Saturday 12 November 2011

இன்று எனக்கருள வேண்டும்

பக்திச்சிமிழ் [4]
சிறுபிள்ளைகள் தமக்கு ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்றால் பெற்றோரிடம் சென்று அன்றைக்கு அக்காவுக்கு கொடுத்தது போலோ  அல்லது அண்ணாவுக்குக் கொடுத்தது போலவோ தனக்கும் இப்பொழுதே வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்து அழுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி இறைவனிடம் அடம்பிடித்துக் கேட்டு பலவவகையான போகப் பொருட்டளைப் பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்கின்றது அவரது வரலாறு.  

திருநாகைக் காரோணம் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் 'நான் அணிந்து கொள்ள முத்துமாலை துலங்க மாணிக்கமும் வயிரமும் வரிசை வரிசையாகக் கட்டிய மணிவடமும் தந்து உடம்பிற்கு இன்பத்தைதரும் மணங்கமழும் கஸ்தூரி மணக்கும் சந்தனத்திற்கும் ஆளை அனுப்பிவை' என நாற்பத்தி ஆறாவது பதிகத்தின் முதலாவது தேவாரத்தில் கேட்டார். இன்று கஸ்தூரி [வாசனைப் பொருள்] என்று சொன்னால் மட்டுமே தமிழர்களாகிய எம்மால் புரிந்து கொள்ளமுடியும் ஆனால் அன்று கத்தூரி என அழைத்தை இத்தேவாரம் காட்டுகிறது.
"முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
          அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து  பணித்தருள வேண்டும்"    
                                                            - (ப.திருமுறை: 7: 46: 1)

அத்துடன் நிற்காது காம்பு, நேத்திரம் போன்ற பட்டாடைகளுக்கும் (இன்றைய காஞ்சிபுரம், மைசூர் பட்டுவகை போன்றவை) சொல்லியனுப்பும் என்றும் அவற்றையெல்லாம் இறைவனின் களஞ்சிய அறையில் இருந்து எடுத்துத் தனக்குக் கொடுக்கக் கட்டளையிடுமாறும் இரண்டாம் ஐந்தாம் தேவாரங்களில் சொல்கிறார். 
"காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்"  
                                                             - (ப.திருமுறை: 7: 46: 2)       
           "........கந்தமுதல் ஆடைஆபரணம்   
பண்டாரத்தே எனக்குப் பணித்தருள வேண்டும்"      
                                                              - (ப.திருமுறை: 7: 46: 5)



























அப்படியெல்லாம் அதுவேணும் இதுவேணும் என்று கேட்டுப்பார்த்தார் ஏதும் கிடைக்கவில்லை, உடனே   'மலை மங்கையுடன் நீர் ஊடல் கொண்டிருந்த போது எதிர்பாராது  அங்கு வந்த இலங்கை அரசனான இராவணன் மலையை எடுக்க அவனை நெரித்து, அவன் பேரானந்தத்தைத் தரும் சிறந்த இன்னிசையைப்  பாட தேரோடு வாளும் கொடுத்தீர்.  உம்மேல் அன்புள்ள  அப்பரும், சம்பந்தரும் (அடியவர்கள்) பசியால் வருந்தாது உணவருந்த ஒவ்வொரு நாளும் அன்று திருவீழிமிழலையில்   காசு அருளினீர். இன்று எனக்கருள வேண்டும்' எனச் சிறுபிள்ளைபோல் கேட்டதை நீங்களே பாருங்கள்.

"தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
       தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்து
       திப்பிய கீதம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த 
       நிறைமறையோர் உறை வீழிமிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன்று எனக்கருள வேண்டும்
      கடல்நாகைக் காரோணம் மேவியிருந்தீரே" 

இராவணனுக்கு இறைவன் அருள் செய்த தன்மையை எண்ணி சுந்தரமூர்த்தி நாயனார் எவ்வளவு வியந்திருந்தால் இப்படிக் கேட்டிருப்பார். அவர் இத்தேவாரத்தில் இராவணனை அழகும் வீரமும் புகழும் மிக்க (தேசு)  இலங்கையர்கோன் என சொல்வதைப் பாருங்கள். இராவணன் கைலாயமலையைத் தூக்கும் இச்சிற்பம் தாராசுரம் கோயிலில் உள்ளது. 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment