Friday 26 July 2013

ஓலைபின்னும் வேலைகிடைப்பதும் அரிது

சுந்தரகவிராயர் என்ற புலவரிடம் அறிவுச்செல்வம் கொட்டிக்கிடந்தது. ஆனால் பொருட்செல்வமோ தட்டுத்தடுமாறியது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளுக்காக இடையிடையே இடர்ப்பட்டார். அப்போது வறுமை கொடுத்த அநுபவத்தை புலமையால் கவிதையாக வடித்தார். வறுமை அவரோடு அழிந்தது. அவரது புலமையோ இன்றும் அவர் பெயர்சொல்லி நிலைத்து நிற்கிறது.

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால் அவன் அநுபவிப்பதற்கு எவையெல்லாம் அரிதாகும் என்பதை பாடலில் பாருங்கள். இப்பாடலில் அரிதாம் என்ற சொல்லை ஐந்து இடத்திலும் அரிதாகும் என்ற சொல்லை ஓரிடத்திலும் வைத்து பாடலைப் புனைந்துள்ளார்.

“அன்னம்உணற்கு அரிதாம் ஆமாறுமூன்றும் அரிதாம்
பன்னம் அரிதாம் பகலின்கண் - துன்நிசியில்
நேயம் அரிதாகும் நித்திரைக்கும் பாய்அரிதாம்
காயக்கு அரிதாம் கலை”

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால், உண்ணும் சோறு அரிதாய்ப் போய்விடும். கல்வியறிவைப் பெறத் தேவையான கேள்விகேட்டல், விமர்சித்தல், எண்ணிப்பார்த்தல் ஆகிய சித்தியடையும் வழிகள்  மூன்றும் அரிதாய்ப் போகும். பகலில் ஓலைபின்னும் வேலை கிடைத்தலும் அரிதாகும். நடுஇரவில்  காதல் மனையாளின் அன்பு  கிடைப்பதும் அரிதாய்விடும். படுத்துத்தூங்க பாய் கிடைப்பதும் அருமையாகும். இவை மட்டுமல்ல உடலை  மறைக்க ஆடை கிடைப்பதும் அரிதே என்கிறார். இது அவரது அநுபவ உண்மை.

சொல்விளக்கம்:
1. அன்னம் - சோறு
2. ஆமாறு - சித்தியடையும் வழி
3. பன்னம் - ஓலைபின்னும் வேலை
4. துன்நிசி - நடுஇரவு
5. நேயம் - அன்பு
6. காயம் - உடல்
7. கலை - ஆடை

No comments:

Post a Comment