Monday 21 November 2011

குறள் அமுது - (10)


குறள்:
"அறிவற்றங் காக்கும் கருவி செருவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண்"                              
                                                                               - 421
பொருள்:
அறிவு என்பது அழிவுவராது எம்மைக் காக்கும் கருவியாகும். பகைவரும் எம்முள் புகுந்து அழிக்கமுடியாத உள்ளரண் ஆக இதுப்பதும் அறிவே.

விளக்கம்:
நெருப்புச்சுடும் என்பதை மற்றவர் சொல்லிப் புரிந்து கொண்டாலும் அன்றேல் நாமே நம் கையைச்சுட்டு அறிந்து கொண்டாலும் - நெருப்பு சுடும் எனும் அறிவைப் பெறுகிறோம். நன்மை எது? தீமை எது? என அறிதலும் அறிவே.

அற்றம் என்றால் அழிவு. மனிதன் காட்டிலும் குகையிலும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும் வாழ்ந்தவன். அவன் இயற்கையோடு போராடிப் பெற்ற அறிவால், இன்று மாடமாளிகையில் இயற்கையின் பல அழிவுகளிலிருந்து தப்பி வாழ்கிறான். மின்னலைப் பார்த்தோம். இடியைக்கேட்டோம். உடனே மழைவரப் போகிறது என அறிவு எமக்குக் கட்டளை இடுகின்றது. நனையாதிருக்க வழிதேடுவோம். அன்றன்றைய காலநிலைகளை அறிவதால் அதற்கேற்ற உடைகளை அணிந்து எமதுடலை அழிவிலிருந்து காக்கிறோம். இவ்வாறு மனிதன் தன்னை அழிவிலிருந்து காப்பதற்கு, தன் அறிவு எனும் படைக்கலத்தை மூலதனமாக்கியே புதுப்புதுப் பொருட்களை உருவாக்கிக் கொண்டான்.

செரு என்றால் சண்டை. எம்மோடு சண்டை, போர் செய்வோர் செருவார். அதனால் எமது எதிரிகளை செருவார் என்பர். யுத்தவிமானம் குண்டுகளைப் பொழிகின்றது. கட்டிடங்கள் நொருங்கிச் சிதறுகின்றன. கால்கள் பதுங்கு குழிகளை நோக்கி ஓடின. ஏன் கால்கள் பதுங்கு குழிகளை நோக்கி ஒடின? முன்னர் நடந்த யுத்தங்களில் குழிகளில் பதுங்கி இருந்தோர் உயிர் தப்பியதைப் பார்த்த அறிவால் மனிதன் பதுங்கு குழிகளை அமைக்கக் கற்றுக்கொண்டான். அப்பதுங்கு குழிகளில் இருந்தவாறே குண்டு போடும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் கருவிகளை உருவாக்கியதும் அவ்வறிவுத்திறனே.

பகைவர் எமது பொருளை, வீடு வாசல்களை, சொந்த பந்தங்களை, நாட்டை அழித்தாலும் அறிவு என்னும் படைக்கலமே பகைவரிடம் இருந்து தப்பும் வழியை எமக்குக் காட்டித்தரும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எமது அறிவையே படைக்கலமாகப் பயன்படுத்துகிறோம். எம் அறிவு எம்மைக் காக்கும் படைக்கலமாய் இருப்பதால் பகைவர்களால் அழிக்கமுடியாத அரணாக இருந்து எம்மைப் பாதுகாக்கிறது.

No comments:

Post a Comment