Thursday 10 October 2013

சிலேடை பாடிய [நயினை] நாகமணிப்புலவர்

எழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிறுவாரமலர், கொழும்பு; 14/01/1951]

காளமேகப் புலவர் பல சிலேடைச் செய்யுட்கள் பாடியிருக்கிறார். அவர் சிலேடை பாடக்காரணமாக இருந்தவர்கள் அதிமதுரகவிராசரும், அவருடன் சேர்ந்த தண்டிகைப் புலவர்களுமாவர். தண்டிகைப் புலவர்களுள் ஒருவர் “எள்ளுக்கும் பாம்புக்கும்” சிலேடை பாடும்படி கேட்டார். காளமேகம் அப்பொழுது பாடிய செய்யுள் இது:
ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றின் பரபரென்னும் பாரிற் பிண்ணாக்குமுண்டாம்
உற்றிடு பாம்பெள்ளெனவே ஓது”

பாம்பு: (குறவன் ஆட்ட) ஆடிமுடிந்தபின் தான் வழக்கமாக உறையும் கூடையைச் சேரும். (படம்விரித்து) ஆடும் பொழுது இரைச்சலிடும். மூடிவைத்தபின் (மூடியைத்) திறந்தால் தனது முகத்தை வெளியே காட்டும். அது கடித்தால் (பற்றின்) விஷம் தலைக்கேறி அதிர்ச்சியைக் கொடுக்கும். உலகில் பாம்புக்கு பிளவுபட்ட நாக்கு உண்டு. 

எள்ளு: (செக்கிலிட்டு ஆட்ட) ஆடி எண்ணெய் குடத்தைச் சேரும். (செக்கில் எள்) ஆடும் பொழுது இரையும். மூடியைத் திறந்து எண்ணெய்யைப் பார்த்தால் (பார்ப்பவர் தம்) முகத்தைக் காணும்படி (மாசின்றித்தெளிந்து) காட்டும். எண்ணெய் தலையிற் பொருந்தினால் ஓடிப்பரபரெனச் சுவறும். உலகிற்கு பிண்ணாக்கும் கிடைக்கும். கட்செவியாக - கண்ணே செவியாக) நுணுக்கியுணரும் பாம்பை எள்ளெனச் சொல்லுக, என்கிறார்.

“வசைபாடக் காளமேகம்” எனப்புலவர்களால் பாராட்டப் பெற்ற பெரும் புலவரின் செய்யுளையும் அதன் சிலேடைப் பொருளையும் பார்த்தோம். இனி நாகமணிப்புலவர் பாடிய ஒரு சிலேடைச் செய்யுளைப் பார்ப்போம்.

அந்தச் செய்யுள் கொழும்பு மாநகரில் பாடப்பட்டது. புலவர் அப்பொழுதும் புலவராகவே இருந்தார். ஆனால் கொழும்பில் ஒரு செட்டியார் வீட்டுக்குப் பெரிய கணக்கப்பிள்ளையாக வேலை செய்து கொண்டிருந்தார். விவேகானந்த சபையில் ஒரு பிரசங்கம் நடக்கவிருந்தது. புலவரும் அறிந்து அந்த சபைக்குப் போயிருந்தார். பிரசாரகர் கூலிக்குப் பிரசங்கன்ஜ் செய்ய வந்தவர் என்றும் ஏதோ ஒரு வாரிதி அவருடைய நாமம் என்றும் அறிந்தார். பிரசங்கம் நடந்தது. சபையோர் பேசாமல் சில நிமிடம் இருந்தார்கள். பின்னர் ஒருவரோடு ஒருவர் “இதென்ன பழைய பல்லவி!,” “வெள்ளவத்தையிலும் இப்படிப் பேசினாரே!” “ஏன்! கதிரேசன் கோயிலிலும் இதைத்தானே பேசினார்!” “அநியாயக் காசு!” என்று கதைத்தார்கள்.

தமிழர்களின் - அறிஞர்களின் - தலைவர்களால் நடாத்தப்படும் சபையிலும் கூலிக்குப் பேச அந்த வாரிதி போயிருந்தமை புலவருக்குப் பிடிக்கவில்லை. எத்தனையோ பண்டித மணிகள், வித்துவ ரத்தினங்கள் சமூக உயர்வுக்காக உழைக்கத் தம்மையே தியாகஞ் செய்திருப்ப, பெரும் பொருள் கொடுத்து அந்தப் பிரசாரகரை ஒழுங்கு செய்த சபையாரின் பணப்பெருக்கை வியந்து கொண்டு புலவர் போய்விட்டார்.

போனாலும் “துருத்திச் சுடர்” போலப் பிரசங்கியாரில் புலவருக்குக் கோபம் கிடந்தது. அடுத்த நாட்காலை செட்டித்தெருவில் உள்ள கடைக்குப் போனார் புலவர். கடை முதலாளி எழுந்து, தான் இருந்த ஆசனத்தில் அவரை இருக்கச் செய்து பக்கத்தில் நின்றார். முதல் நாட் பிரசங்கியாரும் அப்பொழுது கடைக்கு வந்தார். வந்தவர் இருந்தவரைப் பார்த்து “ஒரு கட்டு வி. எஸ். ஏ சுருட்டுத்தாரும்” என்று கேட்டார். வியெஸ்சே என்ற ஓசை அடித்தாற் போல “வேசை” என்றே இருந்தவருக்குக் கேட்டது. அவர் சிரித்துக் கொண்டு “வேசைச் சுருட்டா வேண்டும்” என்று கேட்டார்.

சுருட்டை எப்படி வேசி என்பீர் என்ரு அந்தப் பிரசாரகர் கேட்டார். புலவர் அவருக்கு எழுதிக் கொடுத்த மறுமொழிகள் ஒரு சிலேடை வெண்பா ஆனது.
“எட்டிப்பிடித்தலால் ஏந்திமுத்தம் இடுதலால்
கட்டையறுத்து இதழ்வாயிற் கவ்வுதலால் - மட்டற்ற
ஆசைத்தீ மூளுதலால் ஆனபுகைச் சுருட்டை
வேசைப்பெண் என்றேன் விரைந்து”
 பிரசாரகர் பார்த்துவிட்டு சுருட்டும் ஒரு கட்டு வாங்கிக் கொண்டு போனவர்தான். போகட்டும்! நமக்கு ஏன்! தமிழன்னைக்கு! ஒர் அருமையான கவிதாமலர் கிடைத்துவிட்டது. இந்தச் செய்யுளில் உள்ள சிலேடைப் பொருளைச் சிறிது ஆராய்வாம்.

சுருட்டு: சுருட்டை வாங்குபவர் எட்டிப்பிடித்தலாலும் (அதன் குணமறியும் பொருட்டு) உயர்த்தி மோர்ந்து பார்த்தலாலும் பத்தாகச் சேர்த்து கட்டியுள்ள நூலை அறுத்து, தமது வாயிதழ்களாற் சுருட்டைக் கவ்வுதலினாலும், அளவு கடந்த ஆசையோடு நெருப்பை அதில் மூளச் செய்தலாலும் புகையினை உண்டாக்கும் சுருட்டு என்க.

வேசை: விலைமகளாதல் அறிந்தும் பொறுமையழிந்து அன்பின்றிப் பிடித்தலாலும், தாங்கி முத்தமிடுதலாலும் (வேசிக மனஞ்செய்யலாகாது என ஆன்றோர் கட்டிவைத்த) வரம்பை மீறி முருக்கிதழ் போன்ற அதரவாயிற் கவ்வுதலாலும், முறையற்ற ஆசை நெருப்பு மூளுவதாலும் தமது கல்வி, செல்வம், புகழ், ஆவி என்பன ‘புகை’யக்காரணமான வேசை என்க.

சுருட்டு தீதாதல்:
கண்புகையும் நெஞ்சுலரும் கைகால் அயர்ந்துவிடும்
வெண்புகையால் மேனி வெளுத்துவிடும் - திண்புகையால்
ஈரற்கருகிவிடும் இந்திரியம் நட்டமாம்
பாழும் புகையிலையின் பண்பு”
என்னும் செய்யுள் மூலமும்

வேசை தீதாதல்:
“பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம்
இருட்டறையில் ஏதில்பிணந்தழீ யற்று”
என வள்ளுவ தேவரும்
“சேலை கொடுத்ததற்குச் சீமாட்டி என்கொடுத்தாள்
சூலை கொடுத்தாள் துயர்கொடுத்தாள் - மூலயரையாப்பு
கொடுத்தாள் இன்னுமின்னு மெத்தனையோ காப்புக்
கொடுத்தாள் கடிகொடுத் தாள்”
எனச் சுப்பிரதீபக் கவிராசரும் கூறியருளிய செய்யுட்கள் மூலம் உணரக்கிடக்கும் பொதுத் தன்மைகளை சிலேடைப்பாவிற் திரட்டி
“மட்டற்ற ஆசைத்தீ மூளுதலால் ஆன புகைச்சுருட்டை வேசைப் பெண்” என்றமையும் நோக்கி மகிழற்குரியன.

No comments:

Post a Comment