Saturday 14 June 2014

இன்றைய கல்வி

- எழுதியது வாகீசன் -

கல்வியானது உலக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வேண்டிய திறமையை எமக்கு அளிக்க வேண்டும். ஆனால் இன்றோ கல்வியும் கல்வி கற்றவர்களுமே பிரச்சனை ஆகிப் போனார்கள். தமது எதிர்காலத்தை தாமே வகுத்துக்கொள்ளும் சக்தி இன்றி பிறரைச் சார்ந்து வாழ்வதே அவர்கள் விதியாயிற்று. ஓர் உயர்ந்த மனிதநேயத் துடிப்புள்ள சமுதாயம் உருவாக கல்வி பயன்பட வேண்டும்.

மனித வாழ்வுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை ஒதுக்கிவிட்டு வெறும் புத்தகப் புழுக்களாக மாற்றும் இன்றைய கல்விமுறையை விட்டு நாம் விலகிவர வேண்டும். ஓடி விளையாடும் குழந்தைகளின் முதுகில் புத்தகச் சுமையை ஏற்றிப் பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். இந்தக் கல்விமுறையில் யாரும் கல்வி பெறுவதில்லை. ஏதோ பரீட்சையில் தேறி, பட்டம் பெற்று வேலை தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இக்கல்வி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான செயல்முறைக் கல்வியைக் கொண்டிருக்கிறதா? இல்லையே!

நாமும் பரீட்சையில் வெற்றிபெற்று பட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் கேவலமான நிலையில் இருக்கிறோம். இது நோயில் கிடப்பவன் தன் உடல்நிலை மிகநன்றாக உள்ளது என்று டாக்டரிடம் சான்றிதழ் வாங்கிவைத்திருப்பது போல் இருக்கிறது.

இந்த அவலநிலை மாறவேண்டுமானால் நாம் கல்விமுறையை மாற்றி அமைக்கவேண்டும். புதிய கல்விமுறைக்கு நான் பாடத்திட்டங்களைத் தரப்போவதில்லை. மாற்றங்கள் எங்கே வரவேண்டும் என்பதைமட்டும் சொல்கிறேன். உலகசுற்றுச் சூழல், உழவு, நெசவு, பண்ணை போன்றவற்றுக்கு வேண்டிய விஞ்ஞான பொறியியல் நுட்பங்களையும் கற்றுத்தருவதோடு, குழந்தைகளை, நோயுற்றோரை, முதியோர்களை, வறியவர்களை, வீடற்றோரை எப்படி வாழ வைப்பது? மனிதநேயத்தை வளர்க்க நாம் செய்யவேண்டியது என்ன? என்பன போன்ற கல்விமுறை தேவை. நான் சொல்வது என்ன எனில் மனிதனை சிறந்த மனிதனாக்கும் கல்வியே இந்த உலகுக்குத் தேவை.
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
[இது இலண்டனில் பிறந்த 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, 'A' தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனை பயன் படுத்தலாம்]

No comments:

Post a Comment