செந்தமிழ்த்தாயே! செந்தமிழ்த்தாயே!
செங்கதிர் செல்லுந்திசை எங்கனும் நின்புகழ்
சென்று பரவுது பாரிங்கே!
செம்மொழி நின்மொழி என்னும்
சேதியைக் கேட்டு செய்கை
இழந்தார் சிலரிங்கே பாரிங்கே!
சேரமைந்தன் செய்த சிலம்பது போல நின்
சேவடிமீது கொஞ்சும் சதங்கை
தரவந்தோம் நாமிங்கே பாரிங்கே!
சிற்றிடை மேல்மின்னு மணிமேகலைக்காக
சரிமணிக்கோவை தரவந்தோம்
நாமிங்கே பாரிங்கே! பாரிங்கே!
சிந்தாமணியும் சூடாமணியும் சூடிய நினக்கே
சூடிகை கண்டிகை மஞ்சிகை மாதணி
சேர்த்துத் தருவோம் நாமிங்கே பாரிங்கே!
மத்தளம் கொட்ட சலஞ்சலம் ஊத
இத்தரை மீதில் இன்புற வாழ்வாய்!
பல்லாண்டு! பல்லாண்டு!
பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரத்தாண்டு!
சொல்விளக்கம்
1. சேரமைந்தன் - இளங்கோவடிகள்
3. மணிமேகலை - ஏழுவரிசையில் கட்டிய மணிவடம் (இடையணி)
4. சரிமணிக்கோவை - பதினாறு வரிசையில் கட்டிய மணிவடம் (இடையணி)
6. கண்டிகை - தோளணி
7. மஞ்சிகை - குழை (காதணி)
8. மாதணி - பதக்கம்
9. சலஞ்சலம் - வலம்புரிச்சங்கு ஆயிரம் சூழந்திருக்க நடுவே இருக்கும் சங்கு.
குறிப்பு
தமிழைச் செம்மொழியாக இந்திய அரசாங்கம் 12/10/2004ல் அறிவித்த பொழுது எழுதியது. ஆனால் தமிழைச் செம்மொழி என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் கூறியுள்ளார். தமிழ்மொழியின் இயற்சொல்லின் இலக்கணத்தை சொல்லும் போது
"இயற்சொல்தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி
தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே"
- (தொல்.எச்சவியல்: 394)
என்று செம்மொழியாம் தமிழ் நிலத்து [செந்தமிழ் நிலத்து] இலக்கணமாகக் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.
நன்று.
ReplyDeleteஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /