Saturday 14 December 2013

நினைக்கமனம் எரியுதடா!



அந்நாளில் புங்குடுதீவில் வாழ்ந்த சிறுவனும் சிறுமியும் ஆசையுடன் அன்பைப் பரிமாறி கதை பேசித்திரிந்தனர். பருவவயது அடைந்ததும் அந்த ஆசையும் அன்பும் இருவரது மனநிலையையும் எப்படி மாற்றியது என்பதை இந்த நாட்டுப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. 

சிறுவயதினராக இருந்த பொழுது அவள், அவனுக்கு தன்வீட்டிலிருந்து கட்டுச்சோறும் பச்சையரிசியில் செய்த பலகாரங்களும் கொணர்ந்து கொடுத்து கதைத்து விளையாடுவது வழக்கம். அவர்கள் வளர்ந்து குமரன் குமரியான பின்னர் அவள் அவனுடன் கதைப்பதில்லை. 

ஒரு நாள் அவன் அவளைக் கண்டதும் ‘முன்னர் என்னுடன் இருந்து கதையளந்தாயே! இப்போ திருமணம் செய்வோம் என்றாலும் மறுக்கிறாயே! ஆசையோடு கிட்டவந்தாலும் தடுத்துக்கொண்டு ஓடுகிறாயே!’ என்று சொன்னான். அதற்கு அவள் ‘நீ கட்டுவதோ கதர்வேட்டி, கையில் போட்டிருப்பதோ பெரிய கடகக்காப்பு. அவற்றுக்கும் மேலாக [ஆலடிச் சந்தியில] "தெருவோரம் நின்று, குடத்தில தண்ணி கொண்டுவரும் கன்னிப் பெண்களைப் பார்ப்பதே பொழுது போக்காக வைத்திருக்கிறாய். உன்னையா நான் காதலித்தேன்?, என நினைக்க என் மனம் தீப்பிடித்து எரியுதடா! நான் சின்னவளாய் விளையாடிய காலத்தில் இருந்தவன் போல் உன்னை மாற்றிக்கொள்" என்கிறாள் போல் தெரிகிறது. ஏனெனில் அவன் செய்கைகளால் அவள் நெஞ்சிலும் வேதனை இருப்பதைப் பாடல் சொல்கிறது.

காதலன்:  கட்டுச்சோறு கட்டிவந்து
                           கதையளந்தாய் பலகாலம்
                 கட்டிக்கோ என்னுசொன்னா
                           வெட்டிக்கிட்டு போறியே!

காதலன்: பச்சரிசி பலகாரம்
                          பகிர்ந்துதந்தாய் பலகாலம்
                இச்சையோடு கிட்டவந்தா
                           இடரிக்கிட்டு ஓடிறியே!

காதலி: கட்டுறதோ கதர்வேட்டி
                         கையிலோ  பெருங்கடகம்
             நிக்கிறதோ தெருவோரம்
                         நினைக்கமனம் எரியுதடா!
                                                                                         - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment