Friday 14 June 2013

பக்திச்சிமிழ் - 57


இன்றுநன்று நாளைநன்று
- சாலினி -

இந்த உலகில் பிறந்த உயிர்கள் யாவும் இன்பமாக வாழ்வதற்கே முயல்கின்றன. அந்த முயற்சி எல்லா உயிர்களுக்கும் ஒன்றே. ஆனால் அவை யாவும் தாம் தாம் முயலும் தன்மையில் வேறுபடுகின்றன. இந்த முயற்சியில் மற்றைய உலக உயிர்களை வென்று வீறுநடை போடுபவன் மனிதனே. எனினும் மனிதர் எல்லோரும் இன்பமாக வாழ்கிறார்களா? இல்லையே? அது ஏன்? சிலருக்கு இன்பமாகத் தெரிவது பலருக்கு துன்பத்தைக் கொடுக்கலாம். அவரவரின் மன ஆற்றலுக்கும் இயல்புக்கும் தக்கபடி அவை மாறுபடுகின்றன. அவை எப்போதும் நிலைத்து நிற்பதும் இல்லை.

இன்பம் என்பது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபட்டுக் கொண்டிருக்கும். 
உலக இன்பங்களின் மேல் இருக்கும் ஆசையாலேயே நாம் அல்லல் படுகின்றோம். நேற்று நாம் ஆசைப்பட்டது எமக்குக் கிடைக்கவில்லை என்றால் நாளை கிடைக்கும் என நினைத்திருப்போம். இன்றும் கிடைக்கவில்லை என்றால் நாளை நிச்சயம் கிடைக்கும் என எண்ணுவோம். இப்படி எம் ஆசை நிறைவேறும்வரை இன்று நன்றாக இருக்கும், நாளை நன்றாக இருக்கும் என நினைத்து நினைத்தே நாட்களைக் களிப்போம். இதுவே மனித இயல்பு.

இந்த நேற்று இன்று நாளை மூன்றிலும் எது நிலையானது? எம்மால் பதில் சொல்லமுடியுமா? நேற்று நாம் இன்பமான வாழ்ந்திருந்தாலும் துன்பமான வாழ்ந்திருந்தாலும் சரி அது நிலைத்து நிற்கிறதா? இல்லையே. இன்று இன்பமாகவாழ்கிறேன் என்றாலும் துன்ப வாழ்வில் துடிக்கிறேன் என்றாலும் அது நிலைத்து நிற்குமா? நாளை நிற்குமா? கால ஓட்டத்தால் இன்று நேற்றாக, நாளை இன்றாகும். அவற்றை நாம் உணர்வதில்லை. அதற்குக் காரணம் நாம் ஆசையுடன் இன்பவாழ்க்கையைத் தேடித் தேடி அலைவதேயாகும்.

இன்பவாழ்வை நினைத்து நினைத்து இதுவேண்டும், அதுவேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு என்றாவது ஒரு நாள் எமக்கு இறப்பு வரும், நம் வாழ்க்கை நிலையற்றதே என நினைக்கிறோமா? ஆசைப்பட்டு ஆசைப்பட்டு இலவு காத்த கிளியாக வாழ்வோமே அல்லாமல், எமது வாழ்க்கையின் நிலையாமையை என்றுமே சிந்தித்துப் பார்க்கமாட்டோம். என்றோ ஒரு நாள் எம் உடல் பிடிசாம்பல் ஆவது உறுதி. 

அப்படி எமது வாழ்க்கை அழிந்து ஒழிந்து போக முன் தமது உயிருக்கு உறுதி தரும் செயலைச் செய்ய வேண்டுமெனத் திருஞானசம்பந்தர் கூறுகிறார்.

இன்றுநன்று நாளைநன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையை போகவிட்டு போதுமின்
மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிக்காவு சேர்மினே!
                                             - (ப.திருமுறை: 2: 99: 1)

எமது பொன்றுகின்ற [அழிகின்ற] வாழ்க்கையில் இன்று நல்லாதா? நாளை நல்லதா? என்று நல்லது? நாமே முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment