பொன்னும் பொருளும் பொலிந்திட
புவியிற் புதுவெள்ளம் பாய்ந்திட
கன்னலும் செந்நெலும் விளைந்திட
காடுகள் மேடுகள் செழித்திட
அன்பும் அருளும் ஓங்கிட
ஆனந்த வாழ்வே மலர்ந்திட
மன்னும் உயிர்கள் மகிழ்ந்திட
மேன்மைகள் யாவும் நிறைந்திட
சொன்ன சொற்கள் இனித்திட
சேர்ந்தே மனங்கள் களித்திட
சுன்னைத் தேர் ஏறியே
சித்திரை மங்கை வந்தனளே!
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சுன்னை - வட்டம், இயற்கைவட்டம்