Wednesday 24 July 2013

நாளை உலகின் நட்சத்திரம்














நாளை உலகின் நட்சத்திரம்
          நானென நினைத்த தாயவளும்
வேளை தவறா துணவூட்ட
          வெந்து மடிந்தாள் தீயிடையே
நாளை உணவு யார்தருவார்
          நாலு சோதரர் எனைப்பார்க்க
ஆளை ஆளைப் பார்த்திருந்து
          ஆற்றா தெழுந்தேன் தொழில்தேடி
வேலை தந்தார் தீக்குச்சி
          வேண்டிய மட்டும் எண்ணுதற்கு
காலை எழுந்ததும் படிப்பென்றால்
          கால்வயிறு கஞ்சி யார்தருவார்?
வைத்ததோர் கல்வி பயிலாதே
          வாழ்க்கையின் பாடம் கற்றிட்டேன்
கைத்தொழில் ஒன்றைக் கற்று
          கவலைகள் இன்றி வாழ்கின்றேன்
நாளைய உலகின் நட்சத்திரம்
          நானென தெண்ணம் மாறவில்லை
கோழை உலகே உந்தனுக்கு
           குழந்தைகள் நாமென்ன கேடுசெய்தோம்?          
                                                              - சிட்டு எழுதும் சீட்டு 69

No comments:

Post a Comment