Thursday 23 January 2014

குறள் அமுது - (86)


குறள்:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகுதலின் குன்றல் இனிது                      - 811
                                     
பொருள்:
எம்மை அள்ளிக் குடிப்பவர் போலப் பழகினாலும் பண்பில்லாதவர்களது நட்பை வளரச் செய்வதைவிடக் குறைத்துக் கொள்வது இனிமயானதாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் தீநட்பு என்னும் அதிகாரத்தில் முதலாவது குறளாக இருக்கிறது. அன்பே உண்மையான நட்புக்கு ஆதாரமாகும். நம்மோடு பழகுவோரது நட்பெல்லாம் உண்மையான நட்பு என நினைந்து, எம்மை நாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் ‘தீநட்பு’ என்று ஓர் அதிகாரத்தை திருவள்ளுவர் தந்திருக்கிறார். தீ [நெருப்பு] எப்படிக் கனன்று மெல்லப் பற்றிப் பிடித்து, அருகேயுள்ள பொருட்களை அழிக்குமோ, அப்படித் தீநட்பும் நம்மை எரித்துச் சாம்பலாக்கிவிடும்.

அதனை
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றதாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட
சிறந்தக்காற் சீரிலார் நட்பு
                                                         - நாலடியார்: 232
நல்லோரின் நட்பு மாரி மழைபோல் பெரும் பயன் தரும். மழை இல்லாது போனால் வளம் குன்றுவதோடு வெய்யிலும் சேர்ந்து வாட்டி வதைப்பது போல தீயோரின் நட்பு பயன் ஏதுமின்றி மேலும் துன்பத்தைத் தரும் என விளங்கவைக்கிறது நாலடியார்.

நெடுநேரம் காட்டிலும் மேட்டிலும் தண்ணீரும் குடிக்காது அலைந்து திரிந்து களைத்து தண்ணீரைக் கண்டவுடன் விடாய்தீர ஆசையுடன் அள்ளிக் குடிப்போம் அல்லவா? அது போல் வேட்கையுடன் குடித்தலே பருகுதலாகும். கேண்மை என்பது நட்பு. 

மனித குலத்துக்கு என்றே சில அரிய பண்புகள் இருக்கின்றன. நாம் மனித குலத்தில் பிறந்தோம் என்ற மாண்பை அன்பு, பாசம், இரக்கம், நேர்மை, ஈகை, தன்னைப் போல் மற்ற உயிர்களையும் மதித்தல், பகிர்ந்து உண்ணுதல், எல்லோருடனும் முகம் மலர்ந்து பேசுதல் போன்ற பண்புகள் எடுத்துக் காட்டும். இந்த அடிப்படைப் பண்புகள் அற்றோர் பண்பிலார் ஆவர். 

உள்ளன்பு இல்லாமல் பகட்டுக்காகவும் பணத்துக்காகவும் தமது தேவைக்காக ஒட்டி உறவாடுபவரது நட்பை வளரவிடாது காத்துக் கொள்ளவேண்டும். தமது தேவைக்காக ஒட்டி உறவாடுவதும் பண்பிலாத் தன்மையே. பண்பிலாதோரில் சிலர் அன்பில் உருகி அப்படியே அள்ளிப் பருகுவது போல் அன்பைப் பொழிவர். அத்தகையோரின் நட்பு பெருகி வளர்வதைவிட குறுகி இல்லாது போதல் இன்பத்தைத் தரும். அதைவிட இனிமை வேறு ஏது வேண்டும்?

No comments:

Post a Comment