Wednesday 30 November 2011

குறள் அமுது - (11)



குறள்:
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்”                                                 
                                                                      - 214

பொருள்:
ஒப்புரவாளன் தன்னை ஒத்த உயிர்களின் தன்மையை அறிந்து, உலக உயிர்களுக்காக வாழ்வதால் அவன் உயிரோடு வாழ்கின்றான். உலகத்திற்காக வாழாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவருள் ஒருவனாகவே வைக்கப்படுவான்.  

விளக்கம்:
உலகத்திற்காக வாழ்பவன் யார்? வாழாதவன் யார்? என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் என்ற விளக்கத்தை திருவள்ளுவர் ஒப்புரவு அறிதல் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்.  அதில் உலத்திற்காக வாழாதவனை உலகம் எப்படி நினைக்கும் என்பதை இக்குறளில் கூறுகிறார். 

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் ஒருவர்க்கு ஒருவர் சமமானவர். உலகில் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இருப்பதில்லை. அவரவர் பண்புகளாளேயே நாம் மாறுபடுகின்றோம். அதுபோல் அவரவர் செய்யும் தொழிலால் கிடைக்கும் புகழாலும் பெருமையாலும் வேறுபடுகிறோம். 

ஒத்தது எது? எல்லாவகையான தன்மையிலும் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருப்பது எதுவோ அதுவே மற்றதோடு ஒத்ததாக இருக்கும். சிலவேளைகளில் அது நிறத்தில் ஒத்திருந்தாலும் உருவத்தில் ஒத்திருந்தாலும் கூட நாம் அதனை ஒத்தது என்றே சொல்வோம். அதுபோல் மனிதர்களாகிய நாம் எமது உருவத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பெருமையாலும் கலாச்சாரப் பண்புகளாலும் வேறுபடினும் உயிர் என்னும் தன்மையில் ஒருவரோடு ஒருவர் ஒத்தே இருக்கின்றோம். இந்த உயிர் எனும் தன்மை உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் ஒன்றே. உயிர் எனும் தன்மையில் ஒத்து இருப்பதால் தன்னைபோன்ற மற்றைய உயிர்படும் துன்பத்தை பகுத்து அறிந்துகொள்ளக் 
கூடியவனே உயிரோடு வாழ்பவன். 

உயிர் போனபின் இருக்கும் உடல் ஒரு சடப்பொருளே. உயிரற்ற உடலுக்கு அறிவும் அறிவால் வரும் செயல்திறனும் இருப்பதில்லை. அது எதனையும் பகுத்து அறியாது. எனவே உயிர் உள்ளவனே உயிரோடு வாழ்பவன் என்று கூறப்படும் தகுதியுடையவன். தன்னோடு ஒத்த உயிரின் துன்பங்களை அறியமுடியாத பகுத்தறிவற்ற மனிதரை செத்தவராகவே கொள்ளவேண்டும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் முடிவு. அதனாலேயே அத்தகையோரை ‘மற்றையான்’ என விழித்து செத்தாருள் வைக்கப்படுமென்று அஃறினைப் பொருளாகக் காட்டுகிறார்.

தன்னுயிரை ஒத்த உயிர்களின் தன்மையை அறியக்கூடியவர் எவரோ அவரே உயிர்வாழ்பவர். அத்தன்மையை அறியமுடியாதவர் செத்தவராகக் கருதப்படுவர்.

No comments:

Post a Comment