Sunday 18 August 2013

ஆசைக்கவிதைகள் - 72

துடிக்குதடி என்மனசு! 

பொலநறுவையில் வாழ்ந்த காதலன் ஒருவன், திருமணத்தின் பின் காதலியுடன் மகிழ்ந்து வசதியாக வாழ்வதற்காக பொருள்தேட இன்னொரு நாட்டிற்குச் சென்றான். அவன் வருவதாகச் சொன்ன நாளும் வந்தது. ஆனால் அவன் வரவில்லை. அவனது வரவை நாளும் நாளும் எதிர்பார்த்திருந்த காதலி, தனது மனத்துடிப்பைத் தோழிக்குச் சொல்கிறாள்.

காதலி :  பவிசாகவாழ பணம்தேடி
                        போன மச்சான்
              திரும்பிவரக் காணாமல் 
                        துடிக்குதடி என்மனசு 
                                         -  நாட்டுப்பாடல் (பொலநறுவை)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இந்தப் பொலநறுவைக் காதலன் போல சங்ககாலத்தில் மலைநாட்டில் வாழ்ந்த ஒரு காதலன் திருமணத்தின் பின்னர் காதலியுடன் இன்பமாக வாழ்வதற்காக பொருள் தேடி வேறு நாட்டிற்குச் சென்றான். அவனும் சொன்ன நாளில் திரும்பி வரவில்லை. அவளுக்கு ஆறுதல் கூறவந்த தோழிக்குக் காதலி சொல்கிறாள்.

“குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் தோழி! உண்கண்
நீரொடு ஒராங்கு தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே”          - (குறுந்: 38: 3 - 6)

“தோழியே! நீ வாழ்வாயாக! மைதீட்டிய கண்கள் கண்ணீரைச் சொரிய ஒரேயடியாகக் காதலன் பிரிந்து சென்றாலும் அதைப்பற்றி நினைத்துக் கவலைப் படாமல் பொறுத்திருக்க வல்லவர்க்கு, மலை நாட்டானுடைய காதல் என்றும் மிகநல்லதே” என்கிறாள்.

No comments:

Post a Comment