Friday 4 November 2011

சங்கத்தமிழ் சொல்வதென்ன? - பகுதி 2


பண்டைய தமிழரிடையேயும் உயிரியல் ஆய்வாளர் பலர் இருந்த உண்மையை தொல்காப்பியச் சூத்திரங்கள் எமக்கு உணர்த்துகின்றன. தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பே தமிழராய் பிறந்து வாழ்ந்த அந்த உயிரியலாய்வாளர்கள்  உயிர்களின் வளர்நிலையை அதாவது கூர்ப்பை எவ்வாறு ஒழுங்குபடுத்தினர் என்பதைப் பார்ப்போம்.

"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"   
                                                         - (தொல்: பொருள்: 571)

இது இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முந்திய தமிழ்  உயிரியலாய்வாளர்களின் கண்டுபிடிப்பாகும். மனிதர்களாகிய எமக்கு ஆறறிவு இருக்கிறது என்றும் ஆறாவது அறிவே பகுத்தறிவு என்றும் கூறுகிறோம் அல்லவா? ஆறாவது அறிவு பகுத்தறிவானால் மிகுதி ஐந்தறிவும் என்னென்ன? எத்தனை ஆசிரியர்கள் அதற்கு விளக்கம் தந்தார்கள்? நம்மில் எத்தனை பேர் அதனைச் சிந்தித்தோம்? தமிழர் அறிவை அடிப்படையாக வைத்தே உயிர்களின் கூர்ப்பை ஆராய்ந்துள்ளனர்.  

உலகில் வாழும் உயிர்கள் படிப்படியாக ஒவ்வொரு அறிவாக வளர்நிலை அடைந்து சிறப்பு எய்தியதை, பண்டைத் தமிழ் உயிரியலாய்வாளர்கள் ஆறு வகை அறிவுள்ள உயிர்களாக நெறிப்படுத்தினர்.

"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே" ஓர் அறிவென்பது உடலால் தொட்டு அறியும் அறிவு. தாவரம் சூரியஒளியை நாடி வளர்வதும், கொடிபடர்வதும், வேர்கள் நிலத்துள் விரவிச்செல்வதும், தாவரம் நிலத்துடன் நிலைத்து நிற்பதும் தொடும் அறிவாலேயேயாகும். தொட்டு அறிவதே முதலாவது அறிவாகும். புல், செடி, கொடி, மரம் போன்றவை ஓர் அறிவு உடையவை. 

"இரண்டறிவதுவே அதனொடு நாவே" இரண்டு அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும் அறிவது. நாவால் சுவையை அறிவதே இரண்டாவது அறிவாகும். சங்கு, சிப்பி போன்றன ஈரறிவுடையன. 

"மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே" மூன்று அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும் அறிவது. மணத்தை மூக்கால் முகர்ந்து அறிவதே மூன்றாவது அறிவாகும். கறையான், எறும்பு போன்றன மூன்றறிவு உடையன. 

"நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே" நான்கு அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், கண்ணால் கண்டும் அறிவது. கண்ணால் காண்பதை தெரிந்து கொள்வதே நான்காவது அறிவாகும். நண்டு, தும்பி போன்றன நாலறிவுடையன. 

"ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே" ஐந்து அறிவென்பது உடலால் தொட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், கண்ணால் கண்டும், செவியால் கேட்டும் அறிவது. செவியால் கேட்பதை விளங்கிக் கொள்வதே ஐந்தாவது அறிவாகும். விலங்கு, பறவை போன்றன ஐந்தறிவுடையன. 

"ஆறறிவதுவே அவற்றொடு மனனே" ஆறு அறிவென்பது மேலே சொன்ன ஐவகை அறிவுடன் மனதால் நினைத்தும் அறிவது. மனத்தில் எழும் எண்ணங்களைப் புரிந்து கொள்வது அல்லது நல்லது எது கெட்டது எது நல்லது என்பதைப் பகுத்து அறிந்து கொள்வது ஆறாவது அறிவாகும். மனிதரே ஆறறிவு உடையோர். ஆறறிவுடைய விலங்கும் இருப்பதாகக் கூறுவர். 

"நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" உயிர்களை நேரடியாக ஆராய்ந்து அறிந்தோரே அப்படி ஆறுவகையாக ஒழுங்குபடுத்தினர்.

