Friday 20 June 2014

ஆசைக்கவிதைகள் - 91


சொன்ன சொல்லை அளந்தோம் இல்லையே!

பெண் மனம் ஆழம் காணமுடியாத கடல் என்பது ஆண்கள் கண்ட முடிபு. உண்மையில் எந்த ஒரு மனித மனத்தின் ஆழத்தையும் எவராலும் கண்டறிய முடியாது.

மாந்தையில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் ஒரு இளநங்கையைக் காதலித்தான். ஏதோ ஒரு காரணத்தல் அவள், அவனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ஏற்பட்ட மனவேதனையால் விண்ணையளந்து எங்கெங்கே கோள்கள், நட்சத்திரங்கள்  நிற்கின்றன? என்பதையும், கடலையளந்து கடலடி மண்ணில் என்னென்ன இருக்கின்றன என்பதையும் அறிந்து விட்டோம் ஆனால் பெண்ணின் சொல்லை அளக்க முடியவில்லையே எனக் கலங்கிய நாட்டுப்பாடல் இதோ.

காதலன்: விண்ணை அளந்தோம் கடல்
            மண்ணை அளந்தோம்
       பெண் சொன்ன சொல்லை 
            அளந்தோம் இல்லையே
                                       -  நாட்டுப்பாடல் (மாந்தை)
                                                        (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இந்த நாட்டுப்பாடல் சொல்வது போல் ஈழத்தமிழர் விண்ணையும் கடலையும் அளந்தார்களா? என்பதற்கான விடையை எமக்கு திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் இராவணனைக் கூறும் இடத்தில்
"மயங்கு மாயம் வல்லராகி
           வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனா
           இராவணன் தோள் நெரித்த
புயங்கரா மாநடத்தன்..."                    
- (ப.திருமுறை: 1: 53: 7)

என பிறரால் விரும்பப்படும் புதியனவற்றை செய்யும் வல்லமை உடையவராய் வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன் என்கின்றார். 

இராவணனாகியோர் விண்ணையும், கடல் மண்ணையும் அளந்து அறிந்திருந்தால் தானே வானிலும் நீரிலும் இயங்கித் திரிந்திருந்திருக்க முடியும்?

No comments:

Post a Comment