Monday 26 August 2013

குறள் அமுது - (74)


குறள்:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்                                                 - 826

பொருள்:
 நண்பரைப் போல் நல்லவற்றைச் சொன்னாலும் பகைவரின் சொற்கள் விரைவாக அதனை உணர்த்தும் 

விளக்கம்:
ஒருவருடன் நட்புக்கொள்ளுதல் நட்டல் என்று கூறப்படும். அதாவது உண்மையான இனிய அன்பை உங்கள் மனதில் நட்டவர் எவரோ அவரே நட்டார் ஆவர். நட்டாரை இன்று நாம் நண்பர் என்கிறோம். ஒருவரோடு ஒருவர் சேர்தல் ஒட்டுதலாகும். அப்படிச் சேராதார் ஒட்டார் ஆவர். நம் பகைவரே ஒட்டார்.

எமக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் நம் வாழ்வில் குறுக்கிட்டு நண்பர் போலப் பழகி நன்மைகளைச் செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் எம்முடன் உண்மையான நட்புடன் பழகுகிறாரா? அன்றேல் எமக்கு தீங்கு செய்யப்பழகுகிறாரா என்பதை எப்படி நாம் அறிந்து கொள்வது? அதற்கான விடையை இக்குறள் கூறுகிறது.

எப்படித்தான் ஒருவர் நன்றாகச் சிரித்து இனிக்க இனிக்கப் பழகினாலும், மனதால் ஒட்டி உறவாடாது, வஞ்சகராக இருப்பதை அவர்களது சொற்களே மிக விரைவாக எமக்குக் காட்டித்தரும். அதாவது எம்முடன் பழகும் ஒருவர் உண்மையான நண்பரா பகைவரா என்பதை அவரது சொற்களைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள் என இக்குறள் கூறுகிறது.


No comments:

Post a Comment