Tuesday 8 October 2013

பக்திச்சிமிழ் - 67

வாழ்வை உகந்து நெஞ்சே!
- சாலினி -

Photo: source tamil Daily News

சுந்தரமூர்த்தி நாயனார் அழகனாய் பிறந்து, அரச போகத்தில் வளர்ந்து, ஆடம்பரமான வாழ்வையே விரும்பி வாழ்ந்தவர். அவரது திருமணத்தன்று இறைவன் அவரைத் தனது அடிமையென வழக்காடி வென்று அடிமையாகக் கொண்டார். இந்நாளைப் போல் அல்லாமல் அந்நாளில் வழக்கு தொடுத்த அன்றே தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அடிமையாக இருந்தும் ஒன்றுக்கு இரண்டு பெண்களை மணந்து, தனக்கு தேவையான பொருட்களை இறைவனிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையின் இன்பத்தை நன்கு சுவைத்தவர் அவர்.

ஆசைகளை அறுக்க முடியவில்லை. அதனால் உண்டாகும் கோவத்தினால் எல்லோரையும் பகைத்துக் கொள்கிறேன். பொய்யே பேசுகிறேன் என்றாலும் புகழையும், பொருளையும் பெரிதும் விரும்புகிறேன். பிறரை வருத்துவதும், பிரித்து வைப்பதும் என் வேலை. துன்பப்பட்டவர்களுக்கு உதவி செய்து அறியேன். உறவினர்க்கும் துணைபுரிய மாட்டேன். எந்த ஒரு நல்ல குணமும் என்னிடமில்லை. எனச் சுந்தரமூர்த்தி நாயனார் தன்னைப்பற்றிக் கூறி, ‘திருவாரூர் இறைவன் தன்னை ஆள்வாரோ கேளீர்!’ என்று ஏழாம் திருமுறையின் எழுபத்தி மூன்றாம் பதிகத்தில் சொல்கிறார். அப்பதிகத்தின் ஒருபாடலைப் பாருங்கள்.

“அருத்தம் பெரிதும் உகப்பன்
          அலவலையேன் அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்
          உற்றவர்க்குத் துணையல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன்”            - (ப.திருமுறை: 7: 73: 6)
என்றெல்லாம் தன்னைப்பற்றி இழிவாகச் சொன்னவர், நூறாவது பதிகத்தில்

வாழ்வை உகந்து நெஞ்சே
          மடவார் தங்கள் வல்வினைப்பட்டு
ஆழ முகந்த என்னை
          அது மாற்றி அமரர் எலாம்     
சூழ அருள் புரிந்து”                                      - (ப.திருமுறை: 7: 100: 4)

 என்று பாடி இறைவன் தன்னை ஆட்கொண்டு அருள் செய்த திறத்தை வியக்கிறார். எனவே சுந்தரரின் வாழ்வை, அவரின் தேவாரத்தின் துணை கொண்டு பார்ப்போர் இறைவன் தருவானா மாட்டானா என்ற பயம் இல்லாது, தாம் நினைத்ததை எல்லாம் இறைவனிடம் கேட்டுப் பெற்று வாழ்வை உகந்த நெஞ்சுக்கு இன்பத்தை கொடுக்கலாம்.         

No comments:

Post a Comment