Wednesday 28 August 2013

தேம்பிடும் குரலும் கேளாதா!


கூடி விளையாடு பாப்பா ஒரு
         குழந்தையை வையாதே பாப்பா
பாடிய பாரதி பாடலைக் கேட்டு
          பரவசமான குழந்தைகள் நாம்
நாடி எம்மைப் பிடித்து வந்தார்
          நாரிமுறிய வேலை தந்தார்
ஓடி வேலை செய் என்றார்
          ஓங்கிப் பிரம்பு காட்டுகிறார்

தேடி வேலை செய்திலோம்
          தேவை என்ன அறிந்திலோம்
ஓடியோடி உழைக்கிறோம்
          ஓய்தலின்றி சுழல்கிறோம் 
கூடி விளையாடிலோம்
          குடி நீரும் அருந்திலோம்
வாடி மெல்ல இருந்திலோம்
          வயிறார உண்டிலோம்

பாடித் திரியும் பாலகரை
          பற்றிப் பிடித்து வதைத்து 
தேடிய செல்வம் தேயாதா!
          தேம்பிடும் குரலும் கேளாதா!
வாடிய பயிரின் மழையாக
          வாழச்செய்வோம் பாலகரை
பேடி உலக மாந்தரே
          பேறு என்ன பெற்றீரோ!
 இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment