Saturday 28 March 2015

குறள் அமுது - (104)

குறள்:
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்”                     - (குறள்: 637)

பொருள்:
நூல்களை நன்கு கற்று, நாம் செய்யும் செயலை எப்படிச் செய்வதென்று அறிந்திருந்தாலும் அப்போது நடக்கின்ற உலக நிலைமையை அறிந்தே செய்யும் செயலைச் செய்ய வேண்டும்.

விளக்கம்:
இந்தத் திருக்குறள் அமைச்சு என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. ஓர் அமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை இக்குறள் சொல்கிறது. அமைச்சருக்குச் சொன்னது எமக்கும் பொருந்தும். 

மனிதர் உலகை ஆராய்ந்து கண்டு அறிந்தவையும் அப்படி அறிந்து உருவாக்கிய பொருட்களும் செயற்கை ஆகும். மனிதர் தமது அறிவால் ஆராய்ந்து கண்டறிந்தவற்றை நூல்கள் - சொல்வதால் செயற்கை என்னும் சொல் இத்திருக்குறளில் நூல்களைச் சுட்டி நிற்கின்றது.

ஒரு நாட்டைன் அரசியற் தலைமையைவிட அமைச்சருக்கு ஆழ்ந்த அறிவு இருக்கவேண்டும். அமைச்சர் அறிவு உள்ளவராக இருந்தாற்றான் தலைவர் செய்யும் செயல்களால் வரும் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்ல முடியும். இரண்டு வகைகளால் நாமும் எமது அறிவை வளர்க்கலாம். அதற்கு நல்ல நூல்களையும் உலகையும் படிக்க வேண்டும். இக்குறளில் செயற்கை என்று நூல்களைப் படிப்பதைச் சொல்லும் திருவள்ளுவர் இயற்கை என்று உலக இயல்பைப் படிப்பதைச் சொல்கிறார். 

ஒவ்வொரு மனிதரிடமும் இயற்கையாகவே பகுத்தறிவு இருக்கின்றது. எனினும் திருவள்ளுவர் உலக இயல்பை - இயற்கையின் செயல்பாட்டை அறிந்தே ஒன்றைச் செய்ய வேண்டும் என்கின்றார். நாம் எவ்வளவுதான் ஆராய்ந்து கற்று, பலதுறைகளில் கரைகண்டிருந்தாலும் இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது.. எங்கோ மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் உண்டான சுனாமி வந்து எம்நாட்டை அழிக்கலாம். எமது பக்கத்து நாட்டில் பறவைக் காச்சலால் மனிதர்கள் இறக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு நமெக்கென்ன என்று இருந்துவிட முடியாது. பறவைக் காச்சல் எமது நாட்டிற்குள் பரவமுன் அதனை தடுக்கும் வழிகளைஅறிந்து செயற்படுத்த வேண்டும்.

எப்படியெல்லாம் ஆராய்ந்து கற்று இருந்தாலும் இயல்பாக - இயற்கையாய் உலகில் மாறுகின்ற பொருளாதாரம், போர், அரசியல் போன்ற உலக நடைமுறைகளை உடனுக்குடன் அறிந்தே செயல்படவேண்டும் எனக்கூறும் குறள்.

Saturday 21 March 2015

பெண்ணுக்கு இங்கே நிகரேது


ஆணுக்குப்பெண் இங்கு சளைத்தவளா - நல்
ஆன்மீக வாதத்தில் இளைத்தவளா
ஆணுக்குப்பெண் இங்கு குறைந்தவளா - நல்
ஆதார சக்தியில் உறைந்தவளா

பெண்ணுக்கு இங்கே நிகரேது  - உயர்
பண்புக்கு இங்கே குறையேது
பெண்ணுக்கு இங்கே துணையேது - உயர்
பெருமைக்கு இங்கே முடிவேது
                                                                                          - சிட்டு எழுதும் சீட்டு 99

Friday 20 March 2015

சீரெல்லாம் அள்ளித் தருவாயே!


கந்தா கடம்பா கதிர்வேலா
    கண்ணுதலான் பெற்ற கருநிதியே
முந்தா வினைகள் அறுப்பாயோ
    மூவுலகும்தொழ நின்ற பெருநிதியே
எந்தா எனக்கு இரங்காயோ
    எண்ணுகிலேன் என்று கருதாதே
சிந்தா குலம் தீர்ப்பாயே
    சீரெல்லாம் அள்ளித் தருவாயே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கடம்பா - கடம்பமலர் மாலை அணிந்த முருகன்
கதிர்வேலா - ஒளிக்கதிர் போல் மின்னும் வேலை உடையவன்
கண்ணுதலான் - சிவன்/நெற்றிக்கண் உள்ளவர்
கருநிதி - அழிக்க முடியாத செல்வம்
முந்தா வினைகள் - தேங்கி இருக்கும் வினைகள்
எந்தா - எந்தாய்/எந்தந்தை
எண்ணுகிலேன் - நினைக்கவில்லை
கருதாதே - எண்ணாதே
சிந்தாகுலம் - மனக்கவலை
சீர் - செல்வங்கள்/ சிறப்புகள்

Wednesday 18 March 2015

குறள் அமுது - (103)

குறள்:
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”                             - (குறள்: 50)

பொருள்:
உலகத்தில் வாழவேண்டிய அறவழியில் வாழ்பவன் வானுலகில் வாழ்கின்ற தெய்வத்துள் ஒருவனாக மதிக்கப்படுவான்.

விளக்கம்:
இத்திருக்குறள் இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் வருகின்றது. ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்து வாழும் வாழ்க்கையில், இருவர் கருத்தும் ஒன்றாகி உலகிற்காக வாழும் அறவாழ்க்கையே இல்வாழ்க்கையாகும். அறவாழ்க்கையே இல்வாழ்க்கை என்பதை இந்த அதிகாரத்தில் ‘அறன்இழுக்கா இல்வாழ்க்கை’ என்றும் ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவதால் அறியலாம். அதாவது அறவழியில் இருந்து மாறாது வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அறம் என்று சொல்லப்படுவதே இல்வாழ்க்கை என்றும் அடித்துக் கூறியுள்ளார்.

இல்லற வாழ்க்கை என்பது துறவற வாழ்க்கை போன்ற தனிமனித வாழ்க்கை அல்ல. இல்வாழ்க்கையில் தாய், தந்தை, மாமன், மாமி, கணவன், மனைவி, பிள்ளை, சுற்றம், நண்பர், விருந்தினர் எனப் பின்னிப் பிணைந்து பலரோடு சேர்ந்து இசைந்து வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கையில் மற்றோர் மனங்கோணாது எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் இனிமையுடன் பழகி வாழ்தலே சிறந்த இல்வாழ்க்கையாகும். 

அப்படி வாழ்வதால் இல்லறவாழ்வு வாழ்பவர்கள் தம்மை அறியாமலேயே பிறருக்காகவும் பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றமாய்ச் சூழ்ந்து அன்புடன் வாழும்போது நன்மையிலும் தீமையிலும் ஒருவர்க்கொருவர் உதவி செய்து வாழமுடிகின்றது. தன்னையும் காத்து பிறரையும் பாதுகாத்து வாழ்வதால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் என இல்வாழ்க்கை வாழ்பவனை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? அன்பும்  அறனும் உடையோராய்த் தனக்கென மட்டும் வாழாது, பிறர்க்கெனவும் வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தலாகும். அதாவது தாம் வாழ என கணவனும் மனைவியும் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை தங்கை மகள் படிக்கப் பணமில்லாது துன்பப்படுகிறாளே என்றோ சுனாமிக்கென்றோ அள்ளிக் கொடுத்தலும் பிறருக்கென வாழ்தலே.

