Sunday 27 November 2011

செவ்வடிவேளே வருக!

       
                                     பல்லவி
செவ்வடிவேளே வருக சேவடி இன்பம் தருக
எவ்வடிவோடு வரினும் ஏழை எனக்கு அருள்க
                                                                         - செவ்வடிவேளே வருக
                                     அனுபல்லவி
எவ்வனம் போகுமுன்னே என்னெதிர் வந்து நின்று
ஒவ்வனம் யாவும் போக்கி ஒண்தமிழ் இன்பம் அருள்க
                                                                         - செவ்வடிவேளே வருக
                                     சரணம்
கௌவைகள் எல்லாம் தொலைய கணத்தினில் இங்கு வருக
கௌணியர் கோனைப் போல கவித்துவம் எனக்குத் தருக
பவ்வியமாக யானும் பாமாலை புனைந்து சூட பிறவி
பௌவம் தன்னைப் போக்கி பதமலர் சூட்டி அருள்க.
                                                                          - செவ்வடிவேளே வருக
இனிதே,
தமிழரசி.
                                                            

குறிப்பு:
                         சொல்விளக்கம்
1.   சேவடி  -  திருவடி
2.   எவ்வனம்  -  இளமை (எவ்வனம் என்பது வடமொழி சென்று யௌவனம் ஆனது)
3.   ஒவ்வனம்  -  கெட்ட குணம்
4.   ஒண்தமிழ்  -  அழகிய தமிழ்
5.   கௌவைகள்  -  துன்பம்/கலக்கம்
6.   கணம்  -  ஒரு நொடிப் பொழுது
7.   கௌணியர் கோன்  -  திருஞானசம்பந்தர் (மூன்று வயதில் தேவாரம் இயற்றியவர்)
8.   கவித்துவம்  -  கவிதை இயற்றும் திறமை
9.   பவ்வியம்  -  பணிவு
10.  பௌவம்  -  கடல் 

No comments:

Post a Comment