Monday 8 July 2013

எல்லையில்லாப் பெருவளங்கள்!

கலநீடு மனை
ஒரு நாடு வளமுள்ளதாக இருக்கவேண்டுமானால் அந்த நாட்டில் இயற்கை வளம் கொட்டிக்கிடக்க வேண்டும். இயற்கை வளம் நிறைந்த நாட்டிலுள்ள ஊர்கள் வளமுள்ளதாக இருக்கும். ஊர்கள் வளமுள்ளதாக இருந்தால் அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வளம் கொழிக்கும். அத்தகைய கரை காண முடியாத பெருவளங்கள் உள்ள ஒரு நாட்டைச் சேக்கிழார் நாயனார் பெரிய புராணத்தில்  திருநாவுக்கரசர் வரலாற்றைக் கூறும் இடத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். 

அது நீர்வளம் நிறைந்த நாடு.  ஆதலால் அந்த நாட்டின் ஊர்களில் இருந்த வயல்களிலே நீலோற்பலம் என்று சொல்லப்படும் கருங்குளை மலர்கள் பூத்திருக்கும். நீலோற்பல மலர்களின் நீலநிறத்தை அங்குள்ள வயல்கள் காட்டும்.  இரவுநேர இருளின் நீலத்தை கருநீலநிற வானித்தில் இருக்கும் நிலவு காட்டும். அங்கு வாழும் மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கத்தைக் காட்டும் தெருக்கள், அழகான ஊஞ்சல்களையும் காட்டும். பொழுது புலரும் போதிருக்கும் நீலநிறத்தை விலகிச் செல்லும் இருள் காட்டும். உழவுக்குச் செல்லும் உழவர்களின் ஒலி சூரியன் உதிப்பதைக் காட்டும். ஒற்றுமையின் உயர்வை அவ்வூரிலுள்ள மனைகள் காட்டும். 

மலர்நீலம்

“மலர்நீலம் வயல்காட்டும் மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும் அணியூசல் பலகாட்டும்
புலர்நீலம் இருள்காட்டும் பொழுதுழவர் ஒலிகாட்டும்
கலநீடு மனைகாட்டும் கரைகாட்டாப் பெருவளங்கள்    
                                      - (திருநாவுக்கரசர் புராணம்: 14)
அந்த நாட்டில் எல்லையில்லாப் பெருவளங்கள் நிறைந்துள்ளது என்பதைச் சேக்கிழாரும் கரைகாட்டாப் பெருவளங்கள் எனக்கூறி மகிழ்கிறார். [கடலின் எல்லை கடற்கரை. ஆற்றின் எல்லை ஆற்றங்கரை. எனவே கரை என்பது எல்லையைக் குறிக்கும்.]

சொல் விளக்கம்:
மலர்நீலம் - நீலோற்பல மலரின் நீலநிறம்
மைஞ்ஞீலம் - மைபோன்ற கருநீலநிறம்
அலர்நீடு - மகிழ்ச்சிப் பெருக்கம்
மறு - தெரு
அணியூசல் - அழகிய ஊஞ்சல்
புலர்நீலம் - பொழுது புலரும் நீலநிறம்
பொழுது - அதிகாலைப் பொழுது
கலநீடு - ஒற்றுமையின் உயர்வு [கல - கலத்தல்]
மனை - வீடு 
கரைகாட்டா - கரையில்லா/ எல்லையில்லா

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment