Sunday 7 July 2013

பக்திச்சிமிழ் - 59

உறுபொருள் காண்கிலீர்
- சாலினி -

கடவுள் என்னும் உண்மை பல வேளைகளில் கேள்விக்குறி ஆகிறது. அதற்குக் காரணம் நாம் கடவுளின் உண்மையை உணராமையே ஆகும். அன்பு என்று சொல்லப்படுகின்ற உணர்வு ஒருவரிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உணர்ந்து அறியலாமே அல்லாமல் இட்டும், தொட்டும் காட்டமுடியாது. அது போன்றதே கடவுளின் உண்மையும்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் 
அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே                 - (திருமந்திரம்: 270)

அதனாலேயே திமூலரும் அன்பை வேறாகவும் சிவனை வேறாகவும் பிரித்துச் சொல்வோரை அன்றேல் பிரித்துப் பார்ப்போரை அறிவில்லாத மூடர் என்றார். ஏனெனில் உண்மையான பரிவு, பாசம், பற்று, அன்பு போன்றவற்றை யாரும் காசு கொடுத்து வாங்க முடியாது. 

அன்பு உலக உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. அது தானாகச் சுரப்பது. அதற்கு அளவுகோல் கிடையாது. ஒன்றை எதிர்பார்த்தே, அன்பு செலுத்தப்படுவதாக சிலர் நினைக்கலாம். இந்தப்பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ இடத்தில் தத்தமக்கு அறிமுகமில்லாத உயிர்களுக்கு  வேறு உயிர்கள் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவை எதை எதிர்பார்த்து உதவுகின்றன? நெஞ்சில் உண்மையான அன்பென்னும் ஈரம் இருக்கும் எந்த உயிரும் எதையும் எதிர்பார்த்து அன்பு செலுத்தாது.

மலரில் எப்படி நறுமணம் வீசுமோ அதுபோல் எமது உயிரினில் சிவம் எனும் அன்புமணம் வீசும். அதை நாம் உணர்ந்து அறியவேண்டும்.

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது                  - (திருமந்திரம்: 1459)

அந்த சிவமணத்தை உணர்ந்து அறியாமல் நான் கோயிலில் சுவாமிக்கு தேரிழுத்தேன். ஆதலால் நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன். கோயில் கட்டினேன். திருவிழாச்செய்தேன். அந்த சுவாமியார் என்வீட்டில் நின்றார். நான் புனிதம் அடைந்தேன், என்று சொல்வதெல்லோம் உண்மைப் பொருளை அறியாதார் செய்யும் செயல் என்று திருமூலர் சொல்கிறார். 

“உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே”                  (திருமந்திரம்: 2622)

ஆதலால் எமது சிந்தையில் சிவனை இருத்தி, மனத்திலுள்ள இருளை நீக்கினால் அதுவே எமது பிறவிப்பிணியைப் போகும் மூலகாரணமாய் விளங்கும். [வித்து - காரணம்]

No comments:

Post a Comment