Wednesday 23 October 2013

குறள் அமுது - (78)


குறள்:
“கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்”                        - 1021                               

பொருள்:
ஒரு செயலைச் செய்யும் ஒருவன், அதனைச் செய்து முடிக்காமல் நிறுத்தமாட்டேன் என்று முயன்று செய்வதைப் போன்ற பெருமையில் சிறந்த பெருமை வேறில்லை.

விளக்கம்:
திருவள்ளுவர் இத்திருக்குறளை குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில்  சொல்கிறார். குடி என்பது இனத்தைச் சுட்டி நிற்கிறது. தான் பிறந்த இனத்தை முன்னேறச்செய்யும் வழிவகைகளை செய்வதே குடிசெயல் வகையாகும். 

தன்குடி மாற்றானுக்கு அடிமைப்பட்டு மாண்டு போகாது காக்கவேண்டும் என நினைப்பவன், எந்த இடையூறு வந்தாலும் அவற்றை எல்லாம் தாங்கி, பதவிக்கும் பணத்துக்கும் மயங்காது தனது குடியை முன்னேற்றும் முயற்சியை கைவிடமாட்டேன் என்ற மனவுறுதியோடு செயல்படுவதைவிடச் சிறந்த பெருமை வேறு இல்லையாம்.

தமிழனாய்ப் பிறந்த திருவள்ளுவர் தமிழ்க்குடி பெருமையுடன் வாழ அரிய பெரிய கருத்துக்களை திருக்குறளில் பல இடங்களில் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று 

“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை”                                         - 485  

இறுவரை என்பது அழிவுகாலத்தைக் குறிக்கும். தம்மிலும் வலிமை மிக்க பகைவரைக் கண்டால் பகைமை எண்ணம் நீங்கும் படி அவர்களை தோளிலிலோ தலையிலோ வைத்து சுமக்க வேண்டுமாம். அதாவது பணிவாக நடக்கவும். அவர்களுடன் நெருங்கிப் பழகுவதால் பகைமையை நன்கு அறிய அது உதவும். அப்பகைவருக்கு அழிவுகாலம் வரும்போது நிலைமை தலைகீழாக மாறும் என்கிறார். எமக்கு ஏற்ற காலம் வரும்வரை பகைமையை வெளிப்படுத்தாது காத்திருக்கச் சொல்கிறார்.

இக்குறளுக்கு ஏற்ப பணிவாக நடப்பதாகக் காட்ட, 1987ம் ஆண்டு ஆயுதங்களை இந்திய அமைதிப்படையினரிடம் ஒப்படைத்த போதும், தான் எடுத்துக்கொண்ட செயலை நிறுத்தமாட்டேன் என்பதை ‘போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறப்போவதில்லை’ எனப் பலரும் அறிய அறிவிக்கப்பட்டதே, சுதுமலைப் பிரகடனமாகும். 

அதிலும் வெறுங்கையுடன் நின்றாலும், எமது இலட்சியம் மாறாது என்பதை தெட்டத்தெளிவாக இந்திய வல்லரசிற்கு, அமைதிப் படையினரைப் பார்த்துச் சொல்லியதால் சுதுமலைப் பிரகடனம் வரலாற்று முக்கியம் உடையதென அரசியல் ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். சின்னஞ் சிறிய இலங்கைத் தீவில் தன்மானமுடைய தமிழினமும் வாழ்கிறது, அது தமிழீழம் என்னும் உயர்ந்த இலட்சியத்துடன் வாழ்கிறது என்பதை உலகுக்குப் பறைசாற்றிய நாளும் அதுவேயாகும். 

என்குடியை உயர்த்தாமல் நான் ஓயமாட்டேன் எனத் தொடர்ந்து செய்யும் பெருமையிலும் சிறந்த பெருமை உலகில் வேறு இல்லை எனக்கூறும் குறள் இது.

No comments:

Post a Comment