படிப்பவர் யாவரும் புரிந்து கொள்ளுமாறு 'உயிர்களின் பகுப்பும் சிறப்பு மரபும்' என்ற தலைப்பில் தொல்காப்பியர் கூர்ப்பைக் குறிப்பிடுகிறார்.  இந்த உதாரணங்களை தொல்காப்பியம் விரிவாகத் தருகிறது. அவற்றை தொல்காப்பியத்தில் படித்து அறிந்து கொள்ளுங்கள். மேலே தொல்காப்பியர் குறிப்பிட்டது அறிவியல் அல்லவா? இது என்ன காட்டுமிராண்டிக் கூட்டத்தின் மதுபோதைப் பிதற்றலா? இவ்வளவு நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் சொன்ன தொல்காப்பியர் பட்டிக்காட்டுப் புலவரா? எதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

விஞ்ஞானக் கருத்துக்களை மட்டுமல்ல இன்றைய உலகசூழலில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும் சங்க இலக்கியம் எமக்குக் காட்டுகிறது. உலகின் எந்த மூலையிலும் போரும் புரட்சியும் பிடுங்கலும் இருக்கும்வரை மனிதன் மனிதனாக வாழமுடியாது. போரால் ஏற்பட்ட பேரழிவுகளைக் கண்ட சங்ககாலப் புலவர்கள், போர்கள் உண்டாகக் காரணம் என்ன? எப்படி அவற்றைத் தடுப்பது? போர்கள் இல்லாது ஒழிய யார் யார் திருந்த வேண்டும்? என்றெல்லாம் சிந்தனை செய்திருக்கிறார்கள். போர்கள் உண்டாக எவரெவர் காரணமோ அவர்கட்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்கள்.

அவ்வறிவுரைகள் எக்காலத்திற்கும் எவ்விடத்துக்கும் பொருந்தக் கூடியவையே. 'உண்ணும் உணவும் பருகும் நீரும் உயிரை வாழ்விக்கின்றது என நினைப்பது தவறு.' இந்தத் தத்துவத்தை மோசிகீரனார் என்ற சங்ககாலப் புலவரே சொன்னார். அவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனால் கவரி வீசப்பட்ட பெருமையும் அடைந்தவர். உலக உயிர்கள் அனைத்தும் இன்பமாக உயிர்வாழ மோசிகீரனார் கூறிய அறிவுரையைப் பாருங்கள்.

'உண்ணும் உணவும் உயிரை வாழ்விப்பதில்லை. பருகும் நீரும் உயிரை வாழ்விப்பதில்லை. உலகத் தொழிற்பாடு நாட்டின் ஆட்சியாளர்களால் நடைபெறுகிறது. அதனால் ஆயுதப்படைபலம் கொண்ட ஒவ்வொரு நாட்டு ஆட்சியாளரும் தாமே அந்தந்த நாட்டின் உயிர் என்பதை அறிந்து கொள்ளவேண்டும். அதனை உணர்ந்து நடப்பது ஆட்சியாளர் கடமை என்கிறார்.
"நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே
மன்னன் உயிர்த்ததே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது  அறிகை
வேன்மிகு தானை வேந்தற்கு கடனே"          
                                                         - (புறம்: 186)
மோசிகீரனாரின் இந்தப் பாடல் கொடுந்தமிழா? நெல்லும் உயிரரை வாழ்விப்பதில்லை, நீரும் உயிரைக் காப்பதில்லை. ஈழத்தில் நடந்த போரின் போது வன்னி நிலப்பரப்பில் காவு எடுக்கப்பட்ட உயிர்களை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். அந்த வன்னி நிலத்தில் நெல்லுக்கும் நீருக்கும் எப்போதாவது பஞ்சம் இருந்ததா? நெல்லும் நீரும் உயிரை வாழ்விக்கும் என்றால் அங்கு வாழ்ந்த உயிரெல்லாம் நிலைத்து   வாழ்ந்திருக்குமே! ஏன் அவ்வுயிர்கள் அழிந்தன? நம் நாட்டின் ஆட்சியாளர் தன் உயிரெனெ நாட்டை எண்ணவில்லை. உலகெங்கும் நடந்த நடக்கும் போர்களில் எல்லாம் இவ்வுண்மையை நாம் கண்டறியலாம்.

மோசிகீரனார் மனிதநேயத்தைக் கருத்தில் கொண்டு மனிதவுயிர்களை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. அதற்கும் மேலே சென்று புல், பூண்டு, செடி, கொடி, மரம், புழு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதன் என இவ்வுலக உவுயிர்களையும் உயிர்கள் அல்லாதவற்றையும் 'மலர்தலை உலகம்' என்ற சொல்லால் சுட்டுகிறார். என்னே, அவரது உலகநேயம்!

உங்கள் கால்களில் நெருஞ்சி முள் குத்தி இருக்கிறதா?

நெருஞ்சி நிலத்துடன் படர்ந்து வளர்வது. அதன் பூ எவ்வளவு சிறியது என்பது அதனைப் பார்த்தவர்கட்குத் தெரியும். சூரியன் வரவு பார்த்து தாமரை மலரும். அது உலகறிந்த விடயம். ஆனால் நெருஞ்சிப்பூவும் சூரியன் வரவு பார்த்திருந்து கிழக்கே மலர்ந்து அது செல்லும் திசையில் சென்று மேற்கே கூம்பும் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? ஒரு தாவரவியல் நிபுணர் போல தாவரவியல் நுட்பத்தை மோசிகீரனார் இன்னொரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
"பாழ்ஊர் நெருஞ்சி பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு" 
                                                       - (புறம்: 155: 4 - 5)
அவருக்கு இயற்கையின் மேலிருந்த ஈடுபாட்டை இப்பாடல் வரிகள் காட்டுகின்றன. அந்த ஈடுபாடே அவரை உலகவுயிர்கள் யாவும் ஒன்றென உணரவைத்துள்ளது போலும். போர்களால் மனிதவுயிர் மட்டுமா அழிகின்றது. இல்லையே. போர்களால் எத்தனையோ அரிய உயிர்கள் காலங்காலமாக அழிந்து ஒழிந்து இருக்கின்றன. மோசிகீரனார் பாழூர் நெருஞ்சி எனச்சொல்வதால் அவ்வூரும் வன்னி போல் போரால் பாழ்பட்ட ஊராக இருக்கலாம்.

மன்னர் ஆட்சியாய் இருந்தால் என்ன? மக்கள் ஆட்சியாய் இருந்தால் என்ன? நாட்டை ஆள்பவரின் செயற்பாட்டிலேயே உலகம் நடைபோடுகிறது. அதனால் ஓர் இனத்தை இன்னோர் இனம் அழிக்க போர் தொடுக்கிறது. உலக அழிவுக்கு அது வழிகோலுகிறது என்பதை உணர்ந்தும் உணராதவர் போல மற்றைய அரசுகள் சிறுபான்மை இனத்தை அழிக்க துணை போகின்றன. எனவே தொழில் நுட்பத்தில் சிறந்த ஆயுதப்படையை வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் தமது உயிரே உலகம் என்பதை அறிந்து நடப்பது கடமையாகும். மோசிகீரனார் ஆட்சியாளர்களைப் பார்த்து "யான் உயிர் என்பது அறிகை!" என அழுத்தி உரத்து கட்டளை இட்டதோடு வேந்தற்கு என்று பன்மையில் சொல்லியிருப்பதையும் பாருங்கள்.

இன்றுள்ள உலக ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இப்பாடல் எட்டுவது எக்காலமோ? ஆட்சியாளர் எல்லோருக்கும் மோசிகீரனாரின் "நெல்லும் உயிர் அன்றே" என்றபாடலை வாழ்த்துமடலாக அனுப்பினால் அதன் உண்மையை உணர்வார்களா? அல்லது இனிமேல் வரும் ஆட்சியாளர்களாவது உறுதிமொழியாக இப்பாடலைக் கூறி பதவியேற்று அதன்படி நடப்பார்களேயானால் உலகம் உய்ய வழிபிறக்கும்.

எனவே இளம்தலைமுறையினரே! நீங்களாவது மோசிகீரனார் கூறியதை நெஞ்சில் பதித்து வாழுங்கள். வருங்கால உலகமாவது இன்பமாக உலகநேயத்துடன் வாழட்டும். சங்கத்தமிழ் சொல்வதென்ன? என்பதை அறியவிரும்புவோர் அதனைப் படித்துப் பாருங்கள். உங்கள் ஆற்றலுக்கு ஏற்ப அறிந்து கொள்வீர்கள்.
இனிதே,
தமிழரசி.
(2009 வைகாசி எழுதியது)

1 comment:

  1. நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete