Tuesday 25 October 2011

சங்கத்தமிழ் சொல்வதென்ன? - பகுதி 1


சங்கத்தமிழ் என்றால் என்ன? என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் எமது இளம் தலைமுறையினருக்காக அதனை சொல்ல வேண்டியவளாக இருக்கிறேன். ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களையே சங்கத்தமிழ் என்கிறோம்.  அவற்றின் மேலெல்லை எப்போது என்பதைக் கூறமுடியாத நிலை இருக்கிறது. சங்கத்தமிழ்ப் பாடல்களை எழுதிய சங்கப்புலவர்கள் குறிப்பிடும் அரசர்களின் கல்வெட்டு, முத்திரை மோதிரம், காசுகள் போன்ற ஆதாரங்கள் கிடைக்கும் வரை சங்ககாலத்தின் மேல் எல்லையைக் கணிப்பது கடினமே. எனினும் அறிஞர் பலர் சங்கத்தமிழின் மேலெல்லை கி மு 700 என்றும் கீழெல்லை கி பி 200 என்றும் கூறுகின்றனர். அதனை அறிய பலரும் பலவிதமாக ஆய்வு செய்கின்றனர். அவற்றின் முடிவுகள் சங்கத்தமிழின் மேல் எல்லையை இன்னும் மேலே கொண்டு செல்லும் என நம்புகின்றனர்.
சங்கத்தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் பல நூல்களாக வெளிவந்த போதும்  இன்னும் எத்தனையோ ஏடுகள் ஏடுகளாகவே அழிகின்றன. என்தந்தையிடம் இருந்தவையும் இன்று அழிந்து போயின. அழிந்தவற்றில் இலக்கியங்கள் மட்டுமல்ல கணித, வானசாஸ்த்திர ஏடுகளும், வைத்திய வாகடங்களும் அடங்கும். அதனாலேயே இதனை இங்கு சொல்லமுடிகிறது.
'சங்க இலக்கியம் என்றால் இதயத்தில் இன்பம் பொங்கியவர் வாழ்ந்த காலம் போய் சங்க இலக்கியத்தைக் கண்டு வெறுப்புக் கொள்பவர் வாழும் காலத்தில் வாழ்கிறேனா?' என்ற ஐயம் எழுகிறது. அதுவும் சங்க இலக்கியமா! அது எமக்கு விளங்குமா? என ஒதுங்கிப் போகிறவர்களையும் அது கொடுந்தமிழ் அல்லவா? எனக் கேட்கிறவர்களையுமே காணக்கூடியவளாக இருக்கிறேன். பட்டங்களைப் பெற்ற பெரியோர் என நாம் மதிப்பவர் வாயிலிருந்து "சங்கத்தமிழா அதை நான் படிப்பதில்லை, பண்டைக்கால பட்டிக்காட்டு புலவர்களின் பிதற்றல்களால் என்ன பயன்?" என  முத்துக்கள் உதிர்கின்றன. 
07.03.2007 ஆனந்தவிகடனில் வெ இறையன்பு ( ஐ ஏ எஸ்) என்பவர்,"'வந்தார்கள் வென்றார்கள்' என்ற தலைப்பில், சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால் பெரும் பங்களிப்பாக இருக்குமே" எனக்  கேட்டதற்கு திரு மதன் கொடுத்த பதிலைப்பார்த்து மனம் வெதும்பியவர்களில் நானும் ஒருத்தி. 

திரு மதன் தனது பதிலில் "தமிழ் மன்னர்களைப் பற்றிய பாடல்களும் கல்வெட்டுகளுந்தான் மிஞ்சி இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தியபாடல்கள் (தமிழில்) அனேகமாக தற்போது ஏதும் இல்லை. புலவர்களுக்கு தமிழ்மன்னர்கள் நிறைய மதுவும் பொற்காசுகளும் தந்தது உண்மை," என்றெல்லாம் எழுதியிருந்தார். அது ஆனந்தவிகடன் தானா? என அறிய முன்னட்டயைத் திருப்பிப் பார்த்தேன். ஆனந்தவிகடன் வாசகர்கள் கேட்கும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் பதில் எழுதும் திரு மதன் அவர்களே, தமிழரின் வரலாற்றுச் சுரங்கமான சங்கத்தமிழ் பற்றி தப்பான எண்ணத்துடன் இருக்கிறார் என்றால் எம் இளம் தலைமுறையினர் நிலை என்னாவது?
எனவே சங்கத்தமிழின் எளிமையையும் அதில் மண்டிக்கிடக்கும் பண்டைத் தமிழர் வரலாற்றையும், அவர்களின் அறிவியல், அரசியல், பொருளாதார, சமயக் கருத்துக்களையும், கல்வியையும்,  காதலையும், குழந்தை வளர்ப்பையும், பெண்ணியக் கோட்பாட்டையும் கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கிறேன். சங்கத்தமிழை குறைத்து எடைபோட்டு எழுதுவதையும் சொல்வதையும் பார்க்கும் பொழுதும் கேட்கும் போதும் நெஞ்சம் துவள்கிறது. சங்கத்தமிழை கொடுந்தமிழ் எனச்சொல்பவர் சொல்லைக் கேட்கும் போது அள்ளூர் நன்முல்லையார்
            "குக்கூ என்றது கோழி அதன் எதிர்                              
                        துட்கென் அற்று என்தூஉ நெஞ்சம்
             தோள்தோய் காதலர் பிரிக்கும்
                        வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே" 
                                                              - (குறுந்தொகை: 157)


எனும் குறுந்தொகைப் பாடலின் தலைவியின் நெஞ்சம் போலவே என் நெஞ்சமும் துட்கென அற்றுப்போகிறது. 

உதாரணத்திற்கு இப்பாடலையே எடுத்துக் கொள்வோம். (குக்கூ என்றது கோழி) கோழிச் சேவல் குக்கூ எனக் கூவ, (அதனெதிர் துட்கென் அற்று என்தூஉ நெஞ்சம்) அதனெதிரே என் நெஞ்சம் துட்கென அறுந்தது. (தோள்தோய் காதலர் பிரிக்கும்)  தோளோடு சேரும் காதலரைப் பிரிக்கும், (வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே) வாள் போல விடியற்காலை வந்ததென்று. 

தலைவி ஒருத்தி தலைவனின் தோளோடு தோள் சேர்த்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாள்.  அதிகாலை நேரம் கோழி கூவுயது. கண்விழித்தவளின் நெஞ்சம் பட்டென அறுந்தது. தலைவனின் தோளில் தலைவைத்து நிம்மதியாக தூங்கியவளின் தூக்கத்தை கோழிச்சேவல் குக்கூ எனக்கூவிக் கெடுத்துவிட்டது. 

காலையில் பொழுது விடிந்ததும் அவளுக்காக எத்தனை எத்தனை வேலைகள் காத்திருக்கின்றன. இனி காதலனுடன் சேர்ந்து காதலில் களித்துத் தூங்கமுடியுமா? காதலனின் தோளில் தோள் வைத்துத்  தூங்கும் அவளையும் காதலனையும் பிரித்தெடுக்கும் வாளைப் போல் விடியல் வந்துவிட்டதே! நெஞ்சம் சட்டென அறாமல் என்ன செய்யும்?

இப்பாடல் பிறந்து இரண்டாயிர வருடங்களாகியும் காலையில் தூக்கம் கலையும் பொழுது எவருக்கும் வரும் மனநிலை இதுவே. அதிலும் இளம் காதலரின் மனநிலையைச் சொல்ல முடியுமா? அன்று கோழி கூவித் துயில் எழுப்பியது. இன்று அலாரம் கூவித்துயில் எழுப்புகிறது. இதுவே எமது வளர்ச்சி. ஆனால் மனிதமனநிலை அன்றும் இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
            "குக்கூ என்றது கோழி அதன் எதிர்                              
                            துட்கென் அற்று என்தூஉ நெஞ்சம்
             தோள்தோய் காதலர் பிரிக்கும்
                            வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே"
இப்பாடல் என்ன கொடுந்தமிழிலா இருக்கிறது? இப்பாடல் படிப்பவர்க்கு புரியாதா? இனிமையாக இராகத்துடன் பாடக்கூடிய விதத்திலும் இருக்கிறதல்லவா? நாமே கொடுந்தமிழர்களாக சங்கத்தமிழைப் புறக்கணித்து வாழ்கிறோம். ஒரு நாளில் பத்து நிமிட நேரமாவது சங்கத்தமிழைப் படித்துப் பாருங்கள் நாம் அறியாத எத்தனை செய்திகள் அதனுள் புதைந்துள்ளன என்பது தெரியவரும்.

இன்று எமக்குக் கிடைத்துள்ள சங்கத்தமிழ் நூல்களிலே காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலாகும். இது கி மு 700ல் எழுதப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். இந்நூல் தொல்காப்பியர் என்னும் பெயருடைய சங்கப்புலவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியர் பல இடங்களில் 'என்மனார் புலவர்'- புலவர் சொல்வர் என்றும் 'தொல்லியல் மருங்கின் மரபே' - பண்டைக்காலத்து வழக்கப்படி வந்த இலக்கண முடிவாகும் எனவும் சொல்வதால் தொல்காப்பியம் எழுத முன்னரே பல இலக்கண நூல்கள் தமிழுக்கு இருந்திருக்கின்றன என்பதை அறியலாம். 

ஒரு மொழியில் இலக்கியங்கள் உருவாகிய பின்னரே இலக்கணங்கள் உருவாகும். ஆதலால் தமிழில் இலக்கியம் உருவாகி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என எண்ணி அதனை விட்டுவிலகிப் போக வேண்டாம். அதனுள் தமிழ் இலக்கணம் மட்டுமல்ல தமிழருடைய சமுதாய விஞ்ஞானக் கருத்துக்கள் சிதறிக்கிடக்கின்றன. 

எடுத்துக்காட்டாக தொல்காப்பியர் சொன்ன தமிழரது விஞ்ஞானக் கருத்து ஒன்றினை இங்கு கூற விரும்புகிறேன்.  டார்வின் என்பவர் ஆங்கிலேய இயற்கையியல் விஞ்ஞானி. இவரின் கண்டுபிடிப்பை evolution என்பார்கள். நாம் அதனை கூர்ப்பு அல்லது பரிணாமம் என்போம். ஈழத்தமிழரே கூர்ப்பு எனச் சொல்வர். கூர்ப்பு என்றால் என்ன? இயற்கையின் உந்துதலால் அல்லது இயற்கையின் தேவையால் ஓர் உயிர் படிப்படியாக பலவகை உயிர்களாக வளர்நிலை அடைந்து சிறத்தலைக் கூர்ப்பு என்பர். டார்வின் இக்கொள்கையைக் கூறி நூற்றைம்பது வருடங்களே ஆகின்றன.

தொல்காப்பியர் டார்வின் பிறப்பதற்கு இரண்டாயிரத்து ஐஞ்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். அவர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் உரிச்சொற்களுக்கு [ஒன்றின் குணத்தை, வடிவத்தை, பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல்லாகும்] சிறப்பிலக்கணம் கூறிய போது 'கூர்ப்பு' என்ற சொல்லுக்கு
                    "கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்"
                                                             - (தொல்: சொல்:314) 
என இலக்கணம் கூறியுள்ளார். இயற்கையின் தேவையால் உயிர்கள் வளர்நிலை அடைந்து சிறத்தல் - உள்ளது சிறத்தல் தானே! இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் கூறிய கூர்ப்பின் இலக்கணத்தை டார்வின் விரிவாகத்தந்திருக்கிறார். எனவே கூர்ப்பின் இயல்பை சங்கத்தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது. 

இது மட்டுமல்ல தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலும் உயிர்களின் பாகுபாடு பற்றிக்கூறுமிடத்தில் தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பு, தமிழராய்ப் பிறந்து வாழ்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் உயிர்கள் வளர்நிலை அடைந்ததை எப்படி ஒழுங்குபடுத்தி வைத்துள்ளனர் என்பதைக் கூறியுள்ளார். அவர்கள் கூர்ப்பின் நிலையை எவ்வாறு ஒழுங்கு செய்தனர் என்பதை பார்க்கும் வரை...
இனிதே,
தமிழரசி.
(2009 வைகாசி எழுதியது)

4 comments:

  1. பழந்தமிழ் ஏடுகளை வாசிப்பதற்கு ஆவல் பிறந்துள்ளது, கற்பதற்கு வழி காட்ட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. பழந்தமிழ் ஏடுகளையா? முதலில் அந்தந்தக் கால தமிழ் எழுத்தமைதியை படிதறிய வேண்டும். அதன் பின்பே ஏடுகளை வாசிக்க முடியும். நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து அங்குள்ள நூலகத்தில் பழந்தமிழ் ஏடுகள் கிடைக்குமா என்பதை அறியுங்கள். பழந்தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும் என்றால் திருக்குறளை முதலில் படியுங்கள்.

      Delete
  2. தங்களது தமிழ் தொண்டிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    ReplyDelete