Thursday 19 June 2014

குறள் அமுது - (92)

குறள்:
“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்”                                             - 489

பொருள்:
கிடைத்ததற்கு அரிய காலம் கனிந்து வந்தால் அப்பொழுதே செய்வதற்கு அரிய செயல்களை செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:
இக்குறள் காலம் அறிதல் எனும் அதிகாரத்தில் வருகிறது. எய்தற்கு அரியது என திருவள்ளுவர்  காலத்தையே சுட்டுகிறார். இதில் கிடைத்ததற்கு அரிய [எய்தற்கு அரிய] காலம் என்பது பஞ்சாங்கம் பார்த்து, ராகுகாலம், எமகண்டம்  பார்த்து சோதிடர் கணிக்கும் காலம் அல்ல. இக்குறளின்படி காலம் என்பது தக்கசமயம் என்ற கருத்தையே தருகிறது.

ஒவ்வொரு செயலுக்கும் அததற்கேற்ற காலங்கள் தேவையாக இருக்கிறது. உப்பை மழைக்கால வெய்யிலில் காயவிடமுடியுமா? சூரைக் காற்றிடையேயும் கொட்டும் மழை இடையேயும் நெல்லை அறுவடை செய்ய முடியுமா? எனவே எல்லோராலும் செய்ய முடியாத அரியபெரிய காரியங்களைச் செய்வதற்கு கால நேரம் - தக்கசமயம் வாய்க்க வேண்டும். நம் மனதில் பலகாலமாக எண்ணி, செய்ய முடியாது இருந்த செயலாக இருந்தாலும், தற்செயலாக அறிந்து செய்வதாக இருந்தாலும் செய்தற்கு அரிதான செயலைச்செய்ய, கிடைத்ததற்கு அரிய சந்தர்ப்பம் வாய்க்குமானால் அந்த நேரதைத் தவறவிடாது பயன்படுத்தி, அப்போதே அதனைச் செய்ய வேண்டும். 

பிறரால் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்வதற்கு ஏற்ற தருணம் உங்களுக்குக் கிடைக்குமானால் அக்கணமே அந்தச் செயலைச் செய்து முடித்துக் கொள்ள்ளுங்கள்.

No comments:

Post a Comment