Monday 14 November 2011

சதிராட போயிட்டாரோ?

ஆசைக்கவிதைகள் 8

பண்டைநாளில் கூத்து என்றும் பின்னர் சதிர் ஆட்டம் என்றும் தாசியாட்டம் என்றும் அழைக்கப்பட்ட ஆட்டத்தையே இன்று நாம் பரதநாட்டியம் என்கிறோம். திருமதி ருக்மணிதேவி அருண்டேல் அவர்களே சதிர் ஆட்டம் என்றும் தாசியாட்டம் என்றும் அழைக்கப்பட்ட ஆட்டத்தை பரதநாட்டியமாக மெருகேற்றினார். காமரசம் மிகுந்திருந்த தாசியாட்டத்தை பக்திச்சுவையும் மிகுந்திருந்த சதிராட்டத்துடன் இணைத்து காமரசத்தைக் குறைத்து பரதநாட்டியமாக்கி பண்டைத்தமிழர் ஆடற்கலையைக் காப்பாற்றினார்.

வவுனியா மாவட்டத்தில் இன்று கலசனூர் என அழைக்கப்படும் பண்டைய கலைஞனூரில் வாழ்ந்த ஆண்கள் அந்நாளில் சதிராட்டம் என அழைக்கப்பட்ட பரதநாட்டியத்தை ஆடினார்கள் என்பதற்கு சான்றாக இருப்பது இந்தக் கலைஞனூர் நாட்டுப்பாடலே.

அந்நாளில் வவுனியாயில் கலைஞர்கள் வாழ்ந்தவூர் ஒன்று  இருந்தது. அது கலைஞனூர் என்று அழைக்கப்பட்டது. அங்கே வாழ்ந்த மங்கை ஒருத்தி தன் மச்சானைக் காதலித்துத் திருமணம் செய்தாள். அவள் அவனைக் காதலித்த போதும், திருமணத்தின் பின்னும் பாடிய நாட்டுப்பாடல்கள் இவை. அவனும் சதிராட்டக் காரணாக இருந்தது அவ்வூர் கலைஞனூர் என அழைக்கப்பட்டதற்கு சான்றாகிறது.


பெண்:  மச்சான் வளர்த்த சாவல்
                      மான்புள்ளி போட்டசாவல்
            தென்னமரச் சோலையில
                      சிறகடித்து கூவுதுபார்.

பெண்:  வான்கோழி குழம்புவச்சா
                      வாரனென்னு போனமச்சான்
             நான்கோழி ஆக்கு முன்னே
                      வந்திருக்கு மாயமென்ன!

பெண்:  சாமக்கோழி கூவயில
                      சத்தியமாய் வாரனென்னு
             சங்கற்பம் செஞ்சமச்சான்
                      சதிராட போயிட்டாரோ! 
                                                              - நாட்டுப்பாடல் (கலைஞனூர், வவுனியா)
                                            (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment