Thursday 12 December 2013

குறள் அமுது - (82)

குறள்:
“இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் 
துன்பம் துடைத்தூன்றும் தூண்”                                      - 615

பொருள்:
உலக இன்பங்களை விரும்பாது தான் எடுத்த செயலைச் செய்து முடிக்க விரும்புகின்றவனே தனது சுற்றத்தாரின் துன்பத்தை நீக்கி, தாங்கும் தூணாக நிற்பான்.

விளக்கம்:
தான் செய்ய நினைத்த செயலை செய்துமுடிக்க வேண்டும் என்னும் திடமான எண்ணம் உள்ளவனுக்கு உலக இன்பங்கள் எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை. ஏனெனில் அவனது எண்ணம் முழுவதும் தான் செய்து முடிக்க நினைத்த செயலிலே இருப்பதால் உலக இன்பங்கள் நினைவில் வருவதில்லை. அதிலும் தன்னலம் அற்றவனுக்கு எவ்வகையான இன்பங்களும் பெரிதாகத் தெரியாது. தனது சுற்றத்தாரின் துன்பமே மிகப்பெரிதாகத் தெரியும். 

ஆதலால் அப்படிப்பட்டோர்
“மெய்வருத்தம் பாரார் பசினோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்”
என தாம் செய்யும் செயலிலேயே கண்ணாக இருப்பர்.

தனது சுற்றத்தின், தனது இனத்தின் துன்பத்தை தான் சுமப்பதே அவனுக்கு மிகப்பெரிய இன்பத்தைக் கொடுக்கும். அத்தகையோனின் கொள்கைப்பிடிப்பும், பிறரின் மேல் இருக்கும் பற்றுதலும் அவனது விடாமுயற்சிக்கு தூண்டு கோலாக இருக்கும். செய்து முடிக்க நினைத்த செயலை மனவுறுதியுடன் செய்து முடித்து தான் பிறந்த இனத்தின் துன்பத்தை, வறுமையைப் போக்கி அவர்களின் பாரத்தைத் தாங்கும் தூணாக நின்று இன்பம் காண்பான்.

No comments:

Post a Comment