Tuesday 1 October 2013

தமிழர்கள் அரக்கர்களா?

அறுதிணை

ஆம்பல் இதழில் 'தமிழ்ச்சாரலில்' நான் எழுதியதை வாசித்தவர்கள் 'சமணரும் பௌத்தரும் தமிழரிடத்திலேதானே பிறந்திருக்க வேண்டும்’ என எழுதியிருந்தீர்கள். பாளி மொழியிலுள்ள பௌத்த நூல்கள் இந்தியா முழுவதையும் தமலிகா (தமிழகம்) என்ற சொல்லால் குறிப்பிட்டாலும் மகாவீரரும் புத்தரும் வடஇந்தியர்கள் ஆதலால் எப்படி அவர்களைத் தமிழர்களாகச் சொல்லமுடியும்?’ எனக் கேட்டிருந்தார்கள்.

இந்தியா முழுவதும் தமலிகாவாக அதாவது தமிழர் வாழ்விடமாக இருந்த பொழுது சமணரும் பௌத்தரும் தமிழரின் கலாச்சாரப் பண்பாட்டின் சூழலில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்பதே எனது வாதம். 

சமணர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான சில கதைகளையும் கொள்கைகளையும் பார்ப்போம்.

1. சாதிப் பிரிவு
இருக்கு வேதம் கி மு 1000ல் எழுதப்பட்டது என்கிறார்கள். அதில் பிராமணர் விராட புருஷனுக்கு வாய் ஆவார். அவருடைய இரு தோள்களிலிருந்து அரசரும் தொடையிலிருந்து வைசியரும், காலின் அடிப்பாகத்திலிருந்து சூத்திரரும் தோற்றுவிக்கப்பட்டார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது வேத காலத்தில் நால்வகைச் சாதிப்பிரிவு வட இந்தியாவில் இருந்ததை இது காட்டுகிறது.

பண்டைய தமிழரிடையே சாதிப்பிரிவுகள் இருக்கவில்லை. ஆனால் தொழிற்பிரிவுகள் இருந்தன. அதனைச் சாதிப்பிரிவு எனக்கொள்வது நன்றல்ல. இதனை
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்”                              
                                            - (திருக்குறள்: 972)
என்னும் திருவள்ளுவர் வாக்காலும் அறியலாம். 

தமிழைப்படித்து அறிவதற்கு வாயிருந்தும், தமிழைப்படிக்க முடியாதபடி சமணர்கள் தன்னை அழித்தார்கள் என்பதை
“வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறாது
          ஆயிரம் சமணும் அழிவாக்கினான்”                 
                                            - (ப.திருமுறை: 5: 58: 9)
எனப்பாடிய திருநாவுக்கரசர்
“அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்  
          ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்
          அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”      
எனப் பாடி புலையரிடத்திலும் கடவுளைக்கண்டார். 

இதே கொள்கையை சமணரின் ‘அருங்கலச் செப்பு’ எனும் சமணநூல் 
“பறையன் மகனெனினும் காட்சி உடையன்
இறைவன் எனஉணரற் பாற்று”                                    
என்று கூறுகிறது. 

சமணமதம் சாதிப்பிரிவு இல்லாத தமிழரின் பண்பாட்டில் இருந்து தோன்றியதைத்தானே இது காட்டுகிறது. ஆனால் சமண நூலாக பலராலும் சொல்லப்படும் சீவகசிந்தாமணியில் ‘விலங்குகளைக் கொன்று உண்பதால் பற்களிடையே கொழுப்பையும் இறைச்சியையும் உடைய வேடரும், கடலோரத்தில் வாழும் பரதவரும் இழிதொழில் செய்யும் இழிகுலத்தவர்’ என்று திருத்தக்கத்தேவர், 
“விலங்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும் படுகடல் பரதவர் முதலா
எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெருதலும் நரபதி அரிதே”    
எனச் சொல்கிறார். சாதிப்பாகுபாடு இல்லாத தமிழரின் பண்பாட்டில் இருந்து விலகி, பிற்காலச் சமணர் இவ்வாறு சாதி பேதம் பேசத்தொடங்கியதாலும் சமணமதம் தமிழரைவிட்டு ஒழிந்து போயிற்று.

2. உயிர்களைக் கொல்லாமை
முனிவர் செய்த யாகங்களை அரக்கர் அழித்தனர். எனவே அரக்கர்கள் கொடியவர்கள் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். முக்கியமாக விசுவாமித்திர முனிவர் செய்தயாகத்தை அழித்த தாடகை என்னும் அரக்கியை பெண் என்றும் பாராது, இராமர் கொன்றார் என்று இராமாயணம் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தேவர்களின் மனங்களைக் குளிரவைக்கவே முனிவர்கள் யாகங்களைச் செய்தார்களாம். 

தேவர்களின் மனங்கள் குளிர்ந்தனவோ என்னவோ, உண்மையில் யாகம் என்ற பெயரில் முனிவர்கள் உயிர்களைக் கொன்றார்கள். யாகத்தில் அதாவது வேள்வித்தீயில் உயிருள்ள குதிரைகளைப் போட்டு எரிப்பதை ‘அசுவமேத யாகம்’ என்றும், உயிரோடு யானைகளைப் போட்டு எரிப்பதை 'கஜமேத யாகம்’ என்றும், மனிதரையே உயிருடன் போட்டு எரிப்பதை ‘நரமேத யாகம்’ என்றும் அழைத்தனர். 

காட்டுமிராண்டித் தன்மையான அந்த யாகங்களை, அரக்கர்கள் தடுத்தது பிழையா? உயிரோடு துடிக்கத் துடிக்க, சுடர்விட்டு எரியும் வேள்வித்தீயில் உயிர்களைப் போட்டு எரித்துக் கொன்று உண்டது கொடிய செயலா? அல்லது அத்தகைய கொடிய செயலைத் தடுத்தது கொடிய செயலா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

உயிர்களை உயிரோடு வேள்வித்தீயில் போட்டு எரித்த வடநாட்டு முனிவர்களின் யாகங்களை அழித்த அந்த அரக்கர்கள் யார்? இதற்குச் சரியான விடை தெரிந்தால் தமிழரின் பண்டைய வரலாற்றின் உண்மையை அறிய வழிபிறக்கும். அரக்கர் யார் என்பதை அறிய பழந்தமிழைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா?

பண்டைய தமிழர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால், இயற்கையை நன்றாக ஆராய்ந்து அறிந்திருந்தனர். பூமியில் உள்ள நிலத்தின் தன்மையைக் கொண்டு பூமியை அறுவகை நிலங்களாகப் பிரித்துப் பெயரிட்டனர்.
‘குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்தல்
ஐந்திணைக் கெய்திய பெயரே‘           
                                - (அகப்பொருள் விளக்கம் - அகத்திணை)

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலத்தோடு ஆறாவதாகிய அளக்கர் திணையையும் சேர்த்து அறுதிணையாகாக் கொண்டனர். தீவு அதாவது கடலால் சூழப்பட்ட நிலம் அளக்கர் திணை என அழைக்கப்பட்டது. அதனைப் புறநானூற்றில் கூடலூர் கிழார்
அளக்கர்த்திணை விளக்காக
கனைஎரி பரப்பக் காலெதிர்பு பொங்கி”      
                                            - (புறம்: 229: 10 - 11)
எனச் சொல்வதாலும் அறியலாம்.

தமிழர் நிலத்ததை வகைப்படுத்தி பூமிக்கு வழங்கிய பெயர்கள்
நிலத்தின் பெயர் 
நிலப்பிரிவுகள்
இருநிலம்
நிலம், நீர் 
நானிலம்
முல்லை, குறிஞ்சி. மருதம், நெய்தல்
ஐந்திணை
முல்லை, குறிஞ்சி. மருதம், நெய்தல், பாலை
அறுதிணை
முல்லை, குறிஞ்சி. மருதம், நெய்தல், பாலை, அளக்கர்


