Sunday 9 June 2013

குறள் அமுது - (67)


குறள்:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பவர் கள்ளுண்பவர்                                      - 926

பொருள்:
தூங்குபவரும் இறந்தவரும் வேறுவேறானவர் அல்லர். எப்பொழுதும் கள்ளுண்பவர் நஞ்சு உண்பவரே ஆவார்.  

விளக்கம்:
திருவள்ளுவர்,  இறப்பும் பிறப்பும் எப்படிப்பட்டது என்பதைக் காட்டி உலகவாழ்வின் நிலையாமையைச் சொல்லுமிடதில் நித்திரை கொள்வது போன்றது இறப்பு, நித்திரையில் இருந்து விழிப்பது போன்றது பிறப்பு (குறள்: 339) என்றார். அதுபோலவே இக்குறளிலும் தூக்கத்தை இறப்புக்கு சமமாகவே காட்டுகிறார். படுத்து உறங்குவோர் சுவாசித்தபடி உயிரோடு இருப்பினும், அவரது சிந்தனை செயலிழந்து, அறிவுத் தொழிற்பாடு இன்றி பார்ப்பதற்கு செத்தவரைப் போன்றே தோன்றுவர். ஆதலால் உறங்குபவர்க்கும் செத்தவர்க்கும் வேறுபாடு தெரிவதில்லை. 

கள் என்றால் மது. எனவே எல்லாவகையான மதுவகைகளும் கள் எனும் சொல் குறிப்பதாகாக் கொள்ளலாம். மதுபானம் அருந்துபவரே கள்ளுண்பவர். மதுவைக் குடிப்போர் இறந்து போகாது இருப்பினும் மது மயக்கத்தால் தமது அறிவையும், உடல் நலனையும் இழப்பதால் ஒவ்வொரு நாளும் நஞ்சு உண்பவரை போல் இருக்கின்றனர்.

உறங்குபவர் மூச்சை இழுத்து விடாது இருந்தால் செத்தவர் போலவே இருப்பார். வேறு வேறுபாடு உறங்குபவர்க்கும் இறந்தவருக்கும் இருப்பதில்லை.  நஞ்சு குடித்ததும் குடித்தவருக்கு மயக்கத்தை தந்து உடலைக் கெடுத்து உயிரை எடுக்கிறது. நஞ்சு செய்வதைப் போல மதுவும் மயக்கத்தைத் தந்து மெல்ல மெல்ல உயிரை எடுக்கிறது. ஆதலால் நஞ்சு உண்பதற்கும் கள் உண்பதற்கும் வித்தியாசம் இல்லை.

பெரும்பாலான நஞ்சு குடித்த உடன் உயிரை எடுக்கும். கள் என்னும் நஞ்சோ எஞ்ஞான்றும் உயிரை எடுத்துக் கொண்டே இருக்கும். எனவே மது அருந்துவோர் நஞ்சை அருந்துகிறோம் என்பதை நினைவில் வைத்திருத்தல் நன்று. நஞ்சைக் குடிப்பதும் மதுவைக் குடிப்பதும் ஒன்று எனச்சொல்லும் குறள் இது.

No comments:

Post a Comment