தன்னை கல்வியில் செல்வத்தில் நன்கு நிலைநிறுத்திக் கொண்டு -  தன் சுற்றத்தினரைப் பாதுகாத்து, நண்பர்களுக்கும் கொடுத்து, மற்றோரும் உலகோரும் வாழவழி செய்தல் வாழ்வாங்கு வாழும் வழியாகும். இப்படி இந்த உலகத்தில் வாழ வேண்டிய வழியில் வாழ்பவர் விண்ணுலகில் வாழ்கின்ற தெய்வத்துக்குச் சமமாக வைத்துப் போற்றப்படுவர் என இத்திருக்குறளில் திருவள்ளுவர் சொல்கிறார்.

Monday 16 March 2015

அடிசில் 89

கீரைப் பிட்டு
- நீரா -      

தேவையான பொருட்கள்: 
வெட்டிய கீரை  -  2 கப்
அரிசி மா  -  1 கப்
தேங்காய்த் துருவல்  -  ½ கப்
சிறிய வெங்காயம்  -  1
செத்தல் மிளகாய்ப் பொடி  -  1½ தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு

செய்முறை: 
1. வெந்தயக்கீரை, முளைக்கீரை, முருங்கக்கீரை போன்ற எந்தக் கீரை என்றாலும் அதனை சுத்தம் செய்து கழுவி மிகச்சிறியதாக வெட்டி, எண்ணெய் விட்டு சிறிது உப்பும் போட்டு கலந்து கொள்க.
2. தேங்காய்த் துருவல், வெங்காயம், மிகாய்ப்பொடி, உப்பு நான்கையும் சேர்த்து சம்பல் போல் இடித்துக் கொள்க.
3. கலந்து வைத்துள்ள கீரையோடு இடித்த சம்பலுடன் ஒரு கைப்பிடி மாவும் சேர்த்து பிசிறிக் கொள்க.
4. மிகுதியாக இருக்கும் மாவை மாப்பதமான பிட்டாகக் குழைக்கும் போது பிசிறிய கீரையையும் சேர்த்து பிட்டாக குழைத்து ஆவியில் அவித்து எடுக்கவும்

குறிப்பு:
கீரையில் நீர்த்தன்மை இருப்பதால் சிறிது மா கூடுதலாக சேர்க்க வேண்டி வரலாம். அதன் அளவு கீரைக்குக் கீரை மாறுபடும். 

Sunday 15 March 2015

விந்தை உலகமெடா மகனே!


விந்தை உலகமெடா மகனே! - இஃதோர்
விந்தை உலகமெடா!

பெண்ணைக் கடவுளென்பார் - தாமே
பெண்ணை அடிமைசெய்வார்

கண்ணே மணியேயென்பார் - தாமே
காலால் உதைத்திடுவார்

தாலியே வேலியென்பார் - தாமே
தாலியை அறுத்திடுவார்

தாரமே தாயேயென்பார் - தாமே
தாரமே பாரமென்பார்

தாயே கோயிலென்பார் - தாமே
பேயே நாயேயென்பார்

பெண்ணின் கற்பேயென்பார் - தாமே
கற்பை அழித்திடுவார்

பெண்ணே உலகமென்பார் -தாமே
பெண்கருவைச் சிதைத்திடுவார்

பெண்ணை பூவேயென்பார் - தாமே
பெண்ணுறுப்பை வெட்டிடுவார்

விந்தை உலகமெடா மகனே! - இஃதோர்
விந்தை உலகமெடா!
இனிதே,
தமிழரசி.

Thursday 12 March 2015

ஊரைதீவு வரகவி முத்துக்குமாருப் புலவர்

கமத்தொழிற் சிறப்பைக்கூறும் அவரது பாடல்கள்
எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்

[தினகரன் ஞாயிற்றுவாரமலர், கொழும்பு: 03 - 08 - 1951] 


கானகத்தின் மத்தியிலுள்ள தெளிவில்லாத குளத்தில் மலர்ந்த தாமரைமலர் போல முத்துக்குமாருப் புலவர் திகழ்ந்தார். அப்பொழுது ஒல்லாந்தரின் கீழைத்தேச அரசியல் வானத்தில் இரத்த மேகங்கள் பரவி, இலங்கையில் அவர்களின் அதிகாரப் பகலவன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது.

அதனாலும் அவர்களின் இயற்கைச் சுபாவத்தினாலும் அவர்கள் குடிமக்களின் சேமங்களையோ கல்வியையோ சிறிதும் கவனிக்கவில்லை. ஆதலால் தமது உணவு, உடை, கல்வி, சமயம் என்பவற்றை மக்கள் தாமே கவனிக்க வேண்டி இருந்தது. இந்த நிலைமையில் வறுமை நோயுற்ற குடியில் தோன்றிய புலவன், எவ்வாறு தனது புலமையின் பெருமையைப் பெருமக்கள் சமூகத்தில் நிலைபெறச் செய்யமுடியும்? உயிருள்ள புலமையல்லவா? ஆதலால் பண்ணைகளிலும் பாட்டாளி மக்களிடையேயும் அது கலந்து மலர்ந்தது.

நெல்லுவெட்டுகிறார்கள் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கரம்பனில். அங்கே அட்ட ஐஸ்வரியத்துடனும்  உத்தியோகம் பார்க்கின்றார் ஒருவர். அவரை “இராசகாரியர் ஆரியர்” என்கின்றார். உணவுக்கு அன்னியரை அவர்கள் கையேந்தவில்லை. கண்ணுங் கருத்துமாகச் செய்த கமம் அது. 

தவம் திரண்டது போல முதிர்ந்து விளைந்து கிடக்கின்றது. மெத்த அழகுடன் காட்சி அளிக்கின்றது செந்நெல். அதனைச் சிந்தாமல் வெட்டி அடுக்காக வைக்கவேண்டும் என்கின்றார். வேளாண்மை பேராண்மை என்கின்றார். இதனைச் செய்யுள் வடிவில் பாருங்கள்.

“இலங்கைசேரும் கரம்பனில்வாழும்
     இராசகாரியர் ஆரியர் வாரார்
அலங்கிர்தமாகிய செந்நெலரிந்து
     அடுக்கில் வையுமென் ஆண்மைப்பள்ளாரே”

பசித்தவர்களின் நிச்சநிரப்பைப் [நித்திய வறுமையைப்] போக்கிச் சோர்வை நீக்கும் ஆண்மைத் தொழிலாம் கமத்தொழில். எனவே அதனைச் செய்வோரை ஆண்மைப் பள்ளாரே என்பதில் என்ன வியப்பு இருக்கின்றது. 

தொழிலாளர் வெய்யிலில் கடினமான வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் சோர்வைப் புலவரின் பாடலாகிய மந்தமாருதம் வீசி நீக்கிக்கொண்டிருக்கின்றது.
“கறுத்தக் காளைகள் ஓறணை ஈரணை
     கமுகடிவயல் உழையிலே
எருத்தைத் தெய்தெய் என்றுரப்பப் போனேன்
     அவை எருத்துக்கொண்டது பள்ளாரே”
இது பழங்கதை -  வெட்டிக்கொண்டிருக்கும் நெல்லு விதைக்க உழுதபோது நடந்த ஒரு சம்பவம் பேசப்படுகின்றது.

அப்பொழுது கமுகடி வயல் உழுதார்கள். அன்று உழுத காளைகள் எல்லாம் கறுத்தக் காளைகள். மூவணைக் காளைகள் அங்கே உழுதன. முன் ஏரில் நல்ல விடலைக் காளைகள் உழுதுகொண்டு போயின. அவற்றை விரைவாக நடத்தும் பொருட்டு ‘தெய்! தெய்!’ என்னும் ஓசையுடன் உரப்பி நெருக்கினேன். அவைகள் நுகத்தைப் போட்டுவிட்டு என்னை முட்டும் பாவனையில் எதிர்த்துக்கொண்டன. அவற்றையும் அன்புடன் தடவி அடக்கி உழுதுதானே விதைத்தோம்.

விளைந்துஅரிந்து கிடக்கும் கழனியை வெட்டி எடுப்பதில் என்ன கஷ்டம் இருக்கின்றது. ஏன்! படாதபாடெல்லாம் பட்டு நாங்கள் வேளாண்மை செய்து கொடுத்தாலும் எத்தனையோ “கதிரைச் சுவாந்தார்”களுக்குச் சாப்பிடமுடிவதில்லையாம். இன்றைய உலகப் பொருள் போக்கு இப்படி இருக்கின்றது, என்கின்றார் புலவர்.

இன்னும் “எருத்தைத் தெய்! தெய்!” என்ற சொல்லடுக்குகள் அருவி வெட்டுவார் விரைந்து வெட்டக்கூடிய வகையில் முடுகுதாள அடைமானங்கள் பொதிந்து, பாட்டுக்கள் ஒரு புது நடையுடன் சோபித்தல் காண்க.

இன்றைய உலகில் ஏழாயிரம் நெல்லினங்கள் உண்டு. நமது பாரத நாட்டிலேயே நாலாயிரம் இனங்கள் வரையிற் பயிரிடப்படுகின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான இனங்கள் இலங்கையில் பயிரிடப்படுகின்றன. சில நெல் இனங்கள் பின்வருமாறு
“குளவாழை கொக்குமூக்கன்
     கோங்கன் வெள்ளை நல்ல
குன்றிமணியன் பன்றிப் பீத்தன்
     குற்றாலச் சம்பா”
என்றும் 
“அழகிய வாணான் இழகிய மூக்கன்
     பச்சைப் பெருமாள்
பழகவினிக்கும் இழங்கலையன்
     மிளகுச் சம்பா”
மேலே பேசப்பட்டுள்ள நெல்லினங்களில் ஆறுமாச நெல்லுத் தொடக்கம் எழுபது நாள் நெல்லுவரையில் இருக்கின்றன. பெருவேளாண்மை செய்வோர் இன்றும் மேலே கூறப்பட்ட இனங்களை வழக்கத்தில் விதைத்து வருவதை யாவரும் அறிவர்.

வரகவி முத்துக்குமாருப் புலவர்  ஆயிரக்கணக்கான நெல்லினங்களை வைத்து அருவிவெட்டுப் பாடல்கள் பாடியிருக்கின்றார். எனினும் அவரது புலமைச்சுடர் அவ்வளவுடன் அணைந்து போகவில்லை.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு: புங்குடுதீவு ஊரைதீவைச் சேர்ந்த வரகவி முத்துக்குமாரப் புலவர் ஆயிரக்கணக்கான நெல்லினங்களை வைத்து அருவிவெட்டுப் பாடல்கள் பாடியிருக்கிறார் என்று எனது தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிடுவதால் புங்குடுதீவில் எவரிடமாவது புலவரின் பாடல்கள் இருக்கக்கூடும், அவற்றைத் தேடி எடுத்தால் நம் ஊரில் விளைந்த நெல்லினங்களின் பெயர்களை நாம் அறிந்து கொள்ளலாமே. வரகவி முத்துக்குமாருப் புலவர் கூறிய நெல்லினங்களில் இவ்விரு பாடல்களில் இருந்தும் குளவாழை, கொக்குமூக்கன், கோங்கன்வெள்ளை, குன்றிமணியன், பன்றிப்பீத்தன், குற்றாலச்சம்பா, அழகிய வாணன், இழகிய மூக்கன், பச்சைப் பெருமாள், இழங்கலையன், மிளகுச் சம்பா என பதினொரு வகை நெல்லினங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

அத்துடன் "எனினும் அவரது புலமைச்சுடர் அவ்வளவுடன் அணைந்து போகவில்லை" என என் தந்தை இக்கட்டுரையின் கடைசியில் எழுதியிருப்பதால் ஊரைதீவு வரகவி முத்துக்குமாருப் புலவரின் பாடல்களை தொடர்ந்தும் தினகரன் ஞாயிற்று வாரமலரில் எழுதினாரோ தெரியவில்லை. தேடிப்பார்த்தால் கிடைக்கலாம்.

Wednesday 11 March 2015

கோணாசலத்து அமுதனே!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]
                                                                   
பாதால தடாகம் மலர்ந்தருளு பாதமலர்
       பலகோடி உயிர்கள் காக்கும்
பண்பொழுகு செம்பவள திருமேனி  உலகேலாம்
      பரந் தண்ட கோளமூடும்
வேதவொலி வீணையொலி யோதிமுனி வோர்தொழ
  விளங்கி யருள் நடராசனார்
வீசுகரங்கள் திசை யாவுநிறை வாகவொரு
      யாமள சவுந்தரி தொழ
நாதவடி வானபர மானந்த நயனமும்
      நால்வேத மோது வாயும்
நவரத்ன கிரீடமும் குண்டலந் தோடசைய
      நலமேவு குமிழ் மூக்குமாய்
காதலொ டமர்ந்தழகு வடிவான மாதுமை
      கலந்தபுன் சிரிப்பி னுடனே
கைலாச தரிசனந் தந்தெம்மை யாண்டருள்
      கோ ணாசலத் தமுதனே
இனிதே,
தமிழரசி

Friday 6 March 2015

என்ன புண்ணியம் ஈதறியேனே!

சிந்தை சிவக்கச் சிரிக்கின்றான்
     சிவனவன் என் சிந்தையுள் நின்று
முந்தை வினைகள் எரிக்கின்றான்
     முற்றா மனத்துள் முளைத்திருந்து
பிந்தை வினைகள் பொறுக்கின்றான்
     பேதை நெஞ்சத்துள் புகுந்திருந்து
எந்தை ஈசன் அருள்கின்றான்
     என்ன புண்ணியம் ஈதறியேனே!

Thursday 5 March 2015

சித்திரக் கவிதை - 1

சங்ககாலப் பெண்கள் உடலில் கீறிய தொய்யில் 
[Photo from: Crafty Nitti ]

கடந்த சில வருடங்களாக ஈழத்து நாட்டுப்பாடல்களை ‘ஆசைக் கவிதைகள்’ என்ற பெயரில் எனது வலைத்தளத்தில் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது நம் தமிழ் மூதாதையர் எழுதிய கவிதை வகைகளுள் ஒன்றான ‘சித்திரக் கவிதைகளை’ எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

இயல் இசை நாடகம் எனும் முத்தமிழின் இயற்றமிழ் தந்ததே கவிதைகளாகும். பாடப்படுவது பாட்டு, செய்யப்படுவது செய்யுள். கவிதை = கவி + தை. கவி என்றால் புலவன், தை என்றால் கட்டுதல். கவி என்று அழைக்கப்படும் புலவன் கட்டியதே கவிதை. சங்ககாலத்தில் கவி என்ற சொல்லால் புலவர்கள் அழைக்கப்படவில்லை. 

சங்ககாலத்துக்குப் பின்பு கவி புனைவோரை நான்கு வகையாகப் பிரித்து வைத்துள்ளனர். 
1. ஆசு கவி - எதைப்பற்றியும் கொடுத்த உடனேயே கவிதை எழுதுவோன்.
2. மதுர கவி - படிப்போர் உள்ளம் மதுரம் [அமிழ்தம்] போல் இனிக்க கவிதை எழுதுவோன்.
3. சித்திரக் கவி - சித்திரத்துக்குள் கவிதை எழுதுவோன்.
4. வித்தாரக் கவி - மிக விரிவாக முத்தமிழையும் சேர்த்து கவிதை எழுதுவோன்.

தொல்காப்பியர் கூறும் இருபது வண்ண வகைகளில்  சித்திரவண்ணம் என்று ஒருவகை இருக்கிறது. அந்த சித்திர வண்ணச் செய்யுள்களை பண்டைத்தமிழர் சித்திரத்துள் எழுதினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சித்திர கவிதை வகைகளில் ஒன்றான மாலை மாற்றைக் காணமுடிகின்றது.

தமிழ் செய்யுளின் அணியிலக்கணத்தைக் கூறும் தண்டியலங்காரம், முத்துவீரியம் ஆகிய இலக்கண நூல்கள் சித்திரக் கவிதை பற்றிய விளக்கத்தை தருகின்றன. தண்டியலங்காரம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதியது என்பர். 

பண்டைய பெண்கள் தமது தோள்களிலும் மார்பிலும் நெற்றியிலும் முதுகிலும் எழுதிய தொய்யிலில் [இன்று நாம் போடும் மருதாணி - Henna] தம் காதலர்களுக்கு சித்திரக் கவிதை எழுதி இருக்கிறார்கள். 9ம் நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்த திருத்தக்கத்தேவர் எழுதிய சீவகசிந்தாமணி அதனைச் சொல்கிறது. மற்றவர்களுக்குத் தெரியாமல் காதல் கவிதையை சித்திரக் கவிதையாக எழுதினர் போலும். அத்துடன் முற்றத்தில் இடும் கோலங்களான நாக பந்தம், ரதபந்தம், முரச பந்தம் மாலை மாற்று, போன்றவற்றுள்ளும் சித்திரக் கவிதையில் காதலர்களுக்கு செய்தி சொல்லியிருக்கிறார்கள். அதனால் தமிழரின் சித்திரக் கவிதை மரபு அழிந்து போகாது பெண்களே காப்பாற்றினார்கள் என்றும் சொல்லலாம்.

தண்டியலங்காரம்
“கோமூத்திரியே கூட சதுர்த்தம்
மாலைமாற்றே எழுத்து வருத்தனம்
நாகபந்தம் வினா உத்தரமே
காதைகரப்பே கரந்துறைச் செய்யுள்
சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்
அக்கரச்சுதகமும் அவற்றின் பால”                  - [தண்டியலங்காரம்: 98]
என்று சித்திரக்கவி பற்றிச் சொல்கிறது. அதாவது கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதைகரப்பு, கரந்துறை செய்யுள், சக்கரபந்தம், சுழிகுளம், சருப்பதோபத்திரம், அக்கரச்சுதகமும் சித்திரக்கவிதை வகையைச் சேர்ந்தது என்கின்றது.

முத்துவீரியம்
“ ஏக பாதம் எழுகூற் றிருக்கை
காதை கரப்பு கரந்துறைச் செய்யுள்
கூட சதுக்கம் கோமூத் திரிமுதல்
தெரிந்து பாடுவோன் சித்திரக் கவியே”
என்று கூறுகின்றது.

தண்டியலங்காரம், முத்துவீரியம் இரண்டிலும் ‘கோமூத்திரி’ என்று ஒருவகை சித்திரக் கவிதை சொல்லப்பட்டுள்ளது. என்ன! கோமூத்தரியா? அது என்ன என்பதை அடுத்த சித்திரக் கவிதைத் தொடரில் சொல்கிறேன்.

அடுத்த சித்திரக் கவிதை தொடரிலிருந்து எனது சித்திரக் கவிதையைத் தருவதோடு அதனை எப்படி எழுதுவது என்ற விளக்கத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தருகிறேன்.

இனிதே,
தமிழரசி.

Monday 2 March 2015

குறள் அமுது - (102)


குறள்:
“காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு”          - (குறள்: 122)

பொருள்:
பொருளைப் போல அடக்கத்தைக் காக்கவேண்டும். உயிருக்கு, அதைவிட மிகப்பெரிய சொத்து எதுவுமே இல்லை. 

விளக்கம்:
இத்திருக்குறள் அடக்கம் உடைமை என்னும் அதிகாரத்தில் உள்ளது. கோபத்தை, ஐம்புல ஆசைகளை அடக்கி அவற்றுக்கு நாம் அடிமைப்படாது - அடக்கம் உடையோராய் அடங்கி இருந்தால் அடக்கம் எமக்கு உடைமையாகும். எது எமக்கு உரிமையாய் இருக்கிறதோ எதுவே எமது உடைமை.

எமது வாழ்க்கையின் பெரும்பகுதி உணவு, உடை, வீடு, நகை எனப் பொருட்களைத் தேடி எமக்கென்று பாதுகாத்து வைப்பதிலேயே கழிந்து போகின்றது. எம்மிடம் உள்ள பொருட்களை பல வழிகளில் பாதுகாக்கிறோம். நம் உடலை மழை, வெய்யில், பனி, காற்று போன்றவற்றில் இருந்து பாதுகாக்க வீட்டினுள் வாழ்கிறோம். நம் வீட்டை கள்வனிடம் இருந்து காப்பாற்ற பூட்டால் பூட்டி வைத்தும்,  பாதுகாப்புக் கமெரா[camera] பொருத்தியும் போதாதென்று திருடர்க்கான எச்சரிக்கை மணியும்[Burglar alarm] போடுகிறோம். உணர்வும் உயிரும் இல்லாத வீட்டை எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாக்கிறோம் பார்த்தீர்களா? கள்வனிடம் இருந்து வீட்டைப் பாதுகாக்க இவ்வளவு செய்கிறோமே! உணர்வும் உயிரும் உள்ள எம்மைப் பாதுகாக்க என்ன செய்கிறோம்?

எந்த நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்துப் பார்த்து கண்ணைக் கெடுக்கின்றோம். மனதை அடக்காது காதல் வசப்பட்டு காதலில் உருகி எம்மையே தொலைக்கின்றோம். பொருள் பொருள் என்று ஓடி ஓடி உழைத்து, அந்த வீடு, இந்தக் கார் என வாங்கி ஏதும் மிச்சம் இன்றித் தடுமாறுகிறோம். நாவை அடக்காது விதவிதமான உணவுகளை உண்டு நோயாளி ஆகின்றோம். 

இப்படிப்பட்ட ஆசைகளே துன்பத்துக்குக் காரணம் என்று கூறி ஐம்புல ஆசைகளைத் துறக்கச் சொன்னவர் புத்தர். ஆனால் எல்லோராலும் ஆசைகளைத் துறக்க முடியாது, அது மனித இயல்பு என்பதைக் கண்ட வள்ளுவர் ஆசைகளை அடக்கச் சொல்கிறார். ஆசைகளைத் துறப்பதைவிட அடக்குவது மிகமிக எளிதல்லவா? பொருளைப் எப்படிப் பூட்டிப் பாதுகாகின்றோமோ அது போல ஆசைகளை அடக்கி கொஞ்சம் பூட்டிவைத்தால் அதைவிடப் பெரிய  உயர்வு எமது உயிருக்கு வேறில்லை என்கிறது இக்குறள்.

Sunday 1 March 2015

ஷீனோவும் குரங்கும்


















குரங்குக் குட்டி ஒன்று வந்து
        தோளில் தொற்றிக் கொண்டது
கால் இரண்டால் கட்டிக் கொண்டு
        பல கதையும் சொன்னது
குரங்கின் வாலைப் பிடித்துக் கொண்டு
        குனிந்து நடக்கச் சொன்னது
குரங்கின் வாலைப் பிடித்து நானும்
        குனிந்து நடக்கக் கண்டதும்
குரங்கு இரண்டு வந்தது என்று
         தந்தை மனது சொன்னது
என் தந்தை மனது சொன்னது
        எந்தன் மனது மகிழ்ந்தது!
                         - சிட்டு எழுதும் சீட்டு 97