Monday 20 January 2014

அடித்தாமரை என்னை ஆண்டனவே!

பிறப்பறுத்து ஆளவல்லான்
இராவணன் சடாயுவுடன் போர்புரியும் காட்சி.
அன்புக்கு ஏங்குதலே மனித இனத்தின் பொதுவான பண்புபாகும். அந்த அன்பின் முதிர்ச்சியே பக்தியாகும். பக்தியாய் பாடினார் எல்லோரும் பரசிவத்தை அடைவதில்லை. எமக்கு முன் பிறந்த எம் முன்னோரில் யார் பரசிவமானார் என்ற பட்டியலில் முதன்மையானவனாக எமது சைவசமயச் சான்றோர்களால் போற்றப்படுபவன் இராவணனே.

சைவசமயச் சான்றோரான திருநாவுக்கரசு நாயனார் சூலை நோயால் துன்பப்பட்டு, அதனை போக்குதற்காகக் 
“கூற்றாயின வாறு விலக்ககலீர்
           கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
           பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே
          குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்”                                          
                                                          - (ப.திருமுறை: 4: 1: 1)
எனக் கதறிய பதிகத்தின் முதல் தேவாரம் இது. இதுவே திருநாவுக்கரசு நாயனார் பாடிய முதல் தேவாரமும் ஆகும். இத்தேவாரத்தை நாம் அறிவோம். 

ஆனால் இப்பதிகத்தின் கடைசித் தேவாரம் நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அத்தேவாரத்தில் சிவனிடம் ‘அரக்கனான இராவணனை கயிலை மலையின் கீழ் நெரித்து, பின்னர் அருள் செய்ததை கருத்தில் கொண்டாயானால், சூலை நோயால் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் துன்பப்படும் என் வேதனையை நீக்கி அருள் செய்வாய்! எனச் சொல்கிறார்.
ஆர்த்தான் அரக்கன்றனை மால்வைக்கீழ்
           அடர்த்திட்டு அருள் செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும்
           என் வேதனை யான விலக்கிடாய்”              
                                                           - (ப.திருமுறை: 4: 1: 10)

இவ்வாறு உருண்டு, புரண்டு, கத்திக் குழறி சிவனைப் பார்க்கும் திருநாவுக்கரசரின் கண்முன்னே
“ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
           உடல்துணித்த இடர்பாவம் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்”                  
                                                          - (ப.திருமுறை: 6: 18: 6)
இலங்கையின் வேந்தனான இராவணன் ஒரு சில்லுடைய [ஓராழி]  புட்பகவிமானத்தை வைத்திருந்ததும், சிவன் அவனது உடலைக் கூறு செய்த ஆணவமலத்தைப் [இடர்பாவம்] போக்கி [கெடுப்பித்து], அவனுக்கு போர் செய்யும் ஆயுதத்தை[போராழி] முன்னர் கொடுத்த [முன் ஈந்த] சிறப்பும் [பொற்பு] தெரிகிறது. எம்வாழ்வில் ஆணவமலம் எம்மை எப்போதும் இடரச்செய்யும் என்பதை திருநாவுக்கரசு நாயனார் தம்வாழ்வில் அறிந்தவர். ஆதலால் ஆணவமலத்திற்கு தமிழில் அழகிய பெயர் சூட்டி 'இடர்பாவம்' என அழைத்துள்ளார்.

அந்த சிறப்பைப் பார்த்தவருக்கு பெருமகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சிப் பெருக்கில்
தருக்கினவாள் அரக்கன் முடி
           பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின் வாறு அடியேனைப்
          பிறப்பறுத்து ஆளவல்லான்”          (ப.திருமுறை: 4: 86: 11)

‘எழுச்சிமிக்க வாளை [தருக்கினவாள்] வைத்திருந்த இலங்கை வேந்தனின் முடிபத்தும் வீழ பாதத்தால் ஊன்றி, ஆணவமலத்தைப் போக்கி அருள் செய்தது போல அடியவனான எனது பிறப்பை நீக்கி ஆட்கொள்ள வல்லவன் சிவன்’ எனக் கூச்சல் இடுகிறார்.

அந்தக் கூச்சலுடன் திருநாவுக்கரசு நாயனார் நிற்கவில்லை. ஒரு தலை உடைய எமக்கு இரு தோள் உண்டு. பத்து தலை உடையவனுக்கு இருபது தோள் இருக்கத்தானே வேண்டும். 

‘இராவணன் கயிலை மலையை இருபது தோள் கொண்டு உந்தியே தூக்கினான். அப்போது இரத்த வெள்ளம் பாய விரலால் [அங்குலி] ஊன்றியவனின் திருவடியே என்னை ஆட்கொண்டது’ என்று சிவன் தன்னை ஆட்கொண்ட திறத்தைச் சொல்லி ஆனந்தக் கூத்தாடுகிறார்
           “………………….. இருபது தோள்
அங்குலம் வைத்தவன் செங்குருதிப்
           புனலோட அஞ்ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை
          என்னை ஆண்டனவே”                      (ப.திருமுறை: 4: 102: 7)

பாருங்கள் தமது முன்னோனான இராவணனைச் சிவன் எப்படி ஆட்கொண்டானோ அப்படித் தன்னையும் ஆள்வான் என முழுமனதுடன் நம்பி ‘அதில் வெற்றியும் பெற்றேன்’ என்று திருநாவுக்கரசர் கூறியும் நாம் இராவணனைக் கண்டு கொள்ளாது இருப்பது ஏனோ!  திருநாவுக்கரசு நாயனார் மீண்டும் மீண்டும் இராவணனைப் பற்றிக்கூறிய கருத்துக்களை உளவியல் சார்ந்து அவரது நிலையில் நின்று  நாம் சிந்திக்க வேண்டும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment