Saturday 12 October 2013

படுத்துறங்கும் மச்சானாரே!



பண்டைத் தமிழர் கடற்கரையோர பெருநகரங்களை பட்டினம் என அழைத்தனர். அதற்கமைய மாந்தைப் பட்டினம் என அழைக்கப்பட்ட பெருமையை உடையதாக மாந்தைமாநகரம் இருந்தது. அதன் துறைமுகத்திலே நங்கூரம் இடப்பட்டு நின்ற ஒரு பாய்மரக்கப்பலில் வாலிபன் ஒருவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் பாய்மரக் கப்பலில் படுத்து உறங்குவதை இளம் பெண்ணொருத்தி கண்டாள். அவனது உறக்கத்தைப் போக்க நாட்டுப்பாடல் பாடிச் சீண்டுகிறாள். 

பெண்: பட்டனத்துக் காத்து
                       படபடத்து அடிக்கையில
             பாய் மரக் கப்பலிலே
                       படுத்து உறங்கும் மச்சானாரே
             காத்தாட நான் வரட்டோ
                       கதை கதையாச் சொல்லிடட்டோ
                                   -  நாட்டுப்பாடல் (மாந்தை)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

கடற்காற்றுக்கு அவன் துங்குவதை பட்டனத்துக் காத்து படபட என்று வீசுவதால் அவன் தூங்குகிறான் என்கிறாள். பாருங்கள் கடற்கரையில் வீசும் கடற்காற்றுக்கு, ஓர் அழகிய தமிழ்பெயரைச் சூட்டி ‘பட்டனத்துக் காத்து’ என்று அழைக்கிறாள். அந்த பட்டினத்துக் காற்றை அவனோடு இருந்து நுகர ஆசைகொண்டு ‘காத்தாட நான் வாரட்டா?’ எனக் கேட்கிறாள். அதற்கு அவன் உடன்பட்டால் அவள் கதை கதையாகச் சொல்வாளாம். அவளது கேள்விக்கு அவன் என்ன பதில் சொன்னானோ தெரியவில்லை. ஆனால் எமக்கு 'பட்டனத்துக் காத்து' என்று ஓர் அரிய பெயர்ச்சொல் கிடைத்திருக்கிறது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment