Monday 13 January 2014

பொங்கற் பானை பொங்கவே!
















வங்கக் கரையின் ஓரத்தே
          வையை நதியின் தீரத்தே
பொங்கிப் படைத்த சங்கத்தே
          பாடும் புலவோர் கவிகேட்டே
தங்கும் இளமைப் பருவத்தே
         தகத்திருந்த தமிழணங்கே!
எங்கும் இன்பம் தங்கவே
         எழுந்து வா! இப்போதே!














எங்கள் இதயம் பொங்கவே
        ஏற்றம் எங்கும் ஓங்கவே
சங்கம் எங்கும் ஆர்க்கவே
       சால்பு எங்கும் நிறையவே
பொங்கற் பானை பொங்கவே
        பூந்தமிழ் பாடல் கேட்கவே
பொங்கும் புது வெள்ளமாய்
         அருள் தங்கும் உலகெங்குமே!

சொல்விளக்கம்:
தீரம் - கரை
பொங்குதல் - மிக்க உயர்வு
படைத்தல் - உண்டாக்கல் 
பொங்கிப் படைத்த சங்கம் - மிக்க உயர்வோடு உண்டாகிய சங்கம் [சங்ககாலத் தமிழ்ச்சங்கம்]
தகத்து - பெருமை
தகத்திருந்த - பெருமையோடு இருந்த
சங்கம் - சங்கு
ஆர்த்தல் - ஒலித்தல்
சால்பு - மன அமைதி/கல்வி/மேன்மை

இனிதே,
தமிழரசி.
குறிப்பு: நாளைய [14/01/14] தைப்பொங்கலுக்காக இன்று எழுதியது.

No comments:

Post a Comment