Monday 28 February 2022

யானும் இருகை சுமந்து வாழ்வேன்!

போர்க்கால மேகம் உலகைச் சூழ்ந்திருக்கும் இந்நாளில் போரின் கொடுமையைப் பார்க்கிறோம். தமிழனுக்குப் போர் புதியதல்ல.  சங்ககாலத் தமிழர் அறத்தையும் மறத்தையும் தமது இரு கண்ணெனப் போற்றினர். மறப்போர் செய்யத போதெல்லாம் அறத்தையும் கைப்பிடித்தனர். அறம் மறம் இரண்டையும் புறநானூறு கூறிய போதும் அந்த இரண்டையும் ஒன்றாகப் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறது. 


சோழன் நலங்கிள்ளி என்பவன் ஆவூரை முற்றுகையிட்டான். ஆவூரின் அரசனான சோழன் நெடுங்கிள்ளி கோட்டை மதிற்கதைவைப் பூட்டி உள்ளே இருந்தான். நாட்டில் இருந்த உணவும் ஒழிந்தது. செழிப்பு மிக்க செல்வந்தர் வீடூகளில் கூட நீரில்லை. பச்சிளங்குழந்தைகள் பாலுக்கு அலறுகின்றன. (இத்துயரங்கள் எக்காலத்தும் மாறாதவை). மிருகங்களும் மனிதரும் படுந்துன்பத்தைப் பார்த்த கோவூர்க் கிழார் எனும் சங்ககாலப் புலவர்


இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா

நெல்லுடைக் கவளமொடு நெய்மிதி பெறாஅ

திருந்திரை நோன்வெளில் வருந்த ஒற்றி

நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து

அலமரல் யானை உருமென முழங்கவும்

பாலில் குழவி அலறவும் மகளிர்

பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்

வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்

இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்

துன்னருந் துப்பின் வயமான் தோன்றல்

அறவை யாயின் நினது எனத்திறத்தல்

மறவை யாயின் போரோடு திறத்தல்

அறவையும் மறவையும் அல்லை யாகத்

திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்

நீள்மதில் ஒரு சிறை ஒடுங்குதல்

நாணுத்தக வுடைத்திது காணுங் காலே - (புறம்: 44)


சோழன் நெடுங்கிள்ளியைப் பார்த்துயானைகள் நெற்சோறும் நெய்யும் சேர்ந்த கவளம் பெற்று உண்ணாது நிலத்திற்புரண்டு இடிமுழக்கம் போல பிளிறுகின்றன. குழந்தைகள் பாலில்லாமல் அலறப் பெண்கள் பூ இல்லாது வெறுந்தலையை முடிக்கின்றனர். வேலையாட்கள் நிறைந்த வீடுகளிலும் குடிக்க நீர் இன்றி அழும் கூக்குரல் கேட்கிறது. நீ கோட்டைக்குள் இனிமையாக இருப்பது மிகவும் துன்பமானது. ஆற்றல் மிக்க சிங்கம் போன்ற தலைவனே! அறமுடையவனாயின்நின் கோட்டை இது என்று கூறித் திறந்து விடு. மறமுடையவனாயின் போர்புரிய கோட்டையைத் திறந்து செல். அறத்தையும் மறத்தையும் செய்யாது கோட்டை மதிற்கதவை அடைத்து ஒடுங்கியிருப்பதை ஆராய்ந்து பார்த்தால் அது வெட்கக்கேடாகும்என இடித்துரைக்கிறார்.


போர்க்காலத்தில் அரசனைப்பார்த்துஅறம் செய்! அல்லது மறம் செய்! என கோவூர்க் கிழார் சொன்ன பாங்கு சங்கத் தமிழர் அறத்தையும் மறத்தையும் போற்றி வாழ்ந்ததைக் காட்டுகிறது.


மறம் செறிந்த போர்வீரரும் அறத்தைக் கைவிடவில்லை. சங்ககாலப் போர்க்களம் ஒன்று. அங்கே போர்புரிந்த போர்வீரன் ஒருவனை எதிர்த்து யானை கொல்ல வருகிறது. கொல்ல வரும் யானையைப் பார்த்த வீரனின் மறநெஞ்சில் அறம் தளிர்க்கிறது. யானையை பார்த்து சிரித்தபடி அதைக் கொல்லாமல் இருக்க ஐந்து காரணங்கள் கூறுகிறான்.


தன்னால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால்

யானை எறிதல் இளிவரலால் - யானை

ஒருகை யுடைய தெறிவலோ யானும்

இருகை சுமந்து வாழ்வேன்                   

                                            - (தொல்: புறத்திணை-உரை: 5) 


தன்னால் என்ன செய்யமுடியும் முடியாது என்பது யானைக்குத் தெரியாது. அதாவது பகுத்தறியும் அறிவு அதற்கு இல்லை. இரண்டாவது அது ஒரு விலங்கு. மூன்றாவது தனித்து வருகிறது. நான்காவது பிறன் ஒருவன் வளர்ப்பது. நான்கு காரணத்தையும் கூறி யானையைக் கொல்லல் இழிவு என்கிறான். அவன் கண்ணில் யானையின் ஒற்றைத் துதிக்கை தெரிகிறது. ! யானை ஒரு கை உடையது அல்லவா? அதனை வேலெறிந்து கொல்லலாமா? கொன்றபின்னர் எப்படி நானும் இருகை சுமந்து வாழ்வேன். இரண்டு கை உடையவனுக்கு அது மானக்கேடு என அறத்தை நினைத்து யானையைக் கொல்லாது ஓடவிடுகிறான். இன்றைய போர்க்களங்களில் அறத்தைப் பார்க்க முடியுமா?

இனிதே,

தமிழரசி.

Sunday 27 February 2022

வகை வகையாய்ப் படை வகுப்பீர்!


சொல்லறியாப் பாலகன் யான்
        செய்த குற்றம் யாது சொல்வீர்
தொல்லையேது தந்தே னோ
        தந்தை தாய் உயிர் பறித்தீர்
பொல்லாப்போன வாழ்வைப் பார்த்து
        பதைத்த என் உணர்வைப் பாரீர்
வல்லரசென்று கூறி வகை
        வகையாய்ப் படை வகுப்பீர்
கொல்லரசாய் மாறி நின்று
        கொலை செய்யும் கூற்றானீர்
கல்லைனெஞ்சிற் சுமந்து வாழும்
        கவலை யில்லா மானுடரீர்
எல்லையற்ற உல கதனில்
        என்ன இல்லைச் செப்பீர்
வெல்லும்படை யேது ஈங்கே
        வெறுமை மிஞ்சும் காண்பீர்!
இனிதே,
தமிழரசி.    

Thursday 24 February 2022

தாழிசையை மீட்டியுகந்தாய்

பந்தமனப் பக்கதர்கள் பாடிய வேளை

  பைந்தமிழின் பாவிசையைக் கேட்டுகந்தேன்

நொந்தமன வேதனையில் நைந்துருகா வேளை

  நெஞ்சமதிற் தாழிசையை மீட்டியுகந்தாய்

சொந்தமெனக் கருதி நாடிவந்த வேளை

  சந்தமிகு தமிழிசையில் பாட்டிசைத்தாய்

கந்தமனக் கந்தனாய் காட்சிதந்த வேளை

  கழலிணையின் தண்டிசையைக் காட்டிமறைந்தாய்

இனிதே,

தமிழரசி.

Monday 21 February 2022

தமிழ் என்றால் என்ன? அது எதைச் சொல்கிறது?

இன்று உலக தாய்மொழி நாள். இந்த நல்ல நாளில் தமிழ் எதைச் சொல்கிறது? என்பதை கூறலாம் எனக் கருதுகிறேன். உலகு எங்கும் வாழும் தமிழர் பேசும்மொழிதமிழ் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்மொழி பேசுவதால் தமிழ் இனம் என்ற வரையறையும் தமிழருக்கு இருக்கிறது. தமிழ் மிகத் தொன்மையான இலக்கண இலக்கியங்களைக் கொண்ட தாய்மொழி என்பதும் உலகம் அறிந்ததே. உண்மையில் 'தமிழ்' என்னும் சொல் எதைச் சொல்கிறது?  என்பதை தமிழர்களாக இருக்கும் எம்மில் எத்தனை பேர் அறிவோம்?

தமிழ் என்றால் என்ன? என்று முகநூல் அன்பர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அக்கேள்வியில் கர்நாடகம், கேரளம் என்னும் சொற்களின் பொருள் விளக்க வரலாறு உண்டு. தமிழகம் என்பதற்கு என்ன வரலாறு உண்டு? கருநாடகம், கேரளம் என்பவற்றைப் பார்த்து தமிழ் + அகம் = தமிழகம் என எழுதிக்கொண்டனர். +மி+ழ் எனப்பிரித்து தமிழ் என்றாலென்ன என்னச் சொல்வார்களா? என்று கேள்விக் கணைகளையும் அவர் எழுப்பி இருந்தார். தமிழ் அறிஞர்களால் அதற்கான விளக்கத்தை சொல்ல முடியாது என்பது அவரது கருத்தாக இருந்தது.

அவரது கேள்விகள் என்மனதை நெருடியதால் அவற்றுக்கான பதிலைக் கொடுத்திருந்தேன். எம்மைப்போல் ஓரளவும் தமிழை அறியாது வெளிநாடுகளில் பிறந்து வாழும் இன்றைய இளைஞர்களுக்காகவும் இவ்வாக்கத்தை எழுதுகிறேன். அதனால் கர்நாடகம், கேரளம் என்பவற்றின் பெயரைப் பார்த்தாதமிழகம்எனும் பெயரை தமிழர் என்றெழுதினர்? என்பதை முதலில் பார்ப்போம்.

இந்தியாவின் 'மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின்' கீழ் 1956ல் உருவாக்கப்பட்டதே இந்திய மாநிலங்கள். 1956ல் மைசூர் மாநிலம் என அழைக்கப்பட்ட பகுதி 1973ல்கருநாடக மாநிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பழந்தமிழர் கருமை நிறமான மண் உள்ள நாடு எனும் கருத்தில் அப்பகுதியை கருநாடு என்று அழைத்தனர். ஆதலால் அது கருநாடகாம்/கருநாடகா ஆகியது. மலைச் சரிவு என்ற கருத்தில் தமிழர் சேரநாட்டை 'சேரளம்' என அழைத்தனர். சேரளமே 1956ல்கேரள மாநிலம் [கொச்சி, திருவாங்கூர், மலபார் மூன்றையும் சேர்த்து] எனப் பெயர் பெற்றது. 

ஆனால் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடத்திற்கு மேலான  பழமையுடைய சங்கத்தமிழ் இலக்கியங்கள் தமிழகம் எனும் பெயரை நன்கு பொதித்து வைத்திருக்கின்றன. குதிரை மலையை [ஊராக் குதிரை] ஆண்டபிட்டங் கொற்றன்என்பவனை பாடும் இடத்து புறநானூற்றில்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்

நறைநார் தொடுத்த வேங்கையங் கண்ணி

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!

வையக வரப்பில் தமிழகம் கேட்பப்

பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர் நாளும் - (புறநானூறு: 168: 14 - 20)


ஈழத்தின் மாந்தைக்கும் புத்தளத்திற்கும் இடையே இருக்கும் குதிரைமலை. 


என்கின்றார் சங்ககாலப் புலவர் கந்தப்பிள்ளைச் சாத்தனார். குதிரை மலைத் தலைவனே! இந்த உலகப் பரப்பில் தமிழகம் முழுதும் கேட்கும்படி பொய்மை பேசாத செவ்விய நாவை வளைத்து உன்னைப் புகழ்ந்து பாடுவர் என்கிறார்.

புறநானூறு மட்டுமல்ல பதிற்றுப்பத்து, அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் தமிழகம் என்ற பெயரை பதிவுசெய்து வைத்துள்ளன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில்

இமிழ் கடல் வரப்பில் தமிழகம் அறிய

- (சிலப்ப்திகாரம்: 3: 37)

எனக் கூறும் இளங்கோவடிகள் காட்சிக்காதையில்தமிழ்நாடுஎன்று சொல்லவும் தவறவில்லை.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் 

முதுநீர் உலகில் முழுவதும் இல்லை

- (சிலப்பதிகாரம்: 25: 165 - 167)

ஈராயிர வருடங்களுக்கு முன்பே தமிழகம், தமிழ் நாட்டகம், தமிழ் நாடு, தமிழ் கூறும் நல்லுலகம், செந்தமிழ் நிலம், செந்தமிழ் சேர் பன்னிரு நிலம் எனப்பல பெயர்களில் தமிழர் வாழ்ந்த நிலபரப்பை சங்ககால இலக்கண இலக்கியங்கள் பொறித்து வைத்துள்ளன.  

இயற்சொல்தாமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி

தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே

                                                                - (தொல். எச்சவியல்: 394)

என்று தொல்காப்பியர் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்பே தமிழ்மொழியின் இயற்சொல்லின் இலக்கணத்தை செந்தமிழ் நிலத்து [செம்மொழியாம் தமிழ்நிலத்து] இலக்கணமாகக் கூறிச் சென்றுள்ளார். 

அத்துடன் தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியை 2004ம் ஆண்டு கொடுத்தார்கள்.  அதனைச் சொல்லி நாம் மகிழ்வதும் ஒருவைகையில் எமது தமிழ்மொழியாம் தாய்மொழியின் பெருமையை அறியாமையே. தமிழை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழாக - செம்மொழியாக தொல்காப்பியன் செந்தமிழ் நிலத்து எனக் கூறிச்சென்றதை மறந்தே அப்பெருமை பேசுகிறோம்எனவே தமிழ் என்றால் என்ன?  என்பதைச்சற்று ஆராய்ந்து பார்த்தல் நன்றுதமிழ் என்பதை பண்டைய தமிழ் பேரறிஞர்கள் எல்லோரும் இனிமைநீர்மைஅழகுஅமுது எனச் சொல்லிச் சென்றுள்ளனர். இவையாவும்  தமிழின் பண்பைச் சுட்டி நிற்கும் பண்புப் பெயர்களே. 


ஆதலால் தமிழுக்கு தமிழ் என்ற பெயர் எப்படிவந்தது?  தமிழிலுள்ள பெரும்பான்மையான சொற்கள் காரணப்பெயரால் ஆனவை. தமிழ் என்பதும் காரணப் பெயரே. தமிழ் என்ற பெயரே தமிழின் தொன்மையை உலகின் மூத்த முதன்மொழி தமிழ் என்னும்  தன்மையைக் காட்டி நிற்கிறது. எனது தமிழறிவால் ஆராய்ந்து அறிந்ததை இங்கு கூறவிழைகிறேன். மேலே சிலப்பதிகாரம்

இமிழ் கடல் வரம்பில்

இமிழ் கடல் வேலி

எனக்கூற புறநானூறும்

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங்கடல்

- (புறநானூறு: 204: 5)

என்கிறது. கடலலையின் ஓசையை, ஒலியை இமிழ் எனச் சங்ககாலத் தமிழர் அழைத்ததை இவை காட்டுகின்றன.

இம் + இழ் = இமிழ்

இம் என்றால் இனிமை. இழ் ஒலி என்ற கருத்தை தருகிறது. இனிமையான ஒலி என்பதையே இமிழ் என்றனர்.


தம்மில் தம்மக்கள் அறிவுடமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது”                    - (குறள் 68)

என்கிறாரே திருவள்ளுவர். இதில் தம் என்பது தமது என்ற கருத்தை தருகிறது. 

தம் + இழ் = தமிழ்

தமது[தம்] ஒலி[இழ்] என்பதே தமிழ் ஆயிற்று. அதாவது தாம் எழுப்பிய ஒலி என்பதையே தமிழ் எனும் சொல் குறிக்கிறது. பிறமொழியைப் பார்த்து உண்டாக்கிய மொழியாக தமிழ் தன்னைப் பதிவுசெய்யவில்லை. தம் ஒலி என்றே தமிழ் உரத்துச் சொல்கிறது. அப்படித் தமிழ் தன் பெயரை முழங்கியும் தாய்மொழியாம் தமிழின் காரணப் பெயரை அறியாதவர்காளாக தமிழர்களாகிய நாம் இருப்பது பெருவியப்பாகும்! பல மொழிகள் இல்லாத இடத்திலிருந்தே தம் ஒலியாம் தமிழ்மொழி பிறந்திருக்கும். தமிழ் என்னும் பெயரே மூத்தமொழி தமிழ் என்பதை எடுத்துக் காட்டுகிறது. உலகத் தாய்மொழி நாளாம் இன்று எமது  தாய்மொழியாம் தமிழ்மொழி தாய்மொழியாகப் பல மொழிகளை பெற்று உகந்ததில் தமிழராகிய நாமும் பெருமை கொள்வோம்.

இனிதே,

தமிழரசி.