Sunday 29 September 2013

அடிசில் 66


காரச் சேர்வு [சேவு]
                              - நீரா -

தேவையான பொருட்கள்:
கடலைமா - 1 கப்
வெள்ளைப் பச்சை அரிசி - 1½ கப்
காய்ந்த மிளகாய் - 7
உள்ளி - 5 பல்
மிளகு தூள் - 1 தே.கரண்டி
எண்ணெய் - 3 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

 செய்முறை:
1. அரிசியையும் மிளகாயையும் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறியதும் உள்ளிப்பல் சேர்த்து, நன்றாகப் பட்டுப்போல் இறுக்கமாக அரைத்து எடுக்கவும்.
3. அரைத்த மாவினுள் கடலைமா, மிளகுதூள், ஓமம், உப்பும் போட்டு, மூன்று தேக்கரண்டி எண்ணெய்யைச் சூடாக்கிவிட்டு, நீர் தெளித்து முறுக்கு மாப்பதத்தில் குழைத்துக் கொள்க. 
4. பாத்திரத்தில் எண்ணெய்யைக் கொதிக்கவைத்து காரச்சேவுக் கரண்டியை எண்ணெய்க்கு மேல் பிடித்து, குழைத்த மாவைக் கரண்டியில் வைத்து அழுத்தி, கீழேவரும் சேர்வின் நீளம் ஒன்று அல்லது ஒன்றரை அங்குலமாக இருக்கும் போது அழுத்தும் மாவை முன்பின்னாகத்தள்ள  சிறு சிறு முறுக்குகளாக அது எண்ணெய்யில் விழும்.
5. எண்ணெயில் விழுந்த காரச் சேர்வு பொன்னிறமாக வெந்ததும் இன்னொரு கரண்டியால் வடித்து எடுக்கவும்.

குறிப்பு:
காரச் சேர்வு கரண்டி இல்லாவிட்டால் பெரிய ஓட்டைகள் உடைய எண்ணெய்க் கரண்டியைப் பாவிக்கலாம்.

No comments:

Post a Comment