Sunday 29 December 2013

அடிசில் 74

இடிக்காத சம்பல்
- நீரா -

தேவையான பொருட்கள்:
தேங்காய்த் துருவல்  - 2 கப்
குருணலாக வெட்டிய வெங்காயம் - 1 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள்  - ½ தேக்கரண்டி
நறுவல்துருவளான மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
வெட்டிய கறிவேற்பிலை  - கொஞ்சம் 
எலுமிச்சம் பழச்சாறு -  தேவையான அளவு
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் புளி, உப்பு தவிர்ந்த மற்றப் பொருட்களை இட்டு நன்கு பிசைந்து கொள்க.
2. அதற்குள் உங்கள் சுவைக்கு ஏற்றபடி உப்பையும், எலுமிச்சம் புளியையும் விட்டு பிசைந்து எடுக்கவும்.

பின்குறிப்பு:
1. மிளகாய்த்தூளையும் உங்கள் சுவைக்குத் தகுந்தவாறு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
2. விரும்பினால் நான்கு தேக்கரண்டி மாசித்தூளும் சேர்க்கலாம்.

Saturday 28 December 2013

ஒட்டக்கூத்தரா! புகழேந்தியா!

பாண்டியரின்  பொதிகைமலை


பாண்டியர்களும் சோழர்களும் பகைத்து போர் செய்து கொண்டாலும், அவர்களிடையே திருமணம் செய்துகொள்ளும் வழக்கமும்  இருந்ததை வரலாறு காட்டுகிறது. பாண்டியப் பேரரசனின் மகளை குலோத்துங்க சோழன் மணம் முடிக்க விரும்பினான். தன் விருப்பத்தை தனது குருவான ஒட்டக்கூத்தரிடம் சொன்னான். அவனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒட்டக்கூத்தரும் பாண்டியனிடம் சென்று பெண்கேட்டார். அதைக் கேட்ட பாண்டிய மன்னன், “பாண்டியரைவிடச் சோழரும், பாண்டிய நாட்டைவிடச் சோழநாடும் எந்தவகையில் சிறந்தது? எனச் சொல்லுங்கள்’ என்றான். அதற்கு ஒட்டக்கூத்தர் 

கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானே
கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானே
ஆருக்கு வேம்புநிகர் ஆகுமோ அம்மானே
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே
வீரருக்குள் வீரனொரு மீனவனோ அம்மானே
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே
ஊருக்கு உறந்தைநிகர் கொற்கையோ அம்மானே
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டிநாடு அம்மானே

‘சோழ அரசர்களின் குதிரையாகிய கோரம், பாண்டிய அரசர்களின் குதிரையாகிய கனவட்டத்திற்கு ஒப்பாகுமா? சோழரின் காவிரிக்கு இணையாக, வையைக் கூறுவதும் உண்டோ? ஆர் என்பது ஆத்திமரத்தின் இன்னொரு பெயர். ஆத்திப்பூ மாலைக்கு [சோழர் அணியும் பூமலை] வேப்பம்பூ மாலை [பாண்டியர் அணியும் பூமாலை] நிகராகுமா? சூரியனுக்கு [சோழரின் குலம் சூரியன்] சந்திரன் [பாண்டியரின் குலம் சந்திரன்] நிகராகுமா? வீரருக்குள் வீரனாய் இருப்போர் மீனவர்களாகிய பாண்டியரோ? வெற்றியையுடைய புலிக்கொடிக்கு மீன் கொடி சமமாகுமா? ஊர்களுக்குள் உறந்தைக்கு [சோழரின் தலைநகர்], கொற்கை [பாண்டியரின் தலைநகர்] ஈடாகுமா? சோழநாட்டோடு பாண்டிய நாட்டை ஒப்பிடமுடியுமா?’ என அம்மானைப் பாடலில் பதில் சொன்னார். அம்மானை என்பது பெண்களால் விளையாடப்பட்ட ஒருவகைப் பந்துவிளையாட்டாகும். 

சோழரின் ஆத்திப்பூ

பாண்டிய அரசனின் அவையிலே ஒட்டக்கூத்தர் இப்பாடலைச் சொன்ன போது அங்கே புகழேந்திப் புலவரும் இருந்தார். ஒட்டக்கூத்தர் யாரைப் பெண்கேட்டு வந்தாரோ, அந்தப் பெண்ணின் [பாண்டியனின் மகளின்] குருவே புகழேந்திப் புலவர். பெண்கேட்டு வந்த இடத்தில் மிக்க அகந்தையுடன் ஒட்டக்கூத்தர் பாடியது புகழேந்தியாருக்குப் பிடிக்கவில்லை. ஆதலால் ஒட்டக்கூத்தர் பாணியிலேயே பதில் சொன்னார்.

ஒருமுனிவன் நேரியிலோ உரைதெளித்தது அம்மானே
ஒப்பரிய திருவிளையாட்டு உறைந்தையிலோ அம்மானே
திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோ அம்மானே
சிவன்முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே
கடிப்பகைக்குத்  தாதகியங் கண்ணியோ அம்மானே
பரவை பரந்ததுவும் சோழன் பதந்தனையோ அம்மானே
பாண்டியனார் பராகிரமம் பகர்வறிதே அம்மானே

‘சோழ நாட்டிலுள்ள நேரிமலையிலா அகத்தியர் தமிழை விதைத்தார்? சிவனார் செய்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் உறந்தையிலா நடந்தது? திருமால் சிறுபுலியாகவா அவதாரம் செய்தார்? சிவனின் திருமுடியில் ஏறியிருப்பது சூரியனோ? திருஞானசம்பந்தர் விட்ட ஏடு காவிரி ஆற்றையா! வையை ஆற்றையா! எதிர்த்து கரை ஏறியது? பித்துப் பிடித்தோரைக் குணப்படுத்துவது ஆத்திப்பூங் கொத்தோ? கடல் பணிந்து தணிந்து நின்றது சோழனின் காலடியிலா? ஆதலால் பாண்டியரின் மாவீரம் சொல்லுக்குள் அடங்காது’ என்று புகழேந்தியார் சொன்னார்.

பாருங்கள் ஒட்டக்கூத்தர் சோழரைப் புகழ்ந்தும், பாண்டியரை நேரடியாகத் தாக்கிப் பாடியிருந்தும் புகழேந்திப்புலவர் வையைக் குறிப்பிட்ட இடத்தைத் தவிர எந்த ஒரு வரியிலும் பாண்டியரின் பொருளைக் கூறாது, கடைசியில் பாண்டியரின் மாவீரம் சொல்லில் அடங்காது என்கிறார். ஒட்டக்கூத்தரைப்போல் ஒக்குமோ என்றும் நிகர் என்றும் ஓர் இடத்திலேனும் புகழேந்திப்புலவர் பாண்டியரைக் குறிப்பிடவில்லை. ஆனால் சொல்லவேண்டியதை ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறார். ஒட்டக்கூத்தரைப் பார்த்து, புகழேந்தியார் தொடுத்த கேள்விகளின் விடைகள் யாவும் பாண்டியரின் புகழையே எடுத்துச் சொல்கின்றன. 

‘சோழ நாட்டிலுள்ள நேரிமலையிலா அகத்தியர் தமிழை விதைத்தார்? அகத்தியர் பாண்டிய நாட்டிலுள்ள பொதிகை மலையில் தமிழை விதைத்தாரே! சிவனார் செய்த திருவிளையாடல்கள் யாவும் உறந்தையிலா நிகழ்ந்தன? திருவிளையாடல்கள் யாவும் மதுரையில் நிகழ்ந்தனவே! திருமால் சிறுபுலியாகவா அவதாரம் செய்தார்? திருமால் மீனாக அவதாரம் செய்தாரே! சிவனின் திருமுடியில் ஏறியிருப்பது சூரியனோ? சிவனின் திருமுடியில் சூடியிருப்பது சந்திரனே! திருஞானசம்பந்தர் விட்ட ஏடு, காவிரி ஆற்றையா! வையை ஆற்றையா! எதிர்த்துக் கரை ஏறியது? வையையை எதிர்த்து அல்லவா கரையேறியது! பித்துப்பிடித்தோரைக் குணப்படுத்துவது ஆத்திப்பூங் கொத்தோ? பித்துப்பிடித்தோரைக் குணப்படுத்து  வேப்பம்பூங் கொத்தே! கடல் பணிந்து தணிந்து நின்றது சோழனின் காலடியிலா? பாண்டியனின் காலடியில் அல்லவா! என்று புகழேந்தியார் கேட்ட கேள்விகளில் விடைகள் தொக்கி நின்றன. ஆதலால் பாண்டியரின் மாவீரம் சொல்லுக்குள் அடங்குமா? நீங்களே சொல்லுங்கள் ஒட்டக்கூத்தரா! புகழேந்தியா! யார் திறைமை மிக்கவர்?
இனிதே, 
தமிழரசி.

Friday 27 December 2013

செருக்கி நிற்றல் நன்றாமோ!

















ஒருநாள் பெய்த மழைநீரில்
          ஓங்கி வளர்ந்தேன் இதமாக
மறுநாள் மலர்ந்தே இறுமாந்து
          மண்மீதிருந்தேன் காளானாய்
சிறுநாள் போது கழிந்ததுமே
          சிதைந்து வீழ்ந்தேன் சிதையாக
சிறுநாள் வாழ்வைப் பெரிதென்றே
          செருக்கி நிற்றல் நன்றாமோ!
 இனிதே,
தமிழரசி.
          

Wednesday 25 December 2013

ஒன்றுங்குறை இல்லையேல்!

வீரவேல் தாரைவேல் விண்ணோர்சிறை மீட்டவேல்
காரைவேல் கடம்பவேல் கண்ணிற்கினிய கருணைவேல்
தீரவேல் திளைப்பீரேல் திண்மையெய்தி வாழ்வரேல்
ஓரைவேள் ஓம்புவேல் ஒன்றுங்குறை இல்லையேல்.

சொல் விளக்கம்:
தாரைவேல் - கூர்மையான வேல்
காரைவேல் - குளிர்ச்சியான வேல் 
கடம்பவேல் - தீவினை நீக்கும் வேல்
தீரவேல் - வலிமை மிக்க வேல் 
திளைப்பீரேல் - விடாது நினைத்தால்
வாழ்வரேல் - வாழ்வாரென்றால்
ஓரைவேள் - எந்நேரமும் 
ஓம்புவேல் - போற்றினால் 


Tuesday 24 December 2013

இலங்குதல்லோ பல்லழகு!



ஒருவன் தன் தங்கையிடம் மச்சாளைப் பற்றி சொல்வதற்கும், தனது நண்பர்களிடம் சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை கீழேயுள்ள நாட்டுப்பாடல்கள் காட்டுகின்றன. 

அநுராதபுரத்தில் இருக்கும் ஆலங்குளம் என்ற இடத்தில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் தன் வீட்டிற்கு வந்திருந்த மாமன் மகளின் சிரிப்பைப் பார்த்தான். அவள் சிரிக்கும் போதெல்லாம் பற்கள் மின்னின. அவளின் சிரிப்பின் மின்னலிலே அவன் சிக்கிக்கொண்டான். மின்னலில் சிக்கியவன் நிலை என்னாகும்? அந்த மின்னலின் வீச்சு எப்படி இருக்கிறது என்பதை அவனுக்கு அருகேயிருந்த தங்கையிடம்

மச்சான்: புத்தப்புது சட்டியில பொன்
                      உருக்கி வார்த்தது போல்
             எங்கமச்சி பல்லொளிவு 
                     எங்கும் துலங்குது காண்

எனச் சொல்கிறான். தங்கையிடம் சொல்லியும் அந்த மின்னலின் தாக்கம் அவனைவிட்டு நீங்கவில்லை. மாலை நேரம் தன் நண்பர்களைப் பார்க்கப் போனான். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க முன்னிரவு நேரமாக வானமெங்கும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிச் சிரித்தன. அந்த நட்சத்திரச் சிரிப்புகளுக்கிடையே வெள்ளி மின்னலிட்டுச் சிரிப்பதைப் பார்த்தான். உடனே தன் மச்சாளின் பல்லழகைத் தனது நண்பர்களிடம்

மச்சான்: செவ்வானந் தன்னில் சிறந்த
                       வெள்ளி பூத்தது போல்
              என்மச்சி வாய் திறந்தால்
                       இலங்குதல்லோ பல்லழகு
                                 - நாட்டுப்பாடல் (ஆலங்குளம் [1950 முந்தியது] - அநுராதபுரம்)
                                            - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

எனச் சொல்லி மகிழ்ந்தான். பாருங்கள் மச்சாளின் பல்லின் ஒளிர்வைத் தன் தங்கையிடம் சொன்ன போது எங்க மச்சி என்று சொன்னவன், நண்பர்களிடம் சொல்லும் போது என் மச்சி என உரிமையுடன் சொல்கிறான். அவளின் பல்லழகை நட்சத்திரங்களுடன் ஒப்பிடவும் அவன் மனம் இடம் தரவில்லை. எனவே நட்சத்திரங்களை விடக்கூடிய ஒளிவீசும் வெள்ளியுடன் ஒப்பிடுகிறான். எந்த அளவுக்கு அவன்  காதல்வசப்பட்டான் என்பதை இந்த நாட்டுப்பாடல் காட்டுகிறது.

குறிப்பு:
1958ம் ஆண்டு அநுராதபுரத்தில் நடந்த இனக்கலவரத்திற்கு முன் பன்னெடுங்காலமாக தமிழர்களால் ‘ஆலங்குளம்’ என  அழைக்கப்பட்ட அந்த இடம்  ‘ஆலங்குளம’ என சிங்களத்தில் அழைக்கப்படுகிறது. எனினும்  பழைய காணி உறுதிகளில் ஆலங்குளம் என்றே இருக்கின்றது. 1977ம் ஆண்டு மீண்டும் அநுராதபுரத்தில் நடந்த கலவரத்தில் ஒரே நாளில் அங்கிருந்து 5000 மேற்பட்ட தமிழர் புலம் பெயர்ந்தனர். தமிழரின் மூன்று Cinema Theatres [சிற்றம்பலம், விஜேந்திரா, New Vijenthira] தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது அங்கு ஒன்று கூட இல்லை. என்னே மனித மன வளர்ச்சி!
இனிதே,
தமிழரசி.

Monday 23 December 2013

குறள் அமுது - (83)


குறள்:
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து                          - 90                                    

பொருள்:
 அனிச்சம் பூவை முகர்ந்தால் வாடும். ஆனால் கொஞ்சம் முகம் சலித்துப் பார்த்தாலே விருந்தினர் நெஞ்சம் வாடும்.

விளக்கம்:
விருந்தினர் நெஞ்சம் எப்படிப்பட்டது என்பதை இத்திருக்குறள் சொல்கிறது. விருந்து கொடுப்போர் விருந்தினர்க்கு விருந்தை எப்படி மகிழ்வோடு அன்பாய் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை திருவள்ளுவர் தெட்டத் தெளிவாகாக் கூறியுள்ளார்.

தொட்டால் சுருங்கி நாம் தொட்டதும் வாடிவிடுவது போல அனிச்சம் பூ நாம் மணந்து பார்த்தால் வாடிவிடும். எமது மூச்சிக் காற்றின் வெப்பம் அனிச்சம் பூவை வாடவைக்கும். அனிச்சம் பூ இதழ்கள் அவ்வளவு மென்மையானவை. அந்த அனிச்சம் பூவைவிடவும் விருந்தினர் நெஞ்சம் மென்மையானது. ஏனெனில் அனிச்சம் பூவை நம் கையில் எடுத்து மூக்குக்கு அருகே கொண்டு சென்று மணந்தால் அதுவாடும். ஆனால் விருந்து கொடுப்போர் ஆறு ஏழு அடி தூரத்துக்கு அப்பால் இருந்தாலும் நம் முகத்தைக் கொஞ்சம் சுழித்துப் பார்த்தாலே விருந்தினர் நெஞ்சம்  வாடிவிடும்.

ஒப்புடன் முகமலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிழ்தமாகும்
முப்பழமொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினொடு கடும்பசி ஆகுந்தானே‘                - (விவேகசிந்தாமணி: 5)

உப்பில்லா கஞ்சியை மனம்மகிழ்ந்து தந்தால், அது அமிழ்தமாய் சுவைக்கும். விருந்து உண்பதற்குப் போக முன்பே நம்மைப் பிடித்திருந்த [கப்பிய] பசி, விருந்து கொடுப்போரின் கடுகடுத்த பார்வையால் கடும்பசியாக மாறும். அவமானத்தால் நெஞ்சம் துவள்வதால், அன்றேல் கொதிப்பதால் பசியற்றுப் போக, அந்த உணவின் மேல் வெறுப்பு வரும். வெறுப்போடு உணவை உண்டால் அது சீரணிக்காது. உணவு சீரணிக்காவிட்டால் வருத்தம் வரும். விருந்து கொடுப்போரின் முகக்கடுகடுப்பு விருந்து உண்டவருக்கு சீரணமின்மையை உண்டாக்குவதால் இருந்த பசியோடு பெரும்பசியை அது உண்டாக்குமாம்.

விருந்தினரை அன்போடு உளம்கனிந்து வரவேற்று விருந்து கொடுங்கள்.  அனிச்சம்பூ முகர்ந்தால் வாடும். ஆனால் விருந்தினர் நெஞ்சமோ நீங்கள் முகம் சுழித்துப் பார்த்தாலே வாடிவிடும் என்பதை மறக்காதீர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

Saturday 21 December 2013

சங்கத்தமிழரின் விண்வெளிபற்றிய அறிவு

Milky Way [Photo Source: Wikipedia] [படம்:1]

'விண்ணை அளந்தோம் கடல்
          மண்ணை அளந்தோம்
பெண் சொன்ன சொல்லை 
          அளந்தோம் இல்லையே'
                                       - நாட்டுப்பாடல் (மாந்தை)
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

மாந்தையில் வாழ்ந்த ஒருவர் தன்மனக் கொதிப்பை, நாட்டுப்பாடலாக வடித்துவைத்துள்ளார். அவர் சொன்னது போலத் ‘தமிழர்கள் விண்வெளியை அளந்தார்களா?’  அதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா? எனத் தேடிப்பார்த்தேன். என் தேடலுக்குக் கிடைத்ததை இங்கு தருகிறேன்.

‘ஆம்பல்’ இதழில் நான் எழுதியதை வாசித்த வாசகர் ஒருவர் ‘ஆம்பல்’ என்பது ஒரு பேரெண் என சிற்பநூல் குறிப்பதாக எழுதி இருந்தீர்கள். சங்க நூல்கள் ஆம்பல் என்பதை ஓர் எண் என்று குறிப்பிடுகின்றனவா என்று கேட்டிருந்தார். 

இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்வாழ்ந்த தொல்காப்பியர் தமிழில் உள்ள எண்களின் பெயர்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று சேரும் என்பதைக் கூறியுள்ளார். அதில் அவர் ஆம்பலின் பெயரை நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அவ்வெண் எவ்விதம் சேரும் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். ஏழு என்ற எண்ணின் பெயர் மற்றைய எண்களின் பெயர்களுடன் எப்படிச்சேரும் என்பதை எடுத்துக் காட்டும் இடத்தில்

“ஆயிரம் வருவழி உகரங் கெடுமே”      - (தொல்: 18: 96)
என்கிறார். அதாவது ஏழுகடல், எழுபிறவி என்று ஏழ் என்னும் எண்ணின் கணக்கை எழுதுவோம் அல்லவா! அப்படி எழுதும் நிலையில் இருந்து மாறி ஆயிரத்துடன் சேர்த்து எழுதும் போது ஏழாயிரம் என எழுதுவோம்.

ஏழ் + ஆயிரம் = ஏழாயிரம்
‘ஏழ்’ என்னும் எண் ஆயிரத்துடன் சேரும் பொழுது தன் நிலையில் மாறி [கெட்டு] ஏழாயிரம் ஆகின்றது. 

ஆனால் ஐ, அம், பல் எனமுடியும் எண்களின் பெயர்களோடு (பொருட்களின் பெயர்கள் இல்லை) ஏழ் என்னும் எண் சேரும் போது தன் இயல்பில் மாறது அப்படியே இருக்கும் என்கிறார்.

ஐ அம் பல்லென வரூஉம் இறுதி
அப்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்”         - (தொல்: 18: 98)

அதாவது சங்ககாலத் தமிழர் பாவித்த குவளை, வெள்ளம், ஆம்பல் என்னும் [ஐ, அம், பல் எனமுடியும்] எண்களின் பெயர்கள் ஏழுடன் சேரும் பொழுது ‘ஏழ்’ என்பது தன்னிலை மாறாது அப்படியே வரும்.

ஏழ் + குவளை = ஏழ்குவளை
ஏழ் + வெள்ளம் = ஏழ்வெள்ளம்
ஏழ் + ஆம்பல் = ஏழ்ஆம்பல் 
ஏழுடன் சேரும் ஆயிரம் ஏழாயிரமாக மாறுவது போல் ஆம்பல் ஏழாம்பல் ஆகமாறாது. ஆம்பல் என்ற சொல்லை எண்ணாகப் பாவிக்கும் போது “ஏழ்ஆம்பல்” என்றே எழுத வேண்டும். இது தொல்காப்பியர் கூறும் எண்புணர்ச்சியின் இலக்கணமாகும்.

நூறு திரிலியனை [ஆம்பல்  = 100,000,000,000,000  = one hundred trillion] பண்டைக் காலத் தமிழர் ஆம்பல் என அழைத்தனர். எழுநூறு திரிலியன் பொருளை, எழுநூறு திரிலியன் ஆண்டை [ஒளி ஆண்டு போல], எழுநூறு திரிலியன் நாளைக் கணக்கிடும்போது ஏழ்ஆம்பல் பொருள், ஏழ்ஆம்பல் ஆண்டு, ஏழ்ஆம்பல் நாள் என எழுதவேண்டும். ஆனால் ஆம்பல் மலர், ஆம்பல் கிழங்கு, ஆம்பல் குழல் போன்ற பொருட்களை அப்படி எழுதுவதில்லை. ஏழு ஆம்பல் மலர் கொய்தோம் என்பதை ஏழாம்பல் மலர் கொய்தோம் என எழுதவேண்டும்.  இதுவே தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கணம்.
தூசுத்திரட்சி நெபுலா [Photo Source: NASA] [படம்: 2]

ஏனெனில் பண்டைத்தமிழர் அண்டவெளியின் தூசுத்திரட்சி, வளியின் சக்தியால் உப்பி கோளமாக மாற எடுக்கும் கால அளவை ஆம்பல் எண்ணால் குறித்தனர். ஆம்பல் மலர் போன்ற பொருட்பெயரையும், ஆம்பல் எண்ணுப் பெயரையும் வேறுபடுத்திக் காட்டவே இந்த இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

ஆம்பல் பற்றிய தரவை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும்:
https://inithal.blogspot.com/2012/05/1.html

https://inithal.blogspot.com/2012/05/2.html

பண்டைய காலத்தமிழர் “ஆம்பல் எண்ணால்” ஊழிக்கால அளவைக் குறித்தனர் என கடைச்சங்கப்  புலவரான கீராந்தையார் கூறியுள்ளார். அவர் கூறியதைப் பார்க்க முன் இந்த உலகின் தோற்றத்தைப் பற்றி நாம் அறிவது நன்று. உலகிலுள்ள சமயங்கள் யாவும் உலக தோற்றத்தைப் பற்றி பலவகையான  செய்திகளை பண்டைக்காலத்திலிருந்தே சொல்லிவருகின்றன. 

எனவே நம் சமயங்கள் என்ன சொல்கின்றன? என்பதைப் பார்ப்போம். ஆதிகாலத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும் வெள்ளத்துள் மூழ்கி இருந்தது. அந்த வெள்ளத்துள் மிதந்து வந்த பொன்முட்டையே கடவுள். அவரே உலகைப்படைத்தார். இதுவே இருக்குவேதம் கூறும் “இரணிய கர்ப்பம்”. இந்து மதத்தின் உபநிடதங்களும், புராணங்களும் வானியற் கருத்தைக் கூறினும் கடவுளரை மிகைப்படுத்துவதால் சொல்லும் பாங்கில் தடுமாறுகின்றன. எனினும் யுகங்கள் தோறும் பிரமாவே உலகைப் படைத்தார் என்பதே பொதுவான கருத்தாகும்.

சைவசமயமும், இந்து சமயத்தின் புருஷஸூக்தமும் உலகின் தோற்றத்தை இன்றைய விஞ்ஞானக் கொள்கைக்கு அமைய கொஞ்சம் சொல்கின்றன. சமணசமயம் உலகிற்கு தொடக்கமும் முடிவும் இல்லை என்கின்றது. பௌத்த சமயமோ உலகம் இருக்கின்றது. அது முந்திய உலகில் இருந்து வந்தது. எவ்வாறு கோழியில் இருந்து முட்டையும், முட்டையில் இருந்து கோழியும் வருகின்றதோ அதுபோலவே என்கின்றது. இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்கள் உலகம் ஆறு ஏழு நாட்களில் படைக்கப்பட்டது என்கின்றன.

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி கி பி 16 - 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.  அவர் சூரியன் பூமியைச் சுற்றவில்லை, பூமியே சூரியனைச் சுற்றி வருகின்றது என்னும் உண்மையைச் சொன்னதால் கத்தோலிக்க சபையினரால் இருட்சிறையில் அடைக்கப்பட்டு தன் கண்களையே இழந்தார். [முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட இத்தாலியர்கள் சூரியனே பூமியச்சுற்றி வருவதாக நம்பியிருந்தனர்.] கலிலியோ அன்று ஏற்றிவைத்த வானியற் கருத்து, இன்று மேற்குலகம் பிரபஞ்ச இரகசியத்தை அறிந்து கொள்ள துணைநிற்கின்றது.

பால்மய வெளியில் (Milky way) உள்ள நட்சத்திரங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாகாக் காட்டும் தொலைநோக்கி HST (Hubble Space Telescope) ஆகும். இதன் உதவியால் நட்சத்திரங்கள் எப்படி மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

தூசு வளியின் உந்து சக்தியால் திரண்டு உப்புதல் [Image Credit:  NASA] [படம்: 3]

இன்றைய வானியல் (Astronomy) சரித்திரத்தில் முக்கிய இடம்பிடிப்பவை நெபுலாக்களே. நெபுலா என்பது மேகத்தைக் குறிக்கும் இலத்தீன் மொழிச் சொல்லாகும். அண்டவெளியின் வளியும் தூசியும் சேர்ந்த திரட்சியே நெபுலா. இந்த நெபுலாக்களில் இருந்தே நட்சத்திரங்கள் பிறக்கின்றன. வளியின் உந்து சக்தியினாலேயே நெபுலாக்கள் இயங்குகின்றன. மழைமேகங்கள் காற்றால் அலைவதுபோல் நெபுலாக்கள் காற்றின் உந்து சக்தியால் சக்கரமாகச் சுழல்கின்றன.

அண்டவெளியின் தூசித்திரட்சி வளியினுள் ஏற்படும் தன் ஈர்ப்புச் சக்தியினால் ஒன்றாக இணைந்து சுழன்று, இட்லி போல உப்பி பின்னர் கோளமாக மாறும் (self gravitating ball of gas). [படம்: 3] அந்த சுழற்சியால் ஏற்படும் வளியின் அழுத்தத்தாலும் வெப்பத்தாலும் அதன் கருவில் அணுப்பிணைவுச் சக்தியை உண்டாக்கி தானாகவே ஒளிரும் நட்சத்திரம் பிறக்கும். [படம்: 4]

ஒளிரும் நட்சத்திரம் தோன்றல்  [Photo Source: NASA] [படம்: 4]

இதே போல் சூரியன் உண்டாவதற்கு முன் தோன்றிய நெபுலா ஒன்று (Pre-Solar Nebula) தன்னீர்ப்புச் சக்தியால் உப்பிப் பெருத்து உடைந்து சிதறியது (Gravitational Collapse). அவ்வாறு சிதறிய நெபுலாத் துண்டுகள் தன்னீர்ப்புச் சக்தியின் அழுத்தத்தால் மீண்டும் தனித்தனிக் கோளங்களாகி செந்தீயாக எரிந்து ஒளிவீசின(Hydrogen into Helium). சூரியன், சந்திரன், பூமி போன்றவையும் அப்படி உருவான கோளங்களேயாகும்.

வெள்ளிக்கிரகத்தில் எரிமலைக் குழம்பும் நிலமும் [Image Credit: NASA] [படம்: 5]

பூமி தோன்றி 4.54 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த பூமியின் வெளிப்புறம் சூரியக் காற்றால் (Solar Wind) பனியும் மழையும் பெய்து குளிர்ந்தது. குளிர்ந்த பூமியின் உள்ளே இருந்து அதன் உள்ளீடு எரிமலையாக அடிக்கடி வெடித்துச் சிதறி மேல் எழுந்ததாலும் வால் நட்சத்திரங்கள் மோதியதாலும் நிலமும் கடலும் தோன்றின என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
வெள்ளிக்கிரகத்தில் அமிலமழை, முகில், மின்னலின் அறிகுறி 
[Photo Source: NASA] [படம்: 6]

வானியல் பற்றி இன்றைய விண்வெளி விஞ்ஞானிகள் கூறும் கருத்துக்களை விடவும் மேலதிக கருத்துக்களை பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மேலைநாட்டவர்களிடம் அடிமைப்பட்டு இருந்ததால் தமிழ்ச்சாதி தன்னைத் தானே தாழ்த்தி எடைபோடுகின்றது. பண்டைத்தமிழருக்கு விஞ்ஞானம் தெரியுமா? என அங்கலாய்க்கின்றது. தமிழனைத் தவிர வேறுயார் எதுசொன்னாலும் அதனை நம்புகின்றது. அந்த  அறியாமையை எப்போது நீக்கப் போகின்றது.

தூசுத்திரட்சியால் உண்டாகும் நெபுலாக்களில் இருந்து எப்படி நட்சத்திரங்கள் தோன்றி அழிகின்றனவோ அப்படி இந்த உலகமும் தோன்றி அழிவதை கி பி இரண்டாம் நூற்றாண்டில் [கலிலியோவிற்கு 1500 வருடங்களுக்கு முன்னர்] வாழ்ந்த கீராந்தையார் என்னும் சங்ககாலத் தமிழ்ப்புலவர் கூறியதைப் பார்த்த பின்னராவது தம் எண்ணத்தை தமிழ்ச்சாதி மாற்றிக்கொள்ளுமா?

 “தொன்மறை இயற்கையின் மதியோ…
………………. ……… ……. மரபிற்றாகப்
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி யூழூழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளிக் கிளர்ந்த ஊழூழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உணமுறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்
உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை……….”            
                                              - (பரிபாடல்: 2: 1 - 15)

தொன்றுதொட்டு வரும் இயற்கையின் நியதிப்படி சந்திரனும் ஏனையவையும் அழிந்த ஊழியின் முடிவில் மீண்டும் உலகம் தோன்றுவதை இப்பரிபாடல் சொல்கிறது. 

இப்பரிபாடலில் வரும் ஊழ் என்பது தோன்றுதலையும், ஊழி என்பது ஒன்று தோன்றி செயல்படும் கால அளவையும், ஊழூழ் [ஊழ் ஊழ்] என்பது முறைமுறையாய் முதிர்வதைக் குறிக்கும்.   

1. இயற்கையின் முறைப்படி பசுமையாய் [பசும்] அழகாய்க் [பொன்] காட்சிதரும் நிலமும் [உலகமும்] மண்ணும் பாழ்பட்டு அழிய, வெளியாகிய வானமும் இல்லாத [விசும்பில்] ஊழியும் (நெய்தல்)
2. முறைமுறையாகக் [ஊழூழ்] கடந்து செல்லக், கருவான பரமாவணு வளர்வதற்கு [கருவளர்] ஏற்ற வானத்தின் ஒலியில் [இசையில்] உண்டான [தோன்றி] உருவம் அறியப்படாத [உருவறி வாரா] ஒன்றன் [முதல்] ஊழியும் (குவளை)
3. உந்தித் தள்ளும் காற்றால் [உந்துவளிக்] உப்பிய [கிளர்ந்த] ஊழூழ் ஊழியும் (ஆம்பல்)
4. செந்நிறத்தீயால் ஒளிரும் [சுடரிய] ஊழியும் (சங்கம்)
5. பனியும் குளிர்மழையும் [தண்பெயல்] பெய்த [தலைஇய] ஊழியும் (கமலம்)
6. அவ்வூழிகளும் கழிந்து போக [அவையிற்று], பெருவெள்ளத்துள் [உணமுறை வெள்ளம்] மூழ்கி, ஆரவாரத்துடன் [ஆர்தருபு] மீண்டும் வலிமையுடன் [பீடுயர்] பீண்டி [பருத்து], அவற்றிற்கும் உள்ளீடாகிய இருநிலத்து [நிலம், கடல்] ஊழியும் (வெள்ளம்

வெள்ளிக்கிரகத்தில் எரிமலை வெடித்தல் [Photo Source: ESA, NASA] [படம்:7]

என்று சொல்லப்படும் இந்த ஊழிகளின் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம் கமலம், வெள்ளம் என்னும்  எண்கள் குறித்திட்ட பெயர்களது கால அளவு கழிந்த பின்பு உயிர்கள் வாழ்வதற்கான ஏழாவது ஊழி தொடங்கும் என்கிறார்.

நட்சத்திரங்கள் கிரகங்கள் தோன்றி அழிவதைப்பற்றி  இன்றைய விண்வெளி விஞ்ஞானிகள் கூறும் கருத்துடன் சங்ககாலப் புலவரான கீரந்தையாரின் பாடல் சொல்லும் கருத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இன்றைய வானியல் 
விஞ்ஞானிகளின் கருத்து
சங்கப்புலவரான கீரந்தையாரின் பாடல் சொல்லும் கருத்து 
கீரந்தையாரின் ஊழிக்கால அளவு
(பண்டைத்தமிழர் எண்களில்)
இன்னும் அறியப்படவில்லை
விண்ணும் மண்ணும்பாழ்பட்டு அழிந்ததால் 
ஆகாயம் இல்லாத ஊழி
நெய்தல் 
இன்னும் அறியப்படவில்லை 
கருவளர்வதற்கு ஏற்ற வானத்தின் ஒலியில் [இசையில்] உருவான உருவமில்லாத ஊழி
ஆகாயவூழி 
குவளை
வளியின் திரட்சியால் உண்டாகும் நெபுலா சுழன்று உப்புதல்   [படம்: 3]
கருவைச் சுற்றிச் சுழல்கின்ற காற்றால் [உந்துவளி] உப்பிய [கிளர்ந்த] ஊழி
காற்றூழி
ஆம்பல்
தன்னீர்ப்புச் சக்தியின் அழுத்தத்தால் நெருப்பாக எரிந்து ஒளிவீசுதல் [படம்: 4]
செந்நிறத் தீயால் ஒளிரும் [சுடரிய] ஊழி
நெருப்பூழி
சங்கம்
சூரியக்காற்றால் பனியும் மழையும் பெய்து குளிர்தல்  [படம்: 6]
பனியும் மழையும் பெய்த ஊழி
நீரூழி
கமலம்
எரிமலைகளாலும் வால் நட்சத்திரங்களாலும் நிலமும் கடலும் உண்டாதல்
[படம்: 7]
வெள்ளத்துள் மூழ்கியிருந்த நிலம் மீண்டும் மேலெழுந்து வருவதற்காக எரிமலையைக் கக்கும் இருநிலத்தூழி
(இருநிலம் - நிலமும் கடலும்)
வெள்ளம்
இந்த அட்டவணை கிரகங்கள், நட்சத்திரங்கள் தோன்றி அழிவது பற்றி சங்கத்தமிழர் அறிந்திருந்த ஆறுபடிநிலைகளில் நான்கு நிலைகளையே இன்றைய விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மற்றைய இரண்டு நிலைகளும் இன்னும் அறியப்படவில்லை.

கீரந்தையார் ஏழாவது ஊழிக்கால அளவைக் கூறவில்லை.
‘ஊழி ஏழான ஒருவ போற்றி’                   - (ப.திருமுறை:6: 55: 8)
என்னும் திருநாவுக்கரசு நாயனாரின் தேவார அடியைப் போல் திருவாசகம், திருமந்திரம் போன்றவையும் தமிழரின் விண்வெளி அறிவை எடுத்துக் காட்டுகின்றன.

பண்டைய தமிழர் இயற்கையை உள்வாங்கி ஆன்மீகத்தை உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் கண்ட ஆன்மீகம் கண்மூடித் தனமானதல்ல. இயற்கையோடு இசைந்ததே இறைவன் என்பதை மற்றவர்களை விட  மிகத்தெளிவாக கீரந்தையர் இப்பாடலின் முடிவில் கூறுகின்றார்.

கீரந்தையாரின் சங்கப்பாடல் வரிகள் சொல்லும் இவ்வுலகின் தோற்றம், இன்றைய விஞ்ஞானக் கருத்துக்களுடன் கைகோத்து நடைபோடுவதோடு, விண்வெளி விஞ்ஞானிகளால் இன்னும் அறியப்படாதவற்றையும் சொல்வதை மேலே இருக்கும் அட்டவணையில் பார்த்திருப்பீர்கள். சங்கத்தமிழர் ஆகாயத்தை தம் கண்களால் மட்டும் பார்த்து இவ்வாறு துல்லியமாக கோள்களில் நடக்கும் மாற்றங்களையும் அவற்றிற்கு எடுக்கும் காலங்களையும் குறித்திருக்க முடியாது. உலக தோற்றத்தோடு ஆகாயவூழி, காற்றூழி, நெருப்பூழி, நீரூழி, இருநிலத்தூழி என ஐம்பூதங்களின் தோற்றத்தையும் கீரந்தையார் குறித்திருக்கும் பாங்கு போற்றுதலுக்கு உரியதாகும்.

கீரந்தையாரின் இப்பரிபாடல் 1800 வருடங்களுக்கு முன்பே நன்னாகனார் என்ற சங்ககாலப் புலவரால் இசையமைக்கப்பட்டு பாலைப் பண்ணில் கடவுள்வாழ்த்தாகப் பாடப்பட்டது. எமது இசைக் கலைஞர்கள் இப்பரிபாடலுக்கு மீண்டும் இசையமைத்து (முழுப்பாடலையும் அல்ல) அரங்குகளில் பாடினாலாவது எம் முன்னோரின் அரிய கண்டுபிடிப்புகள் உலகின் காதுகளைச் சென்றடையாதா?
இனிதே, 
தமிழரசி.
[2009, ஆம்பல் இதழுக்கு எழுதியது]

Friday 20 December 2013

தன்னை அறியும் அறிவு



இன்றைய சைவசயப் பெரியோர் என்று தம்மைக் கூறிக்கொள்வோரின் வழிகாட்டலில், எமது சைவசமயக் கொள்கையில் இருந்து எப்படித் தடம் புரண்டு செல்கிறோம் என்பதை நம்மவர்கள் இன்னும் உணரவில்லை. நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும் கோயில் என்றும் குளம் என்றும் சுவாமிமாரை அழைத்துப் பாதபூசை செய்து மகிழ்கிறோம். அந்த சுவாமிமாரை அழைத்து வருவோர் சுவாமிமாரின் பாதபூசைக்கும் சொற்பொழிவுக்கும் அறவிடும் காசால் சுவாமிமாரைப் பணத்தில் கொழுக்க வைத்து, தாமும் கொழுப்பதை நாம் எப்போது உணரப் போகிறோம். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மிடையே தான் இத்தகைய புதுப் பண்பாடு ஒன்று தோன்றிப் புரையோடிக்கொண்டிருக்கிறது.

‘அன்பே சிவம்’ என்றும், ‘சித்தத்தில் தித்திக்கும் தேனே’ சிவன் என்றும், சொன்ன சைவசமயம் இதனையா எமக்குக் கற்றுத்தந்தது? அன்னை மடியில் பிறந்து மண்ணின் மடியினுள் போவதற்கு முன்பு நாம் வாழும் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் வேண்டும். நாம் யார்? நமது எண்ணங்கள் யார்? யார்?, எவை? எவை? என்ற சிந்தனையற்று வாழ்தல் தகுமா? நம்மைப்போல் மானுடனாகப் பிறந்த மற்றவர் கால்களில் வீழ்ந்து நாம் வணங்க வேண்டுமா? அன்னை, தந்தை, ஆசிரியன், தெய்வம், இறந்த நம் முன்னோர் யாவரையும் வணங்குவதில் தவறே இல்லை. வேண்டும் மட்டும் எந்நேரமும் இவர்களை வணங்குங்கள். ஆனால் மாற்றார் கால்களில் வீழ்ந்து வணங்காதீர்கள்.

நம் முன்னோர்கள் இறைவனை நீளநினைந்து சுவைத்தவர்கள். அதனாலேயே சுந்தரமூர்த்தி நாயனார் 
“நீளநினைந்து அடியேன் உம்மை நித்தலும் கைதொழுவேன்”
எனத்தேவாரம் பாடினார். 

கடவுளை எப்படி நீளநினைக்க முடியும்? ஓரடியா? ஈரடியா? எந்த நீட்டல் அளவையால் அளந்து நினைப்பது? ஒரு நிமிடமா? இரண்டு நிமிடமா? ஓராண்டா? ஈராண்டா? அல்லது நம் வாழ்நாள் முழுவதுமா? அல்லது நாம் எடுக்கும் பிறவிகள் தோறுமா? என்ற கேள்விகள் எழத்தான் செய்யும். இறைவனை எப்படி நீளநினைப்பது என்பதை மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில்
“…………….. எழுகின்ற ஞாயிறே போன்று 
நின்ற நின்தன்னை நினைப்பற நினைந்தேன்
எனக் காட்டித் தந்துள்ளார். இறைவனின் எண்ணம் எமது சிந்தையில் இருந்து அறுந்து போகாது ஆற்றொழுக்குப் போல் தொடர்ந்து இருக்கவேண்டும். அதுவே நினைப்பற நினைத்தல் அல்லது நிளநினைத்தல் ஆகும். 

அப்படி நினைக்க எல்லோராலும் முடியாது. நாம் நினைக்கத் தொடங்கினால் அந்த நினைவை அது ஊட்டும். அந்நிலை முன்வினைப்பயனால் வருவதில்லை. மனப்பழக்கத்தல் வருவது. இந்த மனப்பழக்கத்தால் முன்னைய வினைகளை நாம் அறுத்து எறியலாம். அதற்கு நம்மை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் அறிந்து கொண்டால் முற்பிறவியில் செய்திருந்த வினையை அவிழ்க்கலாம்.  இனிமேல் வரும் வினையையும் கசக்கிப் பிசைந்து எறியலாம். அதற்கு எம் சிந்தையிலே சிவனை வைத்தால் அவனருளால் அது நடக்கும் என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியிருப்பதை கொஞ்சம் மனதில் இருத்தி சிந்தித்துப் பாருங்கள்.

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முந்தை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையினைப் பிடித்துப் பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருலாலே!”           - (திருமந்திரம்: 2611)

எங்கும் நிறை பரம்பொருள் எம்மிடத்தில் இல்லாமல் இருப்பானா? சிந்திப்போம்! நம்முன்னோர் போல  தமிழராய் தலைநிமிர்ந்து வாழ எமது இளந்தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்போம்.
இனிதே,
தமிழரசி.