Monday 10 October 2011

இயற்கையின் நாதம்

                   
  
                           பல்லவி

இயற்கையின் நாதம் கேட்டதம்மா
இதயத்தின் வாசல் திறந்ததம்மா
                                                   - இயற்கையின் நாதம்
                
                      அனுபல்லவி

கயவர்கள் கூட்டம் கருவறுக்க
கலங்கி நின்றேன் நின்கழல் மறந்தே
                                                   - இயற்கையின் நாதம்
                    
                          சரணம்

அயர்வினில் நின்றன் அடியடைந்தேன்
அருளுடன் என்னை அருகணைத்தாய்
மயக்கங்கள் தீர்ந்து மனமகிழ்ந்தே
மறுபிறவி நான் எடுத்து வந்தேன்
                                                   - இயற்கையின் நாதம்

உயர்வுகள் கொண்டே உலகனைத்தும்
உயர்ந்திட வேண்டும் உனதருளால்
புயலருங் கூந்தல் பொலங்கொடியே
புவனங்கள் காப்பது நின்கடனே
                                                   - இயற்கையின் நாதம்
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
                   சொல்விளகம்
  1.  கருவறுத்தல் - அடியோடுதொலைத்தல்
  2.  அயர்வு - சோர்வு
  3.  புயலருங்கூந்தல் - கருமேகம் போன்ற கூந்தல்
  4. பொலன்/பொலம் - பொன்/பொன்னிறம்
  5. பொலங்கொடியே - பொன்னிறமான கொடிபோன்றவளே 

No comments:

Post a Comment