இரங்காயோ
      எண்ணுகிலேன் என்று கருதாயே
முந்தா வினைகள் அறுப்பாயோ
      மூவுலகும் தொழுகின்ற பெருநிதியே
சிந்தா குலந்தீர்த்து செய்ய 
      சேவடிக் கீழ் அருள்வாயே!
                                                                                      - தமிழரசி -