Saturday 27 July 2013

பக்திச்சிமிழ் - 62


வாதில் வென்ற வாதவூரர்
- சாலினி -

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் ஈழம் முழுவதும் புத்தமதம் பரவி, சைவசமயம் அருகிவந்தது. அங்கு வாழ்ந்த சைவசமயத்துறவி ஒருவர் சிதம்பர நடராசரின் பெயரை மந்திரமாகச் சொல்லித் திரிந்தார். அவரின் செயல் புத்தமதத்துறவிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. சைவத்துறவி புத்த மதத்தை மதிக்காது எந்நேரமும் சிதம்பர நடராசரின் பெயரைச் சொல்லித்திரிவதாக அரசனிடம் போய்ச் சொன்னார்கள். இலங்கையை ஆண்ட அந்தச்சிங்கள அரசனும் சைவத்துறவியை அழைத்துக் காரணம் கேட்டான். சிதம்பர நடராசனே முழுமுதற்கடவுள் அவரை அல்லால் பிறரை வணங்க முடியாது என்றார். அரசனும் அதனை எப்படி அறிவது என்று கேட்டான். சிதம்பரம் நடராசர் கோவிலுக்குப் போனால் அறியலாம் என்றார் சைவசமயத்துறவி. 

புத்தமதத் துறவிகளோ அதனை ஏற்கவில்லை. அந்தச் சிங்களஅரசன், பிறவியிலேயே ஊமையாக இருந்த தன்மகளையும், புத்தமதத்துறவிகளையும் அழைத்துக்கொண்டு சிதம்பரம் வந்தான். தில்லைவாழ் அந்தணர்கள், பிறமதத்தவர்கள் சிதம்பர நடராசர் கோயிலினுள் செல்லமுடியாதெனத் தடுத்தனர். புத்தமதத்துறவிகள் தமது மதமே சிறந்தது என சைவசமயத்தோரை வாதத்திற்கு அழைத்தனர். அந்த புத்தமதத்துறவிகளோடு வாதவூரராகிய மாணிக்கவாசகர் எதிர்வாதம் செய்தார். அரசனும், இளவரசியாகிய ஊமைப்பெண்ணும் அவையில் இருந்தனர். மாணிக்கவாசகரின் வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. விண்வாதமே செய்தனர்.

அவர்களின் வீண்வாதத்தைக் கண்ட மாணிக்கவாசகர், புத்தமதத்தோர் தன்னிடம் கேட்ட கேள்விகளை ஊமைப்பெண்ணைப் பார்த்துக் கேட்டார். அவள் பிறவி ஊமையாகவும், புத்தமதத்தவளாக இருந்தும் மாணிக்கவாசகரின் அருட்கனிவால் தமிழ்ப்புலமையும், சைவசமயத் தத்துவ நிறைவும் நிரம்பப் பெற்றாள். அவர் கேட்ட சமயதத்துவக் கேள்விகளுக்கு பதில் கூறினாள். அரசனும் அவையோரும் அதிசயித்தனர். அவள் பேச்சுத்திறமை மட்டும் பெறவில்லை. சிவசிந்தையளாகி, சிவதத்துவ விளக்கத்தை எடுத்தியம்பும் ஆற்றலும் பெற்றாள்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் ‘திருச்சாழல்’ என்னும் பகுதியில் வினா விடையாக வரும் பாடல்கள் அவள் கூறிய தத்துவவிளக்கத்தைச் சொல்லும்.

“பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ”

இந்த வரலாற்றை தாயுமானசுவாமிகள்
“புத்தர்தமை வாதில் வென்ற வாதவூர் ஐயன்”
எனத் திருவார்த்தையில் கூறி, மாணிக்கவாசகரைப் போற்றியுள்ளார்.

ஈழத்தில் அழிந்தொழியும் நிலையில் இருந்த சைவசமயம் அவ்வூமை அரசிளங்குமரியால் புத்துயிருடன் தலைத்தோங்கியது. 

Friday 26 July 2013

ஓலைபின்னும் வேலைகிடைப்பதும் அரிது

சுந்தரகவிராயர் என்ற புலவரிடம் அறிவுச்செல்வம் கொட்டிக்கிடந்தது. ஆனால் பொருட்செல்வமோ தட்டுத்தடுமாறியது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளுக்காக இடையிடையே இடர்ப்பட்டார். அப்போது வறுமை கொடுத்த அநுபவத்தை புலமையால் கவிதையாக வடித்தார். வறுமை அவரோடு அழிந்தது. அவரது புலமையோ இன்றும் அவர் பெயர்சொல்லி நிலைத்து நிற்கிறது.

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால் அவன் அநுபவிப்பதற்கு எவையெல்லாம் அரிதாகும் என்பதை பாடலில் பாருங்கள். இப்பாடலில் அரிதாம் என்ற சொல்லை ஐந்து இடத்திலும் அரிதாகும் என்ற சொல்லை ஓரிடத்திலும் வைத்து பாடலைப் புனைந்துள்ளார்.

“அன்னம்உணற்கு அரிதாம் ஆமாறுமூன்றும் அரிதாம்
பன்னம் அரிதாம் பகலின்கண் - துன்நிசியில்
நேயம் அரிதாகும் நித்திரைக்கும் பாய்அரிதாம்
காயக்கு அரிதாம் கலை”

ஒரு மனிதனுக்கு வறுமை வந்தால், உண்ணும் சோறு அரிதாய்ப் போய்விடும். கல்வியறிவைப் பெறத் தேவையான கேள்விகேட்டல், விமர்சித்தல், எண்ணிப்பார்த்தல் ஆகிய சித்தியடையும் வழிகள்  மூன்றும் அரிதாய்ப் போகும். பகலில் ஓலைபின்னும் வேலை கிடைத்தலும் அரிதாகும். நடுஇரவில்  காதல் மனையாளின் அன்பு  கிடைப்பதும் அரிதாய்விடும். படுத்துத்தூங்க பாய் கிடைப்பதும் அருமையாகும். இவை மட்டுமல்ல உடலை  மறைக்க ஆடை கிடைப்பதும் அரிதே என்கிறார். இது அவரது அநுபவ உண்மை.

சொல்விளக்கம்:
1. அன்னம் - சோறு
2. ஆமாறு - சித்தியடையும் வழி
3. பன்னம் - ஓலைபின்னும் வேலை
4. துன்நிசி - நடுஇரவு
5. நேயம் - அன்பு
6. காயம் - உடல்
7. கலை - ஆடை

Wednesday 24 July 2013

நாளை உலகின் நட்சத்திரம்














நாளை உலகின் நட்சத்திரம்
          நானென நினைத்த தாயவளும்
வேளை தவறா துணவூட்ட
          வெந்து மடிந்தாள் தீயிடையே
நாளை உணவு யார்தருவார்
          நாலு சோதரர் எனைப்பார்க்க
ஆளை ஆளைப் பார்த்திருந்து
          ஆற்றா தெழுந்தேன் தொழில்தேடி
வேலை தந்தார் தீக்குச்சி
          வேண்டிய மட்டும் எண்ணுதற்கு
காலை எழுந்ததும் படிப்பென்றால்
          கால்வயிறு கஞ்சி யார்தருவார்?
வைத்ததோர் கல்வி பயிலாதே
          வாழ்க்கையின் பாடம் கற்றிட்டேன்
கைத்தொழில் ஒன்றைக் கற்று
          கவலைகள் இன்றி வாழ்கின்றேன்
நாளைய உலகின் நட்சத்திரம்
          நானென தெண்ணம் மாறவில்லை
கோழை உலகே உந்தனுக்கு
           குழந்தைகள் நாமென்ன கேடுசெய்தோம்?          
                                                              - சிட்டு எழுதும் சீட்டு 69

Tuesday 23 July 2013

குறள் அமுது - (71)


 குறள்:
"ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது"                                     - 886

பொருள்:
ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாய் வாழ்பவர்களிடையே பகைமை உண்டாகுமானால் எந்த நேரத்திலும் உயிரோடு இருத்தல் அரிதாகும். 

விளக்கம்:
ஒற்றுமை இன்மையை ஒன்றாமை என்று சொல்வர். ஒருவரோடு ஒருவர் ஒன்றி இணைந்து வாழ்வோரே ஒன்றியார். பொன்றுதல் என்றால் இறந்து போதலாகும். பொன்றாமை ஒன்றுதல் உயிர் வாழ்தலாகும். ஒன்றாகச் சேர்ந்து வாழும் கணவன் மனைவி இயிடையே ஆயினும், காதலரிடையே ஆயினும், ஒரே ஊரில் வாழ்வோரிடையே ஆயினும், ஒரே நாட்டில் வாழ்வோர் இடையே ஆயினும் ஒற்றுமையின்மை தோன்றினால் எந்தநேரத்திலும் உயிரோடு வாழ்தல் மிகவும் அரிய காரியமாகும். ஏனெனில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தவர்களிடையே பகைமை தோன்றிவிட்டால் வலியவர் மெலியவரின் உயிரை எடுப்பார் என்பதை அழகாக இக்குறள் எடுத்துச் சொல்கிறது.

இக்கருத்தை தமிழ் இனத்துக்காக திருவள்ளுவர் சொல்லி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் சென்றும் தமிழராகிய நாம் இன்னும் அதனைச் சற்றும் சிந்தித்துப் பார்க்காது இருக்கிறோம். அந்தப் பெருந்தகையின் சொற்களை சிந்தை செய்திருப்போமேயானால் இன்று இந்த உலகிலேயே தலை சிறந்த ஆற்றலும் அறிவும் உடையோராய், எமது தொழில் நுட்பம், கலை, பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்க எமக்கென்று ஒரு நாடு உள்ளவர்களாக வாழ்ந்திருப்போம்.

ஒற்றுமையின்றி வேற்றுமை தோன்றினால் அந்த மனிதமனங்களிடையே பகைமையும், வெறுப்பும், வஞ்சகமும் தலைதூக்கும். நல்ல நிழலைத்தருகின்ற மரமென்று நல்லபாம்புப் புற்று இருக்கும் மரத்தடியில் வீடுகட்டி வாழமுடியுமா? எந்த நேரத்திலும் அந்தப்பாம்பு கடித்து, எமது உயிரை எடுக்கக்கூடும். அது போலவே உட்பகை தோன்றிய வீடென்றாலும், நாடென்றாலும் இருக்கும்.
முப்பது வருடங்களின் முன்

அன்று திருவள்ளுவர் சொன்ன இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக ஈழத் தமிழினத்தின் உயிர்களும் உடைமைகளும் எறிக்கப்பட்டு, பறிக்கப்பட்டு, அநாதைகளாக்கிய செயல் நடந்து இன்றுடன் முப்பது வருடங்கள் ஓடிவிட்டன.  நாம் நம் நெஞ்சமதைக் கனலாக்கி எரித்தாலும், அந்நினைவு எரியாது கனன்று கொண்டே இருக்கிறதே. நம் இளம் சந்ததியினரை விளிப்போடு வாழச் செய்வதற்கு

"ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது" 

என இக்குறளை எடுத்துச் சொல்வோம்.

Sunday 21 July 2013

மானமேது இப்போது!



யாழ்ப்பாணத் தீவக மக்கள் தமக்கென்றொரு அழுத்தமான பண்பாட்டுடன் வாழ்ந்தவர்கள். அவர்களது பண்பாட்டின் நறுமணத்தை நாட்டுப்பாடல்களிலும் நுகரலாம். புங்குடுதீவில் வாழ்ந்த அண்ணனுக்கு ஆண்குழந்தையும் தங்கைக்குப் பெண்குழந்தையும் பிறந்தது. அண்ணனும் தங்கையுமாகச் சேர்ந்து அந்தக் குழந்தைகள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிவந்தனர். அதைக் கேட்டு வளர்ந்த அண்ணனின் மகன் தங்கையின் மகளைச் சிறுவயதிலிருந்து காதலித்தான். அவளுக்கும் அது தெரியும். ஆனால் காலஓட்டம் இருவீட்டாரின் மனநிலையையும் மாற்றியது. இருவீட்டாரும் அவர்கள் திருமணத்தைப் பற்றி பேச்சே எடுப்பதில்லை. 

அவன் பன்னிரெண்டு வருடங்களாக அவளைக் காதலித்துக் களைத்துப் போனான். ஒருநாள் சாயந்தரம்  அவள் வீட்டுக் கன்று தாய்ப்பசுவிடம் பால்குடிக்க, கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. கன்றைத்  தேடிப்பிடித்துக் கட்டி இழுத்து வருவதற்காக, வீட்டின் கொல்லைப் புறம் கயிறு எடுக்க வந்தாள். கால் கொழுசுச் சத்தத்திலிருந்து அவள் வருவதை அறிந்த அவன், அவளைத் தன் கைகளுக்குள் கட்டிக் கொண்டான்.

எதற்காக அவளைக் கட்டி அணைத்தான் என்பதை அறியாதவள் போல் அவள் கேட்கிறாள். அவனது அணைப்புக்குள் இருந்த போதும் ஊரார் அறிந்தால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல் ஒப்பாரி வைத்து அழுவார்கள். இருவரது பெயரும் அதனால் கெட்டுப் போய்விடும் எனத் துடித்தாள்.  ஊரென்ன சொன்னாலும் உறவென்ன சொன்னாலும் அவன் கவலைப்படப் போவதில்லை. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? ஒரு மாமாங்கமாக [பன்னிரண்டு ஆண்டுளாக] அவளைக் காதலித்து பொறுமையைத் தொலைத்துவிட்டான். மற்றவர்களுக்காக அவளை இழந்துவிட அவன் தயாராய் இல்லை. ஒரு மாமாங்கமாகக் காத்திருந்த காதலர்க்கு மானமேது இப்போது?

உறவினரிடையே காதலுக்காகக் காத்திருந்து, காதலித்தவளுக்காகத் தன்மானத்தை கைவிட்ட அந்தப் புங்குடுதீவுக் காதலனால் காதல் வாழ்கிறது. புங்குடுதீவுக் காதலர் இருவரின் கையணைப்புக்குள் பிறந்த ஆசைக் கவிதை. உங்களுக்காக.

பெண்: கன்னுக்குட்டி காணமென்னு
                      கயிறெடுக்க வந்தவள
           கையிக்கிள்ள கட்டிகிட்ட
                      எண்ணமென்ன மச்சினரே!

ஆண்: கால்கொழுசு  சத்தமிட்டா
                    என்மனசு துடிக்குதல்லோ!
            நாலுபேரு அறிவாரோ
                      என்மனசு துடிப்பெல்லாம்

பெண்: ஊருசன மறிந்தாக்கா
                      ஒப்பாரி வைப்பாக! 
           பேருகெட்டு போயிடுமே
                     பேசாம போய்வாரும்

ஆண்: மாமன்மக என்னுசொல்லி
                    மனசபறி கொடுத்து
           மாமாங்கம் ஆயிடிச்சு
                    மானமேது இப்போது
                                                                  - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                     - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
இனிதே,
தமிழரசி.

Friday 19 July 2013

இலஞ்சப் புலிகள்

இலஞ்சம்
நம் தமிழ் முன்னோர்களால் கைக்கூலி என்றும், கையூட்டு என்றும் அழைக்கப்பட சொல்லை இப்போது இலஞ்சம் என்கின்றோம். இன்றைய உலகில் இலஞ்சம் இல்லாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகம் எங்கும் இலஞ்சம் புரையோடிப்போய் இருக்கிறது. சேக்கிழார் மந்திரியாக வாழ்ந்தவர். அதனால் தான் என்னவோ ஒரு சரித்திர ஆய்வாளன் போல அன்றைய மக்களின் வாழ்வியலை தெட்டத் தெளிவாக பெரியபுராணத்தின் பல இடங்களிலும் பதித்து வைத்துள்ளார். அவற்றுள் ஒன்றாக அன்றைய தமிழரும் இலஞ்சம் கொடுத்தார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

திருநாவுக்கரசு நாயனார் வரலாற்றைச் சொல்லுமிடத்தில் - திருநாவுக்கரசு நாயனார் வாழ்ந்த காலத்திலேயே [கிபி 570 - 660]  இலஞ்சம் இருந்ததை சேக்கிழார் மெல்லக் கோடிட்டுக் காட்டுகிறார். திருநாவுக்கரசு நாயனாருக்கு சூலைநோய் வந்ததால் அதன் வேதனையைப்  பொறுக்க முடியாது, சமணசமயத்திலிருந்து மீண்டும் சைவசமயத்திற்கு மாறினார். அதனை அறிந்த சமணசமயத்தவர்கள் அரசனிடம் சொன்னார்கள். அரசனும் சமணசமயத்தைச் சேர்ந்தவன். அருள் உணர்வும் இல்லாதவன். சமணசமயமே[நெறி] அறிவென்ற மயக்கத்தில்[மருள்] வாழும் அரசன், மந்திரிகளைப் பார்த்துச் “அறிவுத்தெளிவுடைய[தெருள்கொண்டோர்] சமணர்கள் சென்ன தீயவனான திருநாவுக்கரசரைத் தண்டிப்பதற்கு [செறுவதற்கு], பொருளைப் பெற்றுக்கொண்டு விட்டுவிடாமல் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்கின்றான். அதனை 

அருள்கொண்ட உணர்வின்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமைனோக்கித்
தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 
பொருள்கொண்டு விடாதென்பால் கொடுவாரும் எனப்புகன்றான்”   
                                                   - (பெரியபுராணம்: 1355)
என மந்திரியாய் இருந்த சேக்கிழாரே குறிப்பிட்டுள்ளார்.

மந்திரிமார்கள் இந்தக்காலத்தில் மட்டுமல்ல அந்தக்காலத்திலும் மற்றவர்களிடம் கைக்கூலி வாங்கியே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு வரலாற்றுப் பதிவாக சேக்கிழார் தந்துள்ளார். எனவே ஆயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு மேலாக மந்திரிமார்கள் இலஞ்சப் புலிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை நாமும் அறிந்து கொள்வோம்.
இனிதே,
தமிழரசி.

Thursday 18 July 2013

தமிழிசை - 1



மனிதமனம் அழகுணர்ச்சி உடையது. இனிமையை விரும்புவது. அந்த இனிமையை இசையில் கண்டவன் மனிதன். இசை மனிதமனத்தைப் பண்படுத்துகின்றது. மொழியிணர்வைக் கடந்து மனிதரை ஒன்றுபடச் செய்யவல்லதும் இசையே. இசைக்கு மொழிவேறுபாடு கிடையாது. ஆதலால் இவ்வுலகின் தனிமொழி இசையாகும். இசை என்ற சொல்லானது மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது என்ற கருத்தைத் தரும். அது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் இன்பத்தைத் தருவது, எழில்மிக்கது, எழுச்சியைக் கூட்டுவது, வீரத்தை ஊட்டுவது, இறையுணர்வை பெருக்குவது யாவும் இசையேயாகும்.

இசையால் இறைவனை இசைவித்தவன் இராவணன். அதாவது இறைவனை தன்வயப்படுத்தியவன். ஆதலால் சமயகுரவர் நால்வராலும் போற்றப்பட்டவன். சிறுகுழந்தையான சம்பந்தரின் மழழையில் “ஏழிசையாழ் இராவணன்” எனப்பாடப்பட்டவன். திருநீற்றின் பெருமையை கூறிய இடத்திலும் “இராவணன் மேலது நீறு” என்று மந்திரம் செய்திருக்கிறார். அவரின் கண்ணுக்கு மற்றைய எல்லோரது உடம்பிலும் பூசிய திருநீற்றைவிட, இராவணன் உடம்பில் இருந்த திருநீறே தெரிந்திருக்கிறது. ஏன்? அவன் தூய்மையான சிவபக்தன். அத்தகைய சிவபக்தனும், இசைவல்லவனுமான இராவணன் வாழ்ந்த நாடு, நம் நாடு. எனவே இசையைப் போற்றி, இசையோடு [புகழோடு] வாழவேண்டியது எமது கடமை.

திருநாவுக்கரசரும் சூலைநோயின் வயிற்றுவலியால் 
“தேற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு
             துடக்கி முடக்கியிட  
ஆற்றேன் அடியேன்”
எனக் கதறுகிறார். அந்த ஆற்றா நிலையிலும்
“சலம்பூவொடு தூப மறந்தறியேன்
           தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்”
என்று தமிழோடு இசைபாடுவதை தான் மறப்பதில்லை என அழுத்திச் சொல்லி இருக்கிறார். 

அதன் உண்மையை சுந்தரமூர்த்தி நாயனார் 
“நீர் தமிழோடு இசை கேட்கும் 
           இச்சையால் காசு நித்தம் நல்கினீர்”
என்று திருவீழிமிழலையில் இறைவன் திருநாவுக்கரசரின் தமிழிசையைக் கேட்டு, காசு கொடுத்ததைச் சொல்லுமிடத்தில் உறுதிப்படுத்துகிறார். 

தமிழ் இசை அது மிகமிகப் பழமையானது. பழந்தமிழ் உரைஆசிரியர்கள் தரும் உரையிலிருந்து தமிழிலே பல தமிழிசை நூல்கள் இருந்திருப்பதை அறியலாம். இசை நூல், இசை நுணுக்கம், இசைக்கூறு, இசை விளக்கம், பாட்டும் பண்ணும், பாடற் பண்பு, பண் அமைதி, பண்வரி விளக்கம், தாள சமுத்திரம், தாளவகையோத்து, சிற்றிசை, பேரிசை போன்ற பலவகைப்பட்ட இசைநூல்கள் அந்நாளில் இருந்ததை பட்டியலிட்டிருக்கிறார்கள். எத்தகைய உன்னத நிலையில் தமிழிசை இருந்திருந்தால் இத்தனை தமிழிசை நூல்கள் உருவாகியிருக்கும்?

பண்டைத் தமிழ்மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும், நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் இராகங்களைப் பாடிவந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன. பழந்தமிழ் இசைநூல்களில் அழிந்ததாகக் கருதப்பட்ட பஞ்சமரபு என்ற நூலில் கிடைத்த பாடல்களைத் தொகுத்து ‘பஞ்சமரபு’ என்ற பெயருடன் வெளியிட்டிருக்கிறார்கள். வாத்திய மரபு என்ற நூல் ஓலைச்சுவடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்திருக்கிறது. இன்றைய இசையறிவுக்கும் எட்டாத பல அரிய கருத்துக்களை இந்நூல்கள் தருகின்றன. பண்டைய தமிழிசை நூல்கள் மட்டுமல்ல கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் யாவுமே தமிழிசையின் தொன்மையைப் புலப்படுகின்றன. இவற்றுக்குக் காரணம் என்ன?  சிந்திப்போமா?

Wednesday 17 July 2013

அடிசில் 61

கொள்ளுத்தோசை
                                                      - நீரா -



















தேவையான பொருட்கள்:
கொள்ளு  -  ½ கப் 
பச்சை அரிசி - 1 கப் 
புழுங்கல் அரிசி - 1 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -  3
உப்பு - தேவையான அளவு. 
நல்லெண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:
1. கொள்ளு, பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, வெந்தயம் நான்கையும் கழுவித் தண்ணீரில் 5 மணி நேரம் ஊறவிடவும்.
2. ஊறியதும் வடித்து மிக்சியில் இட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து பட்டுப்போல் அரைக்கவும்.
3. அரைபட்டு வரும்போது, பச்சை மிளகாயைச் சேர்த்து அரைக்கவும்.
4. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
5. புளித்ததும் உப்புச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்
6. தோசை வார்க்கும் போது கொஞ்சம் தடிப்பாக வார்க்கவும்.
7. தோசையின் மேல் அரைத்தேக்கரண்டி எண்ணெய் விட்டு புரட்டிப்போட்டு, பொன்னிறமாக வெந்து வரும்போது எடுத்து ஈரமற்ற தட்டில் வைக்கவும்.

Monday 15 July 2013

ஒன்றெனும் ஒன்று





தமிழனாய்ப் பிறந்த திருமூலரால் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற முழக்கம், முழங்கப்பட்டு பல நூற்றுக் கணக்கான ஆண்டுகள் புரண்டோடிப் போயும் தமிமிழராகிய நாம் இன்றும் பல கடவுள் கொள்கை உடையவராகவே வாழ்கிறோம். தெய்வம் மட்டும் ஒன்றல்ல. எல்லா பொருள்களிலும் இருக்கும் மூலப் பொருளும் ஒன்றேயாகும். 

“ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!” என்று மணிவாசகர் காட்டியதை சிவபுராணத்தில் பாடுவோம் ஆனால் என்றும் அதனை மனதில் எடுத்துக் கொள்ளமாட்டோம். ஏகம் - ஒன்று; அநேகம் - பல. ஒன்றாயும் பலவாயும் இருப்பது எதுவோ அதுவே இறை. இறையே இறைவன். இறை என்றால் அணு. அணுக்களின் சேர்க்கையால் பல கோடி வகையான உயிர்களூம், பொருட்களும் தோன்றுகின்றன. அணுவாக ஒன்றெனெ இருந்தது 

“பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்
சொல்லா நின்ற இத்தாவர சங்கமம்” 

ஆக பலவாகி நிற்கிறது. சைவசமயம் மட்டுல்ல, இன்றைய விஞ்ஞானமும் அதனையே உலக இயல்பின் உண்மை எனக் காட்டுகிறது. 

ஏகன் அநேகன் என இரண்டு. அந்த ஒன்றை இயக்கினாலே, அது அநேகம் ஆக மாறும். அந்த இயக்கத்திற்கு சக்தி வேண்டாமா? எனவே சிவம் சக்தி என அது இரண்டாகும். ஆனால் உண்மையில் அது ஒன்று. ஏனெனில் சிவத்துடனிருந்து சக்தி பிறக்கிறது. நம்முன்னோர் விஞ்ஞானத்தை மெஞ்ஞானத்துள் அடக்கினர். அணுக்கருவின் உள்ளே புதைந்து கிடக்கும் புரோட்டோனையும் நியூட்ரோனையும் சிவசக்தியாகக் கண்டனர். புரோட்டோனே கடவுள் துகளாகும். அதற்கு சக்தியைக் கொடுப்பது நியூட்ரோன் ஆகும். ஒன்றில் இருப்பது மற்றதில் இருப்பதில்லை.

இறை அது ஒன்றாகும். அது சிவம் சக்தியென இரண்டாகும். அதாவது அர்த்தநாரியாய் ஒன்றினில் இரண்டாகும். அது சிவமெனும் ஒன்றுக்குள் ஒன்றாய் இருப்பது. அதனையே கடவுள் என்கின்றோம். அது ஒன்றுமல்ல, இரண்டும் அல்ல. ஒன்றுபோல் இருக்கும் இரண்டு வடிவமும் அல்ல. அதனை ஒன்றெனெ நினைத்தால் ஒன்றாகும். சிவம் என நினைத்தால் சக்தியில்லை[சக்தி தெரியாது]. சக்தி என நினைத்தால் சிவம் இல்லை[சிவம் தெரியாது]. ஒன்றாய்ச் சேர்ந்து இருக்கும் பொருளது. சிவசக்தி எனும் அப்பொருளின் ஒன்றினில் இன்னொரு பொருள் இருக்கிறது. மற்றதில் அப்பொருள் இல்லை. ஆதலால் சிவம் சக்தி என்பது ஒன்றுடன் ஒன்று சேர்ந்த ஒன்றாய் விளங்கும் கடவுளாகும், என்கிறார் இராமலிங்க அடிகளார். அப்பாடலைப் பாருங்கள்.

