Tuesday 2 July 2013

குறள் அமுது - (69)

குறள்:
“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு”                                        - 281

பொருள்:
பிறரால் இகழப்படாமல் வாழவேண்டும் என்று நினைப்பவன், மற்றவர்களுடைய எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுக்க நினையாது தன் நெஞ்சைப்  பாதுகாக்கவேண்டும்.

விளக்கம்:
ஒருவரை வஞ்சித்து அவரிடம் உள்ள பொருளை எடுத்தல் கள்ளம் ஆகும். மற்றோர் அறியாது பிறர் பொருளை எடுத்தலும் கள்ளமே. அப்படி களவு எடுக்காது இருத்தல் கள்ளாமை என்று கூறப்படும். பிறர் வாழவேண்டும் எனும் நல்ல எண்ணம் உடையவர்கள் பிறருடைய பொருளை வஞ்சித்து எடுக்க நினைக்கலாமா? எமது எண்ணங்களே பல கேடுகளுக்குக் காரணமாய் இருக்கின்றன. 

'மனமது சுத்தமானால் மந்திரம் செய்யத்தேவை இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. சுத்தமான மனதில் பிறரை வஞ்சித்தல் என்னும் கள்ளம் தோன்றாது. எனவே, உங்கள்  மனதை சுத்தமாக வைத்திருங்கள் என்ற கருத்தில் கள்ளாமை காக்க தன் நெஞ்சு என்றார். 

இகழ்ந்து பேசுதல் எள்ளுதல் என்று சொல்லப்படும். ‘இவன் களவன்’ என்று பிறர் இழிவாக இகழ்ந்து பேசாது இருக்க வேண்டும் என நினைப்பவனே எள்ளாமை வேண்டுபவன் ஆவான். எனைத்து ஒன்றும் என்பதை நாம் எதையும், எதனையும் என்று கூறுகிறோம். எதனையும் களவெடுக்க வேண்டும் என நினையாது இதிருந்தால் களவெடுக்க முடியாது. பிறர் பொருளை எடுக்க நினைக்கும் போதே, அப்பொருளை மற்றவர் அறியாது எப்படி எடுப்பது? எப்போது எடுப்பது? என்ற திட்டங்களை மனம் தீட்டுகிறது.

ஆதலால் பிறர் தன்னை பழித்துப் பேசக்கூடாது என விரும்புகிறவன், மற்றவர்களுடைய பொருட்கள் எதனையும் கள்ளத்தனமாக எடுக்க நினையாமல் தனது மனதை கட்டுப்படுத்திக் காத்துக்கொள்ள வேண்டுமென திருவள்ளுவர் இக்குறள் மூலம் எமக்குச் சொல்கிறார்.

No comments:

Post a Comment