பண்டைத் தமிழரின் அறுவகை நிலப்பாகுபாடு
நிலப்பிரிவுகள்
பிரித்த நிலத்தின் தன்மை
நிலத்தின் மலர்
முல்லை
காடும் காடு சார்ந்த நிலமும் 
முல்லை மலர்
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த நிலமும்
குறிஞ்சி மலர்
மருதம்
வயலும் வயல் சார்ந்த நிலமும்
மருத மலர்
நெய்தல்
கடலும் கடல் சார்ந்த நிலமும்
நெய்தல் மலர்
பாலை
கடறும் கடறு சார்ந்த நிலமும்
பாலை மலர்
அளக்கர்
கடலும் கடல் சூழ்ந்த நிலமும் [தீவு]
அளக மலர்
[எருக்கம்பூ]

இவ்வாறு உலகை அறுவகையாகப் பிரித்ததால் தமிழர், தமது கடவுளாகிய முருகனை ‘அறுதிணைச் செல்வன்’ என அழைத்திருக்கின்றனர்.
அறுதிணைச் செல்வநின் அறுமுகமல்லால் வேறு
ஊறுதிணை உண்டோ”                                        
                                        - (பாட்டும் தொகையும்)

அறுதிணைச் செல்வன் என்பதற்கு உரையாசிரியர் தமிழ்கூறு நல்உலகத்து இறைவன் என்று எழுதியுள்ளார். அதனால் முருகன் எனக்குறிப்பிட்டுள்ளேன். அறுமுகத்தவன் முருகனே. ‘அளகம்’ என்றால் தமிழில் நீர் என்ற கருத்தையும் தரும். ‘அளக்கர்’ என்னும் சொல் கடல், தீவு, தீவார், உப்பளம் போன்றவற்றைக் குறிக்கும். நெய்தல் நிலப்பெண் ‘அளத்தி’ எனவும், நெய்தல் நிலப்பெண்கள் ‘அளத்தியர்’ எனவும் அழைக்கப்பட்டனர்.

சங்கப்புலவர்களில் ஒருவர் ‘மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளானர்’ என அழைக்கப்பட்டமை இங்கு நோக்கத்தக்கதாகும்.

அளக்கர் என்ற சொல்லில் இருக்கும் தமிழ்மொழிக்கு உரித்தான ‘ள’கரம் பிறமொழி பேசியவர் வாய்ச்சொல்லில் ‘ர’கரமாக மாறி ‘அரக்கர்’ ஆயிற்று. அளக்கர், அளக்கர் என்று சொல்லிப்பாருங்கள். அளக்கர் - அரக்கராக மாறுவதை அறிவீர்கள். 

தமிழில் இருக்கும் சில ‘ள’கரச் சொற்கள், ‘ர’கரச் சொற்களாக மாறிய போதும் ஒரே கருத்தைத் தருவதை கீழுள்ள அட்டவணையில் பாருங்கள்.

கரச் சொற்கள்
கரச் சொற்கள்
கருத்து
இளக்கம் 
இரக்கம்
இளகிய தன்மை
உளம்
உரம்
நெஞ்சு/மார்பு
அளி
அரி
வண்டு
தெளிவு
தெரிவு
அறிவு
தெளித்தல்
தெரித்தல்
கொழித்தல்
முளிதல்
முரிதல்
கெடுதல்
அளற்றல்
அரற்றல்
சத்தம் செய்தல்
சுளுங்கல்
சுருங்கல்
குறைதல்
இளை
இரை
பூமி

இச்சொற்களைப் போலவே அளக்கர் என்னும் சொல் அரக்கர் ஆக மாறியுள்ளது. ஆதலால் ‘அளக்கர்’ என்னும் சொல்லின் கருத்தாகிய தீவு என்னும் கருத்தையே அரக்கர் என்னும் சொல்லும் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது.

இதுமட்டுமல்ல அரக்கர் என அழைக்கப்பட்டவர்கள் தீவுகளில் வாழ்ந்தார்கள் என்பதை இதிகாசங்களும் புராணங்களும் எமக்குத் தெளிவாகாக் கூறுகின்றன. இதிகாசமான இராமாயணம் இராவணனை அரக்கன் என்பதும், கந்தபுராணம் சூரபத்மனை அசுரன் என்பதும் நீங்கள் அறிந்ததே.

பலராலும் பேசப்பட்ட ‘அளக்கர்’ என்ற சொல் ‘அரக்கர்’ ஆக மாற்றமடைந்தது. எனினும் இலங்கையின் பெயர்களில் ஒன்றான ‘அளகை’ என்னும் சொல் பலராலும் பேசப்படாததால் தன் வடிவம் மாறாது இன்றும் இருக்கிறது. 

சிவன் கொடுத்த 'சந்திரகாசம்' என்ற வாளுடன் இராவணன் கைலாயமலையைத் தூக்கும் காட்சி - பேளூர்

இராவணன் கைலாய மலையை தூக்கியபோது
“மதில் அளகைக்கு இறை முரல மலரடி ஒன்று
           ஊன்றி மறைபாட ஆங்கே
முதிரொளிய சுடர் நெடுவாள் முன்னீந்தான்”            
                                           - (ப.திருமுறை: 1: 131: 8)

அதாவது மதிலால் சூழப்பட்ட அளகையின் [இலங்கையின்] அரசன் கதறும்படி காலால் ஊன்றி, அவன் சாமகானம் பாட, சிவன் அவனுக்கு ஒளிபொருந்திய நீண்ட வாளைக் கொடுத்து அருளியதாக திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். இத்தேவாரத்தில் இலங்கையின் பெயர் ‘அளகை’ என்று இருப்பது கவனிக்க வேண்டிய விடயமாகும். கந்தபுராணமும் இலங்கையை அளகை என்றே குறிப்பதைப் பாருங்கள்.
“அது பொழுது அவுணர்கள்
              அளகை ஊடுபோய்”                                  
                                          - (கந்தபுராணம்: திக்குவி: 45)

இலங்கையின் தமிழ்ப்பெயர்களில் ஒன்றான ‘அளகை’ என்ற பெயரையும் வரலாற்றுப் பதிவேடுகளில் பதிவுசெய்து வைக்கவேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. தமிழர் அல்லாத மார்க்கோபோலோவோ, யுவான் சுவாங்கோ குறிப்பிட்டிருந்தால் அதை வரலாறாகப் பார்க்கும் நாம், நம் மூதாதையர் சொல்லிச் சென்றதை ஏன் வரலாறாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்?

இங்கு நான் இராமாயணத்தை தமிழர் வரலாறு என்று சொல்லவில்லை. நம் முன்னோர் எமக்காக விட்டுச் சென்ற பழந்தமிழர் சொற்களையே குறிப்பிட்டேன். அளக்கர் என்னும் பழந்தமிழ்ச் சொல்லே அரக்கர் என மாறியதால் அரக்கர்கள் தமிழர்களே! அதிலும் முக்கியமாக நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவுகளில் வாழ்ந்த தமிழர்களே அரக்கர்கள் என அழைக்கப்பட்டார்கள். நாங்கள் அரக்கர்களா? எனக் கேட்கவேண்டாம். நானும் ஒரு தீவின் [அளக்க] தமிழிச்சியே.

இதில் கோவப்படவோ வெட்கப்படவோ எதுவுமே இல்லை. அரக்கர்கள் அதாவது அளக்கர்கள் அறிவிலும் அறிவியலிலும் பண்பாட்டிலும் உலகிற்கு முன்னோடிகளாக சிறந்தே விளங்கி இருக்கிறார்கள். 

வடக்கே இருந்து வந்த முனிவர்கள் செய்த கொலை வேள்விகளை அளக்கர்கள் அதாவது தமிழர்கள் தடுத்தார்கள். எனவே உயிர்களைக் கொலைசெய்யாத கொல்லா அறக்கொள்கை பண்டைத் தமிழர் பண்பாடே. ஆரியர்களிடம் இல்லாத ஆனால் அளக்கர்களிடம் - பண்டைத் தமிழரிடம்  இருந்து முகிழ்ந்த கொல்லா அறக்கொள்கையே சமணமுனிவர்கள் கைக்கொண்டனர் எனக் கொள்வதே ஏற்புடையதாகும்.
இனிதே,
தமிழரசி.
[ஆம்பல் இதழில் 2010ல் எழுதியது] 

No comments:

Post a Comment