ஒன்றது இரண்டது ஒன்றினில் இரண்டது
ஒன்றினில் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
ஒன்றல இரண்டல ஒன்றினில் இரண்டல 
ஒன்றெனில் ஒன்றுள ஒன்றெனும் ஒன்றே
ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
ஒன்றுடன் ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே

இதனை இன்றைய விஞ்ஞானமும் அணுக்கருவினுள் இருக்கும் புரோட்டோன், நியூட்ரோன் ஆகச் சொல்கிறது. அதுவே சிவசக்தி சங்கமமாகும். 
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
இறை - அது கடவுள் என்ற ஒன்றாகும் [ஒன்றது]
சிவம் சக்தி என அது இரண்டாகும் [இரண்டது]
சிவமாகிய ஒன்றினில் இருந்து சிவம், சக்தியென இரண்டானது.  பாதி பாதியாய் ஆனது - சிவசக்தி சங்கமம் [ஒன்றினில் இரண்டது
ஆனால் சிவம் எனும் ஒன்றினுக்குள் ஒன்றாய் இருப்பது [ஒன்றினில் ஒன்றது]
ஒன்று என்று சொல்லப்படும் பொருள் அதுவே ஆகும் - அதுவே கடவுள் [ஒன்றெனும் ஒன்றே]
அது ஒன்றாய் என்றும் நிலைத்து இருப்பதல்ல [ஒன்றல]
அது சிவம் சக்தி எனும் இரு பொருளாய் நிலைத்து இருப்பதுவும் அல்ல [இரண்டல]
அது ஒன்று போல் இருக்கும் இரண்டு வடிவம் அல்ல [ஒன்றினில் இரண்டல]
அதனை ஒன்றென கருதினால் [ஒன்றெனில்]
ஒன்றாகும் [ஒன்றுள]
ஒன்றாய்ச் சேர்ந்து இருக்கும் ஒரு பொருளது [ஒன்றெனும் ஒன்றே]
சிவசக்தி எனும் அப்பொருளின் ஒன்றினில் [ஒன்றினில்]
இன்னொரு பொருள் இருக்கிறது [ஒன்றுள]
மற்றதில் [ஒன்றினில்]
அப்பொருள்இல்லை [ஒன்றில]
சிவசக்தி என்பது ஒன்றுடன் ஒன்று சேர்ந்த [ஒன்றுடன் ஒன்றிய]
ஒன்றாய் இருக்கும் கடவுளாகும் [ஒன்றெனும் ஒன்றே]

Sunday 14 July 2013

கதிர்காம வாசனே!

அற்றைநாள் உனை நினைவேனோ
          அந்தகன் கண்படும் போது 
பற்றை மறக்கிலா பரிதவிப்பேனோ
          படுந்துயர் கண்டுமே
சற்றைக் கேனும் இரங்காயோ
          சங்கரன் மகனே!
கற்றைவார் குழலாள் பயந்த
          கதிர்காம வாசனே!

Saturday 13 July 2013

மங்காதசித்திரம்















பொங்கும் கடல் அலைகள் 
          கரை கொஞ்சி மீளயிலே
தங்கும் வெண் மணலில்
          சிப்பி இனம் மிளிர்வதை
பிஞ்சுக் கரம் தன்னால்
          படம் வரைந்த போதினிலே
எங்கும் சல சலவென
          எட்டுக்கால் ஊன்றி இருகால்
தொங்க வட்ட வடிவாக
          தண்ணீரில் நடந்து வந்த
சிங்கார நண்டை நானும்
          சிலிர்த்து உற்று நோக்கையிலே
பொங்கு மனத்து ஆசையுடன்
          புன்னகையை முகத் திருத்தி
 மங்காத சித்திரமாய் வரைந்து 
          வைத்தாள் தாய் அவளே!
                                                           - சிட்டு எழுதும் சீட்